துயரும்…
துயரும்
கருநீலமலர்களாய்ப்
பூத்துவிட்டபோது
அது எப்படி
துயர் ஆகும்?
Poet Devadevan
பாடகி: தீபா
இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது
அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு
தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
பேரின்மை
பொம்மை வடிவானவுடனேயே
மரித்தும் போனதை
கண்டு உதறி
யாண்டும் மெய்ம்மை காணவே
விழித்துக் கொண்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோமா?
விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.
ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!
மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!
அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!
அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?
ஒரு பொட்டு மூக்குத்தி!
அதன் அழகு ஏன் நம்மை
இப்படிக் கொல்கிறது?
எவ்வளவு காலமாய்
நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை
இன்று நாம் கண்டு கொண்டோம்
ஒரு மொத்த அழகோடே!
ஆழ்கடலினின்று கண்டெடுத்த
முத்தின்மேல் ஒளிரும் முழுநிலவுபோலும்
ஒரு பேரொளியை!
பெரும் புரட்சியைப் படைக்க இருக்கும்
பெரு வெள்ளத்தின்
ஒரே உண்மையான ஒரு துளியை!
அவர் நடக்க நடக்க
இடமும் வலமுமாய்
அவர் செறிகுழலும் அசைந்தது.
தன்னை ஆட்டுவிக்கும்
உயிர் பற்றியோ
உடல் பற்றியோ
உறுப்புகள் பற்றியோ
தன்னைப் பற்றி
எதுவும் அறியாத பிறவி
நடை நிற்கவும்
அது தானும் நின்றபோதெல்லாம்
யாவும் அறிந்தது மட்டுமா
நிகழ்ந்தது
யாவும் அறியாததும்
புதிது புதிதாய்
நிகழ வேண்டியதுமல்லவா
நிகழ்ந்தது அங்கிருந்து?
ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?
இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!
“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”
இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.
சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP