Friday, September 6, 2013

மழை

மழை மீது
(மழையின் சவக்கோலமான
மழைத் தண்ணீர் மீது)
மழை விழுந்து
மழை உயிர்த்தெழும்பும்
சிலிர்த்துக்கொண்டு.
ஒவ்வொரு துளியிலும்
ஒரு மையம் உடைகிறது
அதன் வட்டம் மழை முழுக்க பரவுகிறது
ஒரு கோடி மையங்கள்!
ஒரு கோடி வட்டங்கள்!
மழையின் கரையோரம் நான் நடந்தேன்
மழை உயிர்த்து கரை பொய்த்து
என் காலடியில் சரிந்தது
கரை சரிந்து கரை முழுகி
வெள்ளத்தில்
சதா பொய்த்துக்கொண்டிருந்தது
கரை முழுசுமே பொய்யென உணர்ந்தேன்-
தொடுவானம் போல்
மழையின் கரை ஒரு பொய்
துளியின் வட்டம்
கரையற்ற மழையில்
காண முடியாத
இருக்க முடியாத ஒன்று
புலன்களின் வாயில்களை அடைத்து
உள்ளே நோக்குகிறேன்-
திசையற்ற மனவெளியில்
மழை எங்குமிருந்து
ஒரு புள்ளியை
அல்ல, ஏதோ ஒரு புள்ளியிலிருந்து
எங்கும் பாய்கிறது
ஒரு புள்ளியை நோக்கிப் பாய்கிறது-
அல்ல, இரண்டுமே.
மழைத் தாரை
சக்திமிக்க மின்கம்பிகளாய் வீறிட்டு
இருபக்கமும் பாய்ந்து
சூரியனாய் எரிகிறது; ப்ரகாசிக்கிறது.
இப்போது மழை மீது மழை.
ஒரு பரிதி; நெருப்புக் கோளம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP