Thursday, December 29, 2011

தருணம்

கன்யாகுமரியில் நடந்த யுவன் கவிதையரங்குக்கு கவிஞர் தேவதேவன் வந்தபோது எடுத்தபடம் . உடன் ஜெயமோகன்


Read more...

Saturday, November 12, 2011

குழந்தைகள் என்றால்...

குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ
குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?

Read more...

எந் நோய் செய்தது?

மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?

எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?

Read more...

வெளிவாயில்...

வெளிவாயிற்
தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்
என் இருப்பினை உறுதிப்படுத்த
வினவும் ஒரு குரலும்
என் மனைவி
மேலே என சுட்டும் சைகையும்
மாடிப்படிகளில் ஒலித்துவரும்
காலடிகளும்
வேதனைமிக்கதொரு செய்தியினைத்தான்
இன்று கொண்டுவருமோ?

Read more...

Sunday, August 7, 2011

காதலின் இலட்சியம்

ஊரார் கண்ணுக்குச் சற்று ஒதுக்குப்புறமாய் அமைந்த
என் வீட்டு எதிர்ச்சுவர் மரநிழலிருளில் சற்றே மறைந்தபடி
நண்பகலிலிருந்தே அந்த இளம் ஜோடி நிற்கிறது
வெயில் சாய்ந்து மாலை மங்கி அந்தியும் இருண்டு
தெருவிளக்கும் எரியத் தொடங்கிவிட்டது
“கால்களும் நோகாதோ, என் கண்மணிகாள்!
நேரத்தோடே வீடுபோய்ச் சேரவும் வேண்டாமோ?“

கால காலங்கள் தாண்டி
நிலைத்து நிற்க விழையுமொரு வேட்கையோ
அவர்களை இன்னும் பேசிக்கொண்டே நிற்கவைப்பது?
மறைய விரும்பாத ஓர் ஓவியம் போல் அவர்கள் நிற்பதை
என் ஜன்னல் வழியே பார்த்தபடியே இருக்கிறேன்

திடீரென்று அவ்விடத்தில் அவர்களைக் காணாதது கண்டு
பதைத்துப் போனேன்
எவ்வாறு எப்போது அவர்கள் விடைபெற்றுப் பிரிந்தார்கள்?
தனிமை கொண்டு இனி
எவ்வாறு இந்த இரவை அவர்கள் கழிப்பார்கள்?
என்னைப் போலவேயா, கண்துஞ்சாது?
நாளையும் நண்பகலில் இவ்விடத்தில்
அவர்கள் சந்திப்பார்களில்லையா?
“ஆம், நிச்சயமாக“- என என்னுள் தோன்றும்
இந்த எண்ணத்தைத் தோற்றுவிப்பது யார்? எது?
ஏதொன்றைச் சாதிப்பதற்காக இந்த இளம் ஜோடி
என் முன்னே அவ்விடத்தில் திரும்பத் திரும்ப வந்து நின்று
தவிர்க்க இயலாத் துயருடன் பிரிந்துகொண்டேயிருக்கிறது

காண்பார் நெஞ்சில்
அழியாத ஓவியமொன்றைத் தீட்டிவிடுவதுதானோ
காதலின் இலட்சியம்?

Read more...

Saturday, August 6, 2011

பெண்ணும் பெருக்குமாறும்

அவன் பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே
பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள் அவள்

வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும்
அவன் நெஞ்சிலேயே
திரும்பத் திரும்ப
முடிவற்ற கண்ணீருடன்
கோலமிட்டுக்கொண்டிருக்கிறாள்

திட்டமொன்றின்படியேதான் இயங்குவது போன்ற
தீர்க்கமும் தீரமும் அவள் உடலெங்கும் ஒளிரக் கண்டேன்
எப்போதும் அவளை நான் அப்படித்தான் பார்க்கிறேன்
அவளே என் அன்பும், நானே அவளுமல்லவா

அக்கறையாய்க் கைநீட்டி ஒரு பூவைப் பறித்து
அவள் சூடிக்கொண்டதன் பொருளை நான் அறிவேன்

கருப்பு வளைகள் குலுங்க
பெருக்குமாற்றைத் தட்டிச் சுருதி சேர்த்துக்கொண்டவள்
குனிந்து வளைந்து
தன் மீதும் தன் பணிகள் மீதும்
வீழ்ந்துகொண்டேயிருக்கும் வக்கிரப் பார்வைகளை
இடுப்பொடியும் வேதனையுடனும்
இயம்பவியலாத் துயருடனும்
பின்வாங்காத் தீரத்துடனும்
இடையறாது பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள்
(சமயங்களில் சீற்றம் கொண்டு சாத்தியமையும்
இதனுள்ளேதான் அடக்கம்)

Read more...

Friday, August 5, 2011

உன்னைப் பற்றிய ஒரு பெரும் புரிதலை...

கேள் பெண்ணே!
நான் என் தாயிடமிருந்தும் பெறவில்லை;
என் பிரிய சகோதரிகளிடமிருந்தும் இல்லை;
காதலென நெருங்கியவர்களிடமிருந்தும் இல்லை;
தோழிகளெனத் துணை நின்றவர்களிடமிருந்தும் இல்லை;
மனைவியிடமிருந்தும்கூட இல்லை;
பெண்ணியவாதங்கள் என்றால்
அது நேரனுபவம் இல்லையே அம்மா;
பெண்ணியவாதிகள் தம் கூற்று மற்றும் என் அறிவு என்றால்
அதில் ஆறாத புண்ணின் வலியே
அநேகமானதை மறைத்து நிற்கின்றது

என் கண் பார்க்க ஒரு ஆளாய் வளர்ந்துகொண்டிருக்கும்
நான் பெற்ற என் அருமை மகளிடமிருந்தல்லவா
அந்தப் பெறுபேற்றினை அடைந்தேன் நான்!

Read more...

Thursday, August 4, 2011

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது

Read more...

Wednesday, August 3, 2011

ஓரு குண்டூசியின் நுனிகொண்டு...

திருட்டுத்தனமாய் அவளுடல் தீண்டப்படுகையில்
பரவாயில்லை என் மன்னித்து
அதை அவனுக்கும் அவளுக்குமான அந்தரங்கமாகவே
எடுத்துக் கொள்கிறது காதல்

ஒரு குண்டூசியையோ கொண்டையூசியையோ கொண்டு
அவனை ஆழமாகத் தொட்டு
அது தன்னை வெளிப்படுகையிலும்தான்
எத்தனை கூர்மை! நிதானம்!

Read more...

Tuesday, August 2, 2011

ஆடும் அவற்றின் செவியறியும்

துயர் அடைந்து நின்ற இவ்வெளியைத்
திடீரென்று
காற்றும் மரங்களும் இணைந்து எழுந்து
வேகவேகமாய்ப் பெருக்கித்
தூய்மை செய்யமுயல்பவை போல்
அசைகின்றன

கபம்போல் நெஞ்சடைத்திருந்த
துக்கமெல்லாம் எங்கே?
என்ன ஓர் ஆசுவாசம்!
காதல் கொண்டவன்போல்
என்ன ஓர் ஆனந்தம்! நிறைவு!

இப்போது மரங்கள்-
நடம் புரிந்துகொண்டிருக்கின்றன

இப்போது நானும் கேட்கிறேன்,
ஆடும் அவற்றின் செவியறியும்
அந்த இசையினை

Read more...

Monday, August 1, 2011

மாமலையும் திருமுழுக்காட்டும்

மலைமீது வழிந்து இறங்கிய திருமுழுக்காய்
வயலும் வாய்க்கால் வெளியுமாய்
பரவி விரிந்திருந்த அம்ருத பூமி!

அழகிய அவ்வூர் சென்று தலை சாய்த்தபோது
மறுநாட் காலை
அம்மலை நோக்கி நீண்டதொரு காலைநடை போகத்
திட்டமிட்டே கண்ணயர்ந்தோம்
நடப்பதும் நடை எண்ணி தலை சாய்ப்பதுமான
பயணமன்றோ நம் வாழ்வு

இருவரும் ஒரேவேளை விழித்துக் கொள்ளாததால்
அலுத்துத் துயில்பவரை எழுப்புவதா என்று
ஒருவர் மற்றவரை மாறி மாறிப் பார்த்ததில்
தவறிற்றே அந்தக் காலை நடை!

இப்போது அம்மாமலையைச்
சூரியன் முழுக்காட்டும் அதீத வேளை!
மரநிழலில் ஒதுங்கி நின்று
நாம் அதனை அவதானிக்கும் வேளை!

Read more...

Sunday, July 31, 2011

முத்துச் சிப்பியின்...

தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை

Read more...

Saturday, July 30, 2011

வைரம்

அன்றைய என் அவதானத்திற்குள்
என் பிழைகள்
என்னைத் தகித்துக்கொண்டிருக்கையில்
நான் தெரிந்துகொண்டேன்
ஒரு கல் வைரமாவதிலுள்ள ரசவாதத்தை

Read more...

Friday, July 29, 2011

உரையாடல்

அது என்ன ஓசைகள் என் இனியவனே!
என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய்?

பேசத் தொடங்கும்போது-
சிரிப்பும் கும்மாளமுமோ
போரும் துயரோலமுமோ
அமைதி தவிர்த்த
எதுவாயிருந்தாலுமென்ன?-
பிசிறில்லாத உரையாடலுக்காய்
கைத்தொலைபேசியோடு
என்னைப் போலவே
நீயும் உன் பிரதேசத்திலிருந்தும்
விலகிவந்து நிற்பதை
இங்கிருந்தே உணரமுடிகிறது

வேண்டுவதெல்லாம்
இந்த விவேகம் ஒன்றுதான் நண்பனே!

Read more...

Thursday, July 28, 2011

காய்கறிச் சந்தை

வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்!
நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும்
கூடைக்காரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்?

எத்தகைய செல்வம் இது!
இத்துணை பசுமையும் தூய்மையுமான
காட்சி வேறுண்டோ உலகில்?
காலையில் இவை முகத்தில்
முழிப்பதுதான் எத்தனை இன்பம்!

வெறுமே வாய்க்கும் வயிற்றுக்குமாய்
உண்பதற்கு மட்டுமே எனில்
இத்தனை வண்ணங்களில் இயற்கை ஏன்
இவற்றைப் படைத்திருக்க வேண்டும்?
நம்மைக் கொஞ்சி மகிழப் பீரிய
பித்துவெறிவேகத்தின்
பிரியப் பிதற்றல்கள்தாமோ இவ்வண்ணங்கள்?

அங்கு சென்றுவரும்போதெல்லாம்
காதலால் தீண்டப்பட்டவன்போல்
நான் வருவதை என் துணைவி பார்க்கிறார்
ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தப்போவதுபோல்
காய்கறிப் பையைத் தலைகீழாய்க்
கூடம் நடுவே கொட்டுவேன்
ஆ! எத்தனை அழகு ஓவியம்!
என் மனைவிக்கு அந்த வேலையை
விட்டுக் கொடுத்துவிடாமல்
ஒவ்வொன்றையும்
பிரியம் பிரியமாய் நானே பிரிப்பேன்.
சமையலறை மேஜைமேல் ஒரு பாத்திரத்தில்
பூக்குவளை மலர்கள்போல் அமைத்து
அவற்றைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தபின்தான்
பதனப் பெட்டிக்குள் பத்திரப்படுத்துவேன்

சோயாபீன்ஸை உரித்து உரித்து
பருப்புகளைக் கைகளில் அள்ளி
அந்த மெஜந்தா விழிகளைப்
பாத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் வாழ்வேனே இப்பூமியில் பல்லாண்டு காலம்!

Read more...

Wednesday, July 27, 2011

காடு

தனியாகச் செல்லும் மனிதனைப் பிடித்துக்கொண்டு
கானகம் அச்சுறுத்தத் தொடங்குகிறது
அடர்ந்த புதர் ஓரக் கொடிகள்
ஆடைபிடித்து இழுக்கின்றன
ஓயாது ஒலிக்கும் அதன் நிழலிருளில்
உறுமிக் கொண்டிருக்கின்றன சிறுத்தைகள்
சருகுநிலம் சரசரக்க வந்து
பாம்புகள் அவன் கால்களைச் சுற்றிக்கொள்ளக்
காத்திருக்கின்றன
நினைவுகள் மறக்காத யானைகள்
துரோகி துரோகி எனக் கோபத்துடன்
சவட்டி நசுக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன

அத்துணை பயங்கரக் கானகத்துள்தாமோ
இத்துணை எழிலார்ந்த வனதேவதைகளின் நடமாட்டங்களும்!
இன்பமாய்ப் பாடிக்கொண்டிருக்கும்
எத்தனை மலர்கள்! எத்தனை சிற்றுயிர்கள்!
எத்தனை பறவைகள்!
தித்திக்கும் சூரிய ஒளிக் கதிர்களணிந்து
ஜொலிக்கும் நீர்நிலைகள்
காண்பார் தழுவிக் களிக்கும் தேன் காற்று!

கானுயிர்கள்
ஒன்றையொன்று சற்றே வெட்டியும் ஒட்டியும்
அனுசரித்து வாழும் வாழ்வில்
மானுடக் கொடூரங்களே உள்ளனவோ?
களங்கமின்மையும் மிரண்ட கண்களின்
உயிர்ப் பொலிவும் கொண்டு
துள்ளித் திரியும் மான்கள்
புதர்களிலிருந்து புதர்களுக்குப்
பாய்ச்சலும் பரபரப்புமே நடையாய்
ஒளிரும் வெண்முயல்கள்
நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் மரங்கள்
பெருமரங்களின் கீழ்
திணறி நிற்கும் சிறு மரங்கள்
செடிகொடிகள் புல்பூண்டுகள்
புழுக்கள் வண்டுகள் பறவைகள்-
என்றாலும்
கானகத்தின் எந்த ஓர் உயிரினம்
மனிதனைப் போல்
பெருங் காமமும் சிறு புத்தியும் கொண்டுள்ளது?

Read more...

Tuesday, July 26, 2011

முள்ளை முள்ளால்...

குத்தி
நுழைந்து
முறிந்து
குருதி மாந்தியபடியே
கிடந்து
அழுந்தி
புண்ணும்
சீழும்
வாதையுமாய்த்
துயர் தரும்
முள்ளும்,
அம் முள்ளைக்
குத்திக்
கிளர்த்தி
வெளிக்கொணர்ந்து
துயராற்றத் துடிக்கும் முள்ளும்
ஒன்றாமோ?

Read more...

Monday, July 25, 2011

உண்டியல் குலுக்குகையில்

உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?

அதைத்தானோ
”நீயே கடவுள்
தர்மமே உன் கடமை!” என்று
கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?

Read more...

Sunday, July 24, 2011

விதையும் கனியுமான பாரம்

அந்தோ! அன்று அச்சிறு செடி
வழிவிலங்கொன்றின் கால்மிதிபட்டோ
காட்சியளித்தது அப்படி?

பதறி அதனருகே சென்று குனிந்து
அதைத் தொட்டு நிமிர்த்தியபோது கண்டேன்:
அதனை அவ்விதம் இழுத்துக் கவிழ்த்தியிருந்த
இலைமறை கனியொன்றின் பாரம்!

கம்பீரமான ஒரு கல்மரமாய்த் திமிர்ந்து
வான்நோக்கி நிமிர்ந்து எழுந்து
ஒரு பூங்கொத்தைப்போல்
தாங்கி நிற்கலாகாதா,
விதையும் கனியுமான பாரத்தை
அச் செடி?

Read more...

Saturday, July 23, 2011

புத்த பூர்ணிமா

நிலவடிக்கையிலும்
நிழலை வீசுகின்றன ஏன் இம்மரங்கள்?

இத் தண்ணொளியும் அமைதியும்
கனவுமில்லை நனவுமில்லையெனில்
வேறென்ன?

கருத்துநிலைகளுக்கெட்டாத
பேருண்மையின் வரைபடமோ?

Read more...

Friday, July 22, 2011

பிச்சு

என் நேசத்திற்குரிய வீட்டிற்கு
ஒரு வருகை அளிக்கவே விரும்பினேன்

அங்கே, துள்ளி மணம் வீசிக்கொண்டிருக்கும்
குழந்தை மலர்களுக்கு
கொஞ்சம் இனிப்புகளோ பொம்மைகளோ
பெரியவர்களுக்கு
வளம் கூட்டும்படியான பொருள்களோ
ஆதரவு வார்த்தைகளோ-
அளிப்பதற்கு ஏதுமில்லாத
ஒரு நிலையும்தான் வந்ததே இன்று
எனக் குழம்பி நிற்கிறேன்

கொடுப்பதற்கு ஏதுமில்லாதது மட்டுமின்றி
பெறுவதற்கே நிற்குமொரு
பிட்சா பாத்திரமேயா நான்?

எனினும் சிறுபசி ஏதுமில்லா இவ்வேளை
அவ்வீட்டினைக் கண்ணுற்றபடியே
கடந்து செல்லவே விரும்புகிறேன்

நான் தாண்டிச் செல்லச் செல்ல
தாண்டிச் சென்ற வீடுகளெங்குமே
வளமும் இன்பமும் பெருநிறைவும்
பொங்கிப் பெருகவேண்டும்
என்பதுபோல் நிலவத் தொடங்கும் ஒரு மவுனத்தை
நப்பாசைக் கனவென்று
எண்ணவே முடியாதவாறு
அங்கே தோன்றி நின்றதே அது!

Read more...

Thursday, July 21, 2011

மரக்கிளையில்

மரக்கிளையில் துயிலும் மனிதனைப் போலின்றி
எல்லாப் பிடிகளையும் விட்டுவிட்டு
முழுமையாய் என்னை ஒப்படைத்தபடி
துயிலுக்குள் நுழைகிறேன்.
அதனை அங்கே சந்திப்பேன்
என்பதற்கான சூசகமான அகவெளியை
அப்போதே அடைந்தவனாகிறேன். ஆனால்
வேட்டையாடப்பட்ட இரையைத்
தன் இடம் இழுத்துச் செல்லும் மிருகம் போல்
தூக்கம் என்னைக் கொண்டுபோய்விடுகிறது.
விடியலில் நான் காணாத விடியல்
ஏமாற்றத்துடன் திரும்பிப் போகிறது
என் தூக்க போதையில் தெரிகிறது
இரவு தோறும் என் உறக்கத்தின் ஆழத்துள் புகுந்து
அது என்னைத் தேடுகிறது.
இரவில் நான் திடுக்கிட்டு
எழுந்து உட்கார்ந்தபோது
அது அங்கே இருந்ததைப் பார்க்கிறேன்

Read more...

Wednesday, July 20, 2011

மேன்மையான ஓர் இதயம்

மேன்மையான ஓர் இதயம்
அதுதான் துயரத்திற்குக் காரணமா?
துயருறுவதும்
அதன் தகுதிக்கு ஏற்றதுதானா?
இல்லை, அதன் தகுதிதான் அத்துயரோ?

மிக எளிதில் துன்புற்றுவிடக்கூடிய
மிக எளிதில் களிப்புற்றுவிடக்கூடிய
மிக எளிதில் கொந்தளித்துவிடக்கூடிய
மிக எளிதில் அமைதியடைந்துவிடக்கூடிய
இந்த இதயத்தின் பொதுத்தன்மைதான் என்ன?

படிம்மும் துயருமில்லாத ஓர் இதயத்தின்
சாத்யதை மற்றும் சாத்யமின்மையைத்தான்
படிமமும் துயருமில்லாத
இக்கவிதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறதா?

படிமத் துயர் துறந்த இதயங்கள்தாமோ
வானில் சிறகடித்துச் செல்லும் பறவைகள்?

Read more...

Tuesday, July 19, 2011

ஆவலோடுதான்

ஆவலோடுதான் தபால்காரரை நெருங்குகிறான்.
தபால்கள் பெற்று வாசித்து முடிக்கும் போதெல்லாம்
தவறாமல் எரியும் ஓர் உணர்வு
ஏமாற்றம் என்பது இல்லை எனில்...

அன்றாடம்
காண்கிறதும் கேட்கிறதும் வாசிக்கிறதுமான
மேல் விபரங்கள் எல்லாம்
வெகுவிரைவில் மறைந்துவிடும் மாயமும்
அக்கறையிழந்துவரும்
சுரணை நலிவினால் என்றில்லையெனில்...

அணையாது வேகும் காத்திருப்பே இது எனில்

தவிர்க்கமுடியாமல் விளையப்போகும்
என்ன் விபரீத்த்திற்காக? அல்லது நற்சமிக்ஞைக்காக?

இவை ஒன்றுமேயில்லையெனில்
எதை உட்கொள்வதற்கான பசி இது?
எதைச் சமைப்பதற்கான தழல்?

Read more...

Monday, July 18, 2011

புதிய பாதையில்

புதிய பாதையில் முதலடி வைத்தவள்
கால காலங்களாய்த்
தன் பாதங்கள் நடந்து வந்த
பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
எத்தனை தவறான பாதையில்
எத்தனை காலங்கள்! எத்தனை துயர்க் கதைகள்!
ஆழ்ந்த பெருமூச்சுப் புயல் ஒன்றில்
எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விட்டனவா?

இழப்புகளின் துயரமாரமில்லை இது.
புதிய பாதை அவளிடம் கேட்டு நிற்கும்
இன்மை, முழுமை, தூய்மை, புனிதம் பற்றிய
பதற்றமுமில்லை
அச்சமுமில்லை
திரும்பிப் பழைய பாதைக்குத்
திரும்பிவிடாதிருக்கும் உறுதி மீதாடும்
இரகசியக் கொண்டாட்டம்!
ஆமாம் இரகசியக் கொண்டாட்டம்!

அவள் தன் அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிறாள்
அவள் இதழ்களிலும் விழிகளிலும்
மறைக்க முடியாத அதன் எதிரொலிகள் கேட்கின்றன

Read more...

Sunday, July 17, 2011

துயர்மிகுதியால்

துயர்மிகுதியால்
விழிப்பு தகித்துக்கொண்டிருக்கும் இந்த இரவில்
நான் உன்னை நினைத்துக்கொள்வது-
ஓ, கிறிஸ்துவே, எனது அன்பனே!
என்னையும சிறிதளவு
தனிமைத் துயர் தீண்டுவதாலா?

நண்பனே, உன்னைப் பற்றிய ஓர் அரிய உண்மையை
மிகத் தெளிவாக நான் அறிவேன்:
தனிமை நோய் உனது துயருக்குக் காரணமாய்
ஒருநாளும் இருந்ததில்லை.

வாழ்வைத் தீவிரமாய் விசாரிக்கவல்ல
மனிதர்களைத் தேடித் தேடி நீ ஓடியதும்
மக்களைக் கூட்டிக் கூட்டி நீ பேசியதும்
உன்னைப் பற்றி நீயே சிறு பிள்ளைத்தனமாக
பேசிய பேச்சுக்களையும் நீயே கடந்து
இறுதியில்
ஆறாத பெருந்துயராக நிலைத்ததும்
எதனால் என்பதை நன்கு அறிவேன்.
துயரத்தின் சுமை மேலும் அதிகரிக்கும்படியாகியே
இன்று தோற்று நிற்கிறாயே என் இனியவனே,
மீப்பெரும் துயரொன்றே
கருணையாகப் பொழியக் கூடியதென்பதையும்
பெருவாளாய்ப் போராடக் கூடியதென்பதையும்
உன் முன் முழந்தாளிட்டு உருகுபவர்களிடம்
உணர்த்த இயலாது!

Read more...

Saturday, July 16, 2011

எவ்வளவு காலமாய்

எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பது?

தப்பிக்கும் வழி துழாவிக்கொண்டேயிருக்கும்
அவள் விழிகளைத்தான்
அவன் கண்டுவிட்டானோ?

திடீர் திடீரென அவளைச் சுற்றி
ஒவ்வொன்றாய்
எத்தனை எத்தனை தடுப்பரண்கள்
சூழ்ந்துவிட்டன?

எல்லாவற்றையும்
அவள் தாண்டிவந்து நிற்கையில்
காட்டுவெளியின் மலையடுக்குகளிடையே
காற்றுமட்டுமே சீறிக்கொண்டிருந்த
இடிபாடடைந்த கட்டடங்கள் நடுவே
அவனது பிடியின் துப்பாக்கி முனையில்
திகிலுண்டு நிற்கும் அவளது குழந்தைகள்!

எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்துகொண்டிருப்பது?

Read more...

Friday, July 15, 2011

வேண்டாம் காதல

வேண்டாம் காதல,
காதலின் சின்னமாய்
நீ தரும் வைரமோதிரம்!

அது நம் பிரிவைச் சுட்டுகிறது
ஆகவே அது ஒரு பொய்

அதன் ஒளியில்
மறைகிறது அதன் பொருண்மை என்னும்
அதன் பொருண்மதிப்பில்
ஒளி மறைந்து
பேரழிவின்
கொலைக் கருவி நெடியே அடிக்கிறது

வேண்டாம், காதல,
வேண்டாம்! வேண்டாம்!

Read more...

Thursday, July 14, 2011

தோல்விகளால்

(தோல்விகளாற் சற்றும் துவழாது
காலங் காலமாய்க்
கவிகளும் புத்தர்களும்
தோன்றிச் தோன்றிச்
சுட்டிக் கொண்டேயிருந்தும்)
கூடிவரவில்லையே இன்னும்
சொல்லொணாத் துயரங்களின்றும்
விடுதலை!

பூர்வகுடி இனக்குழுவிலிருந்து இன்றுவரை
மனிதன் சுமந்துகொண்டுவரும்
சுமையெதுவும் அழுந்திப்
பொசுக்காமையினாலன்றோ
பூத்துள்ளது இத்துணை
மென்மையும் அழகும் இனிமையும்,
அண்டசராசரங்களையும் அணைத்து
விரியும் காதலும் கொண்ட
ஒரு கன்னிப் பெண்ணின் இதயம்!

மானுட விஷங்களைத் தன்
கண்டுகொள்ளாமையினாலும்
நிர்த்தாட்சண்யத்தாலும்
தூய்மையாலுமே
கொன்றொழித்துவிட்ட
பேரற்புதத்தை, இரகசியத்தை
அவள் கண்ணின் மின்னொளியில்
கண்டதில்லையோ மானுடர்கள்?

Read more...

Wednesday, July 13, 2011

திடீரென்று

திடீரென்று
அவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது,
வெகுகாலம் அறைவாசியாய் வாழ்ந்துவந்த
பழக்கத்தினாலா?
தீரத் தீரத் தன்னுள் மூழ்கி
உண்மையினைத் தீண்டியதினாலா?

ஐன்னலருகே வந்து நின்றவள் கண்டாள்
இப் பூமிதான்-தன் மறதி உதறி-
ஒரு புதிய வீடாய்ப் பொலிந்து நின்றதை!

அவ்வண்ணமே வாசலுக்கு வந்து நின்றபோது-
ஆ, கடவுளே!
கால் தரிக்கத் தரையேயில்லாத வெளி!
கண்ட மாத்திரத்தில் அவள் விலாவில்
அடிவயிற்றை உறிஞ்சிக்கொண்டு
குறுகுறுத்து அசையத் துடித்த சிறகுகள்!

ஆனால், கறுத்த வானத்தில்
ஒரு கரும் பறவையாய்
தனது துயர்ப் பாடலால்
ஒரு துயர்ப்பாடலாக மட்டுமே
அறியப்படுகிறாள் அவள்

Read more...

Tuesday, July 12, 2011

வியர்த்தமாகிக் கரைகின்றன

வியர்த்தமாகிக் கரைகின்றன வெளியெங்கும்
யாரோ அழுதழுது புலம்பும் பிரார்தனைகள்

பட்டம் விடும் சிறுவனைப்போல்
யாரோ இந்த அகால வேளையில்
விண்ணை அளாவிக் கொண்டிருக்கிறார்கள்?
இல்லை,
விண்ணோடு விண்ணாய்
விண்ணிற் கலந்து நிற்கிறது எதுவோ

விழித்திருக்கும் ஒரு படுக்கை
அகலத் திறந்த சாளரம் வழியாய்
தன் பிரக்ஞை வீசிப் பிடிக்க
முயன்று முயன்று தோற்கிறது அதனை

விண்ணில் மிதக்கும் அழியாத இன்மையோ
சாளரங்கள் வழியே
புயலாய்ப் பாய்ந்து சென்று
விழித்திருக்கும் வெற்றுப்
படுக்கைமீது படுக்கையாய்ப்
புல்லிக்கொள்ள விழைகின்றது

Read more...

Monday, July 11, 2011

வாழ்வின் பெரும் பகுதியும்

வாழ்வின் பெரும் பகுதியும்
பொருளீட்டுவதிலும்
கேளிக்கைகளிலுமே கழிந்துவிட,
எஞ்சிய சொற்பப் பொழுதுகளின்
குழந்தைத்தனமான சந்தோஷங்களினின்றும்
யாரோ அலட்சியப்படுத்தப்பட்டுக் கிடக்கும்
சில்லறைகளைச் சேகரித்துச் சேகரித்துத்தான்
இன்னும் அழிந்துபோய்விடாத இன்பஉலகின்
நோய்க் குழந்தையைக் காப்பாற்றிவருகிறார்கள்.
களைத்த உடலுக்கடியே
தூக்கம் விரிக்கும் மஞ்சத்தைப் போல
மனிதர்களை இளைப்பாற்றி வருகிறாரகள்

பதறிப் பதறித் தங்கள் குழந்தைகளைப்
பேணுதற்கே மனிதர்கள் துடித்துக்கொண்டிருக்க
அந்த யாரோதான் இரக்கம்கொண்டு
அவர்களையும்சேர்த்துக்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

நமது தனிமைகளிலெல்லாம்
தவறாது காட்சி தருகிறது
கண்ணீர் ததும்பும்
அந்த யாரோவின் முகம்

Read more...

Sunday, July 10, 2011

விடுதலையானாற் போல்

விடுதலையானாற் போல் சிறகடித்தாள்
விதவையான பிறகும் மல்லிகா
எழுதுவது அதிகமானது மட்டுமின்றி
கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள்

ஆண்கள் ஜொலித்தால்
அது அவர்கள் ஆற்றலின் விகசிப்பு
பெண்கள்தாம் முன்வந்தால்
அது காமத்தின் தந்திரப் பரிதவிப்பா?

ஃபிராய்டியம் நாறும்
சில ஊத்தை வாய்களை மூடியபின்தான்
மல்லிகாதன் கட்டுரையை வாசித்தாள்:
மனிதர்களாகிய நாம்
இன்னும் எந்த ஒன்றையும்
சரியாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கவில்லை
முதலில் நம்மைநாம் அறிந்து கொள்ளவில்லை
பெண்கள் முன்னே ஒரு ஆணும்
ஆண்களிடையே ஒரு பெண்ணும்
ரொம்ப அலட்டிக் கொள்வதைப் போலவே
ஆழமற்றிருக்கின்றன நமது தாபங்கள்.
பொழுது போகின்றது காலம் காலமாக
ஆழமற்ற வேட்கைகளும் வேட்கையடங்கல்களுமாக.
வலியும் துயரும் உணராக்
கேளிக்கைகளும் துய்ப்புகளுமாக

இப்போதும் மல்லிகாவை
ரொம்ப அலட்டிக் கொள்வதாகச் சொல்பவர்கள்
யாரிடையே எவ்வேட்கை கொண்டென்ற
விசாரணையினைத் தொடர்கிறார்களா?

Read more...

Saturday, July 9, 2011

தோழி

அவளோடு அவளாகி
அவன் முகம் பார்க்கவா,

அவளைப் பார்க்கையில்
சுடரும்
அவன் முகம் பார்க்கவா,

அவளை முன்தள்ளிப்
பின்னிற்கும்
பக்கத்துணையாகவா,

அவள்முகம்
வாடிவிடக் கருத்து நோக்காதவாறு
அவனை
எச்சரிக்கவா, வேண்டிக்கொள்ளவா,
உச்சமானதொரு
சிபாரிசின்
அகலாது
உடன் வரும்
ஆர்வமாகவா, உறவாகவா,
அவள் தோளோரக் கூந்தல் சரிவில்
தொற்றிக் கொண்டிருந்தது
ரோஜா?

Read more...

Friday, July 8, 2011

மஞ்சள் காட்டிடையே

உலகத் துயர் களைய
தன் ராஜ்யம் துறந்து
மணிமேகலையையும்
அமுதசுரபியையும்
உலகுக்களித்தான்,
தெய்வீகமும்
நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியும்
அடிபட்ட புள்வலியுமாய்ப்
பிறந்த சித்தார்த்தன்.

கண்ணன் எனும்
போதையை ஏழைகளுக்கும்
போகத்தினதும் அதிகாரத்தினதும்
லீலா வாழ்வைத்
தங்களுக்குமாக்கிக் கொண்டது,
செல்வக் குறுங்குழுவின்
ராஜ்ய பரிபாலன
பக்திக் கலாச்சாரம்.

நேற்றின் தொடர்ச்சியில் விழிமூடி
வழுக்கிச் செல்வதா?
அப்பொழுதை அப்பொழுதே அறியும்
அனலில் கால்வைப்பதா?
மஞ்சள் காட்டிடையே
எப்போதும் திகழ்கின்றன,
நம் பாத முனையிலிருந்து
பிரியும் இரண்டு பாதைகள்.

Read more...

Thursday, July 7, 2011

உழக்குக்குள்

உழக்குக்குள் கிழக்கு மேற்காய்
என்னென்ன பேதங்கள், பிரிவினைகள்?

எல்லையற்ற பெருவெளியில்
கிழக்குமில்லை மேற்குமில்லை.

Read more...

Wednesday, July 6, 2011

உள்ளதெதையுமே

உள்ளதெதையுமே
உணரவியலாத அசமந்தம்.
கானகத்தின் எழிலுக்குச்
சற்றும் இசைவிலாத விபரீதம் போல்
கோவில்நோக்கி ஊடறுத்துச் செல்லும்
அக் கானகப் பாதையில்
சிரிப்பும் கும்மாளமும் பகட்டும் கோலாகலமுமாய்
ஒரு கும்பல்.

Read more...

Tuesday, July 5, 2011

நீர்நிலைகளும் நிழல்தருக்களும்

நீர் நீந்தும் மீன்கள் போலும்
அன்பில்மாத்ரமே திளைத்துக் கிடக்கும்
ஆருயிர்களே இல்லையோ?

கறைபடாத தூய்மையுடன்
சேறு கடக்கும் மெல்லிய கால்களும்
சிறகு பொருந்திய வெண்ணுடலுமாய்
அன்பின் ஆனந்தம் மாத்திரமே
அறிந்தியங்கும்
பொன்னுயிர்களே இல்லையோ?

எத் தீவினைகட்கும் இடமில்லாது
கழுத்தளவும் நீரில் மூழ்கி
காலமும்
பரிதி நோக்கியே கனன்று நிற்கும்
பூமுகங்களே இல்லையோ?

Read more...

Monday, July 4, 2011

குருதி நிறமான ஏரி

அந்திச் சூரியனின் இரத்தச் சிவப்பில்
ஏரியெங்கும் கனன்ற மனத் தளர்ச்சியின்
சொல்லொணாத் துயர்.

காணும் பொருள்கள் யாவுமே
வாயும் வார்த்தைகளுமற்றதுகளாய்
அன்றைய பகல் முழுதுமே
துயரத்தின் கனலானது ஏன்?

வானம்தன் முடிவின்மையில்
விண்மீன்கள் தத்தம் தனிமையில்
மலைகள் தம் அசைவின்மையில்
மனிதனும் தன் ஆளுமையில்
எங்கும் நிலை கொண்டுள்ளது
துயரமே தானோ?

நீரைக் கிள்ளி உசுப்பி எழுப்பி
யாவும் இன்பத்தில் நனைந்து சிலிர்க்க
அள்ளி வீசிப்
பாடி ஆடிவரும் தேவதைகள்
எங்கு மறைந்து போனார்கள் இப்பூமியில்?

ஒரு பேருவகைக்காய்
தொடங்கியிருக்கின்றனவோ,
மலர்கள் கனிகள் தாவரங்களெங்கும்
ஒளியும் மணமும் வண்ணங்களும்?

ஆறாத் துயருக்கும் போருக்கும்
அமைதியின்மைக்குமாய்த்
தொடங்கியிருக்கின்றனவோ,
வியர்வை நாறும் கட்டடங்களெங்கும்
பழியும் பாவமும் மூடத்தனங்களும்?

சிவந்து இருண்டுநிற்கும் நீர் நடுவே
கருப்பும் வெள்ளையுமாய் நீந்தும் சில பறவைகள்.

Read more...

Sunday, July 3, 2011

கவிதை எழுதுவது மிகமிக எளிது

நம்மைப் பிணித்திருக்கும்
அனைத்தையும் துறந்து
தன்னந்தனியாய் நிற்பதுபோல;

எவரையும் பின்பற்றாமல்
தனக்கான வாழ்வைத்
தானே கண்டடைந்து தொடர்வதுபோல;

கிரகிக்க வொண்ணா மனிதர்கள் நடுவே
சொல்லொணாப் பொருள் பற்றிச்
சோர்வின்றிப் பேசுவது போல;

ஆற்றுவெள்ளத்தோடு அடித்துப்போய்விடாத
ஆற்றோரத் தாவரம்போல; பாறைபோல;
பறவை போல;

தன்னந் தனியாய் மலையேறித்
திரும்ப இயலாது
மறைவது போல;

துயரங்களினின்றும் தோல்விகளினின்றும்
வேதனைகளினின்றும்
விலகிக் கொள்ளவே முடியாதது போலவும்;

இவை யாவுமறியாத
தாவர இயற்கையின்
மலர்களைப் போலவும்;

Read more...

Saturday, July 2, 2011

சித்தார்த்த வீதி

ஒவ்வொரு வைகறையிலும்
வாசற் பையில் வந்து கிடக்கிறது
ஒளிவீசும் பரிசுப் பொருள்.
வியர்வையும் இரத்தமும் கண்ணீருமாலான
கடின உறை சுற்றி
காதலால்
நெகிழப் பொதிந்து
கட்டப்பெற்ற பொட்டலம்.

யாண்டும்
மனிதர்கள் தம் வீட்டிற்குள்
விழிமலர்ந்து நிற்கும்தம் குழந்தைகளுக்கு
கனிகளைப் போலும்
கடின உறை சுற்றியிருக்காத
தூய பரிசுப் பொருள்களையே நல்கலாகாதா?

பிரித்த உறை ஒளித்து எறிந்து
எத்தனை மறைத்தும்
வீதிவழி செல்கையில்
அக் கடின உளைகளைக் கண்டு
கசியும் குருதிக் காயங்களுடைய
பெரியவர்களாகி விடுகின்றனரே
குழந்தைகள்!

Read more...

Friday, July 1, 2011

தன் உயிர்க்கே ஆதாரம்போல்

தன் உயிர்க்கே ஆதாரம்போல்
எதையாவது பற்றிக் கொண்டிருக்காத
மனிதனே இல்லையோ இப் பூமியில்?

தனது ஊன்றுகோல்களே
கொலைக் கருவிகளாய் மாறும்
இரசவாதம் அறியாத
மூடமும் வல்லாண்மையும்தான் மனிதனா?

தருணம் ஒவ்வொன்றிலும்
தன் மாண்பினை வெளிப்படுத்தும்
ஆதாரமற்ற வெளியின்
அமைதியும் தனிமையும் எங்கே?

தனது பற்றுப் புள்ளியை மய்யமாக்கியே
தனது நா அலமாரியில்
வரிசை கொண்டிருக்கும் ஓராயிரம்
நூலறிஞர்களின் கட்டுரைகளால்
என்றாவது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறதா
அமைதி, இப்பூமியில்?

துயர்வலி மட்டுமேதானோ
என் தேன்சிட்டே
உயிர்வாழ்வின் ஆனந்தம் அறிந்த
மனிதனின் பிரக்ஞை?

Read more...

Thursday, June 30, 2011

பாட்டியின் தனிமை

கதைசொல்லித் தூங்கவைத்த என் பாட்டியை
ஓர் காலையில் தேடி நடந்தேன். எவரும்
கடந்து செல்லமுடியாத ஒரு காட்சியாகவன்றோ
கண்டேன் அங்கே என் பாட்டியை!
வலி தரும் எத்தகைய துயர்த் தனிமையாயிருந்த்து அது!

வெயிலேறத் தொடங்கியிருந்த வேளை
கண்ணுக்கெட்டிய தூரத்திற்காய்த் தகித்துக் கிடக்கும்
புன்செய் நிலத் தோட்டமொன்றின் நடுவே குத்தவைத்து
ஒரு சிறு ஆயதமும் கைவிரல்களும் கொண்டு
தன்னந்தனியாய், கவனமான வேகத்துடன்
வியர்வைப் பெருக்கின் ஆவி சூழ
சுண்டச் சுண்டச் காய்ச்சப்படும்
இரத்தத்தின் முறுகல்பதம்
மீறிடுமோ என அஞ்சும் கோலத்தில் அவர்
மண்ணைக் கொத்தி உதறிக் கொண்டிருந்த காட்சி!

பாட்டி, காலமெல்லாம் உங்கள் பாடானது
உழைப்போ, அன்றி ஓர் மன்றாட்டமோ?
நம் வலியின் காரணங்களை ஆய்ந்து கொண்டிருக்கவோ
இது நேரம்? இக் கோலம்? பாட்டி,
எத்தகைய பூமியில் நாம் பிறந்துள்ளோம்
என்றா ஆய்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
இம் மண்ணில் தொலைந்து போனவற்றின்
தடயங்களைத் தேடுகிறீர்களோ?

விண்ணளவு விரிந்த
இப் பூமிக்கு நிகரான ஒரு மனுஷியை
உப்புக்கும் புளிக்குமாய்ப்
போராடுவதிலேயே கழிந்துவிடும்-
சுண்டெலியாக்கிவிட்ட விதியும்
மனிதச் சிறுமையுமோ நம் நெஞ்சில்
வேதனையாய்த் திரண்டு நிற்கின்றன, பாட்டி?

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு
இவ்வாழ்கை பற்றிச் சொல்ல எவ்வளவு இருக்கும்?
விடுதலையேயற்ற துயரங்கள், கொடுமைகள்,
கேடுபேறுகளின்
காரணத்தையே அறிந்திராதவராகவோ
இன்னும் இருக்கிறீர்கள் நீங்கள்?

ஞானத்தினது பின்னும்
மாறாது நிகழ்ந்து கொண்டிருக்கும்
தொடர்வாழ் வெண்ணியோ
நீங்கள் அமைதியில் ஆழ்ந்துவிடுவதும்
பெருந் துயரொன்றாற்
கலங்குவதுமாயிருக்கிறீர்கள்
உங்கள் தனிமையிலெல்லாம்?

காட்டி கண்களை இடுக்கிக் கொண்டு
உங்கள் பேரன் என்னை
நீங்கள் கண்டுகொண்டமாத்திரத்தில்
ராசா...என்றுதிரும் சொல்லையும்
மொத்தமானதொரு துயர் ஒப்படைப்பையும்
அதன்பின் நீங்கள் அடைகிற
மானுட நம்பிக்கையையும் இயல்பு மகிழ்ச்சியையும்
நாங்கள் நன்கு அறிவோம், பாட்டி!

Read more...

Wednesday, June 29, 2011

நாய் கவனம்

எனது துப்புரவுப் பணியாளரே!
கொலை வெறிபோலும்
வெறுப்பையும் கோபத்தையும்
தன்னை நோக்கிக் குரைத்த
நாயின்மேல்
காலியான குப்பைக் கூடையால்
அதன் சிரசில்
ஓங்கி ஓங்கி
அறைந்து காட்டிவிட்டுச் செல்கிறீர்.
ஒவ்வொரு முறையும்
தணியாத உமது வெறுப்பும்
ஆத்திரமும்
உமது கண்களை மறைத்துள்ளது
அறிகிலீர்.

பளீரென்ற வெண்மயிர் மின்ன
பழகுவதற்காகவே குரைத்த வாலாட்டும் அதனிடம்
நீவிர் இயல்பான முகமலர்ச்சியையும்
மெய்வருடலையும் காட்டியிருப்பீர் எனில்
உண்மை உமக்குப் புரிந்திருக்குமே
ஓநாயிலிருந்து
பல இலட்சம் ஆண்டுகள் தூரம்
பிரிந்து வந்த்து இந் நாய்க்குட்டி.
பார்ப்பதற்குத்தான்
அச்சந்தரும் பற்களுடையது.
தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.

அன்புப் பெருக்கால் அதிரும் அதன் மூச்சையும்
ஆரத்தழுவும் கைகளாய்த்
தவிக்கும் அதன் முன்னங்கால்களையும்
அச்சமூட்டும் பற்களுக்கிடையே
இளகித் தவிக்கும் நாவையும்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வாலசைவையும்
தனது உணவுமாமிசத்தை அரிவதற்காய்
அதன் வாயிலேயே வடிவமைக்கப்பட்டுவிட்டதால்
தோன்றும் கொடூரத்தைச் சமன்செய்ய விழையும்
அதன் விழிகளையும்
உற்றுக் கவனியுங்கள் நண்பர்களே,
நிதானியுங்கள்.
வெறுப்பிலும் கோபத்திலுமாய் வீணாகலாமோ,
பேரளவான நமது அன்பும் ஆற்றலும்?

Read more...

Tuesday, June 28, 2011

பிள்ளை இன்பப் பேருவகையுடன்

பிள்ளை இன்பப் பேருவகையுடன்
சூரிய ஒளி வந்து அமர்ந்திருக்கும்
மரகதப் பொன் இலைகள்.
மதிற்சுவர்மேல் ஓடித்திரியும் அணில்.
கிளை துள்ளிக் களிக்கும் தேன்சிட்டுக்கள்.
பழுத்திருக்கும் வேப்பமரமெங்கும்
இன்பம் பிதற்றும் பறவைகள்.

தூசு முதல்
யாவும்
தொழுகைக்குரிய விக்ரகங்களேயாக!

இழந்து நிற்கும் தாய்நாட்டிற்கான
ஏக்கம் போன்றதோ
நன்மைமீதான மனிதனின் வலி?

Read more...

Monday, June 27, 2011

துயில்

கண்டு கொள்ளும்போது முகிழ்க்கும்
மெல்லிய இதழ் விரிவில்லை?
காணாதபோது துலங்கும்
மவுனமும் இல்லை?
தேடாத போது ஒளிரும்
அமைதியுமில்லை.
உறும் கவனநெருப்புமில்லை
துயரின் வலிகளேதுமில்லை என்பதுவே
கூடுதல் நிறைவு.

விழிகள் மூடியிருக்கின்றன
கனவுகள் இல்லையென்று
அறுதியிட்டுச் சொல்கின்றன
முகத்திலோடும் ரேகைகள்.
மூச்சு இருக்கிறதுவால்
மரணமில்லை என்று சொல்வதற்கில்லை.

யாருக்காவது கலைக்க மனம்வருமோ
இந்தத் துயிற்கோலத்தை?

இன்னும் கொஞ்சம் ஓய்வு கொள்ளட்டுமென்று
தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முனங்கிக்கொள்கிறது
மரணமேயில்லாத ஓர் தாயுள்ளம்.

Read more...

Sunday, June 26, 2011

அலங்கோலமான

அலங்கோலமான இல்லம்.
அழகும் ஒழுங்குமற்றே
எரிகிறது இவ்வுலகம் என்பதை
உய்த்துணரவியலாத அசமந்தம்.

பகுத்தறிதலில்லாது விடுதலை இல்லை

காணற்கரிதானதே
என் அன்பே,
அன்பின் ஒழுங்கும் அழகும்
அற்புதங்களும்!

ஒன்று, சவத்தன்மையும்
இயந்திரத் தன்மையும் கொண்ட கச்சிதம்.
இல்லையெனில்
அசமந்தமும் சோம்பலும் அறியாமையும்
தூக்கி எறியப்பட வேண்டிய பொருள்கள் மீதான
பற்றும் பிணியும் மூடமும் கலந்த குழப்பம்.

நம் கவனத்தால் ஆராய்ந்து பார்ப்போமோ
இவைகளை எல்லாம்?

அசமந்தத்தின் செயல்கள்தாம்
எத்தனை இவ்வுலகில்!
அசமந்தம்தான்
நம்பிக்கைகளைப் பற்றுகிறது.
நம்பிக்கைகள்தாம்
சக மனிதர்களைப் புறக்கணிக்கவும்
போரிட்டு ஒழிக்கவும் பாய்கின்றன.

என்றாவது நிகழும் அற அதிர்ச்சிக்காகவோ
காத்திருக்கிறது அசமந்தம் இப்போது
காண்பவை ஒவ்வொன்றிலும்
உக்கிரமாய் ஒலித்தபடி?

Read more...

Saturday, June 25, 2011

திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய் 
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து

போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார் 
யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?

அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?

சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும்
பெருங்கருணை 




திற்பரப்பில் நடந்த தேவதேவன் கவிதை அரங்கிற்கு வந்து திரும்பிய பின் கவிஞர் எழுதியது ,ஜீன் 11 உங்கள் நூலகம் இதழில் இருந்து .

Read more...

சுட்டுவிரல்

அது பிறந்ததுமில்லை
இறக்கப் போவதுமில்லை.

வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகள்
என்றேதுமில்லை அதனிடம்.

அளவிடமுடியாத எடைபொருந்திய
அதன் மவுனம்,
அவன் குழந்தைப் பருவத்திலிருந்த
அதே மவுனம்,
அவன் இல்லாதபோதும் நிலவுகிறது,
பணி ஓய்வுக்குப் பின் அதிலே அவன்
கூடுதலாய்த் திளைக்க-
எப்போதும் எங்கும் நிலவுகிறதுதானே,

பேரளவினதாய்க் கனலும்
இந்த மவுனத்தின்
ததும்பும் வெறுமையில்
நான் எனும் பிரக்ஞைவலிநிலையே
தான் எனும் இவ்வுலகென்றும்
அறிந்தோனால்
என்ன செய்ய இருக்கிறது இங்கே!
எத்தகையது
காலத்தோடு நமக்குள்ள உறவு!
காலம் அவனைத் தன் சுட்டுவிரலாற்
நகர்த்திக் கொண்டிருக்கும் வெளியில்
காலத்தின் மேடை நின்று
நாம் செய்யப் போவதென்ன,
காலத்தினின்றும் அவன்தன்னைக்
கழற்றிக் கொள்வதைத் தவிர?

Read more...

Friday, June 24, 2011

அமைதி என்பது...

உத்தேசமில்லாமலேயே
அனைத்துச் சச்சரவுகளுக்கும்
தீவினைகளுக்கும் எதிராய் எரியும்
உக்கிரமான போரோ?

பயனிலா வெளிப்பாடுகளனைத்தையும்
இடையறாது களைந்தபடி
உள்ளோடும் அழுக்குகளனைத்தையும்
இமைக்காது உற்றுநோக்கியபடி
ஆழ்ந்து அமர்ந்து நிற்கும்
அடங்கலரிய கொந்தளிப்போ?

எச் செயலாய் வெளிப்படுவதென
உட் திணறி
கூருணர்வாய்
அவதானித்தலாய்
அறியாமை கண்டு
வேதனிக்கும் நெஞ்சாய்
சாய்வு சமரசமற்ற
பேரறிவாய்
கருணையாய்
மெய்யன்பாய்
மெல்லக் கசிந்துருகும்
பேராற்றலின் சுனையோ?

கேளிக்கை
விளையாட்டு
வேடிக்கை
திருவிழாக்கள்
எதனாலும்
அணையாது நின்றெரியும் நெருப்போ?

தோல்வியின்
ஆகப் பெரிய தனிமையினால்
ஆகிய பெருங் கண்ணீருடன்
கனலும் துர்ப்பாக்கியமோ?

Read more...

Thursday, June 23, 2011

காட்டையழித்து

காட்டையழித்து
ஒரு கரும்புத் தோட்டம்.

ஆயிரங்கால் மண்டபத்தையழித்து
ஒரு அருங்காட்சியகம்.

பெண்ணை அழித்து
ஒரு மனைவி, மகள், மருமகள்.
மனிதனை அழித்து
ஒரு கடவுள், சாமியார், தலைவன்,
தொண்டன், ஏழை.

என்றாலும்
ஆடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றிற்குப் பின்னாலும்
அழியாதே மறைந்தபடி
அசையாது நிற்கின்றன
அழிக்கப்பட்ட ஒவ்வொன்றும்!

உயிரின் கனல் தீண்டி
உயிர்த்தெழுந்து மணம் வீச!

எக் கணமும் தயார் நிலையில்
இருக்கும் பெருநிலையை
எண்ணி எண்ணி வியந்ததும்போய்
எண்ணியதே ஆனபடி!

Read more...

Wednesday, June 22, 2011

மலர்களில் மலர்ந்துள்ளது எது?

மலர்களில் மலர்ந்துள்ளதும்
நின் அகன்ற விழிகளில்
துயிலின்றி விழித்திருப்பதும்

நின் இதழ்களில் கனிந்து
மவுனமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும்

சலனமின்றி நின் செவிகள்
செவிமடுத்துக் கொண்டிருப்பதும்

நின் நாசி மடிலோரம்
பொறுமையாய்க் காத்திருப்பதும்

பெறுதற்கரிய இருப்புடன்
உன் மடிமீது அமர்ந்திருப்பதும்

நின் கருங் கூந்தலில்
இரகசியமாய்ப் புதைந்திருப்பதும்

உன் கைகால் நகங்களில்
கதிரொளி ஏற்றிப்
பணிந்து கிடப்பதும்

நின் மெல்லிய சலனங்கள் ஒவ்வொன்றிலும்
விழி உயர்த்திப் பேச யத்தனிப்பதும்…

இன்னும் இப்புவியை வாழ்வித்துக் கொண்டிருக்கும்
காதலன்றி வேறு என்ன?

Read more...

Tuesday, June 21, 2011

பெருங்குளம்

துடிக்கும் அலைகளுடன்
வானம் பார்க்க விரிந்து
பூமி செழிக்க்க் கிடக்கும்
நீயே உனது ஆனந்தம்.

கண்களிற் பட விழைந்த
காட்டுப் பூக்கள் கோடியின்
காதல் உளக் கிடக்கையோ,
பால்வெளியோ,
மண்ணில் இறங்கி நிற்கும்
தேவதைகளோ என
ஒளியில் விழித்துக் காற்றொடு கூடிப்
பேரானந்தம் கொண்டாடுகின்றன
உன் பக்கத் துணைகளாம் நாணல் மலர்கள்
முடிவற்றதோர் இன்பக் காட்சியாய்.

குளிர்காற்றும், திடீரென்று
வான் முழுக்க நிறைந்துவிட்ட
மழைமேகங்களும் இடி முழக்கமுமாய்
நெருங்கிவிட்டதோர் முற்றுமுழுநிறைவேற்றம்
உன் முகப் பொலிவைக் கூட்ட
மரங்கள் அசைகின்றன
தோகை விரித்தாடும் மயில்கள் ஆயரமாய்.

ஆட்டுமந்தை ஓட்டிவரும் மேய்ப்பனின்
வாடி வதங்கிய முகத்திலும்
பூ மலர்கிறது.

உன் கரையோர ஆலமரத்தடியிலன்றோ
எங்களை ஒதுங்கி நிற்கவைத்தது மழை.
மழையை வாங்கி
மழையேயாகி நிற்கும்
உன் கோலம் காணவோ
வந்துற்றோம் நாங்கள் இங்கே?

உன்னைக் காணும் பித்தேறி
சுற்று வட்டாரம் முழுக்க நீ விரித்திருக்கும்
பச்சைக் கம்பளம் மீதூர்ந்து
நாங்கள் பறந்தோடி வந்து நிற்பது
நீ எங்களைத் தேர்ந்துள்ள இரகசியத்தாலோ?
எதற்கோ?

Read more...

Monday, June 20, 2011

சின்னஞ்சிறு குருவியே

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ!
மானுடப் பரப்பில்
உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
அமைதி அமைதியின்மை அறியாத
பேரமைதியின் புதல்வி நீ.
எளிய தேவைகளுக்கும்கூட
தன் வாணாளைப் பணயம் வைத்துப்
பாடுபட வேண்டிய
விந்தை உலகத்தவனில்லை நீ.
உன் உயிர் தரிப்பதற்கான
சிற்றுணவுப் பஞ்சத்தை
நீ ஒரு நாளும் அறிந்த்தில்லை.

புகழுக்கும் மேலாண்மைக்கும் போகத்திற்குமாய்
அல்லலுறும் மானுட உலகையே அறியாது,
வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்
அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம்!

இன்பமும் துன்பமும் உயிரச்சமும்
அறியாதவன்
என்றாலும் இயற்கைப் பெருவெளியை
உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்
துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர்!
உனக்காக,
உனக்காகவேதான் என் கண்ணே,
இந்த ஈனச் சிறு மானுடர்க்காய் அல்ல;
அவர்களுக்காகவெனில்
இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.
உன் துணுக்குறலாற் துயருற்றே
உனக்காகவேதான் என் செல்லமே
தன்னைச் சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது
இப் பேரியற்கை
என் அன்பே!

Read more...

Sunday, June 19, 2011

அந்தி

நீரால் அமைந்த இவ்வுலகில்
வானிற் கதிரவனாய் ஒளிர்வதும்
மண்ணிற் தாமரைகளாய் மலர்வதும்
ஒன்றேயெனும்
பேருணர்வின் நாடகமோ இவ்வாழ்க்கை?
இரு பேருணர்வுகளின் சந்திப்போ காதல் என்பது?

ஒருவரையொருவர் ஈர்த்து
இருவரையும் இல்லாமலாக்கும்
காட்சியின்பம் மட்டுமேதானோ அது?

ஒருவரை ஒருவர் அடித்துப் புசித்து
எவரும் இல்லாமலாகும்
பெருங் காமப் பசியோ?

யாருமறியாவண்ணம்
எங்கு எப்போது சந்திப்பதென
அவன் தன் குறிப்புணர்ந்தவளோ
தன் கைத்தாமரை குவித்து
அந்திக் குளக்கரையைக் கூறிநின்றாள்?

எல்லோரும் அகன்று
தனித்துவிடப்பட்ட அந்திமங்கல்
அமைதிக் குளக்கரை
மரநிழலில் ஒளிந்தபடி
அவன் அவளைச் சந்திக்க்க் காத்திருந்தான்.

பரிதியைக்
கண்டு விரிந்த தாமரையே
பரிதியை
உட்கொண்டு குவிந்துநின்றிருந்தது அங்கே.
வெளிமூச்சு போலும்
வீசிய சிறுமென் காற்றில்
ஒன்றையொன்று நெருங்கித்
தொட்டுணர்ந்து விலகிக்கொண்டன
இரண்டு மொட்டுகள்.

Read more...

Saturday, June 18, 2011

இரத்தினங்கள்

கணமும் விண்ணைப் பிரிந்திராத காதலால்
பெருநிறைவும் பேரழுகுமாய்
ஒளிர்ந்து கொண்டிருந்தது பூமி.

சாலைவழிச் செல்லும் சக்கரங்களின்
புழுதி தீண்டாத தூரத்தில்
அவன் ஒரு வீடமைத்தான்.

அதை அவன்தன் இனியாள் ஒருத்தியிடம்
ஒப்படைத்ததுபோல்
அதிகாலையிலேயே எழுந்து
அவள் தந்த கட்டுச்சோறுடன்
வெளியே கிளம்பினான்.

இவ்வீடு விஷயமாய்
இப் பூமியிடம்
மிகப்பெரிய வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு
ஒருவாறு நல்லவிதமான
பேச்சுவார்த்தை நோக்கி
நாளும் தூங்கி விழித்துச்
சென்றுகொண்டிருப்பான் போலிருந்தான்-
அவளும் அக்கவலையை அவனோடு பகிர்ந்துகொள்ளும்
ஒரு பாதியாகியிருந்தாள்.

அவர்கள் பொறுமையாக இருந்தார்கள்.
நன்மையின் மீதான
ஆழ்ந்த உறுதியோடும் தெளிவோடும்
இருந்தார்கள்.
எதிராளியின் வல்லமையையும் கருணையையும்
நன்குணர்ந்த அறிவாலும் தாழ்மையாலும்
அமைதி கொண்டிருந்தார்கள் அவர்கள்.
கிடைத்தற்கரிய அற்புத இரத்தினங்களைப் போல்
ஒளி வீசின அவர்கள் கண்கள்.

Read more...

Friday, June 17, 2011

நாய்ச் சிற்பம்

வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பதில்
பிரியமில்லாதவனாய் இருந்தவன்,
என் சின்னமகனின்
பிடிவாதமான கட்டளையால்
மாட்டிக் கொண்டேன்,
ஒரு செல்ல நாய்க்குட்டியுடன்.

உணவளித்தோம், கொஞ்சினோம்;
குளிப்பாட்டினோம்;மெய்தழுவி மகிழ்ந்தோம்.
விளையாடினோம்;
காலை நடை மாலை நடை சென்றோம்.
கவிதை எழுதுகையில் நூல் வாசிக்கையில்
நாற்காலியொட்டி படுத்துக் கொள்ளும்
அதன் இருப்பினை வருடி நின்றோம்.
வீட்டைவிட்டு வெளிச் செல்கையிலும்
உள்வருகையிலும் இன்முகத்துடன்
உறவு பேணிக் கொண்டோம்.

எங்கள் வாழ்க்கையை விட்டொரு நாள்
எங்கள் செல்லநாய் மறைந்து போனது.

எங்கள் தோட்டத்தில் ஓர்நாள் கிடைத்த
ஒரு பெரிய மர வேர்த்துண்டின்
அழகை வியந்து அதைச் சற்றே செதுக்கி
தோட்டத்து நடுவே அமைந்த ஓர் மேடையில்
அந்த அழகு நாய்ச் சிற்பத்தை நிறுத்தினேன்.

அதை ஏறெடுத்தும் பார்த்தானில்லையே என் மகன்!

கலையானது ஒருக்காலும் கடவுளாவதில்லையோ?

தன் நாய்ச் செல்லத்தை இழந்த துயரம்
அதன் சிற்ப அழகில் தீரவில்லை என் மகனிடம்,
ஆனால் அவன் மீண்டும் மலரத் தொடங்கினானே
வாழ்வின் தீராத உறவில்!

Read more...

Thursday, June 16, 2011

மணமக்கள்

நன்கு அலங்கரிக்கப்பட்ட
ஒரு திருமண மண்டபம்.
மய்யமாய்
மலர்மாலை சூடிநிற்கும்
தன்னந்தனியான
ஒரு திருமண ஜோடி.
ஆனால், தனிமை என்பது
ஆங்கில்லை.

பாட்டுகள் கொண்டாட்டங்கள்
கோலாகலங்கள்
ஒலிபெருக்கியில் உரத்து ஒலித்து
கும்மாளப் பாட்டுக்கு
இளைஞர்கள் ஆடிய ஆட்டங்கள்
பரிசளிப்புகள் பரிமாற்றங்கள்
விராரிப்புகள் விருந்துகள்
அனைத்தும் அக்காட்சியில்
திடீர் விழிப்பெய்தினவாய்
தங்கள் குணங்களை
ஒதுக்கி நின்றன ஒரு கணம்.

மண்டபத்தில் நுழைந்த ஒரு மூதாட்டி
கண்பனிக்கக் கைகூப்பித் தொழுது நின்றாள்
மணமக்களை நோக்கி.

மணமக்கள் விழிகளிலும் ஒரு திகைப்பு.
தங்கள் முதல் சந்திப்பில்
சமப்பார்வையாக இருந்தது,
தங்கள் களவொழுக்கத்தில்
ஆர்வத்தாலும் சந்திப்பில்
கைவிலகி நின்று தகித்தது,
தங்கள் காதல் வாழ்வின்
ஒவ்வொரு வேளையிலும்
இனித்தும் கரித்தும் நின்றது,
இன்று ஒரு உரத்த குரல் எய்தி
கூட்டம் கூட்டி
மலர்மாலைகளுடன் காட்சியளிப்பது-
எல்லாம்
ஒரு மூதாட்டியால் மட்டுமே
உள்ளம் கசிந்துருக
உய்த்துணர இயலும் தேவமோ?

Read more...

Wednesday, June 15, 2011

கவிதை

நீர் நடுவே
தன்னை அழித்துக் கொண்டு
சுட்டும் விரல்போல் நிற்கும்
ஒரு பட்ட மரம்.
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.

Read more...

Tuesday, June 14, 2011

விண்ணளவு பூமி

விண்ணளவு பூமி
விரிந்து நிற்கும் நிலம் நடுவே

செவியின்
இரு கேள்எல்லைகளையும் தாண்டிக்
கேட்டதொருபேரோசை.
கண்ணின்
இரு பார்வை எல்லைகளையும் தாண்டிக்
கண்டதொரு பெருங்காட்சி.

யாவற்றினதும் மையமாய்
யாவற்றையும் அழித்தொழித்து
யாங்கும் எப்பொருளிலும் எக்காலத்தும்
நின்றெரியும் மெய்மையாய்
ஒரு மனிதன்
தன்னை உணர்ந்த வேளை.

Read more...

Monday, June 13, 2011

பாதையோரத்து மலர்கள்

யார் வலியவனும் மனிதனுமானவன்?

தன் ஏழை எளிய சுற்றத்தைத்
தன் தோள்மேல் சுமந்து செல்பவனா?

செல்வம் திரட்டிப் போகிற போக்கில்
தீனர் திக்கற்றவர்களின் இடுப்பொடித்து
வஞ்சித்து, அவர் தோள்மேலே
தன் சுக வாழ்வுச் சவாரியினை
அமைத்துக் கொள்பவனா?

அந்த ஈனச் சுகவாழ்வை
நிலைநிறுத்திக் கொள்ளவே
தீனர் திக்கற்றவர் மற்றும்
கலை கல்வியினது பாதுகாவலனாகி

மானுடம் இதுவரை கண்டுள்ள
அனைத்து நல்லவைகளையும்
எற்றி ஏமாற்றி
தனக்குள் எள்ளி நகையாடும் பைசாசமா?

தெள்ளத் தெளிந்த கூர்மதி ஒளிர
வழிமறித்தும் வழிமறிக்காமலும்
ஒதுங்கி நிற்கின்றன
தன் அழகின் பிடிவாதம் இளகாத
பாதையோரத்து மலர்கள்.

Read more...

Sunday, June 12, 2011

மரம்

உனது பாடுகளையோ
ஆறாத ரணங்களையோ
அவ்வப்போது
இலைகள் திறந்து காட்டுகிறாய்?

தாங்கொணாத வேதனையானதெப்படி
நமது வாழ்வு?

இக் கடுங் கோடையில்
தளிர்த்துப் பொங்கி
பூத்துக் குலுங்கி
ஒரு புது மென்காற்றையும்
எனை நோக்கி வீசும்
உனது காதல் மட்டும் இல்லையெனில்
என்னாவேன் நான், என் தெய்வமே!

Read more...

Saturday, June 11, 2011

மலர்கள்

நம் பார்வைக்கே
ஏங்கி நிற்கின்றன
தொட்டால் வாடிவிடும் மலர்கள்.

வாடுமோ கல்லில் செதுக்கப்பட்ட மலர்;
காதல் பரிமாறக்
காதலாற் கொய்யப்பட்ட மலர்?

மலர்கள் சில பறித்தாலென்ன
யாதொன்றும் வாடாத
சொர்க்கம் அங்கே நிலவுகையில்?

காம்பு நீட்டி நின்ற ஒரு மலரோ
கடவுளாக்கியது அவனை?

Read more...

Friday, June 10, 2011

அதன் பின்

துன்பகரமான
நினைவுகளினதும் வலிகளினதும்
காரணங்களைத் துருவியபடி
இருள்வெளியில்
காலம் காலமாய்ப்
பறந்து கொண்டிருந்த
ஒரு பறவை,அவனருகே
தோளுரசும் ஒரு மரக்கிளையில்!

அதிசயத்திற்குப் பின்தானோ
அது எழுந்து பறந்துகொண்டிருந்தது
காலமற்ற பெருவெளியில்?

Read more...

Thursday, June 9, 2011

வேசி

ஆகக் கழிசடையைக் குறிக்கவும்
பெண்தானா அகப்பட்டாள் உங்களுக்கென
என் மகள் சீறி ஆட்சேபிக்கவும்
சொல்லிழந்த நிலையில்
கண்டேன் அதுவரையிலும் நான்
காணாத தொன்றை!

Read more...

Wednesday, June 8, 2011

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன்
எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன,
வேறு ஒரு வரம் கேள்.

பேசத் தோன்றாமல் நின்றதனால்
அவளாகவே உதவினாள்;
நீ தொடுவதெதுவுமே
தன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு
வரம் தருகிறேன் என்றாள்.

அன்று முதல் மைதாஸ்
தன் ராஜ்யத்திலுள்ள
அனைத்துக் குழந்தைகளையும்;
குழந்தையுள்ளம் கொள்ளும்
நேரம் பார்த்து
அந்தந்த மனிதர்களையும்
போய் தவறாது தொட்டுவிடும்
வேலை மும்முரத்திலாழ்ந்தான்.

மக்களும் மந்திரி பிரதானிகளும்
மன்னரின் சித்தம் குறித்தும்
நாட்டைக் குறித்தும்
கவலை கொண்டு கூடினர்

இராஜ்ய பாரம் என்பது லேசா?

Read more...

Tuesday, June 7, 2011

ஒரு மலர்

தன் மணம்
இப் பிரபஞ்சவெளியின்
முடிவின்மைவரை
பரவிக் கொண்டிருக்கிறதாய்
முற்றுமுழு உறுதியுடன்
முறுவலித்துக் கொண்டிருந்தது
ஒரு மலர்.

தனக்குக் கிட்டாததாய்
வாடி வருந்தும் மனிதனைச்
செவி மடுத்துச் சொல்லிற்று அது;
“நெருங்கி வா.
ஒருபோதும் விட்டு விடாதே
என் அண்மையை.”

Read more...

Monday, June 6, 2011

அந்தி விளக்கொளியில்...

என் பணிகளையெல்லாம்
முடித்து விட்டு
ஒவ்வொரு நாளும் தவறாது
எத்தனை வேகமாய்
ஓடிவந்தமர்கிறேன்
உன்னிடம்!

எத்தனை பெருங்காதல்
நம்மிடையே நிலவுகிற தென்பதை
யாரரிவார்?
என் அந்தி விளக்கொளியில்
ஒளி வீசும் பேரழகி நீ!

கன்னங் கரிய
என் பேரொளி
என் சொர்க்கம்.
மனம் அவிந்த
நெருக்கம்.
திகட்டாத பேரமைதி
பேராறுதல்
என் உறக்கத்திலும்
களைத்த என் உடம்பை
மாமருந்தாய்த் தீண்டியபடி
விழித்திருந்து காவல்காக்கும்
தெய்வம்.
என் காயங்கள் மீது பொழியும்
அம்ருதப் பெருங் கருணை.

பகலெல்லாம்
வியர்வை கொட்டிக் கொண்டிருக்கும்
என் மேனியினை
நிழல் திரைகளில் மறைந்து நின்றபடி
இமைக்காது நோக்கிக்கொண்டிருக்கும்
காதல்.

நம் சங்கமக் காந்தப் புலமெங்கும்
அறியப்படாத ஓர் இரகசியப் புதையலாய்
பெருகிக் கிடக்கும் மவுன வெள்ளம்.

Read more...

Sunday, June 5, 2011

கப்பன் பார்க், பெங்களுர்

ஒவ்வோர் கணமும் ஓரோர் திசை
திரும்பிய வண்ணமாய்
எக் காலத்தும் எத்திசையும்
எல்லோரை நோக்கியும்
நீண்ட நீண்ட கைகளேயான
ஒரு பெருமரப் பிரமாண்டம்
அந்தப் பூங்காவில்.
அதன் கீழ்
காதல் வேண்டியன்றோ
வந்து-இருந்து-எழுந்து
சென்று கொண்டிருந்தனர் மனிதர்.
அவனோ, அம்மரத்தின்மீதே
காதல் கொண்டவனாய் வந்தமர்ந்திருந்தான்.
அம்மரத்தின் மகத்துவமோ
தன்மீதே தான் கொண்ட
காதலால் இயன்றிருந்தறிந்தான்.

Read more...

Saturday, June 4, 2011

பருந்து

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?

அதன் கூர்மையான நகங்களால்
உங்கள் முகம் குருதி காணப்
பிராண்டப் பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறீர்களா?

பறவை இனத்திற் பிறந்தாலும்
விண்ணிற் பறக்க இயலாது
குப்பை கிண்டித் திரியும் அதனை
துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
அப் பருந்தோடு பருந்தாய்
பறந்து திரிந்திருக்கிறீர்களா
பாதையில்லா வானத்தில்?

குப்பைகளை
ஆங்கே நெளியும் புழுக்களை
கோழிக் குஞ்சுகளை
அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
புலம்பல்களை
போரை
போர்க்களங்களில்
பிணமாகி அழியும் மனிதர்களை
பிணங்களின் அழுகிய வாழ்வை-
நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

அது தன் சிறகு மடித்து
தனது பனித்த கண்களுடன்
ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
அய்யம் சிறிதுமின்றி
ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?

Read more...

Friday, June 3, 2011

ஏதோ ஒரு திட்டத்தில்...

எங்கள் பயிற்சி வகுப்பின்
நிகழ்ச்சி நிரலில் ஒன்றாய்
வினாடி வினா நடத்தியவரின்
முகத்தையே தான்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,
அதில் ஒளிரும் மேலாண்மைப் பெருமிதம்தான்
என்னே என்று வியந்தபடி.

உலகத்தின், அநேகமாய் அத்தனை அறிவையும்
தன் நினைவில் சேகரித்து வைத்திருக்கும்
ஒரு கணினிமுகம்தான்
'ஒன்றுமில்லை' என்றபடி
எத்தனை எளிமையுடன்
எத்தனை தாழ்மையுடன் இருக்கிறது!

எத்தனை முட்டாளாய்
இன்னுமிருந்து வருகிறானிந்த மனிதன்!

ஏதோ ஒரு திட்டத்தில்
எல்லா அறிவினையும்
தன் நினைவுப் பெட்டிக்குள்
இழுத்து வைத்துக் கொண்டு
என்னமோ சொல்வது போலிருக்கிறது
கணினிப் பெட்டி.

Read more...

Thursday, June 2, 2011

என் அணிற்பிள்ளைகள்

என் மரநிழல் குளிர்விக்கும்
மதிற்சுவர்மேல்
பருக்கைகள் வைத்துவிட்டு நகர்ந்தேன்.
விரைந்து வந்து உண்ணும்
என் அணிற்பிள்ளைகளின்
பட்டுடலெங்கும் கனலும் பதற்றம்.

ஒரு பக்கம்
குதித்தாடித் திரிய வைக்கும்
அலகிலா இன்ப ஒளிப்பெருக்கு
மறுபக்கம்
குத்திக் குதறி
உயிர் குடித்திடவே
தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கும் கருமை.
நடுவே
வேறு எப்படித்தான் இருக்க முடியும்
இந்த அணிற்பிள்ளைகளின் வாழ்வு?

Read more...

Wednesday, June 1, 2011

கவிதைவெளி

கவிதை எழுப்பித்தானே
காலையில் நான் துயில் களைந்தேன்
கவிதையின் நீரில் தானே
முகம் கழுவினேன்

கவிதையின் தூரிகை கொண்டல்லவா
வீட்டினை நான் தூய்மையும் ஒழுங்கும் செய்தேன்
கவிதையின் படகிலேறியன்றோ
அண்டை வீட்டார்களுடனும் அந்நியர்களுடனும்
உறவு கொண்டேன்

கவிதையின் நெருப்பினிலன்றோ
சோறு வடித்தேன்
கவிதையின் அரிவாள்மனை அமர்ந்தல்லவா
காய்கறிகள் நறுக்கினேன்
கவிதையின் வாகனத்திலேறித்தானே
அலுவலகம் சென்றேன்

கவிதையின் கிண்ணத்திலன்றோ
தேநீர் பருகினேன்
கவிதையின் ஒளியிலல்லவா
தகதகத்துக் கொண்டிருந்தது இயற்கை
கவிதையின் பொன்வெளியிலல்லவா
நாளும் என் சிறுஉலா நடந்தது

கவிதையின் மொட்டைமாடியிலன்றோ
வான் பார்த்து நின்றேன் நான்
கவிதையின் நாற்காலிகளிலமர்ந்து கொண்டல்லவா
பிரச்னைகளை நாங்கள் ஆராய்ந்தோம்
மூடத்துயர் மிகுந்துகொண்டே வரும் இவ்வுலகில்
மனித முயற்சிகளனைத்தும் வீணேயாகிக் கொண்டிருக்கும்
இச்சாம்பல் வானத்தின் கீழே
வாழ்வின் அரும்பொருள் வினை இதுவே என
எப்போதும் உணர்த்தும் நிலையில்தானே
எரிந்துகொண்டிருந்தது அங்கே
கவிதைவெளி!

Read more...

Tuesday, May 31, 2011

காத்திருக்கும் இரவின்…

காத்திருக்கும் இரவின்
கட்டிலில் சாய்ந்தவுடன்தான்
எத்தனை நிம்மதி!
இது போலுமொரு நிம்மதியுடன்தான்
மரணமும் நிகழும்
எனும் ஓர் ஆறுதல் குறிப்பும்
அதில் உளதோ?

Read more...

Monday, May 30, 2011

நிலக் காட்சி

மிகப் பெரியதோர் இலட்சிய நன்மையே
பிரம்மாண்டமான மெய்மையும்
காதற் பெரும் இருப்பும்
இப் பேரியற்கையின் எழிலுமாமோ?

உரையாடல்களில் புகுந்து
கண்களில் நீர் துளிர்க்க
உடல்கள் தத்தளிக்கச் சிரிக்க வைப்பதும்
முடிவிலாத
இலட்சிய பூர்த்தியொன்றின்
கொண்டாட்டம்தானோ?

இரவோடு இரவாய்
ஊர் வந்து தூங்கி விழித்தபோது
பட்டென்று இழையறுந்த அசம்பாவிதம்போல்
எட்டி விலகி நின்றது
ஏமாற்றமான ஒரு விடியல்.

எனினும் அப்போதும் அவனைச் சுற்றிக்
குன்றாத அழகு நிலக் காட்சி.
சற்றே விலகித் தகிக்கப் பார்க்கும் வெளி.
எனினும் திடீர் திடீரென்று வரும்
கற்றை மென்காற்றலைத் தீண்டலில்
மீக்குளிரும் கம்பளியும் போலும்
காதற் பெரும் இருப்பின்
ஆவி தொட்டளாவிய நெருக்கமும் தழுவலும்.

Read more...

Sunday, May 29, 2011

காதலின்ப முழுமை

காதலின்ப முழுமை
நிலவுமோடா,
இப்புவியில்,
உன் காதலியிடம்
உன் குற்றம் வருந்தி
உன்னை
நீ திருத்திக் கொள்ளாவிடில்?

Read more...

Saturday, May 28, 2011

மண்ணும் மனிதர்களும்

மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய்
நாம் வாழ்ந்த்தெப்போ?

எளிய வீடுகளின் மத்தியிலே
வளர்ந்து வளர்ந்து
காவல் நாயும் இரும்புக் கதவும்
ஓங்கு மதிற் சுவர்களுமாய்
நாம் மாறியபோதோ-
வலியறியாதவர்களாயும் ஆனோம்?

இந்நிலையிலும்
நம் குழந்தைகளுக்கு நம் இல்லங்கள்
கதகதப்பான கருமுட்டைச் சுவர்களாய்க்
கசிந்து உற்றதெப்படி?

கூட்டை உடைத்துக்கொண்டு
கண்டம் விட்டுக் கண்டம் போய்ப்
படிக்கவும் வாழவும்
அவர்களை உந்தும்
ஆற்றலும் நிகழ்களமும்தான் யாவை?

இன்றின் பெருமழைகளிலும்
புயல்களிலும்
ஆழிப் பேரலைகளிலும்
நில நடுக்கங்களிலும்
ஒலிக்கும் இவ் வேதனையின்
பொருள்தான் என்ன?

Read more...

Friday, May 27, 2011

அந்த முகம்

லட்சுமி லட்சுமி என்று
ஒரு சிறுமி இருந்தாள்.
அவள் தன் தம்பிப் பாப்பாவை
பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை
உரிய வயதில் பள்ளிக்கூடம்
காணாது போக்கிற்று.
காலங் கடந்து சென்று படித்த படிப்பும்
அம்மாவுடன் வேலை செய்ய வேண்டி
பாதியில் முடிந்தது. அப்புறம்
வெளியே போயும் வேலை செய்து
தன் முதுகொடித்துக் கொண்டாள்.

கல்யாணமாவதற்குத்தான்
என்ன பாடு பட்டு விட்டார்கள்
அவள் பெற்றோர்
ஆனால் கல்யாணமாகியும்
அவளுக்கு ஒரு வாழ்க்கை
அமையாது போனதுதான் என்ன கொடுமை.
மாமியாரும் நாத்தனாரும் கொழுந்தனாரும்
அவளைக் கூறுபோட
ஓய்வில்லா வேலைகளையும் அவமானங்களையும்
கேட்கவோ பகிர்ந்துகொள்ளவோ
இரவிலும்
அவள் கணவனுக்கு
ஒழியவே இல்லை நேரம்
அவனும் அமைதியில்லாமல்
அவள்மீதே எரிந்துவிழுந்து கொண்டிருந்தான்
எல்லாவற்றுக்கும்.

கல்யாணத்திற்கு முன்பிருந்த
ஒரு சின்னக் கனவுக்கும் கூட
வழியற்றுப் போன வாழ்க்கை எனினும்
ஒருநாள் திடீரெனக் காதல் தேவதை
அவள் மீது இரங்கி ஒரு பரிசளித்தது.

நோயில் படுத்த லட்சுமி
எழுந்திருக்கவேயில்லை.
அவள் படுக்கையைச் சுற்றிச் சுற்றி
நோயாளிப் பெண்ணை
ஏமாற்றிக் கட்டிக் கொடுத்துவிட்டதாய்-
(பரிசு ரகசியம் அவர்களுக்கென்ன தெரியும்?)
அவள் பெற்றோரை வசைபாடிக் கொண்டிருந்த
கணவன் குடும்பத்தையும் விட்டு
தப்பிச் சென்று விட்டாள் அவள்.
குழிக்குள் பிடிமண் அள்ளிப்போடக்
குனிந்த வேளை
நான் அதிர்ந்து போனேன்
பொழுது பூத்த தாமரைமலராய்
அப்படியொரு நிறைவும் அமைதியும் ஒளிர்ந்த முகத்தை
முதன்முதலாய்
காணப்பெற்றவனாய்.

துயரங்களினின்றும்
மானுடம் விடுதலை பெறுவதற்கான
ஞானத்தை அடையத் தடையாயிருப்பது
துயரங்கள்தாம்
என உரைத்துக்கொண்டிருந்த்து
அந்த முகம்.

Read more...

Thursday, May 26, 2011

புதிய பேருந்து நிலையம்

ஒளியும் காற்றும்
வெள்ளமாய்ப் பொங்கிநிற்கும்
பேருந்து நிலையம் வந்து நின்றார்
புத்தர்.

வெளியினின்றும் வெளியினைப் பிரிக்கும்
பக்கச் சுவர்களில்லாத
தியான மண்டபம்
சுரணையை மழுங்கடிக்காததும்
போர் வித்துக்களை விதைக்காததும்
வாழ்வைக் கொள்ளையடிக்காததும்
வாழ்வை விட்டுத் தள்ளிநின்று
வாழ்வைக் கொன்றழிக்காததுமான
கோயில்.

‘வானமும் பூமியும்’ எனும் சிற்பம்
பிரக்ஞையை அழிக்காததும்
சொற்களால் மெய்மையைச்
சிதறடிக்காததும்
வெறும் பொழுதுபோக்காகி விடாததுமான
உன்னதக் கலைக் கட்டடம்.

பிரக்ஞையற்றும் சுரணையற்றும்
வந்தும் நின்றும் போயும்
கொண்டிருக்கும் மனிதர்கள்
நீங்காது நிற்கும் துயரங்கள்.

Read more...

Wednesday, May 25, 2011

பிழை

ஒரு பெரும் பிழை
நிகழ்ந்து விட்டது போலிருந்தது.

மாபெரும் விழாக்
கூட்டத்தின் மையமாய்
கடவுள் சிலை.
கூடியிருந்த
மானுடரனைவரையும் நச்சி
அவர் தம் ஆற்றல் அழகு
அனைத்தையும் ஒட்ட உறிஞ்சி
அழியாப் பெருவல்லமையுடன்
ஒளிரும் சிலை.

Read more...

Tuesday, May 24, 2011

கண்ணீரில் கரைந்துவிட்டன

கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும்
அக்காவிற்கு
ஒரு கவிஞன் தான்பாலாயக்கு
என்றாள் தங்கச்சிக்காரி.

மழைக் காலக் கோலம்போல்
கண்ணீரில் கரைந்துவிட்டன,
இப் பூமியின் இயற்கை எழிலை மோகித்து
ஆளரவமற்ற வனாந்தரத்து ஏரியருகே
முழுநிலாவினின்று இறங்கும்
படிக்கட்டுகள் வழியாய்
ஒரு காதல் இணை வந்து
இளைப்பாறிச் செல்லும் கற்பனைகள்.

இந்த முழு நிலா நாளில்
நம் துயரங்கள் தெளிவாகிவிட்டன.
அத்துடன் வழிகளும்.
இனி நடை ஒன்றுதான் பாக்கி.
இப் புவியின் இயற்கை எழிலை மோகித்து
நாமிங்கே இளைப்பாறி இன்புற.

Read more...

Monday, May 23, 2011

நித்திய கல்யாணி

அது ஓய்வின்றி ஒழிவின்றி
எப்போதும் தன்னைத்
தன் மலர்களாலேயே அலங்கரித்துக்கொண்டு
தன் ஒரே லட்சியத்தில்
உறுதியாய் வாழ்ந்துகொண்டு
காற்றில் நடனமிட்டுக்கொண்டிருக்கும்
ஓர் அழகு.
தான் கண்டுகொண்ட அந்த இடத்தைவிட்டு
ஒருகாலும் நகராதிருக்க
தன் வேர்கொண்டு அது பற்றியிருக்கும் மண்.
எவர் கண்ணுக்கும் புலனாகாத பொன்.
தன் நெடுங்காலத் தவத்தின்மூலம்
தன் பச்சையத்தில் அது பற்றியிருக்கும் விஷம்
மிருகங்கள் அது தன்னை அண்டாதிருக்கமட்டுமின்றி
அனைத்து நோய்களுக்குமான மருந்தும்.
அந்திக் கருக்கல்களிலும் அதிகாலைப் பொழுதுகளிலும்
இரவுகளிலும் பகல்களிலும்
அதன் வெண்மலர்கள் வீசும்
அம்ருதப் பேரொளி.

Read more...

Sunday, May 22, 2011

பேசாத சொற்கள்

மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
இந்த மைனாக்களின் குரல்களில்
வேப்பம் பழத்தின் இனிமை
இந்த மெளனத்தின் இதழ்களில்
சொற்கத்தின் இனிமை
எனினும் இங்கேதும் நிரந்தரமல்ல
அமைதியும் அழிந்து அக்கினி வறுக்கும்
காவ் காவ் என்று கரைகின்றன இன்று
கறுப்பு பறவை அலைகள் எங்கும்
நானா எப்படி என்றென் திகைப்பு
அறிந்தது போலும் தோன்றும்
அப்போது
தெய்வத்தின் குரல் போல
உதிக்கும் சில சொற்கள்
"நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்
நீ பேசாத சொற்களைப் பேசு"

Read more...

Saturday, May 21, 2011

புலியின் தனிமை

[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி
மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட 'கருணையாளர்கள் '
யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்
[ஆ]
ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!
அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ
தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!
[இ]
தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.

Read more...

Friday, May 20, 2011

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய்
விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை!
நம் ஒற்றை உடன் நாடுவதோ
ஒன்றே ஒன்று.
எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து
ஒவ்வொன்றின்மீதும் படர்ந்து பிரிந்து
தேர்ந்தெடுத்த ஒன்றின் மேலே
தன் அத்தனைக் காதலையும்
கொட்டிக் குவித்தவாறே
முத்தமிட்டு அணைத்துத்
தன் மெய்மறந்தவாறே
ஒன்றி
உடுத்துத்
தன் அறையினின்றும் வெளிவரும்
அவள் உதடுகளில் முகிழ்த்திருந்த
புன்னகை சொல்லிற்று
காத்திருந்த அவனிடம்
அவள் காதல் கதைகளின் இரகசியம்.

Read more...

Thursday, May 19, 2011

கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

Read more...

Wednesday, May 18, 2011

சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும்
(ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே)
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு

Read more...

Tuesday, May 17, 2011

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் சாந்தா

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?

கூழாங்கற்கள் -கவிஞர் தேவதேவன்
இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
”ஐயோ இதைப் போய்” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும்?
என எண்ணினேன்
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்

Read more...

Monday, May 16, 2011

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.

Read more...

Sunday, May 15, 2011

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

Read more...

Saturday, May 14, 2011

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.

கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.

Read more...

Friday, May 13, 2011

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
'உள்ளொன்றும் புறமொன்றுமி'னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

Read more...

Thursday, May 12, 2011

என் அறைச் சுவரை அலங்கரிக்கும் நிலக் காட்சி ஓவியம் ஒன்று...

அட, அற்பனே!
யாருக்குச் சொந்தமானது அது?

ஏழைகளுக்கு எட்டாத
சற்று விலையுயர்ந்த அந்த ஓவியத்தை
வாங்கி மேடைபோட்டு முழங்கி வழங்கி
தன் மேலாண்மையை நிறுவிவிட்டதாய் எண்ணும்
மடையனுக்குச் சொந்தமாகுமோ அது?

தனது அரிசிபருப்புக்காய் அதை விற்றுவிட்டதால்
அந்த ஓவியனுக்கு இனி சொந்தமாகாதோ அது?

இன்னும் அதன்கீழ் தன் கையப்பம் காணும்
அவன் கர்வத்தையும் அடக்குமாறு
அது தீட்டப்பெற்றிருக்கும் பலகைக்கு
அவ்வோவியத்தில் கனலும்
வானம், ஒளி, தாவரங்கள்
பேரமைதி கொண்டனவாய்
தன் நிழலிலேயே நின்றபடி
தாழ்ந்து குனிந்து
புல் மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள்
இவர்களுக்குச் சொந்தமானதில்லையா அது?

அனைத்திற்கும் மேலாய் நாம் கண்டுகொள்ள வேண்டிய
அறநியதிகளுக்குச் சொந்தமானதில்லையா அது?

Read more...

Wednesday, May 11, 2011

ஓடும் இரயில் வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும்
அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது?

புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை
நேர்நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.

உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள்போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?

இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுயாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?

வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டியும்
திரும்பி ஓர்நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக்கொண்டோடாதா?

Read more...

Tuesday, May 10, 2011

எனது கவிதை

ஆராய்வோர் யாருமற்று
இயங்கும் ஓர் ஆய்வுக்கூடம் அது
தான் ஆராயும் பொருள் யாது என்று
அதற்குத் தெரியாது

அது தன்னைத்தானே
விளக்கிக் காட்டத் தொடங்கி
முடிவற்று விளக்கிக்கொண்டிருக்க
வேண்டிய கட்டாயத்தில் விழுந்து
பரிதாபமாய் விழிக்கிறது

அதற்கு ஆனந்தம் என்று
பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
அழுதது அது.
அன்பு எனப் பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
உதைத்தது அது.
குழந்தைமை என்றார்கள்;
பேரறிஞனாகித் திமிர்ந்த்து அது.
கருணை என்றார்கள்;
காளியாகி ஊழிக்கூத்தாடியது.
இவ்வாறாய் இவ்வாறாய்
எல்லாப் பெயர்களையும் அது மறுத்தது

தன்னை ஒரு பெயர் சூட்டத்தகும் பொருளாக்கவே
முனைபவர் கண்டு
கண்ணீர்விட்டது அது.
எனினும்
பொருளுலகெங்கும்
ஓர் ஊடுறுவல் பயணம் மேற்கொண்டு
தன் ஆய்வைச் செய்தது அது

எல்லாவற்றைப் பற்றியும்
அது தன் முடிவை வெளியிட்டது
தன்னைப் பற்றி மட்டுமே
அதனால் சொல்ல முடியவில்லை

ஏனெனில்
அது தன்னை அறியவில்லை.
ஏனெனில்
‘தான்’ என்ற ஒன்றே
இல்லாததாயிருந்த்து அது

Read more...

Monday, May 9, 2011

வீடு பெறல்

மனைவியும் குழந்தைகளும்
விருந்தாடச் சென்றிருந்தனர்.
அப்போது எனக்குத் தெரியாது
அதில் உள்ள இரகசியம்

விஷயத்தை அறிந்த வேலைக்காரியும்
வராது ஒழிந்தாள்
வெடுக்கென ஒளி
தன் உடலை மறைப்பதுபோல்

மௌனத்தின் ஆழத்தில்
கரைந்துகொண்டிருக்கும் பாறாங்கற்கள்...
மேற்பரப்பெங்கும்
படரத் தொடங்கியிருக்கும் ஏகாந்தம்...

கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஒழுங்கின் வியப்புடன்
கச்சிதமாக இருந்தது சமையலறை
எனக்கு நானே சமைத்துக்கொண்டு, உண்டு
உடனுக்குடனே பாத்திரங்களையும் பளிச்சென்று
சுத்தம் செய்துவிட்டு
(அதுதான் மிகக் கடினமான வேலையாமே)
ஏகாந்தத்தில் மிதந்து அசைந்துகொண்டிருந்த
என் நாற்காலியில் அமர்ந்தபோது
யாராவது வரவேண்டுமென்றிருந்தது
காரணம்: அவர்களுக்கு நான் என் கையால்
ஒரு டீ போட்டுத் தர முடியும் என்பதே.
வீட்டின் முகமும்கூட முற்றிலும் மாறிவிட்டிருந்தது
ஒரு பாறாங்கல்லே கரைந்துவிட்டது போல்; இனி
புத்தம் புதிய விருந்தினர்களையே
அது எதிர்பார்ப்பதுபோல்

Read more...

Sunday, May 8, 2011

சில அரசியல்வாதிகளையும் ஒரு கவிஞனையும் பற்றிய குட்டிக்கதை

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது

இத்துணை எளிமையாய் உண்மை இருப்பதை
ஏற்க இயலாது வாய் அலறிக் கொண்டிருந்தது மலை.
சில தானியமணிகள் கூடிக் கோஷமிட்டுப் பேசின
அந்த மலையடிவாரம் அமர்ந்து
உலகை உய்விக்க

”முதலில்
பறவைகள் கண்ணில் நாம் பட்டுவிடக்கூடாது
அவசரப்பட்டு
சகதியில் குதித்து அழுகிவிடவும் கூடாது
பத்திரமாய்
களிமண்ணில் போய் புதைந்து கொள்ளவோ
உதிர்ந்த, சருகுகளுக்கடியில் சென்று
பதுங்கிக் கொள்ளவோ வேண்டும்
கதவு தட்டப்படும்போது
வெளிவரத் தயாராயிருக்க வேண்டும்”

அலறி அச்சுறுத்தும் மலைகளின், காடுகளின்
ஒளி நிழல் சலனத்தால்
உருவாகிய புலிகளும் பாம்புகளும்
நம் குரலை எதிரொலிக்கும்
நம் மொழிகள்...

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது
முதலில் அவனுள்ளும்
அப்புறம் அவனைச் சுற்றியும்

Read more...

Saturday, May 7, 2011

கட்டுச் சோறு

எவ்விதம் நான் மனச்சிக்கல்
மிக்கவோர் மனிதனாய் மாறிப்போனேன்?
எவ்விதம் என் மனச்சிக்கல் சேற்றினுள்
பூக்கின்றன தாமரைகள்?

அப்பொழுதையும் அவ்விடத்தையும்
அவர்கள் விட்டேற்றியாய் எதிர்கொண்டதைக் கண்டு
வியப்பும்
நான் தூக்கிக் கொண்டுவந்த சுமையை எண்ணிக்
கூச்சமுமாய்
சஞ்சலத்தில் ஆழ்கிறேன் சகபயணிகள் மத்தியில்
என் கட்டுச்சோற்றை நான் பிரிக்கும்போதெல்லாம்

ஆனால் கட்டுச்சோற்றின் ருசி அலாதி, மேலும்
அதன் சௌகரியமும் நிச்சயத்தன்மையும்
விரும்பத்தகாததா? எல்லாவற்றிற்கும் மேல்
இது ஒன்றும் போதை தரும்
நினைவுகளோ கனவுகளோ அல்லவே.
தூராதி தூரமும் காலமும் கடந்து நீளும்
அன்பின் மெய்மை அன்றோ இது!

அற்புதம்! என அமர்ந்தார்கள்
அவர்கள் என்னோடு.
அங்கங்கு கிடைத்தனவும் என் கட்டுச்சோறும்
கலந்தன உற்சாகத்தோடு

Read more...

Friday, May 6, 2011

கனவுகள்

முலை பருகிக்கொண்டிருக்கும்
சிசுவின் மூடிய இமைக்குள்
தாய்முலையாய் விரிந்த ஒரு சுவர்
பிஞ்சுக் கைவிரலாய் அதில் ஒரு பல்லி
பல்லியை அலைக்கழித்து விளையாடுகிறது
முலைக்காம்புப் பூச்சி

அலைக்கழிக்கும் பூச்சியை மறந்து ஒரு கணம்
தன்னுள் ஆழ்ந்த பல்லியின் கனவில்
தாய்முலை பற்றிப் பால் பருகும் சிசு

முலை திறந்து நிற்கும் தாயின் கனவில்
பாற்கடலில் தவழும் குழந்தை

அலையும் பூச்சியின் இமைக்குள்
பால் சுரக்கும் அகண்டதோர் முலையின்
ஊற்றுவாயாய்த் தான் ஆகும் கனவு

பாலூறும் உணர்வினையும்
பாப்பாவின் தொடுகையையும்
தன் கனவில் அனுபவிக்கும் சுவர்

‘சிறந்ததோர் கனவு கண்டவர்க்குப் பரிசு’
என்ற அறிவிப்பு ஒலிக்கவும்
காணாமற்போன தாயைத் தேடிப் போய்க்
காணாமற்போன என் கவிதையைக்
கனவு கண்டதால்-
எல்லாம் கனவு ஆனதால் நான் விழித்தேன்,
மேலானதோர் யதார்த்தத்தின் முள்படுக்கையில்

Read more...

Thursday, May 5, 2011

பார்த்தல்

ஆளரவமற்ற வனாந்தரத்தின்
நீர் விளிம்பில் நின்றிருக்கும்
நார்சிசஸ் மலரையும்

தன் ஒளியால்
துலங்கும் புவிப் பொருளின் அழகையெல்லாம்
அணு அணுவாய் ரசித்தபடிச் செல்லும்
நிலவையும்

கவியையும்

துயர் தீண்டுவதில்லை ஒருக்காலும்

Read more...

Wednesday, May 4, 2011

விரும்பினேன் நான் என் தந்தையே

பேயோ, தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப் படைத்தது உம்மை என் தந்தையே
”நீ படித்தது போதும்
எல்லோரும் மேற்படிப்புப் படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகளையெல்லாம்
யார் செய்வார்?” என்றறைந்தீர்

கடும் உழைப்பை அஞ்சினேனோ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே-
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனோ?

விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும் மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய்ச் சுற்றி வரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்துக் காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே

வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி நடமாடவும்
சாதி மதம் இனம் நாடு கடந்து அலைகிற
யாத்ரீகப் புன்னகைகள் அருந்தி என் உளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் நான் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடனமாடவும்
விரும்பினேன்

இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்

Read more...

Tuesday, May 3, 2011

ஓநாய்கள்

பசித்த நம் விழிகளில்
உணவின்மீது அழுந்தும்
பற்களின் அசைவில்
ஊறிக் கலக்கும் உமிழ்நீரில்
இன்னும் இருக்கிறதோ அது?

மிருக மூர்க்கத்திற்கும்
கருணைக்குமிடையே
எத்தனை லட்சம் ஆண்டுகளாய்
நடந்துகொண்டிருக்கிறது
இந்தச் சமர்?

உயிரின் உக்கிரமேதான் ஆயின்
அது சக உயிரொன்றிற்குத் துயராதல் அறமாமோ?

ஓநாய்கள் அழிவை நோக்கி
அருகி வருகின்றன என்பது உண்மையா?
அல்லது, நம் இரத்தத்துள் புகுந்து
இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கும்
அதிநவீனத்துவ தந்திரமோ?

மனித அணுக்கத்தாலோ
இரக்கத்தாலோ
என்ன ஒரு பின்வாங்கலோ
ஓநாயின் மரபணுவுள்
ஏதோ நெகிழ்ந்து
திசை மாறி
நாய்கள் பிறந்து
மகத்தானதோர் அறியாமை விழிகளில் மின்ன
வாலாட்டிக்கொண்டு
தாமும் மனிதனை நெருங்குகின்றன?
மனிதனைப் போலவே கனவு காணும் ஒரே மிருகம்!

மனிதனும் நாயும்
நெருங்கிக் குலவிக்
கொஞ்சி மகிழும்
இரகசியமும் இலட்சியமும்தான் என்ன?

Read more...

Monday, May 2, 2011

கோயில் கட்டுதல்

எங்கும் இருப்பவனை
இங்குதான் இருக்கிறானென
எண்ணலும் அறிவாமோ?

எங்கும் திரிபவனை
இங்கேயெ இரு என்று
முடக்குதலும் முறையாமோ?

அவனைக் காணல் இன்றி
நம்மையே அவனில் காணல்
நகைத்தகு கூத்தல்லவா?

எழுப்பிய சுவர்கள்தாம்
இருளுண்டாக்குவதறியாமல்
விளக்கேற்றி வழிபடுதல்
ஒளிகண்டார் செயலாமோ?

Read more...

Sunday, May 1, 2011

நாளின் முடிவில்

களைத்துப்போன என் உடலைப்
படுக்கையில் சாய்க்கும் போதெல்லாம்
உன்னை உணர்கிறேன்.
எத்துணை ஆதரவுடன்
என்னைத் தாங்குகிறாய் நீ!
எத்துணை ஆறுதலுடன்
என் இமைகளை வருடி மூடுகிறாய்!
எத்துணைக் காதலுடன்
இமையாது என்னை உற்று நோக்குகிறாய்!

என்னைத் தூங்க வைத்தபின்
என் தூக்கத்திற்குள்ளும் வந்து விழித்திருப்பாயோ?
ஒரு கணமும் பிரிவென்பதில்லாப் பேரன்புப்
பெருங்கருணை நின் காதல்!
நான் அறிவேன்,
குற்றவுணர்ச்சியாலும் காயங்களாலும்
நான் துயிலின்றிப் புரண்டுகொண்டிருக்கையில்
நீ என் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்பதையும்
அது ஏன் என்பதையும்

இல்லை, அப்போதும் தூர நின்று
என்னைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாய் நீ,
நீச்சல் தெரியாதவனை
நீரில் தள்ளிவிட்டுப் பார்த்து நிற்கும்
முரட்டுத்தனமான நீச்சல் ஆசிரியனைப்போல

Read more...

Saturday, April 30, 2011

சிற்றெறும்பு

வாசிக்க விரித்த பக்கத்தில்
ஒரு சிற்றெறும்பு விரைவது கண்டு
தாமதித்தேன்.
புதிது இல்லை அக்காட்சி,
ஒவ்வொரு முறையும் தவறாமல்
என் நெஞ்சை நெகிழச் செய்யும் அக்காட்சி

அதன் உடல் நோகாத மென்காற்றால்
ஊதி அகற்றிவிட்டு
வாசிப்பைத் தொடரும்
என் வழக்கத்திற்கு மாறாய்
இன்று வெகுநேரம்
அதனையே பார்த்திருந்தேன்

விளிம்பு தாண்டி மறைந்தும்
மீண்டும் சில வினாடிக்குள் தென்பட்டுமாய்
காகிதத்தின் விசித்திரமான கருப்புவெள்ளைப் பரப்பூடே
எத்தனை சுறுசுறுப்பாய் இயங்குகிறது அது

எதைத் தேடி
அது இந்தப் புத்தகப் பாலையூடே
வந்து அலைகிறது?
மூடத்தனமான என் கைகளின் இயக்கத்தால்
மடிந்துவிடாத பேறு பெற்றதுவாய்
இன்னும் உயிரோடிருக்கும் ஒரு பேரின்பமோ?
ஊன் பசிக்கு மேலாய்
நம்மை உந்திச் செல்லும்
பேருந்தலொன்றின் சிற்றுருவோ?

Read more...

Friday, April 29, 2011

அது போகிறது போகிறது

ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில்
மொத்த உலகத் தீமையின்
ஆயிரத்திலொரு பங்கு என் தலையை அழுத்தியது

நான்கு பேராக நாங்களிருக்கையில்
நான்கிலொரு பங்கு என் தலையில்
மூன்று பேராக நாங்களிருக்கையில்
மூன்றிலொரு பங்கு என் தலையில்
இரண்டு பேராக நாங்களிருக்கையில்
இரண்டிலொரு பங்கு என் தலையில்

ஏகாந்த பூதமொன்று வதைத்த்து என்னை
மொத்த உலகத் தீமைக்கும்
மூலகாரணன் நான் என

இந்த்த் துயரமழை கோடானுகோடி வயதான
இந்தப் பாறைகளின் இதயநெருப்பைத் தேடுகிறது
அமைதி கொண்ட துயர்மேகங்களின் நடுவிலிருந்து
எட்டிப் பார்க்கும் சூரியனின் காயங்களுக்கு
மருந்தாகின்றன
இறுதிக் கண்ணீர்த் துளிகளை
அப்போதுதான் உதிர்த்து முடித்த
தாவரக் கடல்களின் பச்சை இலைக்கண்கள்

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
காற்று அலுப்பு நீங்குகிறது
பச்சைக்கடல் பொங்குகிறது
மலை தன் பாரம் இழந்து வெறும் புகைமண்டலமாகிறது
பாறையை ஊடுருவிக் கொண்டிருக்கும்
குருட்டு வண்ணத்துப் பூச்சிக்குக்
குறியாகிறது பாறையின் இதயநெருப்பு
ஒரு பக்கம் பாலாகவும்
ஒரு பக்கம் குருதியாகவும் வழிந்துகொண்டிருக்கும்
விசித்திர அருவிகளைத் தாண்டித்
தாண்டித் தாண்டி அது போகிறது
குகையிருள்களில் உறைந்து போன
கருப்புப் பெண்களை உசுப்பியபடி
தீமையின் வாள் எதிர்க்க
அது தன் உடல் பெருக்கி எழுகையில்
தாக்குண்டு உடல் சரிந்து
உறையாது ஓடும் தன் குருதியின் கரையோரமாய்
அது போகிறது போகிறது
உயிர் பற்றியபடி தன் உயிர் உறிஞ்சும் தாகத்திற்கு
உதவாத தன் குருதி நதியைக் கடந்தபடி
அது போகிறது போகிறது

Read more...

Thursday, April 28, 2011

தென்னைகளும் பனைகளும்

எல்லாத் தாவரங்களும் நீர் விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால்
நெடுநெடுவென வளர்ந்தாள் இவள்
சற்றெ வளைந்து ஒயில்காட்டி நின்றாள்
எப்போதும் அப்போதுதான் குளித்து முடித்தவள்போல் விரித்த
நீள நீளமான தன் தலைமயிரை
காற்றால் கோதியபடியே வானில் பறந்தாள்
முலை முலையாய்க் காய்த்து நின்று
தன் காதலனை நோக்கிக் கண்ணடித்தாள்
மென்மையான தன் மேனி எழிலுடன்

எல்லாத் தாவரங்களும் நீர்விரும்பிகள்தாம்
நீர் நிலைகளினருகே வாழமுடியாது விரட்டப்பட்டதால்
பாலைகளில் வந்து நின்றாள் இவள்
கருகருவெனப் பிடிவாதமாய் வளர்ந்தாள்
உடலெங்கும் சிராய்களுடன்
கருத்த கல்தூணாய்
சிலிர்த்த குத்தீட்டித் தலைமயிர்களுடன்
கடுமை கொண்டவளாய் நிமிர்ந்தாள்;
இவளிடமும் காதல் இருந்தது,
அந்தக் காதல்...

Read more...

Wednesday, April 27, 2011

நதிகளும் நம் பெருங்கோயில்களும்

முடிவற்ற பொறுமையும் நிகரற்ற ஆளுமையுமாய்
ஒளிரும் மலைகள்
முழுமை நோக்கி விரிந்த மலர்கள்
ஒளி விழைந்து நிற்கும் மரங்கள்
செல்லக் குழந்தைகளாய்த் திரியும் பறவைகள்
கவனிப்பாரற்று வீழ்ந்து கிடக்கும் நதியைத்
தூக்கி எடுத்து மடியில் கிடத்திப்
பாலூட்டிக்கொண்டிருக்கும் தாய்மை

தாகங் கொண்ட உயிர்கள் அனைத்தும்
வந்துதானாக வேண்டிய
தண்ணீர்க் கரைகளையே
தந்திரமாய்த் தேர்ந்துகொண்டு
மறைந்துநிற்கும் வேடர்களைப்போல்
கோயில்கள்

நதியினைக் காண்பதேயில்லை
தீர்த்தயாத்திரை செய்யும் பக்தன்!
மலையினைக் கண்டதுண்டோ
மலர்களைக் கண்டதுண்டோ
கோயில்களுக்குள்ளிருக்கும் குருக்கள்?
மரங்களைக் காண்பதேயில்லை
பறவைகளைக் காண்பதேயில்லை
கோயில் பரிபாலனம் செய்யும் அரசு.
மனிதனைக் கண்டதுண்டோ
மெய்மையைக் கண்டதுண்டோ
பக்தி மேற்கொண்டு அலையும் மனிதன்?

ஆற்றங்கரையின் மரமாமோ
தீர்த்தக்கரையின் கோயில்?

Read more...

Tuesday, April 26, 2011

பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்

பறவைகளின் சிறகுகள்

பச்சைப்பனைகளின் நடுவே

ஒரு மொட்டைப் பனை

மொட்டைப்பனை உச்சியிலே

ஓர் பச்சைக்கிளி

அடங்கிவிட்டது

'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்

மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது

இனி இங்கே நான்

செய்யவேண்டியதுதான் என்ன ?

'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து

வழிவிடுவதை தவிர ?


பனைகளின் தலைகளெங்கும்

படபடக்கும் சிறகுகள்

பாவம் அவை பூமியில்

மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

Read more...

எருது

அமர்ந்து அசைபோடும்
மரநிழலையும் மறந்து
வானமும் பூமியுமாய் விரிந்த
நிலக் காட்சியில் ஒன்றிவிட்டனை!

ஏது தீண்டிய அரவம்
உன் தோள்பட்டைச் சதையில்
திடீரென்று ஏற்பட்ட சிலிர்ப்பு?

நொய்மைக்குள் நுழைந்துவிடும்
அந்த வலுமைதான் யாதோ?

சொல்,
மெய்மையை அறிந்துகொண்டதனால்தானோ
ஊமையானாய்?

எங்களை மன்னித்துவிடு,
எங்கள் மொழியில்
உன்னை ஒரு வசைச் சொல்லாய் மட்டுமே
வைத்திருந்ததற்காக

இன்று பார்க்கத் தொடங்கிவிட்டோம் நாங்கள்,
கால்மடக்கி அமர்ந்திருக்கும் உன்பாறைமையை,
காட்டில்
சிங்கத்தினை எதிர்க்கும் உன் உயிர்மையினை
உன் நடையும் நிதானமும் வாலசைவும்
பறைபோல ஒலிக்கும் உன் குரலும்
அமைதியாக எமக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதை

Read more...

Monday, April 25, 2011

தாழிட்ட கதவின் முன்

1
தாழிட்ட கதவின்முன் நிற்கும்
மனிதனிடம் ஓடிவந்து
“இந்தாங்க மாமா“ எனத்
தன் பிஞ்சுக் குரலுடன் நீட்டுகிறது
அண்டை வீட்டுக் குழந்தை
அனைத்துப் பிணிகளுக்குமான மாமருந்தை
விடுதலையின் பாதை சுட்டும் பேரொளியை
சொர்க்கத்தின் திறவுகோலை!

2
தாழிட்ட கதவின்முன்
பொருமி நிற்பதன்றி
களங்கமின்மை பற்றி
நாம் அறிந்துள்ளோமா?
அறிந்துள்ளோம் எனில்
களங்கங்கள் பற்றியும்
நாம் அறிவோமில்லையா?
அறிவோமெனில்
அவற்றை ஏன் இன்னும்
ஒழிக்காமற் பேணிக்கொண்டிருக்கிறோம்?
சாதி மதம் நாடு இனம் என்று
நம்மைக் களங்கப்படுத்தும் பிசாசுகளின்
இருப்பிடமும் பாதைகளுமாய் நாம் ஆனதெப்படி?
களங்கமின்மையின் இரகசியத்தை
நாம் ஏன் இன்னும் காண மறுக்கிறோம்?

Read more...

பன்னீர் மரக் கன்று

நான் தேடிய நல்ல உயரமான
ஒரு பன்னீர்க் கன்றை
தான் வைத்திருப்பதாயும்
தரக்கூடியதாயும் சொன்ன
எனது மாணவச் சிறுவனின்
வீட்டையும் அந்தக் கன்றையும்
நேரில் சென்று பார்த்துவைத்தாயிற்று

அவனிடமிருந்து அதனைப் பக்குவமாய்ப் பெயர்த்துவர
இந்த வெங்கோடைப் புவிப்பரப்பில்
ஒரு விடிகாலை அல்லது அந்திதானே
உத்தமமான நேரம்?
தன் மலர்மரக் கன்றோடு
முடிவற்ற பொறுமையுடன்
எனக்காக அந்தச் சிறுவன் காத்திருக்க,
ஒவ்வொரு நாளும் மடிமிகுந்து விடிகாலையையும்
அலுப்புமிகுந்து அந்தியையும்
நெடிய மறதியினாலும் தூக்கத்தினாலும்
அநியாயமாய்த் தவறவிடுகிறேன்

காத்திருப்போ கவலைகளோ அற்ற பொன்னுலகில் இருந்தபடி
பூத்துச் சொரிந்துகொண்டு
நீ கொலுவீற்றிருக்கிறதைக் கண்ணுற்றவேளைதான்
உன் மர்மமான புன்னகை ஒன்று காட்டிக்கொடுத்துவிட்டது;
எங்களுக்கு மாயமான கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தது
யார் என்பதை

Read more...

Sunday, April 24, 2011

மலை

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?

அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

Read more...

பைத்தியம்

உன் வாசலுக்கு நான் வந்தபோது
நீ வெளியே சென்றிருந்தாயோ?
சற்றுநேரம்
உன் இருக்கையில் அமர்ந்தேன்
உன் மெத்தையில் புரண்டேன்
உன் ஆடைகளை அணிந்தேன்
உன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து
அந்த ஆப்பிளோடு
ஏதேதோ சிலவற்றையும்
எடுத்துப் புசித்துவிட்டேன்
நீ வருவதற்குமுன்
வெட்கம் என்னைப் பிடுங்குவதற்குமுன்
எடுத்தவற்றையெல்லாம் விட்டுவிட்டு
ஓடிவந்துவிட்டேன்.
வெறுங்கையோடு
வீதிகளில் அலைந்துகொண்டு
ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி
எவர் இதயத்தையும் கவர முடியாது
வெறுங்கையொடே திரும்பவும் திரும்பவும்
வீதிகளில் அலைகிறேன்
உன் வாசலுக்கு நான் வந்தபோதெல்லாம்
நீ வெளியே சென்றிருந்தாய்.
தன் வீட்டைவிட்டு வெளியேறி
அவ்வப்போது
யாருடையதையோ போல் வந்து பார்த்துவிட்டு
எப்போதும் யாசகனாய் வீதியில் அலையும்
ஒரு பிச்சைக்காரப் பைத்தியத்தைத் குறித்து
மக்கள் பேசிக் கொண்டனர்
நான் உன்னை நினைத்துக் கொண்டேன்
மக்களோ என்னைப் பார்த்துச் சிரித்தனர்

Read more...

Saturday, April 23, 2011

ஓராயிரம் வாட்கள்!

நான் பார்க்கவில்லை என நினைத்து
இரண்டு குட்டிப் பையன்கள்
மூலையிலிருந்த பெருக்குமாற்றிலிருந்து
இரண்டு ஈக்கிகளை உருவி
வாள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்

என்னைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள்.
நான் கேட்டுக் கொண்டேன்;
‘ சண்டையிடுவதா நமது வேலை?‘

பணி, சாதனை, தீரச் செயல்
அனைத்தையும் குறிக்கும் ஒரு பெரும் சொல்லை
அப்பெருக்குமாற்றை வெறித்தபடி என் வாய் முணு முணுத்தது:
“துப்புரவு செய்தல்”

ஓராயிரம் வாட்களையும்
முஷ்டி கனல
ஓர் ஈக்கிப் பெருக்குமாறாக
ஒன்றுசேர்த்து இணைத்துக் கட்டி,
ஒரு தூரிகையைப் போலவோ
ஒரு பூங்கொத்தைப் போலவோ
ஒரு பெருவாளைப் போலவோ
எளிமையாய்க் கையிலேந்தல்

Read more...

அலுவலகம் போகாமல் வீட்டில் தங்க நேர்ந்துவிட்ட ஒரு பகல் வேளை

அன்றுதான் வீட்டை
நான் முதன்முதலாய்க் கவனித்த்து போலிருந்த்து.
தன் இரகசியத்தை முணுமுணுக்கும் வீட்டின் குரலாய்
சமையலறையில் புழங்கும் ஒலிகள்.
வெளியே மரக்கிளைகளிலிருந்து புள்ளினங்களினதும்
சுவரோரமாய் நடந்துசென்ற பூனையினதும்
சாலையின் அவ்வப்போதைய வாகனங்களினதும்
தலைச்சுமை வியாபாரிகளினதுமான
ஸ்படிகக் குரல்கள்-
வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலை அன்று கேட்டேன்

திடீரென்று வெளி அனுப்பிவைத்த தூதாய்
எளிய ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்.
வியப்புமிக்க மரியாதையோடு
வீட்டுக்காரி தன்னையும் தன் பணிகளையும்
அந்த வேலைக்காரியோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்
அந்த சந்திப்பில்
மீண்டும் வீட்டிற்கும் வெளிக்கும் நடந்த
ஓர் உரையாடலைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்

Read more...

Friday, April 22, 2011

அக்கரை இருள்

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி

இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி

என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல

நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்

அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .

Read more...

நீயும் நானும்

ஒரு தேநீர்க் குவளையை
நீ கொண்டுவரும் பக்குவம் கண்டு
பெருவியப்பும் பேரானந்தமும் கொள்கிறது
இந்த வையகம்
நான் பருகுகிறேன்
எனது மொத்த வாழ்வும்
இப் பிரபஞ்ச முழுமையின் சாரமுமே
அதுவேதான் என்றுணர்ந்துவிட்டவனாய்

நிறைவெறுமையும் அலுங்காத
அதீத கவனத்துடன் அவ்வெற்றுக் குவளையை
நீ எடுத்துக்கொண்டு செல்லும் பாங்கு கண்டு
அரிதான அவ்வெறுமைதான் காதல் என்பதைக் கண்டு
நீ தான் அக் குவளையில்
மீண்டும் மீண்டும் பெய்யப்படும் என் நிறைவு
என்பதையும் கண்டு
நான் வெறுமையாகி நிற்கிறேன்

நான் உன் மடியிலிருக்கையில்
ஒரு கவலையுமில்லை எனக்கு
நீ என் மடியிலிருக்கையிலோ
என் நெஞ்சு வெடித்துவிடும் போன்ற
என் கவலைகளின் பாரத்தை என்னென்பேன்!

Read more...

Thursday, April 21, 2011

மேகம் தவழும் வான்விழியே

மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?

எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?

அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?

கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன

Read more...

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும்
காலி குப்பை வண்டியின் உள்ளே
ஆறஅமர கால்மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஓர் அழகான தேவதைபோல்
சென்றுகொண்டிருக்கும் பெண்ணே,

முகஞ் சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலகம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச் சாலை நடுவே...
பணிநேரம் முடிந்த ஓய்வமைதியோ,
மாடு கற்பித்த ஆசுவாசமோ, இல்லை,
அபூர்வமாய் ஒளிரும் பேரமைதியேதானோ...

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு
வாழ்ந்தே விடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ துடிக்கிறதேயம்மா
என் இதயம்

Read more...

Wednesday, April 20, 2011

நான் அவன் மற்றும் ஒரு மலர்

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

Read more...

பனித்துளிகள்

1.
அந்திவரை வாழப் போகும்
பூவின் மடியில்
அந்தக் காலைப் பொழுதிலேயே
மடிந்துவிடப் போகும்
பனித் துளிதான்
எத்தனை அழகு!

2.
மலரின் நெடிய வாழ்க்கையில்
அவளுக்கு மரணத்தைச் சொல்லிக்கொடுக்க
இளமையிலேயே கிடைத்த தோழி

3.
ஒருவன் தனக்கெனப் பிடித்துப்
பதுக்கி வைத்துக்கொள்ள முடியாத
தனிப் பெரும் மதிப்புமிக்க
அதிசய முத்துக்கள்

4.
நீ அறிந்தவை துளிதான் துளிதான் என்கின்றன,
அவ்வதிகாலைப் போதில்-
மலர்கள் மீதும் வனத்தின் மீதும்
இலைகளின் மீதெல்லாம்
முறுவலிக்கும் துளிகள்

Read more...

Tuesday, April 19, 2011

தேவதேவனின் பிரக்ஞை உலகம் - காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

Read more...

பயணம்

அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற் பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

Read more...

Monday, April 18, 2011

பட்டறை

என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.

Read more...

வேலி

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த ஈரச்சேலை பற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

Read more...

Sunday, April 17, 2011

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது

அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிீந்திராதது அது .

Read more...

ஒரு வெண்புறா

‘ஒரு சிறு புல்லும்
குளிர்ந்த காற்றலைகள் வீசிவரும் வெளியும்
போதுமே.
அத்தோடு உன் அன்பு...
கிடைத்தால் அது ஒரு
கூடுதல் ஆனந்தமே’

உன் நினைவுகளில்
சுகிக்கும் சோகிக்கும்
அந்த மரத்திலிருந்து நழுவுகிறது
ஒரு வெண்புறா
பறந்தோடி வந்து அது
அமர்கிறது உன் மென்தோளில்!
அதன் பயணம்
யாரும் காணாததோர் ரகசியம்!

Read more...

Saturday, April 16, 2011

இறையியல்

'ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. '
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்.... அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

Read more...

முன்னுரை

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையைப் பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும் போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும் போதோ,
நீ ஒரு பொய்யன், துரோகி, கோழை!
ஏனெனில்
உண்மை, நீ உன் விருப்பத்திற்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடுவதற்குப்
பணிந்து விடும் பசுமாடு அல்ல;
நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்தத்தில் நனைந்த போர்வாள்கள்!

Read more...

Friday, April 15, 2011

வெற்றுக்குவளை

வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்

Read more...

எங்கே இருக்கிறேன் நான்?

நிலவைக் குறிவைத்து
காலமற்ற வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததும்
தவறிற்று, மனிதனைத் குறிவைத்து
உலகின் இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருந்ததும்
தவறிற்று

எங்கே இருக்கிறேன் நான்?

குடிசைக்கு வெளியே
நிலவு நோக்கி மலர்ந்துகிடந்த கயிற்றுக்கட்டிலும்
வெறுமையோடி நிற்கிறது
இரகசியத்தின் மௌனத்துடன்
நிலவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது நதி;
அதில் ஒரு காகிதப்படகு போல் என் குடிசை

ஆனந்தத்தின் கரையை அடைந்திருந்தன
என் கால்கள்

Read more...

Thursday, April 14, 2011

நிசி

இரை பொறுக்கவும்
முட்டை இடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
வானவெளிப்பறவை ஒன்று

இட்ட ஒரு பகல் முட்டையின்
உட்கரு நிசியுள்
பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்
உறங்காது துடிக்கும் நான்
என் அவஸ்தைகள்
கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா
பரிணாம கதியில்மனிதனை புதுக்கி
ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா

பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி
இரவெல்லாம் தெறிக்கும்
என் சிந்தனைகள் வேதனைகள்

ஏன் இவ்வேதனை ?
எதற்கு இச்சிந்தனைகள் ?

நானே அறியாது
என்னில் கலக்கும் ஜீன்கள்
கருவே அறியாது
கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?

இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்
என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்
நான் என்று பிறப்பேன் ?

அல்ல மீண்டும் மீண்டும்
முட்டை இடவும் இரை ப்றுக்கவும்
இரைக்காய் சக ஜீவிகளுடன்
போராடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
அதே வானவெளிபறவையாக

Read more...

Wednesday, April 13, 2011

வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?

மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !

ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி

உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்

சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி

தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!

Read more...

ஒரு துளித் தசைமணம்

கருணையின் மஞ்சுப் பரவல்களூடே
உள்ளங்கால்கள் உணரும் சிகரம்
பார்வையின் கீழ்
ஒரு பள்ளத்தாக்குக் கிரகம்
நெஞ்சின் கீழ் ஒரு பேரமைதி
நினைவு என ஏதுமில்லா
ஆனந்தத்தின் நிர்விசாரம்
வந்துவிட்டோம் வந்துவிட்டோம் எனக்
குதூகலிக்கும் நெஞ்சம்
ஆசீர்வதிக்கிறது
ஒவ்வொருவர் விழிகளினுள்ளும் நிறைந்து
காணும் ஒவ்வொருவரையும்

Read more...

Tuesday, April 12, 2011

மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை

கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்

ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்

அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு

சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்

அன்றுமுதல் கடவுளைக் காணோம்

இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை

Read more...

மரத்தின் உருவம்

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது.
இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்து என்று சொன்னதும்
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்

Read more...

Monday, April 11, 2011

இந்தத் தொழில்

கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்

அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?

சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.

Read more...

அவனுக்குத் தெரியும்

துக்கமா?
இல்லை, வெறும் மௌனம் தானா?
எதையும் ஊடுறுவக் கூடியதும்
எதனாலும் தகர்க்க முடியாததுமான
அந்த வலிய மௌனத்தைச் சொல்கிறேன்.
இல்லை, இந்த மௌனம் ஒரு தூண்டில் முள்ளோ?
தொண்டையில் முள்சிக்கிய
ஒரு புழு உண்டோ அதன் அடியில்?

சிறு மீனுக்காகப் பசித்திருக்கிறாயோ?
வேதனைப்படுகிறாயோ?
சிறுமீனுக்காகப் பசித்திருக்கையில்
கடல் வந்து அகப்பட்டதெண்ணிக்
கைப்படைகிறாயோ?
அயராதே.
எழுப்பு உன்னுள் உறங்கும் மாவீரனை, தீரனை
அவனுக்குத் தெரியும்
கடலை தூண்டிற் பொறியாக்கிச்
சிறுமீன் பிடித்துப் பசியாற

Read more...

Sunday, April 10, 2011

உருமாற்றம்

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

Read more...

மகாகாரியம் மகாகாவியம்

மழை பெய்து
நீலம் கனிந்த
விண்ணின் கீழ்
மழை பெய்து
பச்சை விரிந்த
மணிணின் மேல்
புள்ளி புள்ளி
இரத்தத் துளிகளாய்
விரைகின்றன விரைகின்றன
பட்டுப் பூச்சிகள்
எங்கோ ஏதோ
ஓர் அழகியல் பிரச்னையை
அவசரமாய்த் தீர்க்க

Read more...

Saturday, April 9, 2011

ஒரு பரிசோதனையும் கவலையும்

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்

பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்

தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்

கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்

Read more...

உறுத்தல்

அது செய்த பாவம் என்ன?
தான் அதுநாள் வரை படு உற்சாகமாய்ப்
பற்றிச் சென்றுகொண்டிருந்த நூல்பிரிஏணி
ஓர் இருள் வட்டம்தான் என உணர்ந்தவுடன்
விட்டு விலகி நடந்ததா?
அக் கணமே அச் சிற்றெறும்பு
மனிதனாக மாறிவிடும் என்ற
அச்சம் தன் உடம்பில் ஊறவும்
இரத்தக் கறை படிய அதைத் தேய்த்து எறிவோனே,
மனமிரங்கி
அதனை நோகாமல் தொட்டு விலக்கலாகாதா,
நம் பூணூலும் ஒரு நாள் உறுத்தும் வேளை
அதை எப்படி நீக்குவோமோ, அப்படி?

Read more...

Friday, April 8, 2011

கடவுளே

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?

வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

Read more...

பொன் இருள் தீபம்

அறியாமையின் பொன் இருள் உன் கண்களில்;
உன் மடியில் பால் கறந்துகொண்டிருக்கும்
அந்த மனிதனின் கண்களிலோ
அனுபவத்தின் ரணம்படிந்த இயலாமைகள்;
வறண்ட தாவரம்போல் நிற்கும்
அவன் மனைவியின் கண்களிலோ
துயரங்களின் ஆறாத காயங்கள்;
கைக்குழந்தையின் வட்டமுகம் முழுக்க
அச்சத்தின் திக்பிரமைக் கறை;
முற்றத்தில் துள்ளி பாண்டி ஆடிக்கொண்டிருக்கும்
சிறுமியிடம் சற்றே எட்டிப் பார்க்கிறது
வாழ்வின் துளி இன்பம்,
பொன் இருளில் ஒளிரும் தீபம்

Read more...

Thursday, April 7, 2011

பக்த கோடிகள்

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

Read more...

கடற்கரை

கடலோரம் வெளிக்கிருந்து
கால் கழுவி எழுந்தபின் தான்
கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று
மூச்சுவிட மறந்து என் மிதிவண்டியும்
அதை உற்றுப்பார்த்தபடி நின்றிருந்தது

இனி எங்கள் பயணம்
புதியதாய் இருக்கும்போல் உணர்ந்தோம்
அப்போது
பின்னிருந்து ஒரு குரல் கேட்டுத்
துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தோம்;
வான் இடையில் கடல் குழந்தை
கைகள் அலைத்து விடைகொடுத்தது

அப்புறம் வந்து சேர்ந்தோம்
வால் நக்ஷத்ரம் ஒன்றால் அழைத்து வரப்பட்ட
சக்கரவர்த்திகள் போல்;
காதலரும் குழந்தைகளும்
காற்றில் வாழும் இன்னொரு கரைக்கு

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP