Monday, April 8, 2013

தேவதைகள்

சூர்யன் மேலெழுந்து
போதிப்பதற்கு நான்
என் பள்ளிக்குப் போவதற்குமுன்னே
கற்றுக் கொள்வதற்கு
என் பெண் குழந்தையை
அவள் பள்ளிக்குக் கொண்டு செல்லத் தொடங்கினேன்
மிதிவண்டியில்

எனது நரம்புவலையினை இழுக்கும்
ஒரு மீனவனின் முஷ்டியாய்
மேலேறிக் கொண்டிருந்தது சூர்யன்
கதிர்வலைகளினுள் சூன்யம் மிஞ்ச
எங்கும்
என்போல் ஒழுகி நடமாடும் மனிதர்கள்

சூன்யவெளியிலிருந்து சிறகுகள் மிதந்துவந்து
மனிதர்களின் விலாக்களில் பொருந்தியதைப் பார்த்தேன்
விவரிக்க விடுங்கள் என்னை
நான் கண்ட அந்த இனிமையை:
குழந்தைமை + கன்னிமை (பெண்மை) = தேவதை...

என்னவென்று சொல்வேன் என் உணர்வுகளை!
விரல் தொடுதலில் கலைந்துவிடக் கூடிய
மிகமிக மென்மையான ஒரு வஸ்து
திரும்பத் திரும்பப் பிறந்து உலகை ஜெயிக்கிறது எனவா?
திரும்பத் திரும்பப் பிறந்து உலகில் தோற்கிறது எனவா?

விஷயம்,
நம் மகிழ்ச்சிக்கும் அழுகைக்கும் அப்பால் உள்ளது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP