உதிர்மலர்கள்
அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!
Poet Devadevan
அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!
“நீங்கள் குழந்தைகளாகாதவரை
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!”
உண்மை கண்டீர்!
எந்த ஒலி கேட்டாலும்
திரும்பிப் பார்த்த குழந்தை-
அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டிய முதல்தானா
அது தன் குழந்தைமையிலிருந்தும் விலகி
பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன?
என்றால் இந்தப் பெயர்கள்
எதைச் சுட்டுகின்றன
எங்கு செல்கின்றன
என்பதையும்,
பெயரற்ற பெருநிலையையும்
குழந்தைமையையும்
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
நாம் கண்டு கொண்டிருக்க வேண்டுமல்லவா?
தன்னைத் தானே
சுற்றி வருகிறது
நித்திய வனத்தின்
வெள்ளிமலைப் பாதை
எங்கும் போகாமல்
எங்கும் போகாமலுமில்லாமல் !
ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?
கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன் அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?
அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!
அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!
இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!
மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!
ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு
ஓடும் இந்த நதி
எங்கு தோன்றினோம்
எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாது
யோசிக்கிறதுமில்லை
தன் வாழ்வுப் பயணத்தில்
பாறைகள் பசுந்தாவரங்கள் என
வந்தவர்களோடெல்லாம்
கொண்ட உறவினையும்
இதன் இனிமையையும் தவிர
வேறெதுவுமே அறியாது
அப்படி ஒரு வெகுளி!
உலுக்கி குலுக்கி
சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற
ஆற்றல்
இந்த ஒவ்வொரு பாறைகளிடமும்
குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும்
தூசுகளிடமும்கூட
மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP