Sunday, September 1, 2013

அறுத்து எறியப்படாத முலைகள்

பிரியதமே!
ஓடும்போது குலுங்கி
வேகத் தடை செய்யும்
உன் முலைகளாம் தசைத் திரள்கள்
தம் சிறுமுகம் தூக்கி
என்னை உறுத்து விழித்துச்
சொல்லும் பொருள்?

வெகு முன்னேற்பாடாய்
உன் சதைப்பரப்பில் நீ ஏற்றிருக்கும்
இந்தக் களஞ்சியங்களிரண்டும்
அருவருப்பாய்க் கனக்கவில்லையா
உன் நெஞ்சில்?

கணந்தோறும் எரியும்
வாழ்வின் உக்கிர நெருப்பில்
நின்று தியானிக்க இயலாத புருஷர்கள்
காலக் குகைகளிற் பதுங்கி
அங்கே தங்களுக்கு முன்னேயே
வந்து பதுங்கியிருக்கும்
உன் முலைகளாற் கவரப்பட்டு
சதா உன் முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சையாயினரே!

என் உடன் வந்துகொண்டிருந்த
வேக நடையை விட்டு
கால்களை மடக்கி அமர்ந்து
பசித்தழும் சிசுவுக்கு
நீ கச்சையவிழ்க்கிறாய்!

நீ அவிழ்த்து விலக்கிய
காற்றின் தீண்டல் படாத
கச்சையின் உள் பரப்பு
புழுங்கி நாறும் குரல்
உனக்குக் கேட்கவில்லையா?
கச்சை நாண்களை ஏற்றி ஏற்றி
உன் முலையம்புகளால்
புருஷர்களை வீழ்த்தி
அவர்களை நீ
உன் முலைக் கச்சைகளாக்கிவிடும் நோக்கில்
உன் ஆதிக் குணம்தானே
விசாலித்துள்ளது!
முலைகளைப் பிடுங்கவும்
மூண்ட காலாதீதப் பெருநெருப்பில்
அநீதி நாறத் தொடங்கிய
மதுரையை எரித்துவிட்டு
மலையுச்சி ஏகி மறைந்த
கண்ணகியின் கதை தெரியாதா உனக்கு?
இனி என்று நீ வீறுகொண்டு
முலைகளை அறுத்தெறிந்துவிட்டு
என் வேக நடையோடு
வந்துசேரப் போகிறாய்
சொல்!

ஸ்திரீ சொல்கிறாள்:
புருஷ!
என் தாய்ப் பிரகிருதியால்
சீதனமாய்க் கொடுக்கப்பட்ட இத் தனங்கள்
கால நோய் பிடித்த கட்டிகளல்ல!
அன்னவளின் கருணாமிர்தம் ஊறும்
அவ்வக் கண ஊற்று

ஓடும்போது குலுங்கி
வேகத் தடைசெய்யும்
இக் கருணாமிர்தக் கருவிகள்
தம் ஸ்ரீமுகம் தூக்கிச்
சொல்லும் பொருள் கேள்:

அறிவாயோ நீ
எங்கிருந்து புறப்பட்டது
உன் வேக நடையென்று?

முலை பருகாது
முலை பற்றிக்கிடக்கும்
முலைக் கச்சைகள்
முலை நுனியினின்று
முதுகு நோக்கி ஓடிச் சிறுத்து
புண்கட்டும் துணிகளாய் நாறின பார்!
எனவே ஓடும்கால்களை மடக்கு-
உடன்
உன்னில் சுரக்கத் தொடங்கும்
முலைகள் முன்
நீயே சிசுவாய்
பருகுவாய்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP