Wednesday, February 27, 2013

கடவுளோடு நடந்த உரையாடல்

ஒப்புக்கொள்கிறேன் கடவுளே,
உம்மை வணங்குவோர் கோடி.
நீர் ஒப்புக்கொள்வீரா அய்யா,
உமது பக்தர்களின் கையில்
’நாய் பெற்ற தெங்கம்பழம்’ தானே நீர்?

இன்று என் கவிதைகள்
உம்மைப் போட்டு உடைக்கின்றன
நீர்தான் ஒரு வலியில்லா மரணமில்லா
அதிர்ஷ்டப் பிறவியாயிற்றே!
சும்மா திறந்து சிரியுமய்யா சிரியும்.
உம்மை எரித்துக் குவிக்கின்றன என் கவிதைகள்
அப்போதும் உமது சாம்பலை எடுத்துப் பூசிக்கொள்ளும்
பக்தனில்லை நான். எனினும்
அதிர வைக்கிறதையா உமது சாம்பல்.
திரும்பத் திரும்ப
நடமாடும் கழிபோல
’நான்’ ’நான்’ என வந்து
’அவதரி’க்காதீரும் இனி.
கவிதையின் அடித்தல் கோடானது
சிலுவையின் குறுங்கட்டையாகி உம்மை அறையும்

இரும்:
வேணடாங்கல்ல.
எதற்கும்
எவருக்கும்
எக்கணமும் இடைஞ்சலில்லாது
’சிவனே என்று’
இருக்கும் வகை தெரிந்து
இருந்தால் உம்மை யார் தடுக்கா?

எடுப்பார் கைப்பிள்ளையாய்
எத்தர்களோட ஆயுதமாய்
மடையர்களின் சாம்பிராணியாய்
ஒரு பிண்டமாக நீர்
எப்படி இருக்கப் போச்சி?
அப்பேர்ப்பட்டவனுகளோட
கைகளையெல்லாம் சுட்டெரிக்கிற
நெருப்பாக இருக்கத் தெரிய வேணாம்?

இருந்தால் நெருப்பு
அணைந்தால் சாம்பல்
அதுவல்லவா வாழ்க்கை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP