Tuesday, September 3, 2013

நானல்ல

குறுக்கிடும் பாதைவழி வந்து
என் முன் நடந்தாள் அவள்

சமூக பயத்துக்கு ஆட்பட்டு
நான் என் நடையைச் சுருக்காததால்
நான் அவளைப் பின் துரத்துவதாய்
காட்சியளித்திருக்கிறது அது

எங்களைக் கண்காணித்தவாறு
எங்களை ஒட்டி
உடன் வந்து கொண்டிருந்தது வேலி

வேறு யாருமற்று
அனாதையான அந்த இடத்தில்
முந்தானை பிடித்து இழுக்கப்பட்டு
இரத்தம் அதிரத் திரும்பினாள் அவள்
நானும் நின்றேன் சில வினாடிகள்
குற்றக் கூண்டுக் கைதியென

நானல்ல குற்றவாளி,
வேலியே
தனக்கு எதிர்சாட்சி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP