Sunday, May 19, 2013

தப்பமுடியாமை

ஓடும் ரயில் வண்டியின்
ஆபத்துச் சங்கிலி இழுத்து
அகப்பட்டு அடி வாங்கிய
பைத்தியத்தின் வேதனையோ
கண்களிற் பொங்கிக்
காட்சிகளையெல்லாம் மறைக்கும்
இந்தத் துயர்?

ஜன்னலுக்கு வெளியே
தாவும் வெறிகொண்டு
உடல் சிதறிப் போகாமல்,
ஏதாவ தொரு நிலையம் வரட்டுமே என்றும்
காத்திருக்காமல்,
எவர் தயவும் எப்பயமும் இல்லாத
அக் கணமே புகுந்துவிட்ட பின்னும்
தீராத்தேன் இந்தத் துயர்?

மனிதர்கள் ஒருவருக்கெதிராய் ஒருவர்
தமக்குள் விஷமேற்றிக் கொண்ட மடமைகளால்
எப்போதும் ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கும்
விஷக் கணைகளின்
விளைவுகளினின்றும் தப்ப முடியாமை
கண்ட விழிப்பும் வேதனையுமோ இது?

விஷத்தின் ஊற்றுக் கண்களையெல்லாம்
அடைக்கவும், அமுதின் ஊற்றுக் கண்கள் எல்லாம்
திறந்து கொள்ள; பிறப்பு இறப்பு இல்லாப்
பெருவாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும்
மனிதனானாலும் சரி,
இதோ இக்கணம்
மலைபோல
அவன் கண்முன் நிற்கும் – மெய்மை –
மாளாத் துயர் – இதுவோ?

அவன் அசையாது நின்று
பார்த்துக்கொண்டிருந்தான்,
கண்முன்னே
உக்கிரமாய் குறுக்கிட்டோடிக் கொண்டிருக்கும்
ரயில் வண்டியினை.

Read more...

Saturday, May 18, 2013

அறைக்குள் ஒரு கட்டில்

அறியாமையாலும் சுரணையின்மையாலும்
தன்னை மறைப்பவர்கள் மீதும் இரங்கி
துயரார்ந்த விழிகளுடன்
அந்த நான்கு சுவர்களுக்குள்ளும்
வந்து நிற்கும் மெய்மை.

வீழ்த்த முடியாத
உறுதியான கால்களும் உடலுமுடைய
ஒரு மவுனம்.

உயிரோ பிணமோ குறைப்பிறவியோ –
பேதமின்றி ஏற்கத் தயாராய்
மலர்ந்திருக்கும்
தூ மலர்ப் படுகை.

உயிரின் உன்னதத்தின்முன்
தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
உன்னதத்தின் பணிவிடை.

நம் பாடுகளையெல்லாம் செவிமடுத்து
அழுகிச் சீழ்வைத்து விடாது
காயங்களாற்றி
தட்டி அரவணைத்து
ஓய்வு கொள்ளச் செய்யும் தாய்மை.

பிறப்பு இறப்பு அறுத்து
உலகைத் தாங்கிக்கொண்டிருக்கும்
பேருயிர்களின்
அணையா விழிப்பு.

அமைதியான கட்டில் –
அதில்
அமைதியின்றிப் புரண்டுகொண்டிருக்கும்
குறைப் பிறவி.

Read more...

Friday, May 17, 2013

பின்புலம்

ஒரு சிறு தாவரம் அது.
அதன் இலைகள் இரண்டொன்று
அதன் கீழ் சருகாகிக் கிடந்தாலும்
அதன் கிளைகளிலே ஒன்றிரண்டு
உதிர்நிலையில் இருந்தாலும்
அதன் கொழுந்துகளில் ஒரு பக்கம்
பூச்சி அரித்து நின்றாலும்
அதனிடம் தான் எத்தனை எக்காளம்
வாய்ச் சவடால்
அவனைப் பார்த்து
இளக்காரமாய்ச் சிரிப்பது போலும்
எத்தனை கெந்தளிப்பு!

இருக்காதா பின்னே
தன் சாதி அந்தஸ்தில் தொடங்கி
இந்த முழு பூமியையுமே
தன்னுலகாக்கிக் கொண்ட
எத்தனை செல்வங்கள்!
எத்தனை சொந்தங்கள்!

அஞ்சியும் அஞ்சாமலும்
தயங்கி ஒடுங்கியவன்போற் செல்லும்
அந்த மனிதனோ
தன் பின்புலங்கள் எதையுமே
பேணாது அழித்துவிட்ட தனியன்.
அத் தாவரம் அவனிடம் கொக்கரிக்கும் போதெல்லாம்
அய்ம்பூதங்களையும் அதிரவைக்கும்
ஒரு வெற்றுக் கணம் கொண்டு
அதைத் தொட்டு உலுக்கிவிட
அவனது பின்புலமற்ற பின்புலமும்
உக்கிரமாய் எழுந்து எரிந்து
அழிந்து கொள்கிறது.

ஒரு பயனுமின்றி
அந்தத் தாவரத்தை நீங்கி
அவன் அமர்ந்திருக்கையிலெல்லாம்
அவனை ஆட்கொண்டு
மகிழ்கிற ஒரு பேருலகம்
அவன் மூலம் பேசத் துடிக்கையில்
அவனும் கவனித்துக் கேட்க வேண்டியதாயிற்று
அவனைச் சுற்றிய எளிய உயிர்கள், இயற்கை,
யாவும் அவனிடம் பேசத் துடிப்பதை.

Read more...

Thursday, May 16, 2013

ஒரு நூறு புகைப்படங்கள்

அவன் பின் தலையிலும் முகத்திலுமாய்
ஒரு சேர ஒளி விழுந்திருக்கையில்தான்
எத்தனை அழகாய் வந்திருந்தது
அந்தப் புகைப்படம்!

அதன் முன்னரோ
அதன் பின்னரோ
எத்தனை புகைப்படங்கள்!
ஒவ்வொரு புகைப்டத்தையும்
அந்த முதல் தரப் புகைப்படக் கலைஞன்
உற்றுப் பார்க்கையில் எல்லாம்
நூறு முறை தேர்வு எழுதியும்
முழுமதிப்பெண் தவறித்
தோற்றுப் போனதை உணர்வதையே
அநத் முகம் காட்டிற்று.

ஒரு நூறு புகைப்படங்கள்!
இன்னும் எடுத்துத் தீரவில்லையா?
ஒளி முகத்தின் பல்கோணங்களையோ
எடுக்க வந்தான் அவன்?
இதழோரம் ஒட்டியிருக்கும்
எச்சிற் பருக்கையைப் போல
எளிதில் துடைத்துவிடக் கூடியதாக இல்லையா
அம் முகத்தின் தீவிரத்தோடு
தொங்கிக் கொண்டிருப்பதாய்க்
காணப்படும் வெறுப்பு?

இன்மையின் மாட்சிமைகள் தேடியோ;
தோன்றி மறைந்து தோன்றி மறைந்து
இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகின்
அழியா இருப்பினைக் காணவோ;
ஒருவிழியானவன்
கணந்தோறும் கணந்தோறும்
காணும் அவ்விறவாமையின்
எண்ணற்ற பேரெழில் சிலவற்றைக்
கையகப்படுத்திக் காட்டி ரசிக்கவோ;

அவன் தன் புகைப்படக் கருவியுடன்
ஓய்விலாது அலைந்து கொண்டிருக்கிறான்?

Read more...

ஸ்கேட் போர்ட்

யாரைத்தான் மகிழ்விக்காது
துள்ளி, தன்மீது குதித்து நிற்கும் தீரனும்,
தன் சமநிலையை
எந் நிலையிலும் காக்கத் தெரிந்த
மேதையுமானவனை
ஏற்றிக்கொண்ட
அதன் பாய்ச்சல் பயணம்!

மீநலம் மிக்க மனிதனை மட்டுமே
ஏற்றிச் செல்லும் கறார் வாகனம்.

தரை விடுக்காமலேயே
சொர்க்கம் நோக்கித் தவழும் குழந்தை.

புல்லாங் குழல்போலும் எளிமை.

எத்தனைஅடிகள் வைத்தும்
எட்டாது துன்புற்ற மாந்தரெல்லாம்
மகிழ்ச்சி கொள்ளக் கிட்டிய அரும்பொருள்.

கால்கள் கண்டுபிடித்துக் கொண்ட
ஒற்றைச் சிறகு.
அல்ல;
அவனிரு கால்களையும் கைகளையுமே
சிறகாகப் பெற்றுக்கொண்ட பறவையுடல்.

இமைப்பொழுதும் சோராத விழிப்பு
தொட்ட கணமே உயிர்த்துவிடும் தயார்நிலை.

மேடு இறக்கிவிடும் வேகமெல்லாம்
மீண்டும் ஒரு மேட்டில் ஏறித்
தாழ்மையின்
பள்ளத்து வான்வெளியில்
இப்படி சற்றே பறந்து களிப்பதற்கா –
ஆகா! சிறகு தட்டி ஆர்ப்பரிக்கும் பறவைகள்
அவனைச் சுற்றிலும்
புதியதோர் நெருக்கம் பூண்டனவாய்.

Read more...

Wednesday, May 15, 2013

தோண்டத் தோண்ட...

தோண்டத் தோண்டப்
பெருகும் கிணறு
கற்கக் கற்க
உருகும் உள்ளம்
விரிய விரியப்
புரியும் கவிதை
பெருகப் பெருக
விடியும் உலகம்.

Read more...

துரும்பு

முற்றுமுழு உறுதியுடன் இதைச் சாற்றுகிறேன்:
இநதக் கப்பல் உடைந்து விடும்.
உயிர்பிழைக்கப் போராடுகையில்
உடைந்து போன அக்கப்பல் துண்டுகளில்
ஒன்றுகூட நமக்கு உதவாது.
ஏனென்று நான் சொல்லத் தேவையில்லை.
ஆனால் ஒரு துரும்பு...
நம்மை எண்ணி எண்ணி
காலமெல்லாம் நமக்காகவே
கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்த
ஒரு துரும்பு...
நம்மைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்த
அத் துரும்பைப் பற்றியவாறு
நாம் பிழைத்துகொள்ள விழையும்போது
நம் கைபட்ட மாத்திரத்தில்
அத் துரும்ப ஒரு படகாகும்.
தேவைப்பட்டால் ஒரு கப்பலுமாகும்.
உடையாது அக்கப்பல் ஒரு நாளும்.
உடைந்தாலும்
அதன் ஒவ்வொரு துண்டும் துரும்பும் கூ
ஒரு கப்பலாகும்.

Read more...

Tuesday, May 14, 2013

உச்சி முழுநிலா

புத்தகம் படிக்க
அவனுக்கு உதவிக்கொண்டிருந்த
மின் விளக்கை நோக்கி
வானளாவிய
தன் நன்றியைப்
பொழிந்துகொண்டிருந்தது
உச்சி முழுநிலா.
*
இல்லந் தோறும்
கவிந்து நிற்கும்
இருளினின்றும்
வெளியே வந்து பார்த்தால்!
உச்சி முழுநிலா!
ரகசியமற்று ஒளிரும் காதல்!
*
அன்று அவன் நிம்மதியாய்
தன் குடிலுக்குள் நுழைந்து
கட்டிலில் படுத்தான்,
கண நேரம்
முழு நிலவில்
நனைந்ததனால்.
*
துயின்று கொண்டிருக்கும்
மனிதர்கள்
ஒவ்வொருவர் நெஞ்சின்
அடி ஆழத்திலும்
புகுந்துவிடத்
தருணம் பார்த்துக்கொண்டிருந்தது
வீட்டுக் கூரைகளையே
உறுத்துப் பார்த்தவாறிருந்த
முழு நிலா.
*
இத்துணை
இதமான இருள்களை
உனையன்றி
வேறு யார் வழங்குவார்
முழு நிலவே?
*
ரகசியமற்றாற் போல் காண்கிற
வெளிவிரிந்த இக் காதலில்
ஒருவனால் மட்டுமே உணரக் கூடிய
இரகசியம் ஒன்றுண்டு.

கழற்றி, இருக்கை முதுகில்
தொங்கவிட்டிருந்த மேல் சட்டையை
- நிலவிய குளிர்மை நிறைந்துவிட –
எடுத்து அணிந்து கொண்டபோது
கண்டேன்; முழுநிலவின் முறுவலில்
முகிழ்த்திருந்த ஒரு நாணம்.
*

Read more...

Monday, May 13, 2013

அருவி

மனிதர்கள்தம்
மண்டைகளை
ஈர்க்கிறது,
ஓங்கி உரத்து
இடையறாது பொழியும்
வெள்ளத்தின் கீழ்
கணமும் மாசுறாத்
தூய் தளம்!

Read more...

இரு பறவைகள்

”இன்னுமொரு சந்தர்ப்பம்
இது நமக்கு” என –
ஒருநாள் விழிப்பில் நம்பிக்கை வைத்து
இதுநாள் வரைக்கும்
சோர்வுறாது
நம்மைக் கவனித்துக்கொண்டே
வந்துகொண்டிருந்த தெய்வமோ;

அவன் ஒரு புளுகுணி
அஞ்சாதே நீ
இதோ பார்
எக்கணமும் உனக்கொரு சந்தர்ப்பம்தான்
என ஒரு பெரும் பொழுதினைத்
தன் குரலால் திறந்து
சுட்டி நின்றது,
யாரது?
தெய்வத்தின் தெய்வமோ,
தீராத கருணையோ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP