Monday, June 15, 2026

கட்டுடல் அழகு

கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன்‌ அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?

Read more...

Friday, June 12, 2026

எத்துணை பெரிய சாதனை இது!

அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!

அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என‌
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!

இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!

Read more...

Wednesday, June 10, 2026

வானத்தைக் காட்டிவிட்டு

மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!‌

Read more...

Monday, June 8, 2026

ஒளியில் கண்சிமிட்டிக்கொண்டு ...

ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு
ஓடும் இந்த நதி
எங்கு தோன்றினோம்
எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாது
யோசிக்கிறதுமில்லை

தன் வாழ்வுப் பயணத்தில்
பாறைகள் பசுந்தாவரங்கள் என
வந்தவர்களோடெல்லாம்
கொண்ட உறவினையும்
இதன்‌ இனிமையையும் தவிர
வேறெதுவுமே அறியாது
அப்படி ஒரு வெகுளி!

Read more...

Friday, June 5, 2026

மாமலைகள்‌ பற்றி

உலுக்கி குலுக்கி
சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற
ஆற்றல்
இந்த ஒவ்வொரு பாறைகளிடமும்
குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும்
தூசுகளிடமும்கூட

Read more...

Wednesday, June 3, 2026

மழையின் செய்தியாய் ...

மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!

Read more...

Monday, June 1, 2026

விண்ணினின்று இறங்கி...

விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்..
மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு

மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்
ஒரு மனிதன் ஒரு மனிதன்மீதுதான்
எத்துணை பரிவு கொண்டவனாகிவிடுகிறான்‌!

எதிரே வந்துகொண்டிருக்கும் இருவர்
எத்துணை வறுமையும் கொந்தளிப்புமாய்
இருந்தாலுமென்ன,
இந்த நேரம் இந்த வெளியில்
பேரன்னையின் அரவணைப்பில் துவளும்
பிள்ளைகளைப் போலல்லவா
காணப்படுகிறார்கள்?

Read more...

Friday, May 29, 2026

அந்த மரம்தானா இது?‌

நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?

ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?

ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட!‌ என‌
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?

Read more...

Friday, May 15, 2026

அற்புதம் !

தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.

கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _

யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!

Read more...

Wednesday, May 13, 2026

அவனது தேநீர் நேரம்

தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !‌

இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை‌ தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;

புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!‌

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP