Thursday, August 1, 2013

பாதை

உயிரின் தீண்டல்பட்டு
மரணத்தை உதறி உதறி ஓடிற்று பாதை
பாதங்களின் மந்தத்தனத்தை எள்ளிற்று
வானக வீச்சில் உயிர்கொண்ட
கணநேரப் புழுதி
முள்பயம் மட்டுமே அறிந்த பாதங்கள்
சின்னச் சின்ன பள்ளங்களை மறந்தன
பெருக்கெடுத்தோடும் வாகனங்களால்
சாலையின் லட்சணம் புலனாயிற்று
மேட்டை இடித்தன
பள்ளத்துள் வீழ்ந்த சக்கரங்கள்
சாலையெங்கும் அகலிகைக் கற்கள்
போவார் வருவார் கால்களை இடற
மனிதன் அலறுகிறான் ராமனைத் தேடி – ராமன்
கல்லுக்குள் அகலிகையாய்க் கனன்று கொண்டிருக்கிறான்
களைத்து தன்மேல் அமரப்போனவனை
இளைப்பாற விடாது எழுந்து நடந்தது அந்தக் கல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP