Friday, October 11, 2013

எனது குழந்தைகள்

கொலுசுப் பூச்சிகள் ஒலிக்கக்
குறுகுறு என ஓடிவந்து
என் கண்களைப் பொத்தும் நிஷா.
கண்களைத் திறந்துவிட்டு...
பட்சிகள் சப்தம் கை கொட்டிச் சிரிக்க
இலைகளை ஊடுருவி நிற்பாள் உஷா

காலையில் கண்ணைக் கசக்கி எழுகையில்
கையைப் பிடித்து இழுத்துப் போய்
வால் நட்சத்திரங்களாய்ச் சிந்திக் கிடக்கும்
பன்னீர்ப் பூக்களை வியப்பாள்

விழித்தவுடனேயே
ரோஜாப் பதியனின் முகத்தில்
புதுத் தளிர் பார்க்கும்
என்னுடன் அமர்ந்து
பூவை - அதிலே
கனவிக் கனவிக் களிப்பாள்
சூர்யபிரபா
O

என் அல்ப ரூபத்தில்
அடையாளம் காணமுடியாமல்
பள்ளி போகும் தெருவெல்லாம்
பாராமல் போகும் குழந்தைகள்,
ஓடும் பஸ்ஸில்முன் ஸீட்டுப் பெண்ணின்
தோள்வழி எட்டிக்
கண்டுகொள்ளும்;
சிரிக்கும் எனக்கு

முற்றத்து நிழலில்
வீடு கட்டிச்
சீரும் செட்டுமாய்க்
குடும்பம் நடத்திப்
பிள்ளைகள் பெற்றுப்
பெரிய மனுஷர்களாய்
விளையாடும் வாழ்க்கை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP