Monday, April 22, 2013

வெளிக்கதவின் மதில்மேல் ஓர் அணில்

அகலத் திறந்திருந்தது வரவேற்பறையின் வாயில்
வீடு பெருக்கியவளின் கைங்கர்யம் அது
மூட்டமாய்ப் பொங்கிய தூசுகளை
வாயிலை நோக்கி அடித்து விரட்டியது
ஜன்னல் வழியாய்ப் பாய்ந்துவந்த காற்று

பளிச்சென்று துலங்கிய வெளிக்கதவின் மதில் மீது
ஒரு குஞ்சு அணில் பிள்ளை
மனிதனைப் போலவே
முன்கால் இரண்டையும் கைகளாக்கி
ஏதோ ஒன்றைக்
கடித்துத் துருவிப்பார்த்துக்கொண்டிருந்தது

திடீரென விவாதம் அணைந்த என் முகம்
சுட்டிய அக்காட்சியைக்
கண்டாள் என் மனைவியும்
”இந்த அணிலை
ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன்” என்றாள்
”இருக்கவே இருக்காது”
”அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
மீண்டும் கிளம்பிற்று விவாதப் புழுதி
”இதை அந்த அணிலிடமே கேட்போமா?” என்றேன்

அணில் திரும்பிப் பார்த்தது எங்களை
இயங்கும் சலனப்படக் கருவிமுன்
விளம்பும் கவிதை நட்சத்ரம் போல்
”எனது விழிப்பு, துறுதுறுப்பு, துருவும் மனம்
மற்றும் புத்துணர்வுடன் கூடிய
எனது ஆரோக்யத்தின் ரகசியம்
நான் எப்பொழுதும்
என் உயிர் வாழ்வுக்கு அனாவசியமான
அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகளைச்
சற்றும் சுமந்து கொண்டிருக்காததுவே”
என்றது அந்த அணில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP