எத்தனை எத்தனை முயற்சிகள்!
பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?
Poet Devadevan
பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?
தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!
போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!
ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!
அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!
அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!
கடவுளின் சொந்த ராஜ்ஜியமான
வெயில் மலர்க் குளிர்தலத்து
பெங்களூருவாசி அவன்
தூத்துக்குடி நண்பகல் தகிக்கும் வெயிலில்
மாறாத குளிர்மை எப்படி?
ஒரு நண்பனுடனல்லவா
நடந்து சென்று கொண்டிருக்கிறான்?
முட்டையிடுவதற்கும்
குஞ்சு பொரிப்பதற்கும்
துயில்வதற்குமான கூட்டை
வீடு என்பார்களா?
பாதையற்ற வெளிதானே
பறவைகளின் வீடு?
அது யாரு, பறவை என்பது?
விடுதலை என்பதுதானே
பறவை என்றானது?
ஒவ்வொரு விலங்குகளும் உயிர்களும்
அதனதன் குணங்கள்தாமே?
மனிதன் என்பவன் பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியாதா என்ன?
கடவுள்தான் மனிதன் ஆனது, சரி,
பாதைகளில் தொலைந்தமைதானே
இந்த பரிதாப நிலைகள்?
அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!
“நீங்கள் குழந்தைகளாகாதவரை
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!”
உண்மை கண்டீர்!
எந்த ஒலி கேட்டாலும்
திரும்பிப் பார்த்த குழந்தை-
அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டிய முதல்தானா
அது தன் குழந்தைமையிலிருந்தும் விலகி
பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன?
என்றால் இந்தப் பெயர்கள்
எதைச் சுட்டுகின்றன
எங்கு செல்கின்றன
என்பதையும்,
பெயரற்ற பெருநிலையையும்
குழந்தைமையையும்
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
நாம் கண்டு கொண்டிருக்க வேண்டுமல்லவா?
தன்னைத் தானே
சுற்றி வருகிறது
நித்திய வனத்தின்
வெள்ளிமலைப் பாதை
எங்கும் போகாமல்
எங்கும் போகாமலுமில்லாமல் !
ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?
கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன் அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP