யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்
பாடகி: தீபா
இப் பாடல் யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன் கவிதையை மூலமாகக் கொண்டு கவிஞர் தேவதேவன் அனுமதியுடன் விரிவுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
Poet Devadevan
பாடகி: தீபா
இப் பாடல் யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன் கவிதையை மூலமாகக் கொண்டு கவிஞர் தேவதேவன் அனுமதியுடன் விரிவுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”
இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.
சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.
மரநிழலில்
ஒரு பெஞ்சு
சித்தார்த்தரேயாய்!
அமர வந்த மனிதருக்கு முன்னமே
நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே
இருக்க வேண்டும்
அந்த பெஞ்சு?
காதல் திருமணம் செய்து கொண்டோர்களால்
பூத்திருக்க வேண்டாமோ
பொன்னுலகு இப்பூமியில்?
காதல் திருமணம் என்ற பெயரில்
ஆண் பெண் இச்சைத்
தேர்வு மட்டும்தான் நடந்துள்ளதா?
மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணமும்?
வேரோடும்
வீசும் காற்றோடும்
வெயிலோடும்
ஒளியோடும் மட்டுமே
அவர்கள் நின்றிருந்தால்தானே
மலரவும் கனியவும் முடியும்?
பாதுகாப்புணர்வு போலும்
இருளில் ஓடும் வாகனங்களின்
பின் சிவப்பு விளக்குபோலும்
நடுநெற்றி உச்சியில்
சிவப்பு அணிந்துகொண்டு
அழகழகான இளம்பெண்கள் ...!
அழகு, மேலும் அழகுபெற்றதே தவிர
பாதுகாப்பு எங்கே தோன்றியது ?
பயம் எங்கே தோன்றியது?
நம்பிக்கை நம்பிக்கை இழப்பு என்ன
மானுட சஞ்சலங்கள் எங்கே தோன்றின?
அற்புதமானதோர் முடிவும் துவக்கமுமாய்
தோன்றியதோர் நிறையுணர்வுதான்
எத்துணை அற்புதம்!
ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே?
ஆண் என்றும் பெண் என்றும் உள்ள இந்த இருபால்மையினால்தானே மனிதன் இயற்கையோடும், சக மனிதனோடும் கொள்ளும் உறவை இழந்து போரும் துயருமான உவகைப் படைத்துவிட்டான்?
குடும்பம் என்றும் சமூகம் என்றும் கடவுள் என்றும் பெரியவன் என்றும் அடிமை என்றும் மேலாண்மை என்றெல்லாம் வளர்ந்து ... இருமையும் அதற்கு எதிரான ஒருமையும்கொண்ட உலகைப் படைத்துவிட்டான்?
இயற்கையின்முன் இயற்கையை மறைத்துக்கொண்டு நின்றபடி இணையாகவும் தனியாகவும் மனிதர்கள் சுயப்படம் எடுத்துக் கொள்வதை நீங்களும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
அன்னை இயற்கையே, இதற்கு பதில் சொல்லுங்கள்!
உங்கள் இயற்கையில்மட்டும் நீங்கள் பாதுகாக்கத் தொடங்கியுள்ள ஓரவஞ்சனை ஏன்?
பொறாமைப் படுவானேன்
கூந்தல் இருக்கிறவா
கொண்டை போட்டுக்கிடுறா
நமக்கு
ஒரு மயிர் இருந்ததால் போதுமே
ஒரு பேருலகைப் படைத்துவிடுவதற்கு?
என்ன கெடுபேறு! யார் செய்தது இது?
எதைக் காண வந்தார்களோ
அந்தக் கடலை மூடிவிட்டது,
அவர்கள் சந்திப்பு!
என்றாலும் தனிப்பெருங்கருணையால்
அவர்கள் எந்த இடத்தில் சென்றமர்ந்தாலும்
அடங்காத காதலுடன், தனது வானத்துடன்
அவர்கள் அருகேதானே வந்தமர்ந்து கொண்டிருந்தது
கடல்!
சாப்பிடும்போது அவர்
தன் இதழ்களில் சூடியிருந்த
வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன?
கைப்பை திறந்து எடுத்து
அதனை மீண்டும் சூடிக்கொண்டார்
மனிதர்களைப் போலின்றி
தன் வாழ்வினை நன்கறிந்த
உண்ணும் உணவோடு போலவே
பார்க்கும் விழிகளோடும்
கேட்கும் செவிகளோடும்
தழுவும் காற்றோடும்
உயிர்க்கும் மூச்சோடும்
உட்சென்று செரித்து மறைந்துவிடும்
வண்ணத்தை!
பேரு புகழு இரசிகர்கள் என
நிறைந்திருந்த மனித சமூகம்
நடுவே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்
“நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா?”
என்றான் அவன்.
அறிவுரை கூற வந்துவிட்டாயா, முட்டாள்!
நாம் மனிதர்களாய் இருப்பதே போதுமானது என
ஏன் சொல்ல முடியவில்லை உனக்கு?
எனச் சொல்லாமலேயே
ஒரு முறை முறைத்தார் அவர் அவனை!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP