Sunday, May 1, 2011

நாளின் முடிவில்

களைத்துப்போன என் உடலைப்
படுக்கையில் சாய்க்கும் போதெல்லாம்
உன்னை உணர்கிறேன்.
எத்துணை ஆதரவுடன்
என்னைத் தாங்குகிறாய் நீ!
எத்துணை ஆறுதலுடன்
என் இமைகளை வருடி மூடுகிறாய்!
எத்துணைக் காதலுடன்
இமையாது என்னை உற்று நோக்குகிறாய்!

என்னைத் தூங்க வைத்தபின்
என் தூக்கத்திற்குள்ளும் வந்து விழித்திருப்பாயோ?
ஒரு கணமும் பிரிவென்பதில்லாப் பேரன்புப்
பெருங்கருணை நின் காதல்!
நான் அறிவேன்,
குற்றவுணர்ச்சியாலும் காயங்களாலும்
நான் துயிலின்றிப் புரண்டுகொண்டிருக்கையில்
நீ என் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்பதையும்
அது ஏன் என்பதையும்

இல்லை, அப்போதும் தூர நின்று
என்னைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாய் நீ,
நீச்சல் தெரியாதவனை
நீரில் தள்ளிவிட்டுப் பார்த்து நிற்கும்
முரட்டுத்தனமான நீச்சல் ஆசிரியனைப்போல

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP