Tuesday, February 19, 2013

என்னை நான் நேசிப்பதிலேயே...

மனிதகுல மேன்மை குறித்த ஆயாசம்
என்னை நான் நேசிப்பதிலேயே கொண்டுவிடுகிறது
காற்றுவெளியில் ஓர் அகல்விளக்கைக்
கை பொத்திப் பாதுகாப்பதுபோல
என்னை நான் நேசிப்பதிலேயேதான் இது ஆரம்பித்தது
என்ற உணர்கையும்
சொற்களின் பயனின்மையை உணர்ந்துகொண்டே
சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர
வேறு வழியற்ற தனிமையும் நான் ஆனேன்

கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டவன்
வெளிப்படுத்த முடியாத செய்தியால்
மேலும் மேலும் பின்னலாகி
தவித்து அலறும்
தீவிரமான சமிக்ஞைகளாக மட்டுமே எஞ்சுகின்றன
துடிப்புமிக்க எனது சொற்களும் படிமங்களும்

ஆசீர்வதிக்கப்பட்டனாய் மகிழ முடியாமல்
சபிக்கப்பட்டவனாய்த் துயருறவும் முடியாமல்
என்னை நான் நேசிப்பதிலேயே மறைந்திருக்கிறது
என்னை நொறுக்க எழும் அவலம்
என்னை நொறுக்க இயலாதிருக்கும் மர்மம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP