Saturday, March 30, 2013

கூந்தல் தைலம்

மனிதக் கொலைகள் சர்வசாதாரணம்
இல்லையெனில் தொழில் வளம் உண்டோ நாட்டில்?
லாரி லாரியாய்த் தலைகள் வந்து குவிகின்றன
மயிர்கள் சிரைக்கப்பட்ட தலைகள்
(மயிர் வேறொரு தொழிற்சாலைக்குப் போய்விட்டது)
சூரியனுக்குக் கீழே
மரநிழல் ஒதுக்கிய பாழுங் களங்களில்
காய வைக்கின்றனர் தொழில்நுட்பக் கலைஞர்கள்.
அவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட மூளையெல்லாம்
பிழிந்தெடுக்கப்படுகின்றன ஓர் ஆலையில்.
தவறாமல் அன்றாடச் சமையலுக்கு மட்டும்தான்
பயன்பட வேண்டுமா மனித மூளை?
பெருமையுடன்
மனித மூளையின் சாரமெல்லாம் தொகுக்கப்படுகிறது
(மண்டையோடுகளெல்லாம் வேறொரு தொழிற்சாலைக்கு.
வெடிமருந்துக்கான தாதுப்பொருள் இருக்கிறதாம் அதில்)

கொடுமையிலும் கொடுமையெல்லாம் செய்து
பெரும்பாடு பட்டதெல்லாம் –
அட காலமே!
உங்கள் மயிரழகுக்குத்தானா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP