எங்கே அவன்?
ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!
அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!
அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!