முனிப்பேய்
வாயாடி ஒருவன் –
முனிப்பேய் அறைய
ஊமையாகிவி்ட்டதும்;
பேசும் விழிப் பேரழகியான
ஊமைப் பெண் ஒருத்தியின்
காதல் அவனைத் தொட்டதும்
பூர்வ கதை.
நாளும் தவறாது
விழிகளாற் பேசி
சைகைகளாற் குறிப்புணர்த்தி
எவர் கண்களுக்கும் தெரியாதபடித்
தேர்ந்த தனியிடச்
சந்திப்புகளுக்கு அழைத்து
நெடியதொரு முத்தத்தால்
இமைக் கதவுகளை இறுகமூடி
வாழ்வின்பம் துய்க்கக்
கட்டித் தழுவுபவள்;
கொண்ட காதலும்; அவனைக்
கண்ட நிறைவும்
கரைந்தழியாது நிற்க
அவள் ஈர விழிகளின்
இறைஞ்சற் பார்வையில் மாத்திரம்
வற்றாத கருணையின்
தீராத் துயரம்.