Tuesday, September 24, 2013

ரயிலில் சந்தித்தவன்

ஏறியது தெரியும்
இறங்கியது தெரியும்
வேறொன்றம் தெரிந்திலேன்
நீண்ட பயணம்தான் அது எனினும்
இரவு அது;
உறக்கம் கொண்டுவிட்ட இரவு

ஓர் அந்திப்பொழுதின் அழகைச்
சிதறடித்துக் கொண்டு ஓடிவந்து
வண்டியைப் பிடித்தேன்
ஆசுவாசம் கொண்டு சகமனிதர்களை
நேசத்துடன் நோக்கத் துவங்குகையில்-
என்ன பரிதாபம்-
விழிகளை உறக்கம் கவ்விக்கொண்டது

யார் யாரையெல்லாமோ சந்தித்தது
உறவாடியது; பேசிச் சிரித்தது; விவாதித்தது;
நிற்கும் ஸ்டேஷன்களில் நின்று
உணவு விற்போரைக் கண்டது; வாங்கி உண்டது
எல்லாம் உறக்க மயக்கத்தின் போதையில்
வந்து போன பிம்பங்களாய்க் கழிந்தன

இன்று,
என் கதவைத் தட்டி அறைக்குள் வந்து நிற்கிறாய்
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு.
நீ கூறும் என் பயண நாட்களை வைத்து
சரிதான் என்று ஊர்ஜிதம் செய்கிறேன்

என் உறக்கத்தின்
போதை இருளிலிருந்து வந்திருக்கிறாய்.
மேலும், நான் தூங்கியபோது விழித்திருந்து
என்னைக் கண்டவன் நீ
ஆ!
உன்னைச் சந்திக்கிறதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP