Tuesday, May 7, 2013

கண்ணெட்டும் பெருந்திறப்பு

கண்ணெட்டும் பெருந்திறப்பு
எனினும்
காணமுடியாது போகும்
இத்தினியூண்டு மலர் ஒன்று.

எல்லையில்லா விண்ணை அது
அறிந்திருந்த்தாலோ
அத்துணை அழகு பொலிந்து
அமர்ந்திருந்தது அது?

மிளிரும் அப் பேரெழில்தான்
பெருந் துயர் கிளர்த்துவதென்ன?
தாய்மையும் தந்தைமையுமான
தேவம் தீண்டிய நோயோ?

உலகை நினைத்து அழும் இம் மலர்களை
உலகு கண்டு கொள்ளாததன் சோர்வோ?
மனிதன் ஒருவன்
கண்டவுடன் காணப்படுவது தானோ
இம் மலர்களின் பேரெழில் மலர்ச்சி?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP