Monday, May 9, 2011

வீடு பெறல்

மனைவியும் குழந்தைகளும்
விருந்தாடச் சென்றிருந்தனர்.
அப்போது எனக்குத் தெரியாது
அதில் உள்ள இரகசியம்

விஷயத்தை அறிந்த வேலைக்காரியும்
வராது ஒழிந்தாள்
வெடுக்கென ஒளி
தன் உடலை மறைப்பதுபோல்

மௌனத்தின் ஆழத்தில்
கரைந்துகொண்டிருக்கும் பாறாங்கற்கள்...
மேற்பரப்பெங்கும்
படரத் தொடங்கியிருக்கும் ஏகாந்தம்...

கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஒழுங்கின் வியப்புடன்
கச்சிதமாக இருந்தது சமையலறை
எனக்கு நானே சமைத்துக்கொண்டு, உண்டு
உடனுக்குடனே பாத்திரங்களையும் பளிச்சென்று
சுத்தம் செய்துவிட்டு
(அதுதான் மிகக் கடினமான வேலையாமே)
ஏகாந்தத்தில் மிதந்து அசைந்துகொண்டிருந்த
என் நாற்காலியில் அமர்ந்தபோது
யாராவது வரவேண்டுமென்றிருந்தது
காரணம்: அவர்களுக்கு நான் என் கையால்
ஒரு டீ போட்டுத் தர முடியும் என்பதே.
வீட்டின் முகமும்கூட முற்றிலும் மாறிவிட்டிருந்தது
ஒரு பாறாங்கல்லே கரைந்துவிட்டது போல்; இனி
புத்தம் புதிய விருந்தினர்களையே
அது எதிர்பார்ப்பதுபோல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP