Tuesday, February 26, 2013

ஏமாற்றம்

நான் பிறந்து வளர்ந்தேன்
ஒரு சிறு நகரத்தில்
அங்குள்ள மக்கள் அத்தனை பேரும்
கிராமத்து மனிதர்கள், குடியேறிகள்.
அவ்வப்போது கிராமங்களைப்
போய்ப் பார்ப்பவர்கள்
போதிய கவனிப்பில்லா முதியோர் தனிமை
அந்தக் கிராமங்களின் விழிகளில்

இயந்திரங்களுடனும் வேக ஊர்திகளுடனும்
தன் போக்கில் வளர்ந்துகொண்டிருந்தது நகரம்
அச்சத்தாலும் மரணத்தாலும்
ஆர்வத்தாலும் பிணிக்கப்பட்டவனாய்
நானும் வளர்ந்தேன்

ஒரு நாள் பெருநகர் ஒன்றுக்கு
நான் செல்ல நேர்ந்தது
அங்கே மனிதர்கள்
நான் அறிந்த அதே பாஷையைத்தான் பேசினார்கள்
எல்லோர் பிறந்த நாட்களும் ஒன்றாக இருக்கவில்லை
கடைவீதிகள் விளம்பரங்கள் கட்டடங்கள் ஒவ்வொன்றும்
அளவில் பெரியனவாய் இருந்தது தவிர வேறொன்றுமில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP