Saturday, August 17, 2013

விருட்சம்

கைகளை ஏற்றி
மார்பில் கட்டிக்கொண்டு
கண்கள் மாத்ரம் சுழன்றன

பார்வைக்குள் புகுந்த கனல்
கைகளை அவிழ்த்தது

கட்டு பிரிந்து விழுந்த
கைகள் இரண்டும்
மண்ணைத் தொட்டுத் துளைக்கும்
உயிர்ப்பு மிகுந்த விழுதுகளாயின

கால்களோ உயரே எவ்வி
வெளியை எட்டி உதைத்தன.
எட்டாது விலகி ஓடிற்று வெளி

கால் விரல்கள் கிளைத்து இலைத்து
விலகி ஓடும் வெளியை
இடையறாது விரட்டிற்று

பூமியிலிருந்து பூமியை
உதறி எழுந்த மேகங்கள்
இடையறாது வெளியை விரட்டும்
இலைகளைப் போஷிக்க
எழுந்து எழுந்து பொழிந்தன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP