Tuesday, May 10, 2011

எனது கவிதை

ஆராய்வோர் யாருமற்று
இயங்கும் ஓர் ஆய்வுக்கூடம் அது
தான் ஆராயும் பொருள் யாது என்று
அதற்குத் தெரியாது

அது தன்னைத்தானே
விளக்கிக் காட்டத் தொடங்கி
முடிவற்று விளக்கிக்கொண்டிருக்க
வேண்டிய கட்டாயத்தில் விழுந்து
பரிதாபமாய் விழிக்கிறது

அதற்கு ஆனந்தம் என்று
பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
அழுதது அது.
அன்பு எனப் பெயர் சூட்டிப் பார்த்தார்கள்;
உதைத்தது அது.
குழந்தைமை என்றார்கள்;
பேரறிஞனாகித் திமிர்ந்த்து அது.
கருணை என்றார்கள்;
காளியாகி ஊழிக்கூத்தாடியது.
இவ்வாறாய் இவ்வாறாய்
எல்லாப் பெயர்களையும் அது மறுத்தது

தன்னை ஒரு பெயர் சூட்டத்தகும் பொருளாக்கவே
முனைபவர் கண்டு
கண்ணீர்விட்டது அது.
எனினும்
பொருளுலகெங்கும்
ஓர் ஊடுறுவல் பயணம் மேற்கொண்டு
தன் ஆய்வைச் செய்தது அது

எல்லாவற்றைப் பற்றியும்
அது தன் முடிவை வெளியிட்டது
தன்னைப் பற்றி மட்டுமே
அதனால் சொல்ல முடியவில்லை

ஏனெனில்
அது தன்னை அறியவில்லை.
ஏனெனில்
‘தான்’ என்ற ஒன்றே
இல்லாததாயிருந்த்து அது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP