மழையின் செய்தியாய் ...
மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!
Poet Devadevan
மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!
விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்..
மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு
மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்
ஒரு மனிதன் ஒரு மனிதன்மீதுதான்
எத்துணை பரிவு கொண்டவனாகிவிடுகிறான்!
எதிரே வந்துகொண்டிருக்கும் இருவர்
எத்துணை வறுமையும் கொந்தளிப்புமாய்
இருந்தாலுமென்ன,
இந்த நேரம் இந்த வெளியில்
பேரன்னையின் அரவணைப்பில் துவளும்
பிள்ளைகளைப் போலல்லவா
காணப்படுகிறார்கள்?
நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?
ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?
ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட! என
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?
தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.
கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _
யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!
தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !
இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;
புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!
உடல் உறுப்பு ஒன்றின்
தசைநார்ப்பிசகு வலிபோக்க வந்த
நிபுணரான அந்தப் பெண்ணுக்கு
மாறா இளமை ஒன்று மிளிரும் மாய அழகு!
மானுட அழகின் பொதுமொழி பேசும் கண்கள்!
சிகிச்சை பயிற்சிக்கு இடையே இடையே
நடந்த உரையாடலில்
பெருநகர்களுக்கே உரிய
உலகின் வேறு வேறு தலங்கள்
வேறு வேறு மொழிகள்
வேறு வேறு இனங்களையெல்லாம் கடந்த
புத்தம் புதியதொரு செய்தியாக
தான் ஒரு குழந்தைப்பேறு மருத்துவரும்கூட
என்றார் அவர்
அவர் பெயர் 'இலக்கியா' எனும்
பொருள்தரும் சமஸ்கிருதச் சொல்.
அவரது பொழுதுபோக்காய்:
கால்பந்து மற்றும் கதக் நடனம்.
அம்மா பரதநாட்டியர்,
அப்பாவும் கவிதைநேசர்
இலக்கியா எனும் பெயருடன்
மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும்
கற்றுக்கொடுத்தவர்.
உலகைக் கொடூரமாய்ப் பாழ்படுத்திக்கிடக்கும்
சாதி மத இன பிரிவுகளையெல்லாம் தடுத்து
உலகை இணைத்துவிடுவதற்கான
அடையாளமாய்
கலையும் இலக்கியமும் மருத்துவமுமாய்
அந்த பெண்மணி_
மானுட அழகின் பொதுமொழி பேசும்
கண்களுடன்!
துவாரமுள்ள ஒரு மூக்குமடலில்
சொருகுவதற்கான ஊசியுடன்,
கட்புலனாகா
பொன்னில் பொதிந்த
புள்ளி வைரக்கல்லாய்,
ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே
வழியில் அவன் கண்களைப் பறித்துவிட்ட
ஒரு மூக்குத்தி!
ஒவ்வொரு மண்துகள்களையும்
ஒளிரவைக்கப் பார்க்கும் பேரொளி!
எப்போதும் அவன் உயிரை
வாட்டி வதைத்துக் கொண்டிருந்த
பெருவெள்ளத் துளியும்
விலைமதிக்க முடியாததும்
ஆசைகளாலன்றி
பேராற்றற் பெருங்கடலில் விளைந்த
முத்துச் சன்னம்!
வெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை
பெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்
வரிசை மரங்கினூடே அச்சாலை
மெதுவாய் நகர்ந்துகொண்டிந்தது
நானோ,
மெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து
திகைத்து நின்றுவிட்டேன்.
மனிதர்களுக்கு இடைஞ்சலிக்காது
சாலையோரங்களில் மரங்களின் ஊர்வலம்
கானகத்தில் மரங்களின் மாநாடு
மரங்களின் ஒரே கோஷம்:
”மழை வேண்டும்!”
மழை வேண்டி வேண்டி
வானத்தைப் பிராண்டின கிளைகள்
நீர் வேண்டி வேண்டி
பூமியைப் பிராண்டின வேர்கள்
வெள்ளமாய்ப் பெய்த மழையில்
மரங்களும் சாலையும் நானும்
நனைந்தோம்
முளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்
நனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு
சாலைகள்
எங்கும் தங்குவதில்லை!
சாலையோர மரங்கள்
பயணம் செய்வதேயில்லை!
சாலையும்
சாலையோர மரங்களும் போன்ற
புரிதல்மிக்க நண்பர்கள்
உலகில் யாருமில்லை
கண் கொள்ளாக் காட்சியாய்
தட்டுநீரில் நடந்து செல்லும்
கொக்கும் கொக்கின் பிம்பமும்!
தடாகத்தில் நீந்தும்
வாத்தும் அதன் பிம்பமும்!
நமது உருவிற்கும் பிம்பத்திற்கும்
இடையேயன்றோ இருக்கிறது
நாம் கண்டுகொள்ள வேண்டிய காட்சி?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP