Tuesday, January 8, 2013

சிற்பி

அவன் அந்தக் கல்லைத் தூக்கிக் கொண்டுவந்து
திம்மென்று தரையில் வைத்தபோது
அந்தக் கல்லுக்கு அது தெரியாது
ஏனென்றால் அது ஒரு கல்

அவன் அதன்மீது உத்தேசித்த ஒரு வடிவத்தைத்
தீட்டியதையும் அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்

அப்புறம் ஒரு பெரிய உளியையும்
சம்மட்டிநிகர் சுத்தியையும் கொண்டு
உத்தேசித்த வடிவம் நீங்கலான பகுதிகளையெல்லாம்
முரட்டுத்தனமாய் மோதிக் கடாசியதையும்
அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்

உத்தேசித்த உருவத்தின் காந்தி
உள்ளே சிலிர்க்கச் சிலிர்க்க
சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு
செதுக்கிக் கொண்டிருக்கிறான் சிற்பி வெகுநுட்பமாய்

இப்போது அது ஒரு சிலை
கல்லிலிருந்து திமிறித்
தன்னைத் தானே விடுவித்துக் கொண்டிருக்கும் சிலை

இப்போது அது ஒரு சிலை
இறுதி வேலையான கண்திறப்பு ஒன்றுக்குக்
காத்திருக்கும் சிலை

இப்போது சிலைக்குக் கண்திறப்பு நடக்கிறது
கண் திறந்ததும்
சிற்பக் கூடமெங்கும் ஒரு புத்தொளி
அங்கே சிற்பியைக் கண்ட சிலைக்கு
எச்சலனத்தையும் இயற்றவொண்ணாத் திகைப்பு
பார்த்தவிழி பார்த்தபடியே நிற்க
அதனிடம் நிலைகொண்டது
முடிவற்ற தியானம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP