ஓ, சூர்ய!
ஓ, சூர்ய
நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில்
நான் ஒரு இதழ், அப்படித்தானே?
என்ன வியப்பு இது, நீயே
எனக்கு உள்ளும் புறமுமாய்
திகழ்ந்து கொண்டிருப்பது?
நாம் யார் சூர்யா?
இப் பேரண்டத்திற்கும் வெளியேயிருக்கும்
பேரின்மைதான் கடவுள் எனில்
அவரும் நமக்கு உள்ளேயும் வெளியேயும்
இருப்பவர்தானே?
கடவுள் என்பதும்
பேரின்மை என்பதும்
தன்மய்யமற்றதாலே முடிவிலியும்
முடிவிலியானதாலே தன்மய்யமற்றதும்,
அல்லவா?
இம் முடிவிலியே
எல்லாப் படைப்புகளுக்கும் ஆதாரமாய்
தாய்பிள்ளை சுழற்சியில் இயங்குவதை
நான் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன், சூர்யா!
மனிதர்களும் தாம் படைக்கவேண்டிய
மானுட வாழ்வுக்கான முன்மாதிரியும்
இதுவாகவே இருக்க வேண்டும்.
இப் பேரண்டத்தின் மதம் இது
இல்லையா, சூர்யா?