Monday, December 10, 2012

சிலை உடைப்பு

ஒழுங்கு அழகுக் கலைஞர்கள் வந்தார்கள்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தர் வந்து
சுவர்களின் வண்ணங்களையும் பொருள்களையும்
வேறு வேறு விதங்களில் அடுக்கிச் சென்றார்கள்
அதுவரை பீடு பிரகாசித்த அவர் முகங்கள்
ஒளி குன்றித் தலை கவிழ்ந்தன
கவிஞன் உள் நுழைகையில்
அவன் முகம் சந்திக்கக் கூசி

ஒரே நேரத்தில் பல்வேறு ஒழுங்கு அழகுக் கலைஞர்களைக்
கற்ற பண்டிதர்களால் குழம்பியது அறை.
குழப்பங்களிடையே தம் கைப்பொருளை ஒளித்துவைத்து
கண்டுபிடிக்கிறோம் எனத் தோள்தட்டிய ஆய்வாளர்கள்,
பிணங்களை அரிந்துசொல்லும் மருத்துவர்கள்,
அங்கே உயிரோடு தன்னை அரிந்து அறிவித்துக்கொண்டிருந்த
கவிஞனைக் கண்டு அதிர்ந்தார்கள்

ஆயகலைகள் அறுபத்து நான்குடனும் திருவிழாவாய்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது மாபெரும் கலைநிகழ்ச்சி
கலைஞர்களெல்லாம் திகைத்து நிற்க,
அம் மவுனம் தன்னை வரவேற்க,
கவிஞன் நுழைந்தான் அந்த மண்டபத்துள்
வெகு நீண்ட மவுன விரிப்பில் நடந்து
மண்டபத்தின் பிரதான இடத்திற்கு வந்தான்.
யாவரும் காணத்
திரைச்சீலையின் ஒரு நுனி பிடித்துச் சுண்டி இழுத்தான்.
அசாத்திய வலிமையுடன் அமர்ந்திருந்தது அங்கே
சகல கலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட
கடவுளின் சிற்பம்

ஓங்கி மின்னிற்று உறையிலிருந்தெழுந்த வாள்.
கண் பறிக்கும் ஒளி, ஓசையுடன்
புகையாகிக் கலைந்தது சிலை.
அண்டமே அதிரும்படியான
கவிஞனின் சிரிப்பில்
அதுவரையான தன் விளையாட்டுப் பொம்மையையே
அர்த்தமின்றி உடைத்த
குழந்தையின் குதூகலம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP