விடுதலையானாற் போல்
விடுதலையானாற் போல் சிறகடித்தாள்
விதவையான பிறகும் மல்லிகா
எழுதுவது அதிகமானது மட்டுமின்றி
கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள்
ஆண்கள் ஜொலித்தால்
அது அவர்கள் ஆற்றலின் விகசிப்பு
பெண்கள்தாம் முன்வந்தால்
அது காமத்தின் தந்திரப் பரிதவிப்பா?
ஃபிராய்டியம் நாறும்
சில ஊத்தை வாய்களை மூடியபின்தான்
மல்லிகாதன் கட்டுரையை வாசித்தாள்:
மனிதர்களாகிய நாம்
இன்னும் எந்த ஒன்றையும்
சரியாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கவில்லை
முதலில் நம்மைநாம் அறிந்து கொள்ளவில்லை
பெண்கள் முன்னே ஒரு ஆணும்
ஆண்களிடையே ஒரு பெண்ணும்
ரொம்ப அலட்டிக் கொள்வதைப் போலவே
ஆழமற்றிருக்கின்றன நமது தாபங்கள்.
பொழுது போகின்றது காலம் காலமாக
ஆழமற்ற வேட்கைகளும் வேட்கையடங்கல்களுமாக.
வலியும் துயரும் உணராக்
கேளிக்கைகளும் துய்ப்புகளுமாக
இப்போதும் மல்லிகாவை
ரொம்ப அலட்டிக் கொள்வதாகச் சொல்பவர்கள்
யாரிடையே எவ்வேட்கை கொண்டென்ற
விசாரணையினைத் தொடர்கிறார்களா?