Friday, May 10, 2013

நோகடிக்கிறோமோ...

நோகடிக்கிறோமோ நோகடிக்கிறோமோ என
நோகும் என்னுள்ளம் விரும்பியவாறே
ஒரு நாள்
இக் காற்று நடந்து செல்லும்
விதம் கண்டேன்
அன்றுதான் அது நிகழ்ந்தது:
காற்றோடு எனக்கு
அதுவரைக்குமில்லா நெருக்கம்!

ஒருநாள், அது வலுத்த புயலாகி
என் முகத்தில் கரிபூசிய போது தான்
என் பைத்தியமும் தெளிந்தது.

இப்போதும் அவன் என் நண்பன்தான்
அவனுக்கும்தான் தெரியாததா:
காட்டுக்குள் உலவும் யானையைப் போலும் கம்பீரம்;
காட்டுக்குள் மூட்டப் பெற்ற நெருப்பைப் போலும் கவனம்;
காட்டுக்குள் ஒளிரும் இரவும் நிலவும் அருவியும்
ஓடையும் குளிர்மையும் போலும் காதல்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP