Wednesday, July 31, 2013

விஷம்

பாற்குடத்தில்
விழுந்துவிட்டது
விஷம்
வேர் பிடித்துப் பரவுமுன்
அள்ளி எடுத்துவிட
தவிக்கும் கைகள்
எல்லாமே விஷ அழுக்குக் கைகளானால்?


தீண்டிவிட்டது சர்ப்பம்
புண்ணில்லாத வாய்கொண்டு
கடித்துத் துப்பு உடனே
ஏனெனில்
குடலுடம்பு ஒரு புண்

காலங்காலமாய்
நான் விசுவாசத்தோடு
தொழுது வந்த தெய்வம்
ஒரு விஷ சர்ப்பம்
(பின்னால்தான் இது தெரிந்தது)
ஒரு நாள் என்னைக் கொன்று
இட்டுச் சென்றது ஓர் அமுதவெளிக்கு
இன்று அமுதவெளி முன்
ஒரு சர்ப்பம் நான்
பாற்குடத்தில் விழுந்துவிட்ட
துளி விஷம்

தெய்வத்தைக் கொன்று
பட்டத்தை அபகரித்துச் சூடிக்கொள்
இல்லையேல்
தெய்வம் உன்னைக் கொல்லவிடு
ஆள்பவள் ஒருவனுக்கே இது இடம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP