Monday, April 29, 2013

அந்தி

கண்காணாக்
களி துள்ளும்
வைகறை ஒளிதான் ஒளியோ?

ஒளியும் பொருள்களும் மெல்ல மெல்ல
ஒளியும் பொருள்களும் இழந்து
மண்டையைப் பிளக்கும் வெம்மை தாக்கிச்
சவத்தன்மை கொண்டதென்ன மானுடம்?

துள்ளும் மகிழ்ச்சியில்லை எனினும்
நெஞ்சைப் பிடித்திழுக்கும் இந்த
அந்தி ஒளிமயக்கின்
அற்புத எழில்!
மாண்டு கிடக்கும் மனிதர்கள் எழுந்து
கண்மலர்த்திப் பார்க்கக்
காத்துக் கிடக்கும் நம்பிக்கையோ பரிதாபமோ
பேரிருப்போ தீராக் கருணையின்
பேரறிவுச் சுடர் ஓவியமோ
என் உச்சி குளிர சிரம்வருடி
அன்பே என்று நீ என்னை
அழைக்கும் குரல் தானோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP