இதய கமலம்
யார் காண்பதற்காகப் பூத்திருக்கிறது
இந்தத் தாமரை மலர்?
தன்னைப் பூப்பித்த
கதிரவன் காண்பதற்காகவா
கதிரவனைக் காண்பதற்காகவா
இந்த மானுடக் கேள்விகளுக்கெல்லாம்
அப்பாலுள்ளதோ காதல்?
Poet Devadevan
யார் காண்பதற்காகப் பூத்திருக்கிறது
இந்தத் தாமரை மலர்?
தன்னைப் பூப்பித்த
கதிரவன் காண்பதற்காகவா
கதிரவனைக் காண்பதற்காகவா
இந்த மானுடக் கேள்விகளுக்கெல்லாம்
அப்பாலுள்ளதோ காதல்?
இந்த நீர்த் தாவர மலர்
தன் வண்ணங்களையெல்லாம்
அழித்துவிட்டு வந்து நிற்கிறதா?
தன் வண்ணங்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்து காட்ட வந்திருக்கிறதா?
தனக்கும் காலமும் இடமும் உண்டெனினும்
முன்னறிவுகள் ஏதுமின்றே பூத்திருக்கும்
இந்த ஒளி மலரில்தானே
அன்னையே நீ வந்து
அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்?
எப்போதுமே
காற்றில்
மயங்கி கிறங்கிக்
களிநடம் புரிந்து கொண்டிருக்கும்
கிளைகள்.
எப்போதாவதுதான்
காற்றையும்
காற்றின் செல்திசையையும்
சுட்டி ஏமாறுகின்றன
இல்லை
ஏமாறுவதுபோல் நடிக்கின்றன!
பாத்திரத்தில்
வண்டலாயிருந்த அடித் தண்ணீரை
செடிகள் மீது கொட்டினான்
இலைகளில் தண்ணீர்
துளிகளாகவே படிந்ததேன்?
ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை என
பெய்யும் மழையும் அமைதியான வேளை
இலைகளிலும் கம்பிகளிலும்
துளிகளாய் அமைந்தே நம் விழிகளை ஈர்ப்பதேன்?
பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?
தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!
போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!
ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!
அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!
அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!
கடவுளின் சொந்த ராஜ்ஜியமான
வெயில் மலர்க் குளிர்தலத்து
பெங்களூருவாசி அவன்
தூத்துக்குடி நண்பகல் தகிக்கும் வெயிலில்
மாறாத குளிர்மை எப்படி?
ஒரு நண்பனுடனல்லவா
நடந்து சென்று கொண்டிருக்கிறான்?
முட்டையிடுவதற்கும்
குஞ்சு பொரிப்பதற்கும்
துயில்வதற்குமான கூட்டை
வீடு என்பார்களா?
பாதையற்ற வெளிதானே
பறவைகளின் வீடு?
அது யாரு, பறவை என்பது?
விடுதலை என்பதுதானே
பறவை என்றானது?
ஒவ்வொரு விலங்குகளும் உயிர்களும்
அதனதன் குணங்கள்தாமே?
மனிதன் என்பவன் பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியாதா என்ன?
கடவுள்தான் மனிதன் ஆனது, சரி,
பாதைகளில் தொலைந்தமைதானே
இந்த பரிதாப நிலைகள்?
அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP