Sunday, December 30, 2012

அந்தக் கட்டடம்

அடுக்கடுக்கான கட்டடங்கள்
நூறு இருநூறு ஆயிரம் ஆண்டுகளாய்க்
கொடுத்த முட்டுக்கட்டைகளையெல்லாம்
இடித்தபடி சரிகின்றன
இடிபாடுகளுக்கிடையே அகப்பட்டு
அலறிச் சிதைந்து
அடங்கிப்போன உடலங்கள் நாம்

நமது மீட்புப் பணியினால்
காக்கப்பட்ட உயிர்கள் எத்தனை?
கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் எத்தனை?

புனிதமான மீட்புப் பணியாளர்களே
அறிந்தீரோ இப்போதாவது
கட்டடம் ஒன்றை
எந்த அத்திவாரத்தின் மீது
எங்ஙனம் கட்டுவதென்பதையும்
அதை எங்ஙனம் பராமரிப்பதென்பதையும்?

அந்த இடிபாடுகளுக்கிடையே
நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்திருக்கும்
அச்சிறு புல்லைப் போய்க் கேளுங்கள்
அதற்குத் தெரியும் அதன் ரகசியம்

0

அது நிழல் தராது
(தன் நிழலைத் தானே விழுங்கி
ஒளி தருவது அது)

அதற்குக் கூரை கிடையாது
வானத்துச் செல்வங்களை
அது மறைக்க விரும்புவதில்லை

அதற்குச் சன்னல்கள் கிடையாது
ஏனெனில்
அதன் சுவர்கள் எதையும்
மறைப்பதுமில்லை தடுப்பதுமில்லை

அதற்குக் கதவுகள் கிடையாது
பாதுகாக்கப்பட வேண்டிய பொருளென்று
எதையும் அது வைத்திருக்கவில்லை
மேலும் சாதித் தடைகளை அது அறியாது

அதற்குச் சுவர்கள் கிடையாது
ஏனெனில்
வெளியிலிருந்து வெளியை
அது பிரிப்பதில்லை

அதற்குக் தரை கிடையாது
ஏனெனில்
அங்கு யாவும் அந்தரத்தில்
சுழன்று கொண்டிருக்கிறதேயன்றி
இருப்பதெற்கென எதுவுமில்லை

அதற்கு அறைகள் கிடையாது
ஏனெனில்
அங்கு நடப்பது ஒரே செயல்பாடுதான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP