Wednesday, April 24, 2024
இசை
பாதத்திலொரு முள்தைத்து
பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது
வழியை அடைக்கிறது வலி
வலியினுள்ளா
வழியினுள்ளா
வாத்தியம் ஒன்று இசைக்கிறது!
Monday, April 22, 2024
தர்மம்
தர்மம் வேறு
மதம் வேறு
(தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும்
மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்)
இல்லையா?
தர்மத்தின் முன்னொட்டாக
மதத்தின் பேரைச் சேர்க்கிறது
சாத்தான்!
பாவம்
அவனும்
தன்னைத்தானே
அறிந்து கொள்ளாத
அறிவிலிதானே?
Friday, April 19, 2024
Wednesday, April 17, 2024
அவன் குரல்
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்
தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?
ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?
ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?
Monday, April 15, 2024
குன்றாத அமுதம்
வந்தமர்ந்து தேனுண்டாலும்
குன்றாது விளைந்து கொண்டிருந்தது
மலர்த்தேன்
வந்தமர்ந்த மலரிடமிருந்து
அதுவும்தான் தேன் பருகிக் கொண்டிருப்பதால்!
Read more...
Friday, April 12, 2024
Wednesday, April 10, 2024
மாபெரும் பாடல்
மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது
ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்
சாதிவிஷக்காரன் என்பதுதானே
நாம் கண்ட கொடுமை..?
பாடுவது யார்க்கும் அரியவாம்தான் என்றால்
இதுகாறும் நம்மால் படைக்கப்படாத
ஒரு மாபெரும் பாடலைத்தானே
பாடப் பார்க்க வேண்டும் நாமிவ்வுலகில்?
Monday, April 8, 2024
பாடுகள்
கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …
மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்
பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?
பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?
பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!
-இனி ஒரு விதி செய்வோம்(2023) தொகுப்பிலிருந்து
இந்நூல் சீர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்
Read more...
Friday, April 5, 2024
தேவதேவனை தவிர்ப்பது… Aug 2015 - ஜெயமோகன் தளத்திலிருந்து
தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது
முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....
”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே