Thursday, December 20, 2012

எங்கும் விலங்குகளின் காலடியோசைகள்

எந்த நன்னாளின் எந்த நல்வேளையோ?
தன் கொட்டகையெங்கும்
தான் கட்டிவைத்திருந்த
தன் வளர்ப்பு விலங்குகளையெல்லாம்
அவன் அவிழ்த்து விட்டுவிட்டான்

ஒன்றின் பெயர் அமைதியின்மை;
அது அமைதியைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் வெறுப்பு;
அது அன்பைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் தனிமை;
அது நட்பைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் செல்வம்;
அது புகழைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் பேராசை;
அது எளிமை தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் பொறாமை;
அது பொறுமை தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் அகந்தை;
அது தன்னழிவைத் தேடி ஓடியது.

அவன் நின்றான் அசையாமல்
அனைத்தையும் பார்த்தபடி
ஒன்றிலிருந்து பிறிதொன்றை நோக்கியோடும்
நடையினைத் துறந்தவனாய்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP