Saturday, June 8, 2013

ஆப்பிள்காரன்

தலைச் சுமையாய் ஆப்பிள் விற்பவனின்
கூடை ஆப்பிள் ஒன்று
விலை போகாமல்
வீணே அழுகி விடுவேன் என்று
பயமுறுத்திச் சாதித்துக்கொண்டது
அவனிடம் தனது காதலை.

”ஓயாத தலைச் சுமைக்கிடையே
ஒரு சிறு இளைப்பாறலன்றோ உன் அன்பு!”
அவன் புலம்பினான்
”காதலால் நெய்யப்படாத என் வாழ்வில்
உன் காதல் தேன் துளியாய் இனித்து
பின், தன் போதாமையால் தோற்று
இறுதியாய்
இத் தலைச்சுமைதானே வென்று நிற்கிறது?”

குரல் கேட்டு
அவன் சுமை இறக்க
மலரும் ஒவ்வொரு இளைப்பாறலும்
முதிர்ந்தொருநாள் தன் முழுமையினை
எய்திடாதா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP