Sunday, May 8, 2011

சில அரசியல்வாதிகளையும் ஒரு கவிஞனையும் பற்றிய குட்டிக்கதை

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது

இத்துணை எளிமையாய் உண்மை இருப்பதை
ஏற்க இயலாது வாய் அலறிக் கொண்டிருந்தது மலை.
சில தானியமணிகள் கூடிக் கோஷமிட்டுப் பேசின
அந்த மலையடிவாரம் அமர்ந்து
உலகை உய்விக்க

”முதலில்
பறவைகள் கண்ணில் நாம் பட்டுவிடக்கூடாது
அவசரப்பட்டு
சகதியில் குதித்து அழுகிவிடவும் கூடாது
பத்திரமாய்
களிமண்ணில் போய் புதைந்து கொள்ளவோ
உதிர்ந்த, சருகுகளுக்கடியில் சென்று
பதுங்கிக் கொள்ளவோ வேண்டும்
கதவு தட்டப்படும்போது
வெளிவரத் தயாராயிருக்க வேண்டும்”

அலறி அச்சுறுத்தும் மலைகளின், காடுகளின்
ஒளி நிழல் சலனத்தால்
உருவாகிய புலிகளும் பாம்புகளும்
நம் குரலை எதிரொலிக்கும்
நம் மொழிகள்...

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது
எல்லாம் சரியாகிவிட்டிருந்தது
முதலில் அவனுள்ளும்
அப்புறம் அவனைச் சுற்றியும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP