Sunday, December 9, 2012

தாய்

அம்புஜம் அம்புஜம் என்று
ஓர் அழகான தாய் இருந்தாள்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
அவளுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை.
அவளுக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்
உலகத்துச் செல்வங்களையெல்லாம் குவித்தாலும்
அவை அவனுக்கு ஈடாகாது

அவள் அவனைப் பள்ளிக்கு அனுப்பினாள்
அவன் மகாபுத்திசாலி
படிப்பில் அவன் மனம் வைக்காததினால்தான்
மக்குப் பையன் என்று பெயர் வாங்குகிறான்

அவள் அவனை இசை கற்க அனுப்பினாள்.
தெய்வ வரம் போல் அபூர்வமானவர்களுக்கே கிட்டும்
சாரீரமும் பிறவிச் சங்கீத ஞானம் போன்ற கிரகிப்பும்...
என்று ஆரம்பத்தில் ஆசிரியை வழங்கிய நற்சான்றுச் சொற்களை
அவள் சொல்லி மகிழா ஆட்களில்லை.
அவன் மனம் வைக்காததினால்தான்
அவன் இசை கற்கப் போவதையே நிறுத்திவிட்டான்

ஒரு நேரம் வீட்டில் சும்மா இருக்க மாட்டான்.
ஊரையெல்லாம் சுற்றிவருவான். மகா சுறுசுறுப்பு.
தெருவிலுள்ள பிள்ளைகளின் பெற்றோரெல்லாம்
அவளிடம் கோபமும் வருத்தமுமாய் வந்து புகார் சொன்னார்கள்.
அவர்களுக்கு ஒன்றுமட்டும் புரிவதில்லை
அவள் மகன் யார் மீதும் எளிதில் அன்பு கொள்ளமாட்டான்
கொண்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத
மகாபுருஷன் என்பது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP