Thursday, February 28, 2013

கூண்டுச் சிறுத்தை

எனது சோர்வு
ஒரு குறிஞ்சி நிலத்தில்
பூமிப்பெண்ணிடமிருந்து விலக்கி
வெட் வீழ்த்தப்பட்டுக்கிடக்கும்
காதலனின் இயலாமை
எனது பதற்றம்
அந்தப் பாலியல் குற்றவாளிகளுக்கும்
அவர்களைத் தேடும் காவலுக்குமிடையே
எரியும் பூமி.
என் கவலையெல்லாம்
என காதலியின் உடலும் மனமும் குறித்தே.
ஆனால் எனது செயல்
வெறும் கவிதை எழுதுதல்
என் கண்ணீரை மொழிபெயர்த்தல்.
கவுரவம் கருதியோ
இதற்கொரு பெரிய முக்கியத்துவமிருப்பதாய்ப்
பாவனை செய்கிறேன்? உண்மையான
ஒரு பெரு விளைவைக் கனாக் காணுகிறேன்?
குறைந்தபட்ச என் தொழிலால்
அதிகபட்ச விளைவை எதிர்பார்க்கும்
பேராசையா என்னை ஆட்டிப்படைப்பது?
மறு உபயோகமற்ற
உணர்ச்சிப் பெருக்கால் ஆன
ஜடத்திற்கா
கவிதை கவிஞன் காதல்
என்றெல்லாம் பெயர் சூட்டுகிறேன்?
என்னதிது?
எல்லாவற்றையும்
ஓர் அர்த்தம் நிறைந்த சந்தேகத்தால்
அழித்துக்
கனலும் ஓர் அக்கினிக் குஞ்சு
துருவும் மனம்
இப்போது என் நெஞ்சிரும்புக் கூண்டுக்குள்
இருப்புக் கொள்ளாது உலவும் சிறுத்தை.
சகல நம்பி்க்கைகளினதும் எதிரி
அவநம்பிக்கையும் அல்ல.
என்றால்
கருணையின் மருத்துவ குணமா?

ஆடை கலைந்து சரிந்து கிடக்கும் பூமிப்பெண்ணை நோக்கிக்
குமுறுகிறது கண்காணாக் கானகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP