Sunday, December 16, 2012

அவன் வாழ்க்கை

மனைவி அவள் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கையில்
தனித்திருக்க நேர்ந்த ஒரு கணவனது போன்றதாக இருந்தது
திருமணமாகாத அந்த முதிர் இளைஞனின் வாழ்க்கை

உடலை அவன் கரங்களுக்குத் தந்துவிட்டு
எங்கோ நின்றுகொண்டிருக்கும் அவள் உயிரை நோக்கிக்
காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கும்
ஒரு துன்பியல் எழுத்தாளன் அவன்

அநீதி கண்டதிர்ந்து
தாளாமல் தற்கொலை செய்துகொண்ட நண்பர்களை
ஒருநாளும் மறக்க இயலாத புண்ணுடையோன்

விடியலின் ஒரு கதிருக்காக
காதலின் ஓர் அன்பு முத்தத்திற்காக
வாக்குறுதி அளித்துச் சென்றவனின் வருகைக்காக
இரவெல்லாம் உறக்கமற்று விழித்திருக்கும் தனியன்.
துயர்ச் சுமையாலேயே களைப்புற்ற தன் தூக்கத்தால்
வருகையைத் தவறவிட்டுவிடும் துரதிருஷ்டசாலி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP