Wednesday, December 5, 2012

தோலுரித்தல்

போர்வைகள் பட்டுப் பீதாம்பரங்கள்
மற்றும் கவசங்கள்
அட்டுப் பிடித்து இறுகி உறைந்து
உன் தோலாகித் தடித்து நிற்கின்றன.
இதோ இந்தச் சின்னஞ்சிறிய செடியின்
மலரைப் பார்!
உன் உயிர்க் குருத்தின் ஒளியை
நீயே நீ பார்த்துக் கொள்வதற்கு இயலாதபடி
உயிர்க் கருணையற்ற உன் தோல்களிலிருந்து
ஆயுதங்களையும் சட்டங்களையும்
உருவாக்கி உருவாக்கி
நீ செய்யும் கொடூரங்கள்தாம் எத்தனை?
உன்னால் இழிவாக்கப்பட்ட
உன் சகோதரர்களின் எழுச்சியை அடக்க
இன்று உன் தந்திரங்களையும் கூடத்
தைரியமாய்க் கைவிட்டு வேஷங் கலைந்து
பட்டவர்த்தனமாய் வந்து
அவர்களைக் களத்திலேயே அடித்துக் கொல்கிறாய்
அதே வெறியோடு
உன்னைத் தரையில் போட்டு மிதித்து
உயிரோடு உன்னைத் தோலுரித்து
உன் உயிரின் ஒளியை உனக்குக் காட்டுவதே
இன்றைய உயிர்வாழ்வின் இலட்சியமாய்
ஒருக்காலும் அணையாத ஜீவக்கனல்
இவ்வெளியெங்கும் சுடர்வதைக்
காணவில்லையா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP