Monday, December 31, 2012

நேரம் வந்துவிட்டது

நேரம் வந்துவிட்டது நம்ம சாருக்கு
இந்த நட்டநடு வேளையில்
வெயிலோடு வெயிலாய்
வீடு போய்த் திரும்புவதற்கின்றிக்
கொண்டுவந்த உணவை முடித்துத்
தன் வகுப்பறைப் பெஞ்சிலேயே
சற்றுத் தலைசாய்ப்பதற்கு
நேரம் வந்துவிட்டது

சாய்ந்த அவர் தலைக்குள்ளே
ஓசையின்றி நிகழுது ஒரு பெரும்பள்ளம்;
இப்புவிக் கோளத்தையே ஈர்த்து
விழுங்கக் கனலுமோர் பெரும்பசி வாய்.
நேரம் வந்துவிட்டது நம்ம சாருக்கு
அந்த நேரம் வந்துவிட்டது

குழிக்குள் விழுந்ததோர் கோலிக் குண்டாய்
முழிக்குது உலகம் – அதன்
மேலொரு மேடையிலே –
பாடம் முடித்த வகுப்பறை ஒன்றில்
ஆடும் குழந்தைகள்

விழித்து எழுந்தவர் கெஞ்சியும் கடிந்தும்
வெளியே போய்த்தான் விளையாடலாகாதா என
அந்த உறக்கம் வேண்டி
அவர்களிடம் யாசிக்கும் அந்த நேரம் வந்துவிட்டது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP