நினைவிருக்கிறதா?
நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
Poet Devadevan
நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?
இயற்கை வேளாண்மையில்
கொழித்த தக்காளிப் பழம் அல்லவா
சிக்கென்ற இனிப்பும் உறைப்பும் வண்ணமும்
அழுத்தமாய்க் கூடிய அற்புதச் சுவையுடன்
இருந்தது…
உடன் வந்து கொண்டிருந்த
அழகியும் அன்பியுமானவரிடம்
“இதழ்ச் சுவை போல” என்று
வாய்க்கு வந்த சொல்லைச் சொல்ல
அச்சமாக இருந்தது…
அதனாலேயும்தானே அது
கூடுதலான சுவையுடன் இருந்தது?
ஒளிரும் மின் விளக்குகளுடன்
வானத்தின் கீழிருந்த மைதானம் போலிருந்தது
அந்த ஆடைக் கடையின் சிறப்புக்கூறு, கவர்ச்சி!
வணிகமே நோக்கமாயிருந்ததால்
அதைப் படைத்தவனாலும் சரி
அதனால் ஈர்க்கப்பட்டு வந்து உலாவும்
மனிதர்களாலும் சரி
கண்டு கொள்ளப்படாத
அனாதையாகவே இருந்தது
அங்கே அந்த படைப்பின் விக்கிரகம் அளித்த
பேருணர்வு!
”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
சாதியாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!
இருந்த இடத்தில் இருந்தபடியே
ட்ரெட்மில்லில் ஓடவிட்டு
அவன் இதயத்தைப் பரிசீலிக்கிறார்
டாக்டர்.
நடைக்கும் அப்பாலுள்ள
சொற்சமாச்சாரங்கள் எதுவுமே
காரியத்திற்கு உதவவில்லை மற்றும்
ஆபத்துகளின் ஊற்றாயிருப்பதும் என்பதுதானே
நாம் கண்டதும் காணாததுமான உண்மை?
பதினொன்றாம் மாடியில்தான்
அவன் ஓய்வும் துயிலும்.
கீழே புல்வெளியும் மரங்களும் செழித்த
உபவனத்தில்தான் அவன் நடை.
திடீர் திடீரென
குழந்தைகளின் விளையாட்டுச் சதுக்கத்திலிருந்து
வானமும் பூமியும்
கூடிவிட்டாற்போல்
கோடானு கோடி சமிக்ஞைகளுடன்
விரிந்து பூத்து உதிரும் ஒரு
பேரொலிமலர்!
விண்ணிலிருந்தும்
மனிதனின் மய்யத்தைத் தொட்டு
மய்யத்திலிருந்தும்
சிக்கிக் கொண்டதிலிருந்து
பாய்ந்து
பூமியைத் தொட்டு நிற்கும்
கதிர்!
முதல் சொல்லாகவும்
எழுத்தாகவும்
எண்ணாகவும்
விண்ணிலிருந்து
மண்ணில் வந்து
ஊன்றி நிற்கும்
நான்!
காற்று தழுவிச் செல்லாத
உடம்பின் ஒரு பகுதியில்
நீங்காத புழுக்கம்!
காரணமான ஆடைதான்
தனை உணர்ந்து ஒற்றி
ஆறுதலளிக்கிறது அதை!
வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!
அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP