Saturday, April 2, 2016

தேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்


தேவதேவன் கவிதை முகப்படங்கள் (WALLPAPERS) இணைப்பு


தேவதேவன் கவிதை முகப்படங்கள் அறிமுக விவரம்

Read more...

Saturday, October 19, 2013

எனது வீட்டுத்தோட்டம்

உலகின் பதற்றநிலையிலிருந்து
வெகுதூரம் இல்லை எனது வீடு
வீட்டின் ஜன்னலை உரசிக்கொண்டுதான்
நிற்கிறது எனது தோட்டம் எனினும்
உலகைவிட்டு, இந்த வீட்டைவிட்டு
வெகுதூரம் தள்ளியிருக்கிறது எனது தோட்டம்

நான் விழிப்பதற்கு முன்
என் கனவில் தென்பட்டது?
காடோ? தரிசோ?
விழித்தவுடன் என் கண்ணில்படாது
(ஒரு ரசாயன மாற்றம் பெற்று
மறைந்துகிடக்கும் சக்தியாக மட்டுமே
அது இருக்கலாம்)

மூங்கில்களைத் துளையிடும் வண்டுகளைப் போலவும்
தன் சிறகுகளால் இரும்பு விலங்குகளை
உடைத்துவிடக்கூடிய வண்ணத்துப் பூச்சிகளைப் போலவும்
இன்று மட்டுமே உலாவுகிறது இங்கே
இல்லை;
காய், கனி, பிஞ்சு, கனியுள் விதை என்று
எக்காலமும்
இன்றாக மட்டுமே இருக்கிறது இங்கே

கடிகாரங்களைப் பார்த்து அன்று
பூமியின் பருவகாலங்களைக் கேட்டு
அவை நடக்கின்றன,
ஒரு துறவியின் உள்ளத்தைப் போல,
துறவிக்கும் என் தோட்டத்திற்கும் வீடு
கிடையாது என்று எண்ணியிருந்தேன்; அது தவறு,
தோட்டக்காரனின் பராமரிப்பே
தோட்டத்தின் வீடு
தோட்டப் பராமரிப்பில் இருக்கும் ஒருவனிடம்
ஒரு மதவாதிக்கோ தத்துவவாதிக்கோ
தீர்க்கதரிசிக்கோகூட சொல்வதற்கு ஏதுமில்லை

Read more...

Friday, October 18, 2013

அன்பின் முத்தம்

பார்த்திருக்கிறாயா?
பாலை நடுவே ஒரு கடலை?
அங்கே
உள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்
சுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி
அலைகளிலே அசைந்து வரும் படகை?

பருகியிருக்கிறாயா,
பருகும் ஒவ்வொரு துளி நீரிலும்
உள்ளதாம் அன்பின் முத்தம்?

கலங்கியிருக்கிறாயா என்றாவது,
எனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்
குடம் நீர் கவிழ்ந்து
கடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு?

பருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு
பொங்கும் குழந்தைமை – எங்கே? எங்கே?
தவிதவித்திருக்கிறாயா,
சூர்ய அடுப்பாக மாறி
இழந்ததையெல்லாம் மீட்பதற்கு?

இறுதியாக,
உன் துயரங்களினின்றும்
உயிர்த்தெழுந்திருக்கிறாயா,
தன்னந்தனியாய் அப்படகில் வரும்
அந்தத் தண்ணீர்க் குடமாக?

Read more...

Thursday, October 17, 2013

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு

ஒரு கவிதை எழுதப்படுவதற்கு முன்னும் பின்னும்
நான் எவ்வாறு இருக்கிறேன் தெரியுமா?

இருண்ட கானகத்துள் தொலைந்து போனவன்
அடுத்த அடியை வைக்கும் பாதம் தொடுவது
பெரும் முள்பரப்பா, ஆழ் சகதியா, பள்ளமா தெரியாது
எனது வழியற்ற வழியில் நான் கண்டவர்கள்
குறிக்கோளையும் பாதைகளையும் மிகத் தெளிவாய் அறிந்த
தீர்க்க நடையினர்
நானோ சென்றடைய வேண்டிய இடத்தின்
திக்கோ அடையாளமோ தெரியாதவன்
வழிகாட்டப்படக்கூடும் வாய்ப்பினை இழந்தவன்

பீதியுற்ற குழந்தையாய்
நான் அரண்டு நின்றதும் வெகு நேரம் இல்லை.
கதறி அழுவதையும் விட்டுவிட்டேன். அதன் எதிரொலியாய்
கானகமே அழுவதைக் கண்டு
பிறிதோர் மேன்மைப் பயத்திற்கு ஆட்பட்டு
இப்போது நான் அடிக்கும் சீட்டியொலியும், குரல் தூக்கலும்
பாடல் அல்ல; பயத்தின் பேய்விரட்டல்

அதோ அந்த விண்மீன்களிடமிருந்தா?
இந்தக் குன்றிடமிருந்தா?
இந்த மரங்களிடமிருந்துதானா?
ஏதோ ஒரு மௌனமான
பொறுமைப் பார்வையினின்று வந்த காற்றில்
ஓர் அற்புதம் போல் முகிழ்ந்த ஒரு மலரால்
இக் கானகச் சூழல் எனக்கு அன்யோன்யப்படும்
அந்தக் கணம், எல்லாமே மாறிவிடும்
நானும் புதியதாய்
ஒரு கவிதையை எழுத அல்லது வாழத் தொடங்கியிருப்பேன்

Read more...

Wednesday, October 16, 2013

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு

அடுத்த அறையில் என் மனைவி என் மகளிடம் -
”அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார்?”
”கவிதை...”

நான் அந்தச் சொல்லை எத்தனையோ பேர்
எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்விதமாய்
அர்த்தச் செறிவும் அர்த்தமின்மையும் ஒருங்கிணைந்த
ஓர் அம்ருதத் தன்மையுடன்
ஒரு நாளும் ஒலித்ததில்லை அது.
ஏன்?
அவளுக்குக் கவிதை தெரியும் என்பதாலா?
அல்லது ஏதும் அறியாத சின்னஞ் சிறுமி என்பதாலா?

நான் எழுதி முடித்த கவிதையைத்
தனக்கு வாசித்துக் காட்டியே ஆகவேண்டும் என்பாள் அவள்.
அப்போது அவளுக்குப் புரியுமொரு மொழியில்
மொழிபெயர்ப்பாகும் அக் கவிதை.
நன்றாயிருக்கிறதெனப் பரவசித்து
என் கன்னத்தை
தன் மொட்டுவிரல்களால் எடுத்து முத்தமிடுவாள்

முதல் ரசனையை ஏற்ற
என் கவிதையின் அந்தக் காட்சியை உற்சாகத்தோடு
நான் என் கவிதை ரசிக நண்பரொருவருக்கு
நடித்துக் காட்டுகையில்
அது அக்கவிதையின்
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும்
அதில் ’எனது கன்னம்’ என்பது
’வெளி’ என்றாகியிருக்கும்

அதனாலென்ன?

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புத்தானே
முற்றான கவிதை

Read more...

Tuesday, October 15, 2013

ஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்

தன்னந்தனியே
ஓடோடி வந்து
நான் அந்த இடத்தைக் காண விழைவேன்
சூர்யன் உதித்துவிடும் முன்னே!

ஆனால் அந்தோ
நான் அங்கே வந்த உடனேயே
சூர்யன் உதித்துவிடுகிறது!

சூர்யன் வரும்முன்னே
வந்துவிடும் அதன் மெல்லொளியில்
இருளும் குளிரும்கூட இதமாயிருந்தது

பருவமொட்டின் ஊசிநுனியை
உள்நின்று மோதியது
பிரபஞ்ச விரிவின் பெருக்கு

குன்றை நேசித்தபடியே
அதைப் பிளந்துகொண்டிருந்தது மரம்
அந்தப் பிளவில் தம் பீடமைத்தன பறவைகள்
குன்றை நேசித்தபடியே
அதைக் குடைந்தேன் நான்
குன்றை நேசித்தபடியே
என் கவிதைகளை அதன் மீது
கிறுக்கினேன் நான்

ஓ ஷம்லா குன்றே!
காலை உணவைக் கைவிட்டுவிட்டு உலாவுகிறேன்
அடிவானில்
என் பசியைப் போல்
உதித்து ஏறிக்கொண்டிருக்கும் சூர்யன்முன்
’என்னைப் புசி’ என்னும் ஓர் அற்புத உணவாய்
நான் நின்றேன்
ஓ ஷம்லா குன்றே!
இனி இங்கிருந்து வேறெங்கும் நகர
விரும்பும் வேட்கையெனும் சக்தியற்றுக்
கிடக்கும் ஒரு பெரும் ஏரி நான்
சூர்யவொளியின் தீவிரத்தை எதிர்கொண்டு
என்னிலிருந்து உயர்ந்தெழும்
நீராவியல்லவோ என் கவிதை!
ஏதோவொரு கோணத்தில்
சூர்யனாய்த் தகதகத்தது ஏரியும்.
சூர்யனின் உன்னிப்பான பார்வையில்
பளிங்கு ஏரியில்
பளீரெனத் துலங்கியது
படிந்துள்ள அனைத்தும்

Read more...

Monday, October 14, 2013

நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்

ஆராத்தி எடுக்கப்படுவது போன்ற சலனம்.
வெள்ளத்துப் பூக்களாய் மிதந்துவரும்
மேகங்களைப் பார்வையிடும் சூர்யன்.
உடம்புக்குச் சந்தனம் தடவுவது போன்ற காற்று.
சாரல் என்மீது பன்னீர் தெளிக்கையில்தான்
உணர்ந்தேன், சொர்க்கத்தின்
நுழைவாயிலிலேயே நான் நின்று கொண்டிருப்பதை

’குற்றாலத்தில் நல்ல சீசன்’ என்றான்
உலக அறிவாளி ஒருவன்
இவ்வளவு பக்கத்தில் நின்று
சீசன் தன் கை நீட்டி அழைக்கையில்
விட்டு வைப்பார்களா யாராவது?

பணக்காரர்கள்தான் போகிறார்களா?
தேங்காய் உடைப்பு ஆலைத் தொழிலாளிப் பெண்கள்
துவரை உடைப்பு ஆலை
உப்பு சுமப்போர்
ஒரு பள்ளி ஆசிரியர்கள்
ஓரலுவலகக் கூட்டாளிகள்
ஓர் இயக்கத் தோழர்கள்
எல்லோரும்தான்
கூடிக்கூடிச் செல்கிறார்கள்
குழு குழுவாய்ச் செல்கிறார்கள்

என்னிடம்தான்
போதுமான காசும் இல்லை,
ஆகவே கம்பெனியும் இல்லை
(’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’)
ஆனால்;
அவ்வுலகின் நுழைவாயிலிலேயே நின்றிருந்த நான்
காசும் கம்பெனியும் வேண்டப்பட்டதாலா
உள் நுழையாது நின்றிருந்தேன்?
பன்னீர் தெளித்து வரவேற்ற தோரணையில்
இல்லையே அந்த எதிர்பார்ப்பெல்லாம்!
பின், எப்படி நேர்ந்தது
இப்படி நான்
நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்?

சொர்க்கத்தை
வெறும்
குற்றால சீசனாக்கிவிட்டது;
உலகியலறிவும் பற்றாக்குறையும்

Read more...

Sunday, October 13, 2013

கொசு

மிகப் பிரியமான ஜீவன் அது
பிரியத்தைப் போலவே
அதன்மீது நான் எரிச்சலை உமிழும்
சமயமும் உண்டு
எனது இரத்தமே அதன் உணவாவதில்
பெருத்த ஒரு நியாயம் இருக்கிறது
என்ற அமைதியும் உண்டு என்னிடம்
காரணம்:
எனது குற்றங்களின் சாக்கடையே
அதன் ஜன்மபூமி என்பதுதான்

உங்கள் காதுகளைத் தேடிவந்து
அது பாடும் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?
’யாரறிவார்
பாவப் பிறப்பறுக்கும் அப்பாடலை அது பெற்றவிதம்?’
என வியந்ததுண்டா?
விழிப்பை இறைஞ்சும்
அந்தப் பாடலின் பொருளறிய
நீங்கள் முயற்சித்ததுண்டா?
அப்படியெல்லாம் மெனக்கெடாமல்
’பட்’டென்று
நீங்கள் அதைக் குறிவைத்த அடி
உங்கள் உடம்பின்மீதும் விழுந்ததையாவது
யோசித்தீர்களா?

Read more...

Saturday, October 12, 2013

கடற்கரை நகர்

சின்ன வயதில்
நேராய் கிழக்குநோக்கி நடந்து சென்று
கடலை நான் பார்த்து வருவதுண்டு.
இன்று அந்த இடம், நிலம் விழுங்கி விழுங்கித்
தூரப் போய்விட்டது.
ஏற்கனவே
நலிந்த பகுதியாயிருந்த எமது கடற்கரை
நகரத்தின் சாக்கடை கலந்த ஓர் ஏரி போலானது.
கடலின் பெரும் பெரும் உயிர்களால்
சுத்தமாகி விடாதபடிக்கு தனித்துவிட்டது.
கண்ணெட்டுந் தூரத்திலிருந்த தீவும்
நிலம் தீண்டி தீபகற்பமானது.
கப்பல்கள் வந்து நிற்கத்தகும் கடல் ஆழம் காண
கடலூடே நெடுந்தூரம்
சாலையமைக்க வேண்டியதாயிற்று

இன்று
பொங்கி எழுந்து
நுரை சிலிர்த்து வீசிவரும்
அலைகள் காண,
கால்களை நனைத்து, திரும்பத் திரும்பத்
தன்னுள் என்னை அழைத்துக்கொள்ளும் கடல் காண
இந்த நகருக்குள்ளே பஸ் பிடித்து
இந்நகரைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று
ஆனாலும்
கடலின் இடையறாத பெருங்குரல் மட்டும்
எங்கும் எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

Read more...

Friday, October 11, 2013

எனது குழந்தைகள்

கொலுசுப் பூச்சிகள் ஒலிக்கக்
குறுகுறு என ஓடிவந்து
என் கண்களைப் பொத்தும் நிஷா.
கண்களைத் திறந்துவிட்டு...
பட்சிகள் சப்தம் கை கொட்டிச் சிரிக்க
இலைகளை ஊடுருவி நிற்பாள் உஷா

காலையில் கண்ணைக் கசக்கி எழுகையில்
கையைப் பிடித்து இழுத்துப் போய்
வால் நட்சத்திரங்களாய்ச் சிந்திக் கிடக்கும்
பன்னீர்ப் பூக்களை வியப்பாள்

விழித்தவுடனேயே
ரோஜாப் பதியனின் முகத்தில்
புதுத் தளிர் பார்க்கும்
என்னுடன் அமர்ந்து
பூவை - அதிலே
கனவிக் கனவிக் களிப்பாள்
சூர்யபிரபா
O

என் அல்ப ரூபத்தில்
அடையாளம் காணமுடியாமல்
பள்ளி போகும் தெருவெல்லாம்
பாராமல் போகும் குழந்தைகள்,
ஓடும் பஸ்ஸில்முன் ஸீட்டுப் பெண்ணின்
தோள்வழி எட்டிக்
கண்டுகொள்ளும்;
சிரிக்கும் எனக்கு

முற்றத்து நிழலில்
வீடு கட்டிச்
சீரும் செட்டுமாய்க்
குடும்பம் நடத்திப்
பிள்ளைகள் பெற்றுப்
பெரிய மனுஷர்களாய்
விளையாடும் வாழ்க்கை

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP