கண்டுபிடித்துவிட்டதால்…
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
Poet Devadevan
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
மூடிய பனித்திரை விலக்கி
தான் படைத்த உலகின்
குன்றாத பேரெழிலை
எட்டிப் பார்க்கிறான் சூரியன்!
நாம் படைத்த உலகைப் பற்றி
அவனுக்கென்ன கவலை?
ஓ, சூர்ய
நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில்
நான் ஒரு இதழ், அப்படித்தானே?
என்ன வியப்பு இது, நீயே
எனக்கு உள்ளும் புறமுமாய்
திகழ்ந்து கொண்டிருப்பது?
நாம் யார் சூர்யா?
இப் பேரண்டத்திற்கும் வெளியேயிருக்கும்
பேரின்மைதான் கடவுள் எனில்
அவரும் நமக்கு உள்ளேயும் வெளியேயும்
இருப்பவர்தானே?
கடவுள் என்பதும்
பேரின்மை என்பதும்
தன்மய்யமற்றதாலே முடிவிலியும்
முடிவிலியானதாலே தன்மய்யமற்றதும்,
அல்லவா?
இம் முடிவிலியே
எல்லாப் படைப்புகளுக்கும் ஆதாரமாய்
தாய்பிள்ளை சுழற்சியில் இயங்குவதை
நான் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன், சூர்யா!
மனிதர்களும் தாம் படைக்கவேண்டிய
மானுட வாழ்வுக்கான முன்மாதிரியும்
இதுவாகவே இருக்க வேண்டும்.
இப் பேரண்டத்தின் மதம் இது
இல்லையா, சூர்யா?
உப்பிய வயிற்றை
ஒரு உள்ளங்கையால் தொட்டபடி
தன் உள்ளிருப்பை உணரும்
பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா?
இந்தக் குழந்தை-
(இதுபோல் இப்போது
உலகில் பிறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு குழந்தையும்தான்)
இந்த உலகைக் காப்பாற்றும்
கடவுள் என்றே நம்புகிறேன்
இந்த அன்னையர்கள் எல்லோருமே
கன்னிமேரிகள்தாம் என்றே நம்புகிறேன்
ஒரே ஒரு வேறுபாடுதான்
இயற்கை தன் தவறிலிருந்து
தன்னைத் திருத்திக் கொண்டுவிட்ட
இந்த உலகத்திலிருந்து இனி பிறக்கப்போவது
ஒற்றைப் பாலுயிரியான
தெய்வங்கள் மட்டுமே என்பதுதான்!
நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ
எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ
பாடகி: தீபா
இக் கவிதை ”காற்றினிலே வரும் கீதம் - 2022” கவிதைத் தொகுப்பில் உள்ளது. தன்னறம் பதிப்பகத்தின் தொகுப்பு- 1ல் உள்ளது
அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு
தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
பேரின்மை
பொம்மை வடிவானவுடனேயே
மரித்தும் போனதை
கண்டு உதறி
யாண்டும் மெய்ம்மை காணவே
விழித்துக் கொண்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோமா?
விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.
ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!
மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!
அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!
அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?
ஒரு பொட்டு மூக்குத்தி!
அதன் அழகு ஏன் நம்மை
இப்படிக் கொல்கிறது?
எவ்வளவு காலமாய்
நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை
இன்று நாம் கண்டு கொண்டோம்
ஒரு மொத்த அழகோடே!
ஆழ்கடலினின்று கண்டெடுத்த
முத்தின்மேல் ஒளிரும் முழுநிலவுபோலும்
ஒரு பேரொளியை!
பெரும் புரட்சியைப் படைக்க இருக்கும்
பெரு வெள்ளத்தின்
ஒரே உண்மையான ஒரு துளியை!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP