Tuesday, February 19, 2013

பலி

முத்தவெறி கொண்ட இதழ்கள் அறுந்து
பேச முடியாமற் போன நா
ஆர்வப் பித்தால் ஆரத் தழுவிக்
காயம்பட்டுக் கசியும் இதயம்
தனக்குத் தானே மாலையிட்டுக் கொண்டு
தழுவத் துடிக்கும் இரத்தத்தால்
பாய்ந்து பலியாகும் உடல்
தன் குருதி குளித்துக் கூர்மின்னும் வாளாய்த்
தன்னைப் பார்க்கக் கிடைத்த பார்வை

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை?
எவருடைய சிந்தனைகள் இவை?

அன்றைய காலைச் சூரியனின் முகத்தில்
ஓர் ஏளனப் புன்னகை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP