Tuesday, March 19, 2013

கோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்

ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும்
ஊருக்கு வெளியே இருந்தான் அவன்
ஆற்றில் வெள்ளம் பெருகியபோதெல்லாம்
அடித்துச்செல்லப்பட்டது அவன் குடிசை
(அப்போது அவன் ஒரு சுட்டெறும்பைப்போல்
ஒரு மரத்தில் தொற்றிக்கொண்டான்)
கோபம் கொண்ட யானை
காட்டுக்குள்ளிலிருந்து இறங்கியபோதெல்லாம்
அவன் தோட்டம் சூறையாடப்பட்டது
கவனமாய் விலகி நின்று
அவன் அதைப் பாரத்துக்கொண்டிருந்தான்

மறுபக்கம்,
எப்போதும் தூய காற்று
அவனுள் புகுந்து வெளியேறியது,
மன்னிக்கத்தக்க
ஆகக் குறைந்த சிறு அசுத்தத்துடன்.
மிகுந்த ஆரோக்கியத்துடனும்
அச்சமற்றும் இருந்தன
அவனது தோட்டத்து மலர்கள்.
அவனது வானம்
எல்லையின்மைவரை விரிந்திருந்த்து
அந்த வானத்தை மீட்டிக்கொண்டிந்தன
பறவைகளின் குரல் விரல்கள்.
கண்கண்ட ஜீவராசிகள் அனைத்தும்
அவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக்கொண்டன
ஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளாதபடி
பார்த்துக்கொண்டன விண்மீன்கள்

என்றாலும்
ஒரு பெரிய துக்கம்
அவனைச் சவட்டிக்கொண்டிருந்தது
அடிக்கடி

அன்று அது தன் பணிமுடித்துத்
திரும்பிக் கொண்டிருந்த காட்சியை,
அதன் பின்புறத்தை, பின்புலத்தை
அவன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்
அதன் கோபம்
அதன் அழிமாட்டம்
அதன் பிறகு அது மேற்கொள்ளும்
நிதானம்
தீர்க்கம்
பார்வைவிட்டு மறையுமுன்
வாலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP