வெயிலும் குளிரும்
பிரிவு என்பதே நம்மிடம் ஏது
எட்ட நிற்கையில்தானே
தகித்தபடி வளர்கிறோம்
கிட்ட நெருங்குகையில்தானே
குளிர்ந்தபடி அணைத்துக் கொள்கிறோம்
Poet Devadevan
பிரிவு என்பதே நம்மிடம் ஏது
எட்ட நிற்கையில்தானே
தகித்தபடி வளர்கிறோம்
கிட்ட நெருங்குகையில்தானே
குளிர்ந்தபடி அணைத்துக் கொள்கிறோம்
வான்வெளியின்
பொன் இன்மையினை மேயும்
வெண்மேகங்களன்றோ
கார்மேகங்களைப் பொழிகின்றன?
வழிமறிக்கப்பட்ட ஆசைகள்தாமோ
வழியெல்லாம் பேரன்பாய்
பூத்து பூத்து நிற்கின்றன!
கவிஞர் தேவதேவனின் “இசைக்குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பு, வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
யார் காண்பதற்காகப் பூத்திருக்கிறது
இந்தத் தாமரை மலர்?
தன்னைப் பூப்பித்த
கதிரவன் காண்பதற்காகவா
கதிரவனைக் காண்பதற்காகவா
இந்த மானுடக் கேள்விகளுக்கெல்லாம்
அப்பாலுள்ளதோ காதல்?
இந்த நீர்த் தாவர மலர்
தன் வண்ணங்களையெல்லாம்
அழித்துவிட்டு வந்து நிற்கிறதா?
தன் வண்ணங்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்து காட்ட வந்திருக்கிறதா?
தனக்கும் காலமும் இடமும் உண்டெனினும்
முன்னறிவுகள் ஏதுமின்றே பூத்திருக்கும்
இந்த ஒளி மலரில்தானே
அன்னையே நீ வந்து
அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்?
எப்போதுமே
காற்றில்
மயங்கி கிறங்கிக்
களிநடம் புரிந்து கொண்டிருக்கும்
கிளைகள்.
எப்போதாவதுதான்
காற்றையும்
காற்றின் செல்திசையையும்
சுட்டி ஏமாறுகின்றன
இல்லை
ஏமாறுவதுபோல் நடிக்கின்றன!
பாத்திரத்தில்
வண்டலாயிருந்த அடித் தண்ணீரை
செடிகள் மீது கொட்டினான்
இலைகளில் தண்ணீர்
துளிகளாகவே படிந்ததேன்?
ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை என
பெய்யும் மழையும் அமைதியான வேளை
இலைகளிலும் கம்பிகளிலும்
துளிகளாய் அமைந்தே நம் விழிகளை ஈர்ப்பதேன்?
பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?
தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!
போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP