Showing posts with label DD5. Show all posts
Showing posts with label DD5. Show all posts

Friday, April 5, 2024

தேவதேவனை தவிர்ப்பது… Aug 2015 - ஜெயமோகன் தளத்திலிருந்து

தேவதேவன் கவிதைகள் தன்னை கவர்ந்துள்ளது பற்றிய வே.ஸ்ரீநிவாச கோபாலனின் கேள்விக்கு ஜெயமோகனின் பதில் இந்தக் கட்டுரையில் உள்ளது

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”சிலுவைப் பிரயாணம்" கவிதை இங்கே


Read more...

Friday, March 29, 2024

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன் கவிதைகள் பற்றி பூங்குழலி வீரன்

வல்லினம் பெப்ரவரி 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

”ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை” கவிதை இங்கே


Read more...

Friday, March 22, 2024

தேவதேவன் கவிதை பற்றிய கட்டுரை "காலம், நேரம், இடம்" - ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

2021ல் வெளிவந்தது.

நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Wednesday, December 6, 2023

தேவதேவனின் கவிதைகள் - கனவிலிருந்து நனவுக்கு

தேவதேவன் தன்னுடைய கவிதைகளை ரசிகர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் 2015ல் எழுதப் பட்டுள்ள இந்த கட்டுரை, கவிஞராக அவர் மலர்ந்ததையும் அவரது கவிதைகள் எப்படி சிலரின் வாழ்வைத் தொட்டன என்பதையும் பதிவு செய்துள்ளது.

முழுக்கட்டுரையும் இங்கே.....

"அமைதி என்பது” கவிதை இங்கே.....

Read more...

Wednesday, November 15, 2023

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்கவித்துவ நிலையிலும் கோர்க்கும் சரடு புறத்தருக்க நிலையிலும் அமைந்திருக்கும்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கவிதைகள் இணைய இதழின் ”ஜூன் 2022ம்” இதழ், தேவதேவன் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரை, தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்கள் மற்றும் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

Read more...

Thursday, December 13, 2012

தேவதேவனின் பரிணாமம்

தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம். அவருக்கு இப்பெயரை வைத்தவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். தேவதேவனின் தந்தை பிச்சுமணி படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளி. தாய் பாப்பாத்தியம்மாவிற்கும் படிப்பு இல்லை. ஈ.வெ.ரா. மீது பிச்சைமணி கொண்ட ஈடுபாடு ஒருவகையில் அறிவின் மீதான ஈடுபாடாக இருக்கலாம். தேவதேவன் பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தார். வேலைக்கான தேடலுக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆயினும் வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் அச்சகம் வைத்திருந்தார். கேரளத்தில் சிறுவேலை ஒன்றில் சிலகாலம் இருந்தார். உடலுழைப்பு வேலைகளில் ஈடுபட்டார். அவருடைய 33-ம் வயதில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில். தாயின் பூர்வீகம் அருகே வேடப்பட்டி. தந்தை தன் 19-ஆம் வயதில் மில் வேலைக்காகத் தூத்துக்குடிக்கு வந்தது முதல் தூத்துக்குடியே சொந்த ஊர். அழுக்கும் நெரிசலும் நிரம்பிய இந்தத் துறைமுக நகர்மீது தேவதேவனுக்கு வெறுப்பும் ஈடுபாடும் உள்ளது. தேவதேவனின் உறவில் கணிசமானவர்கள் இலங்கைக்குக் கப்பலேறிச் சென்று மறைந்து போனார்கள். அவர்கள் ஞாபகமாகச் சில இலங்கை பாணி மரப்பொருட்களும் ஒரு மூட்டை தூக்கும் ஊசியும் அவர் குடும்பத்தில் இருந்தன.

5-5-1948-ல் பிறந்த தேவதேவன் தூத்துக்குடி கோயில்பட்டி பகுதிக்குப் பொதுவாக உள்ள கரிய நிறமும் திராவிட முக அமைப்பும் உடையவர். வயதுவந்த காலம் முதல் தாடி உண்டு. இப்போது அதில் நரையோடியுள்ளது. தலையின் இலேசான முன்வழுக்கைக்கு அது மிகவும் பொருத்தமாகத் தெரியும். தயங்கியும், நடுவே யோசித்தும், குழப்பங்களுக்குள்ளாகியும் தான் அவரால் பேச முடியும். மெலிந்த சன்னமான குரல். வாழ்வின் பல்வேறு நுட்பங்கள் பற்றி அவரால் பேசமுடியும். ஆனால் அவற்றைத் தன் கவிதைகளினூடாகவே நிறுவுவார். இதனால் தன் கவிதைகளைப் பற்றி மட்டும் பேசுபவர் என்ற குற்றச்சாட்டு அவர்மீது உண்டு. உற்சாக அரட்டைகளில் பொதுவாக அவருக்கு ஈடுபாடு இல்லை. அரசியல் தருக்கங்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றிலிருந்து மௌனமாக ஒதுங்கி விடுபவர். எனவே பெரும்பாலும் நண்பர் கூட்டங்களில் அவர் மௌனமாகவே இருப்பார். ஆனால் விசேஷமான நகைச்சுவை உணர்வு உண்டு. மதிநுட்பம் தெரியும் விஷயங்களை விட குழந்தைத்தனமான விஷயங்களில் தான் அவர் உற்சாகமடைவது வழக்கம். சிலவருடங்களுக்கு முன் சின்னம்மை நோய் அபாயகரமாக முற்றி மரணமுனை வரை சென்று திரும்பினார். இன்றும் அவர் உடல்நிலை பயத்திற்கு ஏற்றதல்ல எனினும் மானசீகமாக ஒரு கற்பனை வனத்தில் அவர் வசிக்கிறார் என்பது பேச்சில் தெரியும்.

தேவதேவனின் தனிப்பட்ட ருசிகளிலும் இயல்பான மென்மை தெரியும். அவர் கவிதைகளில் தெரிவது போலவே மரங்கள், சிறு உயிரினங்கள், குழந்தைகள் மீது அலாதியான ஈடுபாடு அவருக்கு உண்டு. அவை பற்றிப் பல மணிநேரம் பேசத் தயங்க மாட்டார். எளிய உணவுப் பழக்கங்கள் உடையவர். பழங்கள் – குறிப்பாக பப்பாளிப் பழம் – மீது பிரியம் உண்டு. அசைவ உணவு உண்பதில்லை; முட்டை உள்பட அசைவம் உண்பதில் கருணையின்மை மட்டுமல்ல ஒருவகை ‘ஒழுங்கின்மை’யும் உண்டு என உணர்கிறார். தேவதேவனின் குலதெய்வம் செட்டியாபத்து சோலையப்பன் அனந்தம்மாள். அங்கு ‘ஆத்தி’ (பன்றி) வளர்த்து பலி தருவதுண்டு. எனவே கடவுளுக்கு ஆத்தியப்பன் என்ற பெயரும் உண்டு. பல்வேறு காரணங்களினால் தேவதேவன் குடும்பம்,குலதெய்வத்திலிருந்து விலகி வந்துவிட்டது. அவரது தந்தையின் நாத்திக வாத ஈடுபாடு முதல் காரணம். பண்டிகைகள், வழிபாடுகள் எதையும் அவர் குடும்பம் கொண்டாடியதில்லை. தேவதேவன் நாத்திக வாதத்தின் மையத்திலிருந்து முற்றிலும் கடவுள் சாராததும் முழுமையாக இயற்கை சார்ந்ததுமான ஒரு ஆன்மீகத்தைக் கண்டடைந்து கொண்டதாகவும், அதுவே தன் மதம் என்றும் கூறுகிறார்.

மிக இளமையிலேயே தேவதேவன் படிக்க ஆரம்பித்து விட்டார். படிப்பு ஒரு வெறியாக வெகுகாலம் இருந்துள்ளது. புனைகதைகள், தத்துவ நூல்கள், பண்டை இலக்கியங்கள் என அவரது ஈடுபாடு பெரியது. படிப்பு பற்றிய குறையுணர்வு ஏதும் இப்போது இல்லை. முறையான கல்வி இருந்தால் இவ்வளவு படித்திருக்க முடியாதோ என்ற எண்ணமும் உண்டு. தோரோ மீதான ஒரு ஈடுபாடு பல வருடங்களுக்குத் தேவதேவனைத் தொடர்ந்திருக்கிறது. பிரமிள் தொடர்பால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி மீது ஆர்வம் ஏற்பட்டது. பிரமிள் தன்னிடமுள்ள முக்கியமான நூல்கள் பலவற்றைத் தனக்கு அளித்தது மிக உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டார். நவீன புனைகதையாளர்களில் தல்ஸ்தோஸ் மீது ஈடுபாடு, பழைய மரபில் பக்தி இயக்கத்தைச் சார்ந்த கவிதைகளில்தான் தனக்கு முதல் ஆர்வம் என்கிறார். குறிப்பாக ஆண்டாள். ஆண்டாளின் வாழ்வும் கவிதையும் தன்மை வெகுகாலம் மீட்டியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பெருங்காப்பியங்கள் எதுவும் தன்னை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசீகரிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தன்னுடைய படிப்பு ஒருவகையில் தன் பெயரை – கைவல்யம் – அர்த்தப்படுத்துவதற்கான தேடல் என்று அவர் குறிப்பிட்டதுண்டு.

தேவதேவன் மனைவி பெயர் சாந்தி.இரு குழந்தைகள். மூத்தவள் அம்ருதாவிற்கு சமீபத்தில் மணமாகியது.. இரண்டாமவன் அரவிந்தன் பொறியியல் முடித்துப் பணியாற்றுகிறார். குடும்பத்தின் மீதும், தூத்துக்குடி மணி நகரில் சொந்தமாகக் கட்டிய வீடு மீதும் மிகுந்த பிரியம் அவருக்கு உண்டு. அதை உலகியல் என்பதை விட உலகியலினூடாக அதைத் தாண்டும் மனவிரிவுக்கான பாதை என்றே அவர் கொள்கிறார். விலாசம் தேவதேவன், 4-5 மணிநகர், தூத்துக்குடி, 628003, தமிழ்நாடு. தேவதேவன் தனிமை விரும்பி. ‘நோயாளிக்கு ஓய்வு போல எனக்குத் தனிமை மிக அவசியமானது’. குடும்பத்தின் நடுவே தனிமை!

தேவதேவனின் முதற்தொகுதி ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ 1974-இல் வெளியாகியது. அதில் துவக்க காலக் கவிதைகள் உள்ளன. இத்தொகுதி சுந்தர ராமசாமியின் முன்னுரைக்குச் சென்றது. தொகுப்பு பொருட்படுத்தும்படி இல்லை என்று ராமசாமி மறுத்துவிட்டார். பிரமிள் முன்னுரையுடன் அது வெளிவந்தது. பிற்பாடு தேவதேவனில் முன்னிற்கப் போகும் சில கூறுகளை அத்தொகுப்பில் பிரமிள் அடையாளம் கண்டிருந்தார். இன்றைய என் வாசிப்பில் அந்த தொகுப்பில் நல்ல கவிதை என்றும் எதுவும் கிடைக்கவில்லை. உலகியல் சார்ந்த – போகம் சார்ந்த – ஒருவகைக் கற்பனாவாதமே அத்தொகுப்பில் உள்ளது. கவிதைகளில் பெரும்பாலானவை தன்னிலை வெளிப்பாடுகள்.

ஆனால் இத்தொகுப்பில் சில சிறப்பம்சங்கள் தெரிகின்றன. தமிழின் நவீனத்துவ கவிதைகளின் உலகிலிருந்தும், மார்க்ஸியப் புரட்சிக் கவிதைகளிலிருந்தும் வெகுவாக விலகி பக்தியிலக்கிய மரபுடன் தன்னை அடையாளம் கண்டபடி இவை தனித்து நிற்கின்றன. முன்னோடிகள் இல்லாத பயணம் என்பதே இவை தோல்வியடைந்தமைக்கும் காரணம் போலும். பிரபஞ்சத்தை இவை ஒரு பெரும் காமலீலையெனக் காண முயல்கின்றன. அதேபோல மானுட காமத்தைப் பிரபஞ்சப் பேரியக்கத்தின் குறியீடாகவும் காண்கின்றன. மனித உடலைப் பிரபஞ்சமாகவும் பிரபஞ்சத்தை மனித உடலாகவும் காண்பது இந்திய மரபின் அமைப்பு முறைகளில் முக்கியமானது. நமது படிமப்பேருலகு இதன் மூலம் உருவானது. இந்த அம்சத்தைத் தேவதேவனில் காண்கிற பிரமிள் ‘பாலுணர்வின் விஷய விபரங்களை இயற்கையின் விகாசமாகக் காண்கிற கருக்களம்’ என்று இக்கவிதைகளை அடையாளப்படுத்தி, இவை தமிழின் அகத்துறைக் கவிதைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியவை என்கிறார்.

(இக்கட்டுரை எழுதப்பட்ட பிறகு 1998 செப்டம்பர் 30-இல் குற்றாலம் விமரிசன சந்திப்பில் ரமேஷ் – பிரேம் வாசித்த கட்டுரையில் இவ்வியல்பைப் பின் நவீனத்துவ கவிதையின் முக்கியமான இயல்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். இவற்றை இவர்கள் ஐதீகக் கவிதை என்கிறார்கள். நமது பழைய தாந்திரீக மரபுக் கவிதைகளை இவ்வரிசையில் சேர்க்கலாமா என்று கேட்டேன். சேர்க்கலாம்; ஆனால் அவற்றில் முழுமுற்றான முடிவாக இறைமை அல்லது பிரம்மம் உள்ளது. அது முக்கியமான ஒரு வேறுபாடு என்றார்கள். மேற்கத்திய பக்திக் கவிதைகளில் உள்ளது போன்றோ இந்திய பக்தி காலகட்டத்துக் கவிதைகளில் உள்ளது போன்றோ முழுமுற்றான முடிவு நமது தாந்திரீகக் கவிதைகளில் இல்லை என்று நான் கூறினேன். திருப்புகழ், சித்தர் பாடல்கள் முதலியவற்றில் உள்ள ‘சிவ’மும், ‘முருக’னும் இறுதி விடைகளாக அல்ல, ஒருவகை முன்னிலைப் பெயர்களாகவே பல சமயம் முன் வைக்கப்படுகின்றனர். அதற்கான சமூகத் தேவை அவற்றுக்கு இருந்தது போலும் என்றேன் விவாதம் நீண்டு போயிற்று.)

அதேசமயம் இக்கவிதைகளில் தெரிவது ஒருவகை தத்தளிப்புத்தான். மரபின் தீவிரமான சாயலுடன் சமகாலத்தைப் பார்க்கும் கவிமனம் தேடுவது இன்னது என்றறியாமல் அலைமோதுகிறது. புற உலகை முழுமையாகச் சுயபடிமங்களாக மாற்றிவிட முடியுமா என்று ஏங்குகிறது. பெரும்பாலும் அம்முயற்சி அர்த்தமற்ற தாவலாகவே எஞ்சுகிறது. படிமங்கள் வெறும் உவமைகளாக நின்றுவிடுகின்றன. கவித்துவ மன எழுச்சியின் பாற்பட்டதாக இன்றி மனக் கிளர்ச்சியின் வெளிப்பாடாகவே இவை உள்ளன. எனவே இவற்றுக்குக் கவித்துவ ஒருமையும் கைகூடவில்லை.

’அவிழ்த்துப் போட்ட சேலையாய்
பாறையில் படர்ந்த கொடிகள்
காற்று பிடித்து
இழுத்துப் போட்ட சட்டையாய்
தரையில் பூத்த செடிகள்’
என்பது போன்ற அர்த்தமற்ற படிமங்களும்
’தனிமைக் குளத்தில் இறங்கினான்
கொஞ்ச நேரத்தில் குஞ்சுமீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை’

என்பது போன்ற ஒலியொருமை கூடாத சொல்லாட்சிகளும்

’ரசனைக் கொடி தழைத்து
மலர்ந்தது ஒரு கலைத் தாமரை’

போன்ற செயற்கையான சொற்றொடர் உருவாக்கங்களும் சேர்ந்து உருவாக்கிய இத்தொகுதி தேவதேவனைச் சற்றும் நமக்கு காட்டுவதில்லை என்றே கூற வேண்டும்.

தேவதேவனின் இரண்டாவது தொகுப்பில் சட்டென்று குரல் மாறுபடுவதைக் காணலாம். ‘மின்னற் பொழுதே தூரம்’ என்ற தலைப்பே பல வகையிலும் மொழியினூடாக தேவதேவனின் தேடும் மொழியின்மையைச் சுட்டிக் காட்டுகிறது.

’நேற்றைய பாக்கிகள்
நேற்றைய ருசிகள்
ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்
நாளைய திட்டங்களும் கூட’

என்று தன்னை விடுவித்துக் கொள்கிறது அவர் கவிதை. ‘கணங்களில் அமிழ்ந்து’ இன்றில் திளைப்பதே விடுதலை என்ற பிரக்ஞையும் இவர் கவிதைகளில் இத்தொகுப்பில்தான் துவங்குகிறது. முதல் தொகுப்பில் உள்ள முதிர்ச்சியற்ற நடைக்குப் பதிலாக உள்ளழுத்தமும் மீறலும் கொண்ட மொழிநடை இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் உள்ள எல்லாக் கவிதைகளிலும் கவிதை என்ற ‘சாதனம்’ மூலம் (சாதனம்: நம் யோக மரபின் அர்த்தத்தில்) எதை நோக்கி நகர்வது என்பதில் தேவதேவனுக்கு ஏற்பட்டுள்ள தெளிவை இத்தொகுதி காட்டுகிறது. முதல் தொகுதியில் இருந்த

’மேலே தெரியும் சூரியன்
புடவை வியாபாரியாய்
உதறிக் காட்டுவான்
தன் சரக்குகளை’

என்பது போன்ற உள்ளீடற்ற உவமைகளுக்குப் பதிலாக

’இரை பொறுக்கவும்
முட்டையிடவும் மாத்திரம்
பூமிக்கு வந்தமரும்
வான்வெளிப் பறவை ஒன்று’

போன்ற அபாரமான படிமங்கள் விழுந்து பல்வேறு மனத்தளங்களில் பிரதி பலித்துச் செல்கின்றன.

தேவதேவனின் முதல் தொகுதியின் மொழி தட்டையாகவும் குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவப்பட்டதாகவும் உள்ளது. இரண்டாம் தொகுதியில் சொற்கள் வானம் பிரதிபலிக்கும் ஆடிகள் ஆகிவிடுகின்றன. முதல் தொகுதியின் ஆகச் சிறந்த வரிகள் இவை:

’கடல் நீலம் விம்மி அலைக்கும்
பூமி மீது
கொக்கு பூத்த வயல்கள் சிலிர்க்கும்
புரண்டு திரிந்து ஆட அழைக்கும்
பொன்மணல் காடு மின்னும்’

இவ்வரிகளில் மொழி கவிமொழியாக மாறித் தன்னைச் சிதறடித்து விரிகிறது. ‘கொக்கு பூத்த வயல்’, ‘பொன் மணல் காடு’ போன்ற சொல்லாட்சிகளைப் பகுத்து பிரித்துப் பொருள் கொள்ள முயலும் மனம் அர்த்தமின்மையையே அடையும். ஆனால் இவ்வரிகளைக் கவித்துவம் பற்றிய பிரக்ஞையுடன் படிக்கும் ஒருவர் அடைவது மனவிரிவை. தேவதேவனின் பரிணாம வளர்ச்சியை இங்கு காண்கிறோம். அவர் தன் மொழியினூடாகத் தன் கவிமொழியைக் கண்டடைந்து விட்டிருக்கிறார்.

கவிதை எம்மொழியில் எழுதப்பட்டாலும் அது ஒரு தனிமொழியாகும். மொழி என்றால் என்ன? ஒலி உச்சரிப்புகளும் அவற்றால் சுட்டப்படும் விஷய உருவகங்களும் அடங்கிய அமைப்பு அல்லது ஒலிக்குறிப்பான்கள், குறிப்பீடுகள் ஆகியவற்றின் தொகுப்பு. அதன் நோக்கம் தொடர்புறுதலும் அறிதலும். இரண்டும் புரிதல் உணர்தல் என்று இருதளங்களில் நடக்கின்றன. அதாவது மொழி பிரக்ஞைத் தளத்திலும் அபோத தளத்திலும் ஒரே சமயம் இயங்குகிறது. புரிதல் என்பதை இவ்வாறு வகுத்துக் கொள்ளலாம். அது பொதுத் தருக்கம் சார்ந்தது. புறவயத்தன்மை உடையது. அந்நிலையில் கூறுபொருளும் அதன் ஒலியடையாளமும் ஒரு குறிப்பிட்ட சொற்களத்தில் நிலையாக இணைந்துள்ளன.

அதாவது வரையறுக்கப்பட்ட அர்த்தம் உடையவை அச்சொற்கள். பசு என்றால் ஒரு குறிப்பிட்ட மிருகம் என்று வரையறுத்த பிறகே நாம் அச்சொல்லைப் பொது வழக்கில் பயன்படுத்துகிறோம். சட்டத்திலும் வியாபாரத்திலும் அச்சொல்லைப் பார்த்தால் அது அம்மிருகம் தான் என ஐயமறத் தீர்மானித்து விடுகிறோம். புழக்க மொழியை அறிய எந்த ஒலிக்குறிப்பான் எந்த விஷயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். (சொற்களை அறிதல்) பிறகு அவ்வொலிக் குறிப்பான்களை இணைத்து நிகழ்வுகளைக் கூறும் முறையைக் கற்க வேண்டும் (இலக்கணம்). இவையிரண்டும் ஒரு குறிப்பிட்ட சொற்களுக்குள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கையில்தான் நாம் உரையாட முடியும். அகராதியின் துணையுடன் நாம் இம்மொழியை அறிய முடியும் என்று கூறலாம். மொழி எனும்போது நாம் உத்தேசிப்பது இந்தப் புழக்க மொழியையே. இதை மேற்கத்திய மொழியியல் பரோல் என்கிறது. இம்மொழியை நாம் ஒவ்வொருவரும் எப்படி பொருள்படுத்திக் கொள்கிறோம்? இவற்றைப் பொருள்களுடன் இணைக்கும் அந்தரங்கமான மொழிப்படிமங்களின் பேரமைப்பு ஒன்று நாமறியாது நம்மில் உள்ளது. அது நாமனைவரிலும் பரவியுள்ளது. இதை அகமொழி என்று மேற்கத்திய மொழியியல் கூறுகிறது (அதாவது முழுமொழி, அல்லது மீ மொழி. லாங் என்பது கடல், பரோல் – அலை.)

இலக்கியம் இம்மொழிக்குள் செயல்படும் ஒரு தனிமொழி. இதை லாங், பரோல் இரண்டுக்கும் இடையே உருவாகும் ஒரு விசேஷ அமைப்பு என்று நாம் வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சொல்லும் இயல்பாகவே படிமம்தான். வாழ்வின் போக்கில் இயல்பாகவே உருவாகி நம்மையறியாமலேயே நம்மில் உறைந்திருப்பது இப்படிமத்தன்மை. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் சகஜமாகவே முடிவின்மை உள்ளது. இம்முடிவின்மை பலசமயம் புழக்க தளத்தில் ஒத்திவைக்கப்பட்டு, நிலைத்த தன்மை ஒன்று உருவகம் செய்யப்படுகிறது. வியாபாரக் குறிப்பு ஒன்று பசு என்று குறிப்பிடும்போது அது அம்மிருகமின்றி வேறல்ல. கவிதை அந்நிலைத்த தன்மையைச் சிரத்தையுடன் ரத்து செய்து ஒவ்வொரு சொல்லுக்கும் விசேஷ படிமத்தன்மையும் முடிவின்மையும் அளிக்கிறது. ‘பார்த்தால் பசுபோல’ என்று கூறும்போது பசு ஓர் படிமம் ஆகிவிடுகிறது. இவ்வாறு கவித்துவப் படிமங்களினாலான ஒரு தனிமொழி மொழியமைப்புக்குள் கற்பிதம் செய்யப்படுகிறது. அதுவே கவிமொழி. தமிழ் தெரிந்த ஒருவர் தமிழ்க் கவிதையை அறிய முடியாது. கவிமொழி அறிந்த ஒருவரே தமிழ்க்கவிதையை அறிய முடியும். மொழி மற்றும் கலாச்சாரத்தின் வரம்புகளை மீறி உலகளாவிய கவிமொழி ஒன்று எக்காலத்திலும் உள்ளது என்று நம்மால் காணமுடியும்.

உலகளாவிய போக்குகளைக் கற்பிதம் செய்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் இன்று அடையாளம் காட்டப்படுகின்றன. எல்லாவித உலகப் பொது இயல்புகளையும் மறுக்க முனையும் சிந்தனையாளர் வட்டம் ஒன்றும் உள்ளது. ஆயினும் கவிமொழி, அதன் பிரதேச சிறப்பியல்புகளைத் தாண்டி, உலகளாவிய ஒன்றுதான் என்று கூறுவேன். எனவே சிறந்த கவிதைக்கான சர்வதேச இலக்கணம் ஒன்று உண்டு. அது அகவயமானது. ஆழ்மனம் சார்ந்தது. பலசமயம் வடிவம், அணி, ரசம் என அது புறவயப்படுத்தப்படுகிறது. ஆனால் புறவயமான நிர்ணயங்கள் எல்லாம் தற்காலிகமானவை, பேசப்படும் சூழலுடன் நிர்ணயமான இணைப்பு கொண்டவை. எனவே சர்வதேச வடிவமோ, இலக்கணமோ, அழகியல் கொள்கைகளோ கவிதைக்கு இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் கவி மொழி கால இட எல்லைகளைக் கடந்ததுதான். பெருங்கவிஞன் இயல்பாக உலகமனைத்திற்கும் பொதுவானவனாக ஆகிறான். எதுவும் அவனை மறைக்க முடிவதில்லை. (மொழி பெயர்க்காமல் இருந்து விடலாம் என்பது வேறு விஷயம்) கவித்துவம் குறைந்த ஒருவனை எத்தனை ராட்சத முயற்சிகளும் கூடப் பெருங்கவிஞன் இடத்திற்குக் கொண்டு வருவதுமில்லை. ஷேக்ஸ்பியரை விட மேலாக கிறிஸ்டோபர் மார்லோவைத் தூக்கிப் பிடிக்க பிரிட்டிஷ் அறிவியக்கம் செய்த முயற்சிகளை உதாரணமாகப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு.

சர்வதேச அளவில், மானுடப்பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது. மனித மொழியைத் தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம் மிக முக்கியமானது. உடலின் வடிவம் மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது. உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச இயல்புகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. உடலினூடாக அன்றி தூலப் பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்ல என்பதால் உடலையே நாம் பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால் அது வியப்பில்லை. நிறம், கனம், நீளம், வெப்பம், குளிர், வேகம், ஒளி, இருள் என நாம் கூறுபவை எல்லாமே மானுட உடலின் சில இயல்புகள் மட்டுமே என்பது இப்போதுள்ள நரம்பியல் கோட்பாடு. மொழி என நாம் இப்போது வகுக்கும் பிரம்மாண்டமான படிம அமைப்பு உண்மையில் பிரபஞ்சத்தை நாம் உடல் வழியாக அறிதலின் விளைவாக உருவானதாகும். மனித உடல் அழியும் என்பதால் காலம், மனித உடல், பருவடிவம் என்பதனால் வெளி. இவ்வாறு அனைத்தையும் தீர்மானிக்கும் மனித உடல்தான் மொழியின் மானுடப் பொதுத்தன்மையை உருவாக்குகிறது. ஒன்றோடொன்று மொழிபெயர்க்கப்பட முடியாத மானுட மொழிகள் எதுவுமில்லை. டால்பின் மொழியை அல்லது பன்றிகளின் மொழியை மானுடமொழியில் அர்த்தபூர்வமாக மொழி பெயர்க்க முடியாது. உடலே கவிமொழிக்கும் மையம். கவிதை உடலால் வாசிக்கப்படுகிறது. ஏனெனில் மனம் என்பது உடலின் உள்ளேயிருக்கும் உடல் சார்ந்த படிமங்களின் தொகுப்பே. ஆகவே மொழி, மனம், கலாச்சாரம் அரசியல் அனைத்திற்கும் முக்கியமான பகுதிகள் சர்வமானுட இயல்பு உடையவையே. கவிமொழியும் சர்வதேச, சர்வமானுட இயல்பு பெறுவது இவ்வாறுதான்.

கவிதை மொழியின் படிமத்தன்மையை விரிவுபடுத்துகிறது,புதுப்பிக்கிறது என்று எளிமையாகக் கூறலாம். மொழியின் படிமங்கள் புழக்கம் மூலம் தங்கள் சாத்தியங்களை இழக்கின்றன. ‘தூக்கிவாரிப்போடுதல்’ என்பது ஒரு படிமம். ஆனால் இன்று தமிழில் அது ஒரு குறிப்பிட்ட உணர்வுக்குக் குறியீடு. இவ்வாறு மொழி ஒரு பக்கம் தன்னை உறைய வைத்தபடியே உள்ளது. மறுபக்கம் கவிஞர்களினூடாக இலக்கியத்தினூடாக அதில் புதிய படிமங்கள் பிறக்கின்றன. அது நெகிழ்ந்தபடி உள்ளது. இப்படிம ஆக்கம் கவிமனதில் சுத்த சுயம்புவாக நடைபெறுவது இல்லை. பேச்சு மொழியில் ஒரு சூட்சுமவடிவில் அப்படிம ஆக்கம் ஏற்கனவே நடைபெற்றிருக்கும். சமூக ஆழ்மனதில் அப்படிமம் பதிந்து விட்டிருக்கும். கவிஞன் தன் ஆழ்மனதிலிருந்து அதைக் கண்டடைந்து மொழியில் நிறுவுகிறான். கவிதை அதன் வாசகர் அனைவருக்கும் கண்டடைதலின் பரவசத்தைத் தருவது இதனால் தான். பொருளை மனித மொழி (அல்லது மனித உடல்) சந்திக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியை இந்திய மரபு அந்தகரண விருத்தி என்கிறது. அதை அடையாளப்படுத்திக் கொள்வதை (மொழியாலும், உடலாலும்) சப்தாகரண விருத்தி என்கிறது. மேற்கே இதை கெஸ்டால்டேஷன் என்கிறார்கள். மொழியின் உருவாக்கமும் கவிதையின் உருவாக்கமும் நிகழும் கணம் இது. உண்மையில் இரண்டும் வேறு வேறல்ல. இன்று கவிதை மறுபடியும் மறுபடியும் மொழியை உருவாக்குகிறது.

மொழிகளின் துவக்க காலக்கட்டத்தில் உள்ள கவித்துவம் பிற்பாடு இல்லையே என்ற ஐயம் நமக்குப் பலசமயம் ஏற்படும். வேத உபநிடதங்களிலும் பழைய சங்கப் பாடல்களிலும் உள்ள கவித்துவம் பிற்பாடு நிகழவில்லை. ஏன்? அன்று மனிதர்கள் உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்று இதற்குப் பலசமயம் விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்க முடியாது. வரலாற்றை ஒரு தளர்ச்சி என்று கொள்வது மிகவும் சிரமம் விரிவாக்கம், சிக்கலாக்கம் என்றுதான் கூறமுடியும். மொழிகளின் துவக்க நிலையில் கவித்துவமும் மொழியும் வேறுவேறாக இருக்கவில்லை. பழங்குடி மொழிகளில் பெரும்பகுதி கவித்துவம் நிரம்பியதாகவே வெறும் படிமங்களின் வரிசையாகவே உள்ளது.சமூக இயக்கத்தின் தேவை மொழியின் படிமங்களை உறையவைத்தபடியுள்ளது. வளர்ந்த மொழியில் இவ்வாறு உறைநேர்ந்த பகுதிகள்தான் பெரும் பகுதி. எனவே கவிதை அவற்றில் மறுபடிம ஆக்கம் என்ற தளத்திலேயே நிகழவேண்டியுள்ளது. இன்றுகூட ஒரு புதிய பொருள் மொழியைச் சந்திக்கும்போது ஒரு கவித்துவம் நிகழ்வதைக் காணலாம். உதாரணம் தொலைக்காட்சி, புகைவண்டி, கணினி. கெஸ்டால்டேஷன் அல்லது சப்தாகரணவிருத்தி எப்போதும் கவிதையாக்கம்தான். நவீன மொழியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே நாம் படிமங்களை உடைத்து மீண்டும் கட்டுகிறோம். பழங்குடிமொழி என்பது காட்டில் மூங்கில் குடிசைகளினாலான முதல் கிராமம் என்பது போல. நமது மொழி நகரம். நாம் இடித்துதான் கட்ட வேண்டும். எனவே தான்

’புகைவண்டி விட்டுச்சென்ற இருப்புப்பாதை
கிடந்தது தனியாக’
(ஆர்.ஸ்ரீனிவாசன்)

என்று நாம் கவிதை எழுதுகிறோம். புகை வண்டியையும் இருப்புப்பாதையையும் உடைத்துப் புதிய படிமங்களாகக் கட்டுகிறோம். இதுவே கவிதைச் செயல்பாடு என்பது. இவ்வாறுதான் மொழிக்குள் ஒரு தனிமொழியைக் கவிதை உருவாக்கிக் கொள்கிறது.

கவிதை தன் தனிமொழியைப் புழக்க மொழியின் இயக்குவிதிகளையும் மீறிச் சென்றுதான் அடையமுடியும். இயங்குவிதிகள் அச்சொற்களின் உறைந்த தளத்தை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு கட்டப்பட்டவை. கவிதை தன் புதுப்படிம ஆக்கத்தில் தன் விதிகளையும் புதிதாக உருவாக்குகிறது.

‘நெஞ்சில் கணல் மணக்கும் பூக்கள்’
‘ஆடிவரும் தேனே’
(பாரதி)

‘வீற்றிருந்தாள் உன் நிழல்’
‘உன் வெண் பாதச் சதைகள் மெத்திட்ட புல்தரை…’
(பிரமிள்)

இலக்கணப்படி இவ்வரிகள் அபத்தமானவை. கவிதையின் விசேஷதளத்தில் தான் இவை அர்த்தம் கொள்கின்றன. குழந்தையைக் கொஞ்சும் களிவெறியில் தேன் ஆடி வர முடியும். கவிதை எனும் விசேஷ வடிவின் இலக்கே இதுதான். இதனால்தான் புராதன மொழிகளில் கவிதை ஒருவகையான பிதற்றலாக – சன்னதமாக – கருதப்பட்டது. இந்திய மரபு கவிதையை ‘அருளிச் செய்தலாக’க் கருதுகிறது. மேற்கு அதை உளறலாகக் கருதுகிறது. அது ‘பேச்சு’ அல்ல. கவிதை பேசவும் கூடும். ஆனால் உளறும் போதே அது தன் சிறந்த சாத்தியங்களை அடைகிறது.

படிமங்களை வைத்தே கவிஞர்களை நாம் அளவிடுகிறோம். எல்லாமே படிங்கள்தான் என்றறியாத கவிஞர்கள்தாம் புதியபடிமங்களை ‘உருவாக்க’ உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கணத்தில் பிரபஞ்சமே படிமப் பெருந்தொகுப்பாக இருக்கும். பொருள் என்பது ஓர் உருவகம். அவ்வுருவகம் பொருளுடன் நமக்குள்ள – நம் உடலுக்கு உள்ள – உறவின் வெளிப்பாடு. பொருளைக் கவிதை எப்படி அணுகுகிறது? அப்பொருளைச் சுற்றி ஓர் உறைபோல மூடிவிட்ட பொருண்மையெனும் உருவகத்தை உடைத்து அதை வேறு ஒரு வெளியில் கொண்டு சென்று நிறுத்துகிறது. பொருண்மையுருவகம் சிதறாத படிமம் பழக்க மொழியில் நிகழும் ஒரு எளிய விளையாட்டு. உதாரணமாக,

’இந்த நரை
வெற்றிலை போட்ட முதுமை
தீற்றிச் சென்ற சுண்ணாம்பு’
(அப்துல் ரகுமான்)

என்று கூறுவது ஒரு விளையாட்டு. விளையாட்டு எப்போதும் ஏற்கனவே இருக்கும் விதிகளுக்குள்தான் செயல்பட முடியும். பொருட்களின் பொருண்மைகள் மட்டுமே இதில் பரஸ்பரம் ஒப்பிடப்படுகின்றன என்பதே இத்தகைய இயல்புக்குக் காரணம். இதன்மூலம் அவற்றின் வழமையான பொருண்மையே மேலும் உறுதியாகிறது.

’மலைகளுக்குக் கூன்விழ வைக்கும் துயரம்’
(அன்னா அக்மதோவா)

என்ற படிமம் மலைகள் மீது கவிழ்ந்த பொருண்மையின் திரையைக் கிழித்து அவற்றை நம்முன் பூதாகரப்படுத்துகிறது. மலைகள் சார்ந்து நாம் அடைந்த பல்வேறு உணர்வுகள் அப்பௌதிக இருப்பு மீது மளமளவென்று பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. மலைகளின் மௌனம், மலைகளின் நீலம், மலைகளுக்கு வானுடன் உள்ள உறவு, மலைகளின் மாறாத இயல்பு, மலைகளின் வடிவமற்ற பிரம்மாண்டம், மலைகள் மீது மேகம் கவியும் மங்கல், மலை மீது நகரும் மேகநிழல், மலை நடுவே பீறிடும் உதய ஒளி, மலைச் சிகரங்களின் தனிமை என அனைத்துமே பொங்கி விரிந்து மலையும் துயரமும் ஒன்றாகி விடுகின்றன. ஒரு படிமம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. இன்னொரு படிமம் நம்மை எரிச்சலூட்டுகிறது. ஏன்? பொருட்களின் பொருண்மை மீறப்படுவது ஒரு பெரும் பிரளயம். கணநேரத்தில் அது நம்மில் நிகழ்கிறது. ஒரு மலையை அன்னா திருப்பி வைத்து விடுகிறார். நிலாக்காட்சி முற்றிலும் மாறிவிடுகிறது. இதுவே பரவசம் தருகிறது. படிமமே கவிதையாகுமா? கவிதை ஒரு படிமநிகழ்வின்றி வேறு எதுவுமில்லை.

’அசையும் போது தோணி
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’

என்ற தேவதேவனின் வரிகளை மிகச் சிறந்த உதாரணமாக இங்கு கொள்ளலாம். இங்கு திட்டவட்டமாக ஏதுமில்லை; ஒரு காட்சி கூட. தோணி, தீவு, அசைதல் எதுவுமே நிலைத்த பொருள் உடையவை அல்ல. சகல விதமான நிலைத்த தன்மைகளையும் மீறிய முடிவின்மை மீது மிதக்கிறது அந்தத் தோணி. மின்னற்பொழுது தூரத்திற்கு இப்புறம் தீவு. அப்புறம் தோணி. காலமிடமான அந்த ‘மின்னற்பொழுது’ பிரக்ஞையின் ஒரு தளும்பல் மட்டுமே. கால இடத்திலிருந்து மானுட சோதனை ஒரு கணம் விடுபட்டு தானிருக்கும் பொருண்மை வெளியைத் திகைப்புடன் பார்த்து நிற்கிறது. கவிதை குறிக்கும் இலக்கே இதுதான்; பொருண்மைகளை ஊடுருவிச் செல்லும் படிமமொழி. அதை ஒருமுறை அடைந்த பிறகு தேவதேவன் பிற சபலங்கள் எதிலும் சிக்கவில்லை. அவருக்குத் தன் கவிதையைச் ‘சமூகப் பிரக்ஞை’யுடன் படைக்க வேண்டுமென்றோ, ‘சமகால அழகியல்’ அதில் இருக்க வேண்டுமென்றோ எவ்விதமான திட்டமும் இல்லை. தமிழ்க் கவிஞர்களில் கவிதையை ஒரு தவமாக மேற்கொண்டவர். எனவே ‘கவிஞர்’ என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர்.

தேவதேவனின் பரிணாமத்தைக் காட்டும் இந்தத் தெளிவு அவருடைய இரு கவிதைகளினூடாக மேலும் விளக்கப்படலாம்.

’மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு
தீராவேட்கையில்
துள்ளி எழும் மீன் துடிப்பு
படக்கென்று நிறைவேறியதென்ன
லாவகமாய் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி’
(குளித்து கரையேறாத கோபியர்கள்)

’நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை’
(துள்ளல்)

இரு கவிதைகளும் நல்ல கவிதைகளே. முதற்கவிதையில் ‘மோகம் ததும்பும் நீர் பரப்பு’, ‘தீரா வேட்கை’ ஆகிய வரிகள் வெளிப்படையாகவே நீர்ப் பரப்பு, மீன், பறவை, வான் ஆகியவற்றைப் படிமங்களாக்க முயன்று நிற்பதைக் காணலாம். இரண்டாம் கவிதையில் அத்தகைய வகுத்தல்கள் ஏதுமில்லை. மிக சகஜமான ஒரு படிம ஆக்கம் நிகழ்ந்து விட்டிருக்கிறது. சாதாரணமாக கவனிக்கப்படாததும் நுட்பமான வாசகர்களால் மட்டுமே எப்போதும் அடையாளம் காட்டப்படுவதுமான சிறு வித்தியாசம் இது. முதற்கவிதை மோகத்தடாகத்து மீனின் ‘மீட்சி’யைப் (எங்கு மீளுதல்?) பற்றி மட்டும் கூறுவதாகக் குறுகிவிடும்போது இரண்டாம் கவிதை பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை நாடகத்தின் மின்னல்வேக சித்தரிப்பு மட்டுமே. அந்த ‘நீரும்’ ‘துள்ளலும்’ ‘பாறையும்’ ‘பறவையும்’ எல்லாம் வாசகனின் கற்பனைக்கு ஏற்ப விரிபவை. ‘மரித்த கணமே பறவை’ என்ற வரியில் இக்கவிதை அசாதாரணமான உச்சநிலையை அடைகிறது. தேவதேவன் தன்னை அடையும் தருணம், பிச்சுமணி கைவல்யம் தேவதேவனாகும் தருணம் இதுதான்.

Read more...

Monday, October 1, 2012

தேவதேவன் கவிதைகளில் மொழி

தேவதேவன் கவிதைகளில் மொழி பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதற்கு முன் மொழி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்ததை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

தேவதேவனை முன்பின் தெரியாத ஒருவர் இங்கே வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்? கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார்?” என்று கேட்டால், அவரைக் கைநீட்டிக் காட்ட முடியாது; அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளாவது, உளறியாவது, காண்பிக்க வேண்டும். ஆக, உள்ளதைச் சொல்வதற்கு அல்ல, இல்லாததைச் சொல்வதற்கே மொழி என்று தெளிகிறது. அப்படித்தான் மொழி, நம் இடைவெளிகளை நிரப்பி, நமக்குள் ஒரு தொடர்பையும் நம் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் தருகிறது.

‘சிவப்பு’ என்பது, நம் சிறுவயதில், நம் தாய் தந்தையரோ ஆசிரியரோ, சிவப்பு நிறமுள்ள பொருட்களைக் காட்டிக்காட்டி நமக்குக் கற்றுத்தந்த ஒரு சொல். ஓர் ஊசியால் குத்துப் பட்டால் நமக்கு நோகிறது. நோவு என்னவோ நமக்குள் நிகழ்வதுதான், ஆனால் அந்த உணர்வுக்கான ‘நோவு’ என்கிற சொல் நமக்கு வெளியில் இருந்தே கிட்டுகிறது. வினைச்சொற்களும் அப்படித்தான். ஒருவர் நம்மை நோக்கி நெருங்குவதை ‘வருகுதல்’ என்றும்; நம்மை விட்டு விலகுவதைப் ‘போகுதல்’ என்றும் சொல்லித் தெரிகிறோம். ஆக, மொழி நமக்கு உள்ளிருந்து சுரக்கிற ஒன்றில்லை; நமக்கு வெளியே இருந்து புழங்குகிற ஒன்று.

மொழி நமக்கு வெளியே இருப்பதினால், அது எல்லார்க்கும் பொதுவாக இருக்கிறது. ஆனால் அனுபவங்கள் பொதுவாக இருப்பதில்லை. அதுவும் ஒரு கவிஞரின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்ல? தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார்? தனக்கென்று ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்ள முடியுமா?

ஒரு திரைப்படம் பார்த்தேன். “தாரே ஜமீன் பர்” என்கிற ஹிந்திப் படம். கதாநாயகன் ஓர் எட்டுவயதுச் சிறுவன். எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் வாழ்பவன். ஓவியம் நன்றாகத் தீட்டுவான், ஆனால் பள்ளிப் பாடங்கள் அவனுக்குப் புரிகிறதில்லை. ஒருநாள் ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், “Ishaan, read the first line from page 23.” அவன் எழுந்துநின்று முழிக்கிறான். “I say, read the firat line from page 23.”
அவன் சொல்லுகிறான், “அக்ஷரோ(ங்) நாச்தே ஹை(ங்)”. வகுப்புச் சிறுவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள். ஆசிரியருக்குப் புரியவில்லை. அவர் கேட்கிறார், “What?” அவன் சொல்லுகிறான், “The letters are dancing, sir!” ஆசிரியர், “Is it? Okay, then read the dancing letters.” அவன், “Kich bich klich blich chacha chich.” வகுப்பறை சிரிப்பால் அதிர்கிறது. “Get out of the class!”

ஒரு கவிஞர் தன் அனுபவத்துக்கு என்று ஒரு தனிமொழி அமைத்தால் இப்படித்தான் இருக்கும்.

மேலும், கவிஞர்கள் கவிதை எழுதுவது தம் அனுபவத்தைப் பிறருக்குத் தொற்ற வைப்பதற்காக. அதனால், தமக்கும் பிறருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப அவர்கள், வேறு வழியின்றி, பொதுமொழியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அந்தக் கட்டாயத்தில், கவிஞர்கள் அந்தப் பொதுமொழியைத் தங்களுக்குத் தோதாக வளைத்து நெளித்துக் கொள்கிறார்கள்.

||தீக்குள் விரலை விட்டால், உன்னைத் தீண்டும் இன்பம்..|| இது பாரதி;

||பார்வைச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.|| இது பிரமிள்;

||ஈரமற்றுப் போன குரலின் அவலத்தைச்/ சொல்லிச் சொல்லிக் கரைகின்றன/ தந்திக் கம்பிகளின் மேல்/ வயலின் குருவிகள்.|| இது க. மோகனரங்கன்;

||காற்றோட்டமான சொற்களால் விழிகளை உலர்த்தினேன்.|| இது ஜெ. பிரான்சிஸ் கிருபா.

கவனியுங்கள், இங்கே எடுத்துக் காட்டிய எந்தக் கவிதை வரியிலும், நாம் அறியாத அல்லது பழக்கப்படாத ஒரு சொல் கூட இல்லை. இப்படி, இவர்கள் பொதுமொழியில் இருந்தே தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தனிமொழியை உண்டுபண்ணி வெளிப் படுகிறார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே உள்வாங்க, நமக்குக் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி அல்லது நாட்டம் இருந்தால்கூடப் போதும்.

இனி, இதுபோல, கவிஞர் தேவதேவனுக்கும் ஒரு தனிமொழி உண்டா என்றால், உண்டுதான்:

||தோணிக்கும் தீவுக்கும் இடையே/ மின்னற் பொழுதே தூரம்.||

||வெய்யில் பாவுபோடும் மார்கழியில்/ கூதல் காற்றே ஊடாய்ப் பாய்ந்து பாய்ந்து/ நாள்தறி நடக்கும்.||

||கருங்கூந்தலின் ஹேர்பின்னில்/ கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.||

||மின்கம்பிக் கோடிட்ட வானப் பலகையில்/ காகச் சொற்றொடர்.||

எல்லாக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற மொழிநெசவு, இயல்பாய், தானே வருவதுதான். ஆனால் தேவதேவனின் மொழி, பெரும்பாகம், இந்த நெசவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்றே அல்ல. அவருக்கு மொழி முக்கியமில்லை; தான் கண்டு தெளிந்த கருத்தே முக்கியம். அதனால் அவர் கையாளும் மொழி, அன்றாட வாழ்க்கையில் வழங்கும் பொதுமொழிபோல் அவ்வளவு சாதாரணமானது.

||செடி ஒன்று காற்றில்/ உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது./ கோணங்கள் எத்தனை மாற்றியும்/ இங்கிருந்து உன்முகம் காண முடியவில்லை./ இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது./ ஆனால் காற்று உரத்து வீசுகையில்/ செடி விலகி/ உன் முகம் காண முடிகிறது.||

என்னே ஒரு சாதாரண மொழி! ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம்! Intensity-ஐக் குறிக்கும் ‘உரத்து’ என்கிற சொல், இங்கே, பார்ப்பவரைச் சார்ந்தோ பார்க்கப்படுவதைச் சார்ந்தோ இடம்பெறாமல், எங்கும் வியாபித்திருக்கும் இயற்கைக்கு வழங்கப் படுகிறது.

||நான் என் கைவிளக்கை/ ஏற்றிக் கொண்டதன் காரணம்/ என்னைச் சுற்றியுள்ளவற்றை/ நான் கண்டுகொள்வதற்காகவே./ என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல./

அல்ல/ நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்காகவும்தான்/ என்கிறது ஒளி.||

இங்கே, ‘என் கைவிளக்கு’, ‘நான் ஏற்றிக்கொண்டது’ என்று சொல்வதின் மூலம் ஒளியைத் தன் ஆளுமைக்கு உட்பட்டதாக ஆக்குகிறார். கடவுளுக்கும் மேல் கவிஞனை உயர்த்திப் பாடுபவர் தேவதேவன். மட்டுமல்ல, தன் சாதாரண மொழியால் அதை சாதித்துக் காட்டுபவர். அதுவும், குண்டித்துணி கிழிந்த ஒரு சிறுவன் ஒரு மாளிகைச் சுவரில் மூத்திரம் போகிற அலட்சியத்தோடு அதைச் செய்பவர்.

||ஒரு மரத்தடி நிழல் போதும்/ உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்/ கர்ப்பிணிப்பெண்ணை/ அவள் தாயிடம் சேர்ப்பது போல.||
.
இந்த உணர்வை, இப்படி ஒரு சாதாரண மொழியில் அல்லாமல், வேறு விதமாகச் சொல்ல முற்பட்டால் சுளுக்கிக்கொண்ட கழுத்துக்குமேல் ஒரு முகம் போல ஆகிவிடும்.

தமிழ் ஆர்வலர்கள், தேவதேவன் கனமானதொரு மொழியை நமக்கு ஆக்கித் தரவில்லையே என்று குறைபடலாம். ரொமான்டிக் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த், தான் மக்களின் மொழியில்தான் எழுதுவேன் என்று வலுக்கட்டாயமாக எழுதியவர். நவீனத்துவக் கவிதைகளின் ஆசானான போதலேர், சந்தை மொழியில்தான் கவிதை எழுதப்பட வேண்டும் என்றோர் இலக்கணமே வகுத்தவர். எளிமையை உயர்த்திப் பேசும் தன் கவிதைகளுக்கு தேவதேவன் இப்படியொரு சாதாரண மொழியைத் தேர்ந்தது பொருத்தம்தான். ஆனால் அதே மொழி, அவருடைய “மின்னற்பொழுதே தூரம்” தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்பட்டு இருப்பது போல, கூர்மை கொண்டு நிகழுமேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளில் இதை மட்டுமே நான் ஆசைப்படுகிறேன்.

ஒரு வயற்காட்டில் சில எலிகள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது. எல்லா எலிகளும் மழைக்காலத்துக்காக உணவுப் பொருட்கள் சேமித்துக்கொண்டு இருந்தன. ஆனால் ஒரே ஒரு எலி மட்டும் அப்படிச் செய்யவில்லை. அந்த எலியைப் பார்த்து மற்ற எலிகள், “நீ மழைக் காலத்துக்காக ஒன்றும் சேமிக்கவில்லையா?” என்று கேட்டனவாம். அதற்கு அந்த எலி, “நான் வெயில் வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும் சேமித்துக்கொண்டு இருக்கிறேன் - எல்லாருக்காகவும்.” என்றதாம். அது போல தேவதேவனும் பிற கவிஞர்களும் நம் எல்லாருக்காகவும் சேமித்துக்கொண்டு இருக்கிறார்கள் - வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும்.

வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம்.

(ஆண்டு 2008, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக் கருத்தரங்கில் கவிஞர் திரு. ராஜசுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.)

Read more...

Tuesday, April 19, 2011

தேவதேவனின் பிரக்ஞை உலகம் - காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

Read more...

Monday, March 21, 2011

தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு

[ஜெயமோகன் எழுதிய ' நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ' என்ற நூலில் இருந்து.]

தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது.ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர்.காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது.அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களே தேவதேவனின் வாசகர்கள். அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது.

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ் வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது. அதைப்போன்றதே தேவதேவனின் மூன்று முக்கியப் படிமங்கள். வீடு,மரம், பறவை.

வீடு எப்போதுமே அவருக்கு மண்ணுடன் தொடர்புள்ளது. மண் அளிக்கும் அடைக்கலத்தின் சின்னம் அது.அதேசமயம் அது ‘விட‘ப்படவேண்டியதும் கூட. துறப்பது ஒண்டிக்கொள்வது என இரு நிலைகளிலும் ஒரே சமயம் வீடு அவருக்கு பொருள்படுகிறது. வெளியுலகின் அலைக்கழிப்புகளுக்கு மாற்றாக இனிமையான உறவுகளின்,தனிமையின் கதகதப்புடன் வீடு இருக்கிறது.ஆனால் அந்த வீட்டை எப்போதும் மரம் ஊடுருவுகிறது. விண்ணிலிருந்து வந்த பறவை உள்ளே புகுந்து சிறகடிக்கிறது.அவ்வழைப்பிலிருந்து முகம் திருப்பிக் கொள்ளவே முடிவதில்லை.

மண்ணில் முளைத்து விண் நோக்கி ஓயாது உன்னி எழும் உயிரின் ஆதி தீவிரத்தின் அடையாளமாக தேவதேவன் எப்போதுமே மரத்தை காண்கிறார். தோல்வியேயற்ற அதன் போராட்டம், காற்றுடனும் ஒளியுடனும் அதன் உறவு. அதன் நிழல் கருணை..

வானத்தின் பிரதிநிதியாக மரணமற்ற ஒளிக்கடலில் நீந்துவது, அச்செய்தியுடன் மண்ணுக்கு வருவது அவரது பறவை

இந்த மூன்று படிமங்களையும் மீண்டும் மீண்டும்வெவ்வேறு வகையில் மீட்டி தொடர்ந்து விரிவடையும் ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை தேவதேவன் உருவாக்கிக் காட்டுகிறார். தமிழ் புதுக்கவிதையில் அதற்கு இணையான கவித்துவ முழுமை வேறு சாத்தியமானதேயில்லை.

Read more...

Thursday, March 3, 2011

மார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்

நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம்.  அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை. அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை. துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள். ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.

நவீனக்கவிதைகள் என்றாலே அடர்ந்த துக்கத்தின் சித்திரங்கள் என்ற நிலை இன்றுள்ளது. உண்மையான துக்கம் கொஞ்சம், கவிதைக்காக கொதிக்கச்செய்து பொங்கவைத்துக்கொண்ட துக்கம் மிக அதிகம் என்பதே நம் கவிதைகளின் கலவைவிகிதம். நவீனக் கவிதை நவீ£னத்துவக் கவிதையாக நின்றுவிட்டதே இதற்குக் காரணம். தமிழ்க்கவிதையின் பேசுபொருளாக இன்றும் இருத்தலியலே இருக்கிரது. தத்துவப்படுத்தலும் படிமச்சமையலும் கவிதையின் இலக்கணமாக உள்ளது.

தேவதேவன் வாழும் உலகம் வேறு. மானுடவாழ்க்கையை பிரபஞ்சமென்னும் பெரும் நிகழ்விலிருந்து பிரிக்க முடியாத முழுமைகொண்டது அவரது நோக்கு. ஆகவே அவர் காண்பது ஒரு மாபெரும் சக்திக் கொந்தளிப்பை, அதை அறியும் ஆனந்தப் பித்துநிலையை. சராசரி தமிழ் வாசகனின் நுண்ணுணர்வு தொட்டுவிடமுடியாத ஒரு வெளியில் நிற்கும் கவிதைகள் அவை.

ரிஷி அல்லாதவன் கவிஞன் அல்லஎன்று சம்ஸ்கிருத கவிவாக்கியம் ஒன்று உண்டு. மெய்ஞானம் சற்றேனும் கைகூடாத ஒன்று ஒருபோதும் பேரிலக்கியமாக ஆவதில்லை. இன்றைய தமிழில் பேரிலக்கியத்தின் பெறுமதி கோண்ட கவிதைகளை எழுதும் பெரும்கவிஞர் அவர்

தேவதேவனின் புதிய கவிதைத்தொகுதி தமிழினி வெளியீடாக வந்துள்ளது. மார்கழி‘  இரு வரைக் கவிதைகள் அவற்றில் உள்ளன. ஒன்று கவிதையின் அந்த ஆதிப்பரவச நிலையை காட்சிப்பிம்பங்கள் வழியாக அடையும் கவிதைகள். ஜென் அனுபவம் கொண்டவை எனலாம். ஆனால் அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுமுறை நம்மாழ்வாரிலிருந்து எழும் பக்திக்கவிதை இயக்கத்தின் சாயல் கொண்டது.

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ
அன்பின் பெருவிரிவில்
வேர்கொண்டுள்ள மாண்போ
சூரியனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ
இனி அடையப்போவது
ஏதொன்றும் இல்லாத
உயர்செல்வ நிறைவொ
அருளானந்தபெருநிலை ஆக்கமோ
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ்வைகறைப்பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?

இன்னொருவகைக் கவிதை நவீனத்துவக் கவிதை உருவாக்கிய படிம உருவாக்கத்தினூடாக அதைக் கடந்துசெல்வது. எளிமையான ஒரு கற்பனைச் சித்திரத்தை அளித்து அதன் நுண்தளம் வழியாக அதே பரவச நிலையை வெளிப்படுத்தும் கவிதைகள்.

உடற்பயிற்சி ஆசிரியர்

கடவுள் ஒருநாள்
உடற்பயிற்சி ஆசிரியரைப்போல
எல்லாமனிதர்களையும்
ஒரு நெடிய வரிசையாய் நிற்க வைத்தார்

அப்புறம்
ஒரு நீண்ட கம்பியை
வட்டமாக வளைப்பதுபோல
முதல் மனிதனையும்
கடைசிமனிதனையும்
அடுத்தடுத்து வரும்படி
அவ்வரிசையை
ஒரு வட்ட வளையமாக்கினார்

தோதான வெற்றுக்கைகள் கொண்டு
கைகள் கோர்த்துக்கொள்ளச்செய்தார்

அக்கணம்
ஒரு மின்சாரம் இயக்கியதுபோல
பற்றிக்கொண்டது அந்த மகிழ்ச்சி
அத்தனை முகங்களையும்

Read more...

Wednesday, March 2, 2011

கவிதையின் அரசியல் : தேவதேவன் - ஜெயமோகன்

எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும்.

அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் உடைத்த தேங்காயும் தெச்சி செவ்வரளிப்பூவும் படைத்து, பூசாரி உடுக்கு முழக்கி அமர்வார்.

ஒருகட்டத்தில் இருந்தபடியே மெல்ல ஆடி ''ஹிய்யே!!!'' என்று அலறி எழுந்து சன்னதம் கொண்டு ஆடுவார். ''நான் மாதி வந்திருக்கேண்டா... ரெத்தம் குடுடா!'' என்று கூவி ஆடி ஆடி வீட்டுத்தோட்டத்தின் சில மூலைகளில் சென்று நின்று காலால் தட்டிக் காட்டுவார். அந்த இடத்தில் வீட்டு உரிமையாளர்கள் மண்ணை தோண்டுவார்கள். தோண்டி தோண்டி இளக்கிய இறுகிய மண்ணில் இருந்துச் சட்டென்று ஒரு செம்புச்சுருள் அகப்படும். தகடு!

செய்வினைசெய்து மந்திரம் பொறித்த இந்த தகடு பூசாரியின் காலில் இடுக்கப்பட்டிருக்கும் என்றும், இடுக்கியபடியே அவர் ஊரிலிருந்தே கிளம்பி வருவார் என்றும் எனக்கு என் சொந்த பெரியப்பா மகன் இதேவேலையைச் செய்ய ஆரம்பித்த போதே புரிந்தது.

நெடுங்காலமாக நம் இலக்கியச்சூழலில் இலக்கியப்படைப்பில் அரசியலைக் கண்டடையும் பணியும் இந்த ரீதியில்தான் நடந்துவந்திருக்கிறது. பூசாரி கூலிவாங்கி கும்பிட்டு போய்விடுவார்.அதன் பின் படைப்பு கிடந்து அலமுறையிடவேண்டும், நான் அது அல்ல என்று. கவிதையில் அரசியலைக் கண்டடைவது ஓர் அரசியல் செயல்பாடு மட்டுமே. இலக்கியத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அரசியல்வாதிகளால் அவர்களின் அப்போதிய தரப்புக்கு ஏற்ப விருப்புவெறுப்புகளுக்கு இணங்க அது செய்யபப்டுகிறது. அரசியலை மட்டுமே காண்பது மூடர்களின் வேலை.

ஏறத்தாழ இருபதுவருடங்களுக்கு முன்பு கவிதையின் அரசியல் பற்றி ஒரு ஆர்வமூட்டும் விவாதம் நடந்தது. அன்று கருத்துலகில் முற்போக்கினர் ஒரு வலுவான தரப்பாக விளங்கி வந்தார்கள். அனைத்தும் அரசியலே, அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற கூவலை இலக்கியத்தில் ஓங்கி ஒலித்தனர். இன்றும் அதே குரல் அழகியலுக்குப் பதில் அரசியல் என்ற மழுங்கிப்போன ஒலியாக கேட்கத்தான் செய்கிறது.

அப்போது தம் கவிதைகளைப்பற்றி பேசிய பிரமிள் அவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றார். அரசியல் என்ற சொல்லால் சுட்டப்படும் உலகியல் சார்ந்த, அதிகாரம் சார்ந்த சிந்தனைகளுடனும் செயல்பாடுகளுடனும் அவற்றுக்கு தொடர்பில்லை என்றும் அவற்றுக்கு அரசியல் உண்டென்றால் அது கவிதையின் அரசியலே என்றும் சொன்னார்.

கவிதையில் பிரமிளின் நேர்மாணவராகவும் தொடர்ச்சியாகவும் வந்தவர் தேவதேவன். தேவதேவன் கவிதைகளுக்கு பிரமிள் எழுதிய முன்னுரைகளிலும் கவிதைக்குரிய இந்த தனி அரசியலை சுட்டிக்காட்டியுமிருக்கிறார். பின்னர் தேவதேவன் 'கவிதைபற்றி' என்ற தன் சிறு நூலிலும் பல உரையாடல்களிலும் இதைப்பற்றி பேசியிருக்கிறார்.

இங்கு தேவதேவன் சுட்டிக்காட்டிய ஒரு உதாரணத்தைமட்டும் நினைவூட்ட விழைகிறேன். தன் கவிதைகளை பிரமிள் ரத்தினங்கள் என்றார். அது இடதுசாரி விமரிசகர் ஒருவரை எரிச்சலடையச் செய்தது. அப்படியானால் அவர் கவிதைகளுக்கு ரத்தினங்களைப்போல பயன்மதிப்பு ஏதும் இல்லையா, அவை வெறும் அலங்காரப்பொருட்களும் ஆடம்பரப்பொருட்களும் மட்டும்தானா என்று கேட்டார்.

பிரமிள் சார்பாக அதைப்பற்றி சிந்திக்கும் தேவதேவன் ரத்தினங்களைப்போலவே கவிதையின் பயன்மதிப்பும் குறியீட்டுரீதியானதே என்கிறார். அன்றாடவாழ்க்கை சார்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியாததால் ரத்தினங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. உலகியலால் ரத்தினங்களை மதிப்பிட்டுவிட முடியாது. அவற்றின் மதிப்பு அவை சுட்டிநிற்கும் அபூர்வமான ஒரு அழகியலின், அது சார்ந்த மனஎழுச்சியின், அதன் மூலம் உருவாகும் குறியீட்டுத்தன்மையின் விளைவாக உருவாகி வருவது.

அதுபோலவே கவிதையும் என குறிப்பிடும் தேவதேவன் இபப்டிச் சொல்லி முடிக்கிறார் 'ஆம், உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என கவிதையை உலகியல் மதிப்பிட்டுவிட முடியாது'.

மிக அபூர்வமான ஒரு வரி இது. உலகின் சிறந்த கவிதைகளில் தோய்ந்த ஒருவருக்கு இது மிக எளிமையான அடிப்படைக்கூற்றாக தென்படும். ஆனால் கவிதையை உணர்ந்திராத ஒருவருக்கு எத்தனை ஆயிரம் சொற்களால் விளக்கினாலும் சற்றும் புரியவைக்க இயலாது.

ஏறத்தாழ முப்பதுவருடங்களாக எழுதிவரும் தேவதேவனின் கவிதைகளைப் புரிந்துகொள்ள இவ்வரியையே திறவுகோலாகக் கொள்ளலாம். 'உலகியலால் மதிப்பிட முடியாத உலகியலை மதிப்பிடும் கவிதைகள்' அவை.

இத்தனை வருடங்களில் தமிழ் சூழலில் இருந்து தேவதேவனைப்பற்றி வந்த பெரும்பாலான அபிப்பிராயங்கள் எளிய உலகியல் நோக்கை அவரது கவிதைகள் மேல் போட்டு அவரை வகுக்கும் முயற்சிகள். மரம் மட்டை பறவை பூ என்று கவிதை எழுதும் அழகியல்வாதி என்ற மனப்படிமமே பொதுவாக உள்ளது. அழகியல் கோட்பாட்டாளர்கள் அவரை 'படிமக்கவிஞர்' என்று சொல்லக்கூடும். தத்துவ நோக்கில் அவரை 'மீபொருண்மையியல் கவிஞர்' [Metaphysical Poet] என்று வகுத்திருக்கிறார்கள். சமூக மாற்றத்துக்க்குக் குரல்கொடுக்காத 'அகவய'க் கவிஞர் அவர் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவற்றால் அளவிடப்படாமல் இவற்றையெல்லாம் அளவிடும் தன்மையுடன் அவரது கவிதைகள் நின்றுகொண்டிருக்கின்றன. அவரது கவிதைக்காலகட்டத்தில் பல அழகியல், திறனாய்வுக் கோட்பாடுகள் வந்து சென்றுவிட்டிருக்கின்றன. காலத்தால் மேலும் மெலும் ஒளிபெற்று நாம் வாழும் காலகட்டத்தின் மகத்தான கவிஞராக அவர் இன்று நுண்ணியவாசகர்களால் கணிக்கப்படுகிறார். எந்த பெரும் கவிஞனையும்போல அவரும் எதிர்காலத்தின் படைப்பாளி.

தன்னையே களைந்து விட்டு இயற்கையின் பிரம்மாண்டம் முன் நிற்பதே தேவதேவனின் கவிதையின் முதல் இயல்பாகும். அது ஒருவகை நிர்வாணம். தன் அடையாளங்களை, தன்னிலையை, தான் என்ற பிரக்ஞையை படிப்படியாகத் துறந்து தானே அதுவாக ஆகி நிற்கும் பெருநிலையைச் சென்றடைகிறார்.

இந்தப்படிநிலைகளில் ஏதேனும் ஒன்றில் நின்றபடி தன்னைக் கவிஞர் என அவர் உணரலாம். அப்போது தன் வாழ்க்கையை தம்மவர் வாழ்க்கையை அவர் திரும்பிப்பார்க்கக் கூடும். அவை அறச்சீற்றமாக, ஆவேசமாக, கையறுநிலையாக வெளிப்படவும்கூடும்.

நாம் அரசியல் எங்கே இங்கு பொதுவாகச் சொல்வது நமது உலகியல் சூழலுக்கான நேரடி எதிர்வினையை மட்டுமே. நமது தன்னிலையால், நமது தேவைகலால் உருவாவது இது. அந்த அரசியலுக்கும் தன்னிலையை அழித்து அடையும் கவிதையின் அரசியலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.

ஆகவேதான் தன் அரசியல் என்பது மண்ணில் வேறு எங்குமுள்ள அரசியல் அல்ல, அது கவிதையின் அரசியல் மட்டுமே என்று தேவதேவன் சொல்கிறார். ஒரு கவிஞனாக மட்டுமே உணரும் நிலையின் குரலே அவரது கவிதைகள். எந்த நிலைப்பாடுக்கும் எந்த இறுதிக் கோட்பாட்டுக்கும் கட்டுப்படாத சுதந்திரத்தின் கவிதைகள் அவை. எந்த தரப்பும் அவற்றை சொந்தம் கொண்டாட முடிவதில்லை. அவர் நிற்பதற்கு அன்றாட வாழ்க்கையில் பீடமே இல்லை.

தன்னை ஓர் எளிய மனிதனாக, தான் வாழும் காலம்- இடம்- வரலாற்றுச்சூழலுக்கு கட்டுப்பட்டவனாக தேவதேவன் உருவகித்துக் கொள்வதில்லை. ''எல்லாவற்றையும் மனிதன் பாவம் அங்குலப்புழுவைப்போல தன்னைவைத்தே அளந்துகொள்கிறான். அவன் எல்லையின்மையைத்தொடும் ஒரு பேராளுமையாக தன்னை கண்டடைந்து கொள்ளாதவரை அவனது பார்வையும் படைப்பும் குறைவுபட்டதாகவே இருக்கிறது'' என்று சொல்லும் தேவதேவன் [முழுத்தொகுப்புக்கான முன்னுரை] தான் தனக்கென தேவதேவன் என்ற பேரை சூட்டிக் கொண்டதே தன் முதல் கவிதை என உணர்வதாகச் சொல்கிறார்.

இரைபொறுக்கவும்
முட்டையிடவும் மட்டுமே
மண்ணுக்குவரும்
வான்வெளிப்பறவை ஒன்று’ - என தன்னை உணர்தலே அவரது சுயம்.

இவ்வாறு தன்னை அதுவாக, பிறிதிலாததாக, முடிவிலியாக உருவகித்துக் கொண்ட ஒருவனின் அரசியல் எதுவோ அதுவே தேவதேவனின் கவிதைகளின் அரசியல். அந்தப் பெருநிலையை அவர் கவிதைகளில் கண்டடைந்தவர்கள் அதை புரிந்துகொள்வதில் சிரமமேயில்லை.

முன்பு ஒரு முறை ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார். '' 'கேளடா மானுடா!'என்று பாரதி பாடுகிறானே அவன் என்ன மானுடன் அல்லவா? தேவனா? என்ன அகங்காரம் இது?'' நான் சொன்னேன் ''சற்றும் மிகையகங்காரம் இல்லாமல் சாதாரணமாக ஒருவன் ஏய் மானுடச்சாதியே என்று கூவ முடியுமென்றால் மட்டுமே அவன் கவிஞன். கவிதை நிகழும் அக்கணத்தில் மானுடனாக இருப்பவன் கவிஞனே அல்ல'' என்று.

கவிதையின் அரசியல் என்றால் இதுதான், மண்ணில் நிகழும் அதிகாரப்பூசல்களில், கோட்பாட்டு விவாதங்களில், சமர்களில் ஒரு தரப்பின் குரலாக நிற்பதல்ல அது. மண்ணில் வாழும் அனைத்து உயிர்களின் மேலும் பொழியும் பெருங்கருணையின் குரலாக நிற்பது.

ஒரு தரப்பின் குரலாக ஒலிக்கும் படைப்புகள் வாதாடுகின்றன. தாக்குகின்றன. வசைபாடுகின்றன. மெல்ல மெல்ல வெறுப்பையே ஆயுதமாகக் கொள்கின்றன. அவற்றின் அறசீற்றமும் நீதியுணர்வும்கூட மெல்லமெல்ல எதிர்மறையானதாக மாறிப்போகிறது.

நாராயணகுருவை பிற இந்திய சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக மாறுபடுத்திக் காட்டும் அம்சம் இதுவே. அவர் மெய்ஞானி, சமூக சீர்திருத்தக் குரலாக ஒலித்தவர். ஏறதாழ ஐம்பது வருடம் மாபெரும் மக்களியக்கங்களை நிகழ்த்திய அவர் எந்நிலையிலும் எதிரமறையாக எதுவுமே சொன்னதில்லை என்று வரலாறு சொல்கிறது. வெறுப்பற்ற ஒரு நேர்மறை இயக்கம் அது. அது ஞானியின் அரசியல்.

அதற்கு இணையானதே கவிதையின் அரசியல். எழுதுகையில் கவிஞன் ஞானியே. அவனால் தொடகூடாத உச்சம் என ஏதும் இல்லை. அந்த மெய்நிலையில் நின்று ஈரமுலராத பேரன்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நிற்கும் ஆக்கங்கள் தேவதேவன் படைப்புகள்.

எத்தனையோ தேவதேவன் கவிதைகளை இத்தருணத்தில் நான் நினைவுகூர்கிறேன்.

'அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே முளைத்து நின்றது ஒரு புல்!'

என்ற பெருவியப்பின் வெளியில் அலையும் தேவதேவனை நமக்குக் காட்டும் கவிதைகள் ஒருபக்கம் என்றால்

’ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில்
மொத்த உலகத்தீமையின் ஆயிரத்தில் ஒருபங்கு
என் தலையை அழுத்தியது’

என்று கொந்தளிக்கும் தேவதேவனைக் காட்டும் கவிதைகள் மறுபுறமுமாக விரிகின்றது அவரது கவியுலகம். அந்த அதிதூய முழுமைநிலையில் நின்றபடியே இந்தக் கொந்தளிப்பும் நிகழ்கிறதென்பதே தேவதேவதேவன் கவிதைகளின் அரசியலாகும்.

இந்த தூய அழகியல்வாதியே மனிதாபிமானமும் அறச்சீற்றமும் பொங்கும் கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பதை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அக்கவிதைகளில் உள்ள அடிவயிற்றுச் சீற்றத்தை நாம் ஒருபோதும் நம் தொழில்முறைப்புரட்சியாளர்களிடம் கண்டுகொள்ள முடியாது.

சிலவருடங்கள் முன் திண்ணியம் என்ற ஊரில் தலித்துக்களை மலம் தின்ன வைத்த போது தேவதேவன் எழுதிய தீவிரமான கவிதைகள் சிலரை ஆச்சரியப்படச் செய்தன. இவர் மலர்களையும் வண்ணத்துப்பூச்சியையும் பற்றி எழுதுபவர் அல்லவா என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். தேவதேவனை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அக்கவிதைகள் எந்த வியப்பையும் உருவாக்கவில்லை. என்றுமே அந்த உக்கிரமான அறச்சீற்ற நிலையில்தான் அவர் இருந்திருக்கிறார். அவ்வரிசையில் வைக்கத்தக்க பல கவிதைகளை அவரில் நாம் காணலாம் .அச்சமயம் அந்நிகழ்வுடன் அவரது கவிதை இணைந்துகொண்டது அவ்வளவுதான்.

அவரது சீற்றம் எளிய அரசியல் கோபம் அல்ல. ஏன் அது நீதியுணர்வின் வெளிப்பாடுகூட அல்ல. அது அதைவிட மேம்பட்ட ஒன்று. அது தன்னை மண்ணில் வாழும் அனைத்துயிரிடமும் கண்டுகொண்டு ஒரு பெருங்கருணையாக உணரும் ஒரு கவிஞனின் குரல். அறக்கோபம் எரிந்த திண்ணியம் கவிதைகளின் அதே குரலையே நாம் 'யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?' என்ற கவிதையிலும் ஆரத்தழுவும் பேரன்பாகக் காண்கிறோம். கைவிடப்பட்டவனை, தெருவில் வாழ்பவனைக் கண்டு கவிமனம் கொள்ளும் உணர்வு அது '--யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?'' அக்கவிதைக்கும் இந்த திண்ணியம் கவிதைகளுக்கும் அடிபப்டை மன எழுச்சி ஒன்றே.

நித்ய சைதன்ய யதியை சொல்லாமல் நான் முடிக்க இயலாது. நடக்கப்போகும்போது ஒரு அழகிய சிறு இறகு தரையில் கிடந்தது. நித்யா அதை எடுத்து தன் மென்விரல்களினால் மெல்ல வருடினார். 'விண்ணின் ஒரு சொல். ஒளியாலும் காற்றாலும் எழுதப்பட்ட ஒரு கடிதம்...'என்றார்.

அது சற்று கற்பனாவாதச் சாயலுடன் ஒலித்ததாக அப்போது எனக்குப் பட்டது. 'அது ஒரு எளிய பறவையின் ஒரு மயிர். அதற்கு பறக்க உதவாதபோது உதிர்க்கபப்ட்டது'என்றேன்.

'விண்ணிலிருக்கும் பறவை தன்னை தனித்தறிவதில்லை. ஆகவே அதுவும் விண்ணும் வேறு வேறல்ல...'என்றார் நித்யா. தேவதேவனின் இக்கவிதைகள் முடிவிலா விசும்பின் கடிதங்கள் என்றே எண்ணுகிறேன். அதில் ஒரு துளியென தன்னை அழித்தவனால் ஆக்கபட்டவை என்பதனால்.

[30-1-2008 அன்று திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ் துறை சார்பில் தேவதேவன் விளக்கு விருது பெற்றதை கௌரவிக்கும் முகமாக நடத்தப்பெற்ற 'தேவதேவன் கருத்தர'ங்கில் ஆற்றிய உரை]

Read more...

Tuesday, March 1, 2011

நீரில் தெரியும் நெற்கதிர்கள் - கவிஞர் க.மோகனரங்கன்


’கருணைமிக்க பேரியற்கையின் முன் வியந்து நிற்கும் குழந்தைமை’ என்று இவருடைய கவிதைகளின் ஆதார மையத்தைச் சுருக்கிச் சொல்வதென்றால் ஒற்றை வரியில் கூறிவிடலாம்.

தமிழ்க்கவிதைகளில் காணப்படும் பொதுவான போக்குகளிலிருந்து வெகுவாக ஒதுங்கியும், அதே சமயத்தில் தனக்கான தனித்தன்மையுடனும் ஒலிப்பது தேவதேவனின் தணிவான குரல். தொடர்ந்து 30 ஆண்டுகள், 15 தொகுதிகள், 900க்கும் அதிகமான பக்கங்கள் என விரியும் அவரது கவிதைகளின் பரப்பு அசாதரணமான விரிவும், வண்ண மாறுபாடுகளும், ஆழமும் கொண்டது.

ஒருவன் இயற்கையுடன் கொள்ளும் விதவிதமான தொடர்புகளும், அத்தருணங்களின் தீராவியப்பும் அவற்றினூடாக மனம் கொள்ளும் விகாசமும், சாந்தியுமே தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒருவித உன்னத்மாக்கலின் பரவசத்துடன் அவர் அக்காட்சிகளை சித்தரிக்கும்போது உருவாகிவரும் நெகிழ்ச்சி தமிழ்ப் புதுக்கவிதைகளில் அரிதான ஒன்றாகும். இதைத் தவிர அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், சமூக உறவுகளில் எதிர்கொள்ள நேரிடும் முரண்பாடுகள் முதலியன குறித்த ஒரு விசாரமும் இவர் கவிதைகளில் அடியோட்டமாகத் தென்படுகிறது. அச்சிக்கல்களுக்கான காரணிகளை இவர் அரசியல், பொருளாதார மட்டத்தில் தேடுவதில்லை. மாறாக, மனிதர்களின் அக வறுமையையே அனைத்திற்கும் காரணமாகக் காண்கிறார்.

பரந்த இந்த பூமி, இதில் இடையறாது தொழிற்படும் பஞ்ச பூதங்கள், இதன் நடுவே தோன்றிய பலதரப்பட்ட தாவர, மிருக உயிர் ராசிகள், இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து ஒரு ஒத்திசைவுடன் வினையாற்றி வந்தன. இது பிரபஞ்ச இயக்கத்தின் தவிர்க்க முடியாத நியதி. தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் வரைக்கும் பூமி, இநியது வழுவாமலேதான் சுழன்று கொண்டிருந்தது. இரு கால்களில் எழுந்து நின்ற மனிதன் பின்னர், இந்த உலகின் மையம் ‘நானே’ என்று தலை கனத்து நடக்க முற்பட்டபோதுதான் இந்த ஒத்திசைவின் சுருதி முதன்முறையாக பிசகத் தொடங்கிற்று. இன்று உலகில் காணப்படும் அத்தனை சீர்கேடுகளுக்குமான ஊற்றுமுகம் அச்சுருதியின் குலைவிலிருந்தே பிறக்கிறது. மனிதன் திரும்பவும் இயற்கையோடு இயைந்து, அதன் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்து நடக்கத் துவங்கினால், அவனுடைய வாழ்வு நிறைவும் அமைதியும் கொண்ட ஒன்றாக ஆகிவிடும் என்று நம்புபவர்கள் ஒரு சாரார் உண்டு. கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளின் மாற்றாக இயற்கையை வழிபடும் இத்தகைய சிந்தனைகளின் தொகுப்பை ‘இயற்கை மறை ஞானம்’ (Nature Mysticism) என்று குறிப்பிடுவார்கள். இதே போன்ற கூறுகளையும், சாயலகளையும் தேவதேவன் கவிதைகளில் காணலாம். குறிப்பாக இவர் கவிதைகளில் தொடர்ந்து வரும் அந்த ‘மரம்’ நமது சிந்தனை மரபில் உருவகித்துச் சொல்லப்பட்டிருக்கும் பெருங்கருணை என்ற  காலாதீதமான பண்பின் குறியீடாகவே நிற்கிறது எனலாம்.

வெளிப்படையான சித்திகரிப்புகளுக்கப்பால் உள்ளுறையாக அமைந்த எண்ண விசாரங்களைப் பொறுத்தவரையிலும், கடவுள் நம்பிக்கையற்ற, மதம் சாராத, ஒழுக்க மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட அகவயமான சிந்தனைகளை உள்ளீடாகக் கொண்டவை தேவதேவனின் கவிதைகள். தவிரவும் இவர் கவிதைகளில் காணப்படும் காட்சி விவரஐ, படிம அமைப்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அவற்றில் சங்க இலக்கியங்களில் ஓர் உத்தியாக முன்னிலைப்படுத்தப்படும் இயற்கை நவிற்சித் தன்மையினையும், வெளிப்பாட்டு மொழி எனப்பார்த்தால் பக்தி இலக்கியங்களில் ததும்பி வழியும் உணர்வு நெகிழ்ச்சியையும் ஒருசேரக் காணலாம்.

இலக்கியப் படைப்புகளை உத்தி மற்றும் பாணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி மதிப்பிட முயலும் வாசகன் ஒருவன் இருப்பானெனில், அவ தேவதேவனின் கவிதைகளை எதிர்மறையாக அணுகும் சாத்தியமே அதிகம். இயற்கையை விதந்தொதும் விதமாக எழுதிக் குவிக்கப்பட்ட, பதினெட்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்த கற்பனாவாதக் கவிதைகளின், மரபுடன் இணைத்து நோக்கி, இவர் கவிதைகளைக் காலத்தால் பின்தங்கிய ஒன்றாக அவன் கருதக்கூடும். ஆனால். அது உண்மையாகாது. சாதாரணமாக தமிழ் நவீனத்துவக் கவிதையை அளவிட உபயோகிக்கும் வடிவ நேர்த்தி, சொற்தேர்வு, ஒற்றையுடல், நெகிழ்வற்ற இறுக்கம், உணர்வுச் சமநிலை போன்ற அளவுகோல்கள் இவர் கவிதகளை மதிப்பிட நமக்க்குப் பெரிதும் தடையாகவே அமையும்.

தேவதேவன் தன் கவிதைகளின் வடிவம் குறித்து கறாரான பார்வை எதையும் கொண்டிருப்பவராகத் தெரியவில்லை. ‘கவிஞனுக்கும் வாசகனுக்கும் பொதுவான மொழியில், தன்க்கே பிரத்தியேகமான ஓர் அனுபவத்தை - அதுவே மானுடனின் பொது அனுபவமாதலால் - பகிர நினைப்பதில்தான் மொழி உருவாகிறது. மொழியை மீறிய அந்த உணர்வுகளும், தரிசனங்களுமே கவிதைக்குத் தேவையானவை’ என்று கூறும் தேவதேவனின் கவிதை வரிகள் அந்தந்த கவிதைத் தருணங்களின் மனவெழுச்சிக்கேற்ப பொங்கிப் பிரவகிப்பதாகவோ, ததும்பி வழிவதாகவோ, மெதுவாக ஊறிப் பரவுவதாகவோ அமைகிறது.

தன் மனநிலையை மையமாகக் கொண்டு புறஉலகு முழுவதையும் மதிப்பிடும், நவீனத்துவ நோக்கின் பாதிப்பு இவரிடம் காணப்படுவதில்லை. மற்ற கவிஞர்களிடமிருந்து தேவதேவன் மாறுபடும் முக்கிய இடம் இதுதான். மனிதனின் நடத்தையிலுள்ள கீழ்மையை, விலங்குத் தன்மையை, புலனின்ப வேட்கையை, அதற்கான அவனது ஆழ்மன விருப்பங்களைப் பற்றிய கருமையான சித்திரங்கள் எதையும் இவருடைய கவிதைகளில் நாம் காண முடிவதில்லை. மனிதன் என்பவன் அவன் இச்சைகளால் அலைக்கழிக்கப்படும் பிராணி மட்டுமன்று, அசாதரணமான தருணங்களில் அவ்விச்சைகளையும் மீறி அவனை மேலெழச் செய்யும் ஆன்மாவும் கொண்டவனே மனிதன் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராகத் தென்படுகிறார் தேவதேவன்.

இன்றைய உலகியல் நடப்புகளிபடி பார்த்தால், இந்நம்பிக்கை ஒரு யதார்த்தமான கனவான, பழமையை நோக்கி நினைவு வலையை விரிக்கும் ஒரு ஏக்கமாகக்கூட ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அது வெறும் கனவோ, ஏக்கமோ மாத்திரம் அல்ல. மனிதனின் உணர்வு, அறிவு அனைத்தையும் அதனளவில் விலகி நின்று, முரணற்ற இணைவாகக் காணும் ஒரு நிலையிலிருந்து பிறப்பது, மனிதனைக் குறித்த இந்நம்பிக்கை. நடைமுறை வாழ்வின் சிக்கல்களுக்கு மேலாக இந்நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்க கவிஞனுக்கு அசாதரணமான தீரமும், சுய நிச்சயமும் வேண்டியுள்ளது. ஒரு பொறியை ஊதி ஊதிப் பெரிக்கி, பெருந்தீயாக்கிக் கொள்வதைப்போலவே இந்நம்பிக்கையை அவன் மனவெழுச்சிகொண்ட சொற்கள் மூலம் வளர்த்தெடுத்து நம்முன் வைக்கிறான். அதனாலேயே, இவருடைய விவரணைகளில் மெலிதான கற்பனாவாதத் தன்மையும், மொழியில் மிகையோவென தோன்றக்கூடிய தீவிரமும் நெகிழ்ச்சியும் பல இடங்களில் காணப்படுகிறது.

சாதாரணமானதோ, அசாதாரணமானதோ தன்னை ஈர்க்கும் வாழ்வின் எந்த ஒரு தருணத்தையும் கவிதையாக்கிப் பார்க்கும் விருப்பம் கொண்டவராகத் தென்படுகிறார் தேவதேவன். இவர் தன் கவிதைகள் மூலமாக அன்றாட அனுபவங்களுக்குள் இருந்தே ஒருவித அழகியல் நேர்த்தியையும், அகவயமான இசைவையும் கண்டடையத் தொடர்ந்து முயல்கிறார். அதன் காரணமாகவோ என்னவோ, சில இடங்களில் அசாதாரணமான தருணங்கள் எனப்படுபவை எளிமையான சொற்களிலும், சாதாரணமான அனுபவங்கள் எனத்தோன்றுபவை தீவிரமான மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

இவர் தேவதேவன் என்ற தன் புனைபெயருக்கு ஏற்ப, எப்போது விண்மீன்களைக் குறிவைத்துத் தன் தூண்டிலை வீசிவிட்டுக் காத்திருப்பவராகவே இத்தொகுதியின் மூலம் நமக்குத் தெரியவருகிறார். அவ்வாறு காத்திருப்பதில் சலிப்பு ஏற்பட்டோ என்னவோ, பிச்சுமணி கைவல்யம் என்ற சாதாரண மனிதராக, சில இடங்களில், வெறும் மீன்களைப் பிடிக்கவும் அந்தத் தூண்டிலை வானத்திலிருந்து தரைக்கு இறக்கியிருப்பதையும் காணமுடிகிறது. அண்டவெளியையே ஆரத் தழுவிக் கொள்ளுமளவுக்கு அகண்ட நெஞ்சைக்கொண்ட அதே கவிஞன், சில புள்ளிகளில் மட்டும் ஏன் தொட்டாற்சிணுங்கியாகிவிடுகிறான் என்பதை நம்மால் விளக்கமுடியாது என்றாலும் புரிந்துகொள்ளலாம்.

நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்கமுடியாது.

இது இத்தொகுப்பிலுள்ள சிறிய கவிதைகளில் ஒன்று. தேவதேவனின் கவிதகளில் உள்ள சொற்களும், நீரில் தெரியும் அந்த நெற்கதிர்கள் போன்றவையே. அவற்றை நேரடியாக, எளிமையாகப் பொருள்கொண்டுவிட இயலாது. மனித வாழ்வின் ஆழத்தை, ’அன்பு’, ’காருண்யம்’ போன்ற மரபு வழிப்பட்ட சொற்கள் மூலமாக வெளிப்படுத்த முயலும் இக்கவிதைகள், முதல் பார்வைக்கும், வாசிப்பிற்கும் தெரிவதைவிட அதிகமான அர்த்தவெளியை உள்ளடக்கியிருப்பவை. பலவேளைகளில், இதன் அர்த்தம் காலத்தில் மிகத் தொலைவில் இருக்கிறது. அதனாலேயே கனவு போலவும் தோன்றுகிறது. என்றாலும் இத்தகைய கனவுகள் இல்லாமல் மனிதன் யதார்த்தத்தில் ஒரு முன்னெட்டு வைக்கமுடியாது.

[தமிழினி வெளியிட்டுள்ள தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பிற்கு கவிஞர் மோகனரங்கன் எழுதிய முன்னுரை]

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP