காயும் வெயிலில்
காயும் வெயிலில்
தான் இளைப்பாறுவதற்கான
நிழலை
தானே படைத்துக் கொண்டு நிற்கின்றன
மரங்கள்!
Poet Devadevan
காயும் வெயிலில்
தான் இளைப்பாறுவதற்கான
நிழலை
தானே படைத்துக் கொண்டு நிற்கின்றன
மரங்கள்!
விதைத்துப்
பரவுவதற்காக மட்டும்தானென்றால்
இத்தனைப் பூக்கள்
பூக்க வேண்டுமா இந்த மரம்?
உருவமில்லாத முழுமையும்
பெயர் கொடுக்கப்படும் போதுதானே
துண்டுகளாக மாறிவிடுகிறது?
துண்டுகள், ஆபத்தான துண்டுகள்
எனப் புரிந்து கொள்ளப்படும் போதுதானே
முழுமைக்கே திரும்பிவிடுகிறது?
இமைப் பொழுதில் மாறிவிடும் இவற்றை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால்?
மொத்த முழுமைக்கும் உருவமில்லை
துண்டுப் பகுதிகளுக்குத்தான் உருவமுண்டு
முழுமையில் எல்லாப் பகுதிகளும் இருக்கின்றன
ஆனால் துண்டுப் பகுதிகள் எதிலும்
முழுமை இல்லை. அதனால்தானே
அவற்றிற்குத் துண்டுகள் என்றே பெயர்?
முழுமையில் வாழாமல்
துண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை
உய்வில்லை இந்த உலகிற்கு,
மேலும் இந்த உலகத் துயர்களுக்கெல்லாம்
காரணம் இவன்தான் அல்லவா?
கிடைக்கப் பெற்று
நம்மால் உண்டு செரிக்கும் போதெல்லாம் மட்டுமே
உயிர் பெற்று வாழும் ஆற்றல்கள் எவை
அவற்றையெல்லாம் பற்றிக் கொள்ளுங்கள்!
கடவுளுக்கு உருவமில்லை
ஆனால், செயல் எனும்
உருவத்தில்தான் அவரைக் காணமுடியும்!
ஆனாலும் நிச்சயமாக அது
நாம் படைத்த உருவத்திலில்லை.
நம்மால் படைக்கப்படாத
அந்த உருவத்திலும்கூட
அவர் மாறிக் கொண்டேயிருப்பதால்
அவரைப் பற்றுதல் என்பதே
புதுமாதிரியானதாக இருக்கிறது
பகலுக்கு பரிதிபோல
இரவுக்கு வேண்டியிருக்கிறது
பிணச் சிதை நெருப்பு
நெய்யில் எரியும் சுடர்
மின்விளக்கு என
ஏதாவது ஒன்றா,
சுட்டும் விழிச்சுடர் போலும்
வான்மீன்கள் கோடி அல்லவா?
அதன் கீழ்தானே இருக்கிறது
மெய்வழிச் சாலை?
இந்த இருண்ட காட்டிடையே
பார்வையினின்றே பிறக்கும் பாதையாய்!
ஓடும் நதி
தன் உள்ளத்து மீன்கள் மூலமே
அறிந்து கொள்கிறது,
அனைத்து திசைகளையும்!
திசைகளற்ற பெருவெளியையும்!
தான் வாழும் இடத்தையும்!
தன்னையும்!
தான் அல்லாததை
அறிய முற்படும்போதுதானே
தன்னையும் இழந்து
காணும் கண்களேயாகிவிட்டது?
முத்துப் பற்கள் ஒளிர
இடையறாது ஒலிக்கும் புன்னகையாய்
கடல் அலைகள்!
கரை மணல் மடிமீது அமர்த்தி
தழுவி வருடி சீராட்டிக் கொண்டு
நீலவானையும்
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
எல்லையற்ற அமைதியையும்
காட்டுகிறாய் உன் மக்களுக்கு!
அவர்களோ
வேறெங்கெங்கெல்லாமோ அல்லவா
சுற்றித் திரிந்து கொண்டு
போரிலும் துயரிலுமாய் உழல்கிறார்கள்?
விண்ணின் சிரிப்போ
மரங்களின் சிரிப்போ
பூத்து பூத்து உதிர்ந்து உதிர்ந்து
பூத்துக் கொண்டேயிருக்கும்
ஒளிமலர்களோ?
ஒளியும் நிழலும்
ஓடிப் பிடித்து விளையாடும்
கண்ணாம்பூச்சி ஆட்டமோ
அசையும் மரக்கிளைகளின்
ஒளிநிழல் ஆட்டம்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP