Wednesday, January 30, 2013

இயற்கை

அன்று கண்விழித்தபோது
எதிரே நின்றிருந்தது அது
இயற்கை
எவ்வளவு எளிய ஒரு சொல்

கடவுள் இல்லாத ஓர் ஆலயம்
இல்லாத கடவுள்
நான் அணிந்திராத மணிமுடியை
வீசி நொறுக்கிய சிதறல்
எண்ணற்ற வயதின் எண்ணற்ற சாதனைகளின்
வெற்றிப் பதக்கங்கள் சிதறிக் கிடக்கும் கோலம்
அதன் மேல் ஓர் ஒளிமூட்டம் போல்
சொல்லொணாததோர் அமைதி அடக்கம்
நெகிழ்ச்சி தாழ்மை மென்மை
எதாலும் ஊடுருவ முடியாததாய்
எதையும் ஊடுருவக் கூடியதாய்
அதன் உறுதி
என் கண்கள் மூடிய பிறகும்
இருக்கும் அக்காட்சி
அதைக் கண்டவர் எவருமில்லையோ?

என்ன செய்வதென்றறியாது
எத்தனை சிலைகளைப் படைத்து
எத்தனை மலர்களைக் கிள்ளி இறைத்துவிட்டோம்
ஒரு மலராவது அந்த அர்ச்சனையின்போது
மகிழ்ந்திருக்குமா?
ஒரு கல்லாவது தான் சிற்பமானதில்
பெருமைப்பட்டிருக்குமா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP