Wednesday, March 4, 2026

பொம்மைகளின் விழிகளில்…

விதவிதமான பொம்மைகளால்
அறையை நிறைத்துவிட்டார் சுநேகா.
“ஏன்ம்மா இப்படி?
நீ இன்னும் வளரவேயில்லை சுநேகா”
என்றார் அவள் கணவரும்.

ஒருநாள் அவன் கண்டு கொண்டான்
பொம்மைகளின் விழிகளிலுள்ள
பேரின்மையே
குழந்தைகளின் விழிகளிலும் ஒளிர்வதை!

மேலும்
அவர்கள் வளர்வதில்லை!
அவர்களின் நிரந்தரத்தன்மைக்கு
நிகரே இல்லை!

அவர்கள் மரிப்பதேயில்லை!
கவனியுங்கள்
ஏன் எப்படி என்று
கேட்கவேமாட்டீர்கள்!

அவர்களுக்கு உயிர் இல்லை என்றால் என்ன
உயிருள்ள மனிதர்கள்தாம்
என்ன சாதித்துவிட்டார்கள் இந்த உலகில்?
சுநேகாவிடமோ குழந்தைகளிடமோ
இதைச் சொல்லிவிடாதீர்கள்
உங்களைக் கொன்றுவிடுவார்கள்!

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்பதுதானே முக்கியம்?
சொல்லி முடித்தவுடன்
நாமும் கேட்டுக் கொண்டவுடன்
அவர்களும் அங்கிருந்து
போய்விடுவார்கள்தானே?

Read more...

Monday, March 2, 2026

ஒரு பொட்டு மூக்குத்தி!

ஒரு பொட்டு மூக்குத்தி!
அதன் அழகு ஏன் நம்மை
இப்படிக் கொல்கிறது?

எவ்வளவு காலமாய்
நாம் கண்டடையாமலே இருந்த ஒன்றை
இன்று நாம் கண்டு கொண்டோம்
ஒரு மொத்த அழகோடே!
ஆழ்கடலினின்று கண்டெடுத்த
முத்தின்மேல் ஒளிரும் முழுநிலவுபோலும்
ஒரு பேரொளியை!
பெரும் புரட்சியைப் படைக்க இருக்கும்
பெரு வெள்ளத்தின்
ஒரே உண்மையான ஒரு துளியை!

Read more...

Friday, February 27, 2026

புதிது புதிதாய்…

அவர் நடக்க நடக்க
இடமும் வலமுமாய்
அவர் செறிகுழலும் அசைந்தது.

தன்னை ஆட்டுவிக்கும்
உயிர் பற்றியோ
உடல் பற்றியோ
உறுப்புகள் பற்றியோ
தன்னைப் பற்றி
எதுவும் அறியாத பிறவி

நடை நிற்கவும்
அது தானும் நின்றபோதெல்லாம்
யாவும் அறிந்தது மட்டுமா
நிகழ்ந்தது
யாவும் அறியாததும்
புதிது புதிதாய்
நிகழ வேண்டியதுமல்லவா
நிகழ்ந்தது அங்கிருந்து?

Read more...

Wednesday, February 25, 2026

ஊழல் மலிந்துவிட்ட...

ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?

Read more...

Monday, February 23, 2026

புல்லிலிருந்து ஒரு பூ

இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!

Read more...

Saturday, February 21, 2026

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்


பாடகி: தீபா

இக் கவிதையை இங்கே வாசிக்கலாம் .

Read more...

Wednesday, February 18, 2026

இப்போதெல்லாம் மனிதர்கள்...

“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”

இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.

சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.

Read more...

Monday, February 16, 2026

மரநிழலில் ...

மரநிழலில்
ஒரு பெஞ்சு
சித்தார்த்தரேயாய்!

அமர வந்த மனிதருக்கு முன்னமே
நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே
இருக்க வேண்டும்
அந்த பெஞ்சு?

Read more...

Saturday, February 14, 2026

இன்று காதலர் தினம்

காதல் திருமணம் செய்து கொண்டோர்களால்
பூத்திருக்க வேண்டாமோ
பொன்னுலகு இப்பூமியில்?

காதல் திருமணம் என்ற பெயரில்
ஆண் பெண் இச்சைத்
தேர்வு மட்டும்தான் நடந்துள்ளதா?

மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணமும்?

வேரோடும்
வீசும் காற்றோடும்
வெயிலோடும்
ஒளியோடும் மட்டுமே
அவர்கள் நின்றிருந்தால்தானே
மலரவும் கனியவும் முடியும்?

Read more...

Friday, February 13, 2026

அழகழகான இளம் பெண்கள்

பாதுகாப்புணர்வு போலும்
இருளில் ஓடும் வாகனங்களின்
பின் சிவப்பு விளக்குபோலும்
நடுநெற்றி உச்சியில்
சிவப்பு அணிந்துகொண்டு
அழகழகான இளம்பெண்கள் ...!

அழகு, மேலும் அழகுபெற்றதே தவிர
பாதுகாப்பு எங்கே தோன்றியது ?
பயம் எங்கே தோன்றியது?
நம்பிக்கை நம்பிக்கை இழப்பு என்ன
மானுட சஞ்சலங்கள் எங்கே தோன்றின?

அற்புதமானதோர் முடிவும் துவக்கமுமாய்
தோன்றியதோர் நிறையுணர்வுதான்
எத்துணை அற்புதம்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP