Tuesday, March 26, 2013

தொட்டபெட்டா

வந்துவிட்டோமா
வந்துவிட்டோமா நாம் அந்த இடத்திற்கு
எந்த உன்னதத்தை மறைத்து மறைத்து
நாம் இதுகாறும் பேசிக்கொண்டிருந்தோமோ
அந்த உன்னதம்
நம்மைத் தொட்டுத் தழுவிக்கொள்ளும் இடத்திற்கு
மூச்சிறைக்கும் நுரையீரல்
முழங்கைகால் நெஞ்சுக் காயங்கள்
மிகத் துடிக்கும் இதயமுமாய்
ஆவலின் உச்சிப் படிகளில் ஏறி
வந்துவிட்டோமா
அன்பின் ஆலிங்கனம் மட்டுமே கொண்டாடப்படும்
அந்தச் சபாமண்டபத்திற்கு

இதோ,
பறக்கும் திசைவெளியின் சிறகுகளென மஞ்ச
அன்பின் முத்தமும் ஆலிங்கனமுமேயான
ஆகாசம்.
தேவதைகளின் பிரத்யேகச் சயனவெளி...
இவ்விடம் எங்களுக்கேயானதெனக்
களிப்பும் சுயாதீனமும் கொள்ளும் குழந்தைகள்
இல்லை, எங்களுக்கேயானதென வெட்கம் மீதூர
இட்டி இணைந்து மிதந்து செல்லும்தேனிலவு ஜோடிகள்
இல்லை, இல்லை, தனிமைமிக்கு
தம் இதயத்தில் ஆழம் கொண்டோர்க்கே
என்பதுபோல் நடமாடும் நான், நீ, அவன்

எங்கே தொலைந்தனவோ மனிதா
உன்னை அலைக்கழித்த உன் பேராசைகள்,
உன் இலட்சியங்கள், கனவுகள்?
இல்லை,
அதைத்தான் இங்கு அடைந்தனையோ?

சூடான தேநீரின் சுவைத் தீண்டலிலும்
தேனிலவுத் தம்பதியரின் இதழ் முத்தத்திலும்கூட
காணமுடியவில்லை காண முடியவில்லை
ஒரு துளித் தசைமணம்

கருணையின் மஞ்சுப் பரவல்களூடே
உள்ளங்கால்கள் உணரும் சிகரம்
பார்வையின் கீழ்
ஒரு பள்ளத்தாக்குக் கிரகம்
நெஞ்சின் கீழ் ஒரு பேரமைதி
நினைவு என ஏதுமில்லா
ஆனந்தத்தின் நிர்விசாரம்
வந்துவிட்டோம் வநதுவிட்டோம் எனக்
குதூகலிக்கும் நெஞ்சம்
ஆசீர்வதிக்கிறது
ஒவ்வொருவர் விழிகளினுள்ளும் நிறைந்து
காணும் ஒவ்வொருவரையும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP