கட்டுடல் அழகு
கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன் அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?
Poet Devadevan
கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன் அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?
அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!
அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!
இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!
மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!
ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு
ஓடும் இந்த நதி
எங்கு தோன்றினோம்
எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாது
யோசிக்கிறதுமில்லை
தன் வாழ்வுப் பயணத்தில்
பாறைகள் பசுந்தாவரங்கள் என
வந்தவர்களோடெல்லாம்
கொண்ட உறவினையும்
இதன் இனிமையையும் தவிர
வேறெதுவுமே அறியாது
அப்படி ஒரு வெகுளி!
உலுக்கி குலுக்கி
சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற
ஆற்றல்
இந்த ஒவ்வொரு பாறைகளிடமும்
குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும்
தூசுகளிடமும்கூட
மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!
விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்..
மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு
மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்
ஒரு மனிதன் ஒரு மனிதன்மீதுதான்
எத்துணை பரிவு கொண்டவனாகிவிடுகிறான்!
எதிரே வந்துகொண்டிருக்கும் இருவர்
எத்துணை வறுமையும் கொந்தளிப்புமாய்
இருந்தாலுமென்ன,
இந்த நேரம் இந்த வெளியில்
பேரன்னையின் அரவணைப்பில் துவளும்
பிள்ளைகளைப் போலல்லவா
காணப்படுகிறார்கள்?
நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?
ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?
ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட! என
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?
தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.
கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _
யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!
தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !
இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;
புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP