Tuesday, August 6, 2013

கைதவறியே தொலைகிற கைக்குட்டைகள்

உலகியல் அவசரமும் ஒரு கனல்தர
நீ நிறுத்தம் இல்லாத இடத்தில்
பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸில் ஏறியதை
பிடித்துக் கொள்ளாது விட்டுவிட்டாயே-
அதுதான்!
நீ கைதவறவிட்ட கைக்குட்டையை
எடுத்துக் கொடுக்கிற உறவில்தான்
நான் இதை எழுதுகிறேன்

பஸ்ஸில் ஏறிக்கொண்டதும்
உன்னைத் தொற்றிக்கொண்ட சமாதானம்,
சக பயணிகள் மீது பொழிய
உன்னில் முகிழ்க்கும் தோழமை, பயமின்மை…

ஓட்டுநரும் நடத்துநரும் ஏற்றுக்கொண்ட
உன் பயணத்தின் உத்தரவாதத்தின் மீது
கவலைகள் துறந்து பின்னோட
பஸ் ஜன்னல்கள் தரும் அற்புதங்கள் காண
குழந்தையாகும் உன் மனசு…

உனக்கு அந்த பஸ்ஸை விட்டும்
இறங்க மனவு வராது போனதை
மறந்தே போய்விட்டாய் இல்லையா?


விருந்தினரை வாங்கிக்கொள்ள முடியாத
வீட்டுக் குறுகலில் புழுங்கும் நண்பனைக் காண
விடியட்டும் என்று
கடைசிவேளை உணவை
உணவகத்தில் முடித்துக்கொண்டு
விடுதி அறையில் தங்கியபோது
உணவகமும் விடுதியறையும் தந்த
நிம்மதி வெளிச்சத்தில்
அந்த இரவு
எதையுமே படிக்காமலா தூங்கிப்போனாய்?

சரி
இங்கே, இந்நகரத்தில்தான் இருக்கிற
நீ சேர வேண்டித் தேடுகிற இடத்துக்கு
எதிர்ப்படும் முகமெல்லாம் ’தான்’ ஆக
வழி கேட்டு தடக்கையில்
பரிவுடனே வழி சொல்லி அனுப்புகிறவன் முன்பு
குழப்பத்தில் மனசிலாகாது போயினும்
வழியெல்லாம் கேட்டுக்கேட்டே
வந்து சேர்ந்துவிடவில்லையா நீ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP