சாலையும் சாலையோர மரங்களும்
சாலைகள்
எங்கும் தங்குவதில்லை!
சாலையோர மரங்கள்
பயணம் செய்வதேயில்லை!
சாலையும்
சாலையோர மரங்களும் போன்ற
புரிதல்மிக்க நண்பர்கள்
உலகில் யாருமில்லை
Poet Devadevan
சாலைகள்
எங்கும் தங்குவதில்லை!
சாலையோர மரங்கள்
பயணம் செய்வதேயில்லை!
சாலையும்
சாலையோர மரங்களும் போன்ற
புரிதல்மிக்க நண்பர்கள்
உலகில் யாருமில்லை
கண் கொள்ளாக் காட்சியாய்
தட்டுநீரில் நடந்து செல்லும்
கொக்கும் கொக்கின் பிம்பமும்!
தடாகத்தில் நீந்தும்
வாத்தும் அதன் பிம்பமும்!
நமது உருவிற்கும் பிம்பத்திற்கும்
இடையேயன்றோ இருக்கிறது
நாம் கண்டுகொள்ள வேண்டிய காட்சி?
நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்க முடியாது
நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
இயற்கை வேளாண்மையில்
கொழித்த தக்காளிப் பழம் அல்லவா
சிக்கென்ற இனிப்பும் உறைப்பும் வண்ணமும்
அழுத்தமாய்க் கூடிய அற்புதச் சுவையுடன்
இருந்தது…
உடன் வந்து கொண்டிருந்த
அழகியும் அன்பியுமானவரிடம்
“இதழ்ச் சுவை போல” என்று
வாய்க்கு வந்த சொல்லைச் சொல்ல
அச்சமாக இருந்தது…
அதனாலேயும்தானே அது
கூடுதலான சுவையுடன் இருந்தது?
ஒளிரும் மின் விளக்குகளுடன்
வானத்தின் கீழிருந்த மைதானம் போலிருந்தது
அந்த ஆடைக் கடையின் சிறப்புக்கூறு, கவர்ச்சி!
வணிகமே நோக்கமாயிருந்ததால்
அதைப் படைத்தவனாலும் சரி
அதனால் ஈர்க்கப்பட்டு வந்து உலாவும்
மனிதர்களாலும் சரி
கண்டு கொள்ளப்படாத
அனாதையாகவே இருந்தது
அங்கே அந்த படைப்பின் விக்கிரகம் அளித்த
பேருணர்வு!
”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
சாதியாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!
இருந்த இடத்தில் இருந்தபடியே
ட்ரெட்மில்லில் ஓடவிட்டு
அவன் இதயத்தைப் பரிசீலிக்கிறார்
டாக்டர்.
நடைக்கும் அப்பாலுள்ள
சொற்சமாச்சாரங்கள் எதுவுமே
காரியத்திற்கு உதவவில்லை மற்றும்
ஆபத்துகளின் ஊற்றாயிருப்பதும் என்பதுதானே
நாம் கண்டதும் காணாததுமான உண்மை?
பதினொன்றாம் மாடியில்தான்
அவன் ஓய்வும் துயிலும்.
கீழே புல்வெளியும் மரங்களும் செழித்த
உபவனத்தில்தான் அவன் நடை.
திடீர் திடீரென
குழந்தைகளின் விளையாட்டுச் சதுக்கத்திலிருந்து
வானமும் பூமியும்
கூடிவிட்டாற்போல்
கோடானு கோடி சமிக்ஞைகளுடன்
விரிந்து பூத்து உதிரும் ஒரு
பேரொலிமலர்!
விண்ணிலிருந்தும்
மனிதனின் மய்யத்தைத் தொட்டு
மய்யத்திலிருந்தும்
சிக்கிக் கொண்டதிலிருந்து
பாய்ந்து
பூமியைத் தொட்டு நிற்கும்
கதிர்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP