Sunday, December 31, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்

எனது வாசிப்பின் துவக்ககாலத்தில் William Blake-இன் கவிதை நூலைப் புரட்டியபோது காணப்பட்ட ‘Songs of innocence’, ‘Songs of experience’ என்று அவர் தம் கவிதைகளைப் பாகுபடுத்தியுள்ள அந்த வரிகளைப் பார்த்தவுடனே நான் அசந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் அவர் கவிதைகளுக்குள் நுழைந்ததும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த வரிகளின் பொருளாழத்தை நான் அறிந்துகொண்டதும். என்னை ஈர்த்த கவிகளுள் மிக முக்கியமான ஒருவராக அவர் ஆகியிருந்ததன் காரணமும் இதுதான்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, December 29, 2023

தென்னைகள்

எத்தனை எத்தனை கைகளின்
காதல் மலர்ச் செண்டுகள் போல்
தென்னைகள்!

Read more...

Thursday, December 28, 2023

5 கவிதைத் தொகுப்புகள் பெங்களூரில் வெளியீடு - 30 டிசம்பர் 2023

கவிஞர் தேவதேவனின் 5 கவிதைத் தொகுப்புகள் (ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம்) 30 டிசம்பர் 2023 அன்று பெங்களூரில் வெளியிடப் படுகின்றன.

கவிதைத் தொகுப்பு - 78 - காண்பதும் காணாததும்
கவிதைத் தொகுப்பு - 77 - நடைமண்டலம்
கவிதைத் தொகுப்பு - 76 - மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன்
கவிதைத் தொகுப்பு - 75 - வேணுவனம்
கவிதைத் தொகுப்பு - 74 - விண்மாடம்

அன்பர்களுக்கு அன்பு அழைப்புகள். விவரங்கள் கீழே.


Read more...

Wednesday, December 27, 2023

இதுவே பேருண்மை

ஒவ்வொரு புள்ளி மழைத்துளியிலும்
உள்ளது நமது பெருங்கடல்
(என்றாலும்)

இதுவே பேருண்மை என்றபடி
இணைந்த பல்லாயிரம் கோடிப்
புள்ளிப் புள்ளித் துளிகளால்தான்
பூமி மொத்தமும் நனைந்தது காண்!

Read more...

Monday, December 25, 2023

சிட்டுக்குருவிகள்

நீரில் குளித்துவிட்டு
நீர் ஒட்டா தாமரை இலை உடம்பைச்
சிலுப்பி நீர் உதிர்த்துவிட்டுப்
பறந்து செல்கிறது பறவை,
உள்ளுக்குள் மட்டும்
தணியாத தாகக் குவளைக்குள்
தண்ணீரையும் விசும்பையும்
நிறைத்துக் கொண்டு!

சூழல் எதனாலும் பாதிக்கப்படாத உன்னையும்
தங்கள் சூழலால் அழித்துவிடக் கூடுமோ
இந்த மனிதர்கள்?

”உடலைத்தானே அழிக்கமுடியும்” என்றே
அது அப்போதும் பறந்து கொண்டிருந்தது.


- துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023 தொகுப்பிலிருந்து

Read more...

Saturday, December 23, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 2: ஆளுமையும் குழந்தைமையும்

இன்று நான் இந்த உலகைப் பார்ப்பதுபோலத்தான் குழந்தைப் பருவத்திலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்திலேயே மனிதர்கள் இந்த உலகிற்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலிருப்பதை அறிந்துகொண்டேன். காண்பதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ இருப்பதாகப்பட்டது. எந்த வயதிலும் மனிதர்களுக்கே உரிய அச்சம் தவிர்த்த வியப்பும் களிப்பும் எல்லோர்க்குமே இயல்பானது என்பது அறிவோம். வியப்புக்கும் களிப்புக்கும் அப்பால், மிக அதிகமான ஓர் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளானவன்போலும், தனித்துப்போனவனாய், ஒரு பேரிடியால் அழுத்தப்பட்டவன் போலும் காண்போர்க்கு விசித்திரமானவனாய் இருந்திருக்கிறேன்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, December 22, 2023

கவிதைகளின் வாசிப்பனுபவம் #1

இந்தக் காணொளியில் ரசிகர் ஆதி, ”சூர்ய மறைவுப் பிரதேசம்”, ”ஒரு மரத்தைக் கூட காணவில்லை” கவிதைகள் தமக்கு எப்படி தெம்பூட்டுவதையும் வாழ்வின் இனிமைகள் எளிய விசயங்களில் இருந்தும் கிடைக்கலாம் என உணர்த்துவதையும் பகிர்கிறார்.


ரசிகர் ஆதியின் காணொளி

சூர்ய மறைவுப் பிரதேசம் கவிதை இங்கே .....

ஒரு மரத்தைக் கூட காணவில்லை கவிதை இங்கே.....

Read more...

Wednesday, December 20, 2023

ஒகேனக்கல் சுற்றுலா மய்யத்தில்

பாறைகள் பொடிந்து
மணற்படுகையான காலமும்…
ஆகிக்கொண்டேயிருக்கும் காலமும்…
நெருப்பு கனிந்து (மணற்கம்பளத்தில்)
நீராகிக் குதித்தோடிக் கொண்டேயிருக்கும் காலமும்…
எத்துணை இளமையோடு! இன்பத்தோடு!

பிழைப்புத் தேடி அமர்ந்த ஏழைகளும்
உல்லாசம் தேடி உலவும் செல்வர்களும்
ஒரு கணம், ஒரோர் கணம்
ஒரு சேர்ந்து கண்டடைந்துவிடத்தானே செய்கிறார்கள்,
எளிமையின் பேரனுபவத்தை? வானரசை?

இங்கே குப்பைகள் குவியாது
தூய்மைகாக்கத் தெரிந்து கொண்டோமானால்
படைத்து விடலாம் தானே
கவிதை உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை?

Read more...

Monday, December 18, 2023

எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

செயல்பட்ட போதிருந்ததல்ல
எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

கவித்துவமானவைகளெல்லாம்
சடங்குகளாகவும் கோவில்களாகவும்
சிலைகளாகவும் கடவுள்களாகவும்
ஆகலாம் எனில்
மனிதனைச்
சுரணையற்றவர்களாகவும் மூடர்களாகவும்
ஆக்கும் எத்தனை ஆயிரம்
சடங்கு வகையறாக்களை நாம்
இயற்ற வேண்டியிருக்கும்?

செயல்படாத கவிதை
உயிரற்றதாய்
மக்கு மங்குனியாய் இருக்கிறது மட்டுமல்ல
எல்லாத் தீமைகளையும் விளைவிக்கிறது
அதுவே அல்லவா?

மனிதனைக் கவிதைக்கு அழைத்து நிறுத்துவது
காதல் மட்டுமே அல்லவா?

லட்டு, புட்டு என்னும் சொற்கள்
லட்டு, புட்டு ஆகாது மட்டுமன்றி
பசித்தவன் வாய்க்குள் அதனை
இதுதான் இதனை உண்ணு உண்ணு
எனத் திணிப்பதும் நம்ப வைப்பதும்தான்
எத்தனை கொடுமை, மடமை, அறமின்மை!

Read more...

Saturday, December 16, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் போகலாம். ஆனால் அந்த மனம் தன் கவிதையை ஆய்வது நல்லது. தேவையானதும் கூட.

முதலில் கவிதை நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது தன்னை ஆய்வு செய்கிறது. ஆய்வோ கவிதைக்கு அகப்படாமல் போகிறபோக்கில் அது சொல்லிவிட்டுப்போகும் குறிப்புக்களை நமக்குச் செல்வமாகத் தந்துவிட்டுப் போகிறது. கவிதை குறித்த பேச்சோ வேறுகதை. கவிதையைக் கண்டவர்களுக்கு கவிதையைக் குறித்த பேச்சு ஒரு விளக்கம்தானே ஒழிய கவிதை இல்லை. ஆனாலும் விளக்கமும் ஒரு பொருள்தானே. சிலருக்கு இந்த விளக்கம் போதாமல் ஆகிவிடுகிறது. சிலருக்கு அனுபவித்தவர்களின் விளக்கம் இனிமை தருகிறது. என்றாலும் காண்பதே பேரனுபவம்! கவிதை! விளக்கமும் கூட அனுபவத்தை அடைகிற மனதிற்குள் கவிதையைப் பெய்துவிடத்தான் செய்கிறது. அப்போது அதுவும் ஒரு காணல்தான். ஏதானாலும் சரி. கவிதை எப்போதுமே காண்பதற்கான தகுதியையே இறைஞ்சி நிற்கிறது. சரியான விளக்கத்தின் நோக்கமும்கூட அதுதான். ஆனாலும் விளக்கங்கள் கவிதையனுபவத்தைக் கொடுப்பதில்லை என்பதுதான் கண்கூடான உண்மையும் மானுட அனுபவமும்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Thursday, December 14, 2023

கவிதைத் தொகுப்பு - 88, இனி ஒரு விதி செய்வோம் - 2023

கவிதை 1 - பாதை.....

கவிதை 2 - அசைந்தாடும் நீரில்.....

கவிதை 3 - வண்ணத்துப் பூச்சி அது.....

கவிதை 4 - இனி ஒரு விதி செய்வோம்!.....

கவிதைத் தொகுதியை வாங்க. சீர்மை நூல்வெளியை இங்கே தொடர்பு கொள்ளவும் .....

Read more...

Tuesday, December 12, 2023

சுற்று மதில்

சுற்று மதில் மட்டும் இல்லையெனில்

செங்குத்தாய்
படிகள் இல்லாது ஏறி இறங்கும்
ஏணிகளுடன்
மலைகளில் குடியேறிவிட்டவர்கள் போன்ற
அடுக்ககங்களுடன்
தரைத் தளமெங்கும்
வாடாத இயற்கைவெளிகளுடன்

நாம் கட்டிவிட்டோம்
கடவுளின் ராஜ்ஜியத்தை
என்றுதானே நினைத்திருப்போம்?

Read more...

Sunday, December 10, 2023

வானை நோக்கி ஒரு ரோடு

நகரத்துச் சந்தடி,
நெருக்கி நெருக்கி அடைத்து மறித்து
முறைத்துத் தள்ளும்
கட்டடங்கள், வாகனங்கள்
எல்லாம் கடந்து…
வானக் குடை முழுசாய்
விரிந்த வெளிப் பூமி,
நிலவாகக் காணும் வெயில்,
ஏக மௌனம்,
எங்கிருந்தோ உதித்தவர் போல்
ஆணும் பெண்ணுமாய்ச் சிலர்
சாலை அமைக்கும் காட்சி
எங்கே?
சாலை நேரே கண்ணெட்டும் தூரம் வரை
வீடோ ஊரோ ஏதுமில்லை;
அடிவானம் அன்றி.
அருகே
தூளி ஒன்றைத் தாலாட்டும் தாயாய்
தா(ழ்)வாய்க் கவிந்த கருவைமரத்தில்
கனி கனியாய்க் காய்த்துக் குலுங்கின
கஞ்சி நிறைந்த தூக்குச் சட்டிகள்.


-குளித்துக் கரையேறாத கோபியர்கள்(1976) தொகுப்பிலிருந்து.

Read more...

Friday, December 8, 2023

கயிற்றில் நடப்பவன்

இரண்டு கம்பங்களின்
ஒரு நுனியிலிருந்து ஒரு நுனிக்கு
இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில்
ஒரு மனிதன்

வான்வெளியில் ஒரு பாதையைக்
கண்டுகொண்டவனாய்
அந்தரத்திலிருந்தும்
தவறி விழுந்துவிடாதபடி
தன் உடல் பேணும் அபிநய
நடை கண்டு விட்டவனாய்...!

அண்ணாந்து பார்க்கும்
ஞானிகளுக்கு ஞானம்
கவிஞர்களுக்கு ஞானமும் கவிதையும்
அந்த மனிதனுக்கு பிழைப்பு
வறுமையிலாததோர் உலகைப் படைக்க
வக்கில்லாத மனிதத் திரளுக்கு
வித்தையும் பொழுதுபோக்கும்!


-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.

Read more...

Wednesday, December 6, 2023

தேவதேவனின் கவிதைகள் - கனவிலிருந்து நனவுக்கு

தேவதேவன் தன்னுடைய கவிதைகளை ரசிகர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் 2015ல் எழுதப் பட்டுள்ள இந்த கட்டுரை, கவிஞராக அவர் மலர்ந்ததையும் அவரது கவிதைகள் எப்படி சிலரின் வாழ்வைத் தொட்டன என்பதையும் பதிவு செய்துள்ளது.

முழுக்கட்டுரையும் இங்கே.....

"அமைதி என்பது” கவிதை இங்கே.....

Read more...

Monday, December 4, 2023

எங்கே? எப்போது?

அத்தனை புன்னகை மலர்களாலும்
இயலாமல் போனது

எத்துணை காதல் மலர்ச்செண்டுகளாலும்
இயலாமல் போனது

சில தாவரங்களின் இலைகளெல்லாம்
வட்டவட்டமாய்க் கூடிக்
குறிப்புணர்த்தியும் இயலாமல் போனது

எத்தகைய மனிதர்களானாலும்
சற்றே இசைந்து கூடி
களிக்கும்போதெல்லாம் நிகழ்ந்ததும்
மலராமல் தனிப்பட்டுத் துண்டுபட்டு
இயலாமல் போனது

எரிந்து எரிந்து அணைந்துவிடும்
நெருப்புக்குச்சிகள்தாமா
நாம் கண்டது?
நாம் கட்டிய உலகின்
சூரியன் எங்கே?
சந்திரன் எங்கே?
உதிராத மத்தாப்பு விண்மீன்கள் எங்கே?
நந்தா ஒளிமலர்கள் எங்கே?
நந்தவனப் பூக்கள் எங்கே?


-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.

Read more...

Saturday, December 2, 2023

ஓரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?

கட்டி முடித்த மனிதன்
இல்லை அந்த கட்டடத்துள்
கதவுகளும் ஜன்னல்களும்
தங்கள் அர்த்தங்களை இழந்து மூடிக்கிடந்தன.
ஓர் உடைப்புவழி உட்சென்ற
திருடர்களும் வேசிகளும்
கள்ளப்புணர்ச்சிக்காரர்களும்
இருந்து புழங்கக் கூசும்
அசுத்தப் பெரும்பாழாய் நாறியது அந்தக் கட்டடம்.

செத்த எலிகளைத் தொடர்ந்து
புழு பூச்சி ஜீவராசிகளும்
பெருச்சாளிகளும் பொந்துகளும் பாம்புகளும்
இருள்தேடி வவ்வால்களுமாய்
செழிப்புடன்
ஜே ஜே என நிறைந்துதானிருந்தது அந்தக் கட்டிடம்.

ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை
ஒரு சாதாரண மனிதன் அறிவான்.
நாம் அறியவில்லை
துயரகரமானது நமது சித்திரம்.


புல்வெளியில் ஒரு கல் (1998) தொகுப்பிலிருந்து.

Read more...

Thursday, November 30, 2023

கவிதைத் தொகுப்பு - 81, புறப்பாடு (காவியம்) - 2023

 


புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


என்ன வியப்பு இது *

என்ன வியப்பு இது!
நம்பிக்கைதரும் எத்துணை பெருங்களி இது!
அந்தி இருள் தொடங்கவும்
ஓடும் சாலையில் ஓடும் ஒவ்வொரு வாகனங்களும்
விளக்கேற்றிக்கொள்கின்றன!

ஒவ்வொரு வாகனங்களும்
”என்னைப் பின்தொடராதே” என்றே
பின்புறச் சிவப்பு விளக்குகளுடன்
ஒரேமாதிரியான
தன் தன்மையுடனே விரைகின்றன!


* புறப்பாடு தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை

Read more...

Wednesday, November 29, 2023

கவிதைத் தொகுப்பு - 82, துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023

புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


கூலித்தொழிலாளிகள் *

வானத்தையும் பூமியையும்
கூரையும் தரையுமாய்
அளாவிக் களிக்கிறார்கள்,
தங்குமிடமில்லா கூலிக்குடும்பங்கள்
வீடுகளை, சாலைகளை, கட்டடங்களைக்
கட்டும் பணி இடைவேளைகளில்!

எல்லோரும் இவர்களாக முயற்சித்தால்தான்
நாம் கட்ட இயலும்
கடவுளின் ராஜ்ஜியத்தை என்கிறான் கவிஞன்.

 சொல்லவும் வேண்டுமோ
 நம் முழு ஆற்றலையும்
வேறெங்கெங்கோ அல்லவா
விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம், நாம்!


* இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை

Read more...

Monday, November 27, 2023

ஒரு மரத்தைக் கூட காணமுடியவில்லை - காணொளியும், கவிதையும்

இந்தக் கவிதை ஓரு ரசிகரின் இனிய குரலில், அழகோவியமாக அமைந்துள்ளது.

கவிதை ஒலி, ஒளி வடிவில்

முழுக்கவிதையும் இங்கே.....

Read more...

Sunday, November 26, 2023

வறுமை

சங்கரி ரொம்ப மெலிந்து விட்டாள்
இடுப்பெழும்புதான் அவளிடம் இருக்கிறது
கைக்குழந்தையை இடுப்பில் அமர்த்த

அவ்வளவு தாழ்ந்த குடிசைக்குள்ளிருந்து
வெளியே வந்து நிற்கிற சுப்பிரமணிக்கு
என்ன வெளங்காத கம்பீரமோ அது?

ஆடிட்டிங் கணக்கெழுத வருகிற
ஆசாமிக்கு இருக்கிற சாமார்த்தியம்
இவனுக்கு இல்லையே.

இவன் பார்வையும் நடத்தையும்
சரியில்லையே என்று
வேலையை விட்டு நீக்கிவிட்டார்
ஜவுளிக் கடைக்காரர்.

கவனம் மகனே, பணக்காரன் சொர்க்கத்துக்குள்
நுழையவே முடியாது என்றபடி
கல்லாவின் தலைக்குமேல்
புகைப்படத்தில் அறையப் பட்டவராய்ப்
போதித்துக்கொண்டேயிருக்கிறார் இயேசு..

உண்பதற்கும் உடுப்பதற்கும் அணிவதற்குமான
பொருள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் உலகில்
கிடைத்தால் கொள்ளையடிக்கவே தயாராயிருக்கும்
ஈனப் பிச்சைக்காரர்களாய்த் தானா
கடைத்தெருவெங்கும் மனிதர்கள் கூட்டம்?

Read more...

Saturday, November 25, 2023

உபவனத்தில் ஒரு பாதை

அழகன்!
திசைகளற்ற பெருவெளியில்
திகைப்பையும் தாண்டி நின்று விட்ட
திகம்பரன்.
எங்கும் செல்வதில்லை.
பரவி நிற்பவன்
எங்கும் செல்ல வேண்டியதில்லை

கொடுப்பவனும் பெறுபவனுமில்லாத
திருநிறைச் செல்வன்
தேடலின் அவசியமின்றி
தங்கலுமின்றி
தொலைந்து போதலுமின்றி
எங்கும் பரவி நிற்பவன்

திகம்பரனாய் நின்றாலும்
எங்கும் செல்வதில்லை என்றாலும்
பரவி நிற்பவன் என்றாலும்
நடை உண்டு
ஒவ்வோர் அடியிலும் ஓரோர்
கோணத்தையும் பார்வையையும்
உருவையும் அருவையும் கண்டபடி
சுழலும் உலகுண்டு
களித்துக் களித்துக் கொண்டாடிக்
கழியும் காலமுமுண்டு.

தவறினால்தான்
தனித்து விடப்பட்டவனின்
தலைகளை நொறுக்கும்
துயர்கள் அத்தனையுமுண்டு.

Read more...

Friday, November 24, 2023

ஒளிரும் பூக்கள்

ஒளிரும் பூக்களெல்லாம்
உரைப்பதனை விளம்புதற்கோ,

உதித்த பகல் வெளிச்சத்திலும்
மறதியால் அணைக்கப்படாத வேளை
பூக்களைப் போல ஒளிர்ந்தன
மின் விளக்குகள்?

Read more...

Thursday, November 23, 2023

வனப் பூங்காவில் ஒரு காலை நடைப் பயிற்சி

அவர் வேக நடையில்
குதியாளம் போட்டபடி
துள்ளிக் கொண்டு செல்கிறது
கற்றைக் கூந்தல்

கட்டுப் போட்டிருக்கும் போதும் சரி
கொண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதும் சரி
நிலவில் உதித்த கார்முகில் போல்
தழைத்து விட்டிருக்கும் போதும் சரி
கூட்டுயிரிகளான கூந்தலின் குதூகலம்
மாறுவதே இல்லை.

Read more...

Wednesday, November 22, 2023

துயர் கொண்ட மனிதன்

துயர் கொண்ட மனிதன்
கண்டு கொள்ள முடியாத
வாழ்வாக, மதமாக, அன்பாக, அழகாக
அவன் கண்ணெதிரே நிற்கிறது காண்
இயற்கைப் பெருஞ்செல்வம்
தன் அரும் பெருஞ் செயலூடே
அவனைக் கண்டு கலங்கியவாறே!

Read more...

Tuesday, November 21, 2023

தராசுமுள்நுனிக்கூர்மய்யம்

“இனி ஒரு விதி செய்வோம்!”
“எந்த ஒன்றையும் இனி
செய்யாமலிருப்போம்!” என
அங்குமிங்குமாய் மாறி மாறி
அமைதியின்றி அலைந்து கொண்டிருந்தது
தராசுமுள்நுனிக்கூர்மய்யம்.
நிகழவேண்டியதைச் சுட்டிக் கொண்டும்
தானாகவே செயல்பட்டுக் கொண்டும்
கொந்தளிக்கும் பேரெழுச்சியுடனே இருந்தது
அது தன் மய்யத்தைத் தொடும் போதெல்லாம்!

Read more...

Monday, November 20, 2023

விசாரணை

ஒளியைப் பற்றி
இருளிடமோ,
இருளைப் பற்றி
ஒளியிடமோ,
எழுத்துக்களைப் பற்றி
பேனாவிடமோ,
பேனாவைப் பற்றி
எழுத்துக்களிடமோ
கேட்காதீர்கள்.

எதைப் பற்றியும்
அதன் அதனிடமே
விசாரியுங்கள்
அல்லது அவ்வவற்றின்
பேரின்மைப்
புலத்திடமிருந்து…

Read more...

Wednesday, November 15, 2023

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

தேவதேவன் கவிதைகளில் காணப்படும் கவிதைப்பாணிகளில் முக்கியமானது படிமங்களைப் பிரக்ஞை நிலையில் கோர்ப்பதன் மூலம் உருவாவது. அதாவது படிமங்கள் உயர்கவித்துவ நிலையிலும் கோர்க்கும் சரடு புறத்தருக்க நிலையிலும் அமைந்திருக்கும்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கவிதைகள் இணைய இதழின் ”ஜூன் 2022ம்” இதழ், தேவதேவன் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரை, தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்கள் மற்றும் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

கவிதைகள் இணைய இதழ், தேவதேவன் சிறப்பிதழ்

Read more...

Tuesday, November 14, 2023

திருவிழா ரயில் வண்டி -1

போகுமிடத்தை யார் தேடுகிறார்கள்?
இந்த மண்ணில் இந்த இடத்தில்
இந்தத் தாய் தந்தையரிடமல்லவா
இருந்து மகிழவே வந்துள்ளோம்!

Read more...

Monday, November 13, 2023

திருவிழா ரயில் வண்டி -2

ஸ்டேசனில் கட்டணச் சீட்டு வாங்கியாயிற்று.
அம்மா அப்பாவை அங்கேயே நிறுத்திவிட்டு
ஏறியாயிற்று வண்டியில்.
பத்து முறை சுற்றிவிட்டுப்
புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும் வண்டி.
பத்து முறையும்
ஸ்டேசனில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்
அம்மா அப்பாவுக்கு கையலைத்து
மகிழ்ச்சிவிடையையும் வருகையையும்
காட்டியவாறே
பயணம் முடித்து
அவர்களிடமே திரும்பியாயிற்று.
பொலியும் பூரண இன்பம் என்பது
போகுமிடமில்லா பயணமன்றி வேறேது?

Read more...

Sunday, November 12, 2023

திருவிழா ரயில் வண்டி -3

தோதான இருக்கைகளுள்ள வண்டியிலே
அம்மாவும் அப்பாவுமே உடன் ஏறி
அமர்ந்து கொண்டார்கள்.
நிலயம் சுற்றி நிற்கும் அத்தனை பேருமல்லவா
பயணிகள் கையலைப்பின்
பரிபூரண இன்பத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்!

Read more...

Saturday, November 11, 2023

அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்.
ஒவ்வொரு பொருளையும் தொட்டு அதனதன் இடத்தில் வைத்தேன்.
தூரெடுக்கப் பட்ட கிணறு போலாயிற்று அறை.
புனித நீரில் குளித்து வியர்வை நாற்றமில்லா ஆடையணிந்து
மாலை உலாக் கிளம்பியபோது
கேட்கத் தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை.
வழிப்பறிக்கு ஆளானவன்போல் திரும்பினேன்.
விடியும் வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்.


-புல்வெளியில் ஓரு கல் (1998)

Read more...

Friday, November 10, 2023

அடுக்கக வாழ்வு

மலைகளில்
குடியேற அறிந்துவிட்டது
மானுடம்
இனி என்ன கவலை அதற்கு?

Read more...

Thursday, November 9, 2023

ஒளி கண்டு விட்டவர்களே!

ஒளி கண்டு விட்டவர்களே,
தூக்கிப் பிடியுங்கள் அதனை!
நிலவாக பரிதியாக
அது ஒளிரட்டும்!

உங்களுக்கு என்ன வேண்டும்
ஒரு பிச்சா பாத்திரத்தை
ஏந்திப் பிடியுங்கள்
எல்லோருக்குமான உணவால்
அது நிரம்பட்டும்!

பெயர் உருவமற்ற
பேரனுபவங்களாலானவர்களே
தூக்கிப் பிடியுங்கள் அதனை.
எல்லாப் புகழ்களும்
இப் பூமியினுடையதேயாகட்டும்!

Read more...

Wednesday, November 8, 2023

பார்வை இழந்த ஒரு பெண்ணின் பாடல்

துர்க்கா பூஜையின்
கோலாகலப் பண்டால்ஸ் அரங்கில்
ஓர் மூலையிலிருந்து
பார்வையிழந்த ஒரு பெண்ணின் பாடல் …

தன்னைப் போலவே
தன் பாடல் போலவே இருக்கிறதென
விம்மித் துடித்தது
வானமும் மண்ணின் உயிர்ப்பசுமையுமான
இயற்கையின் நெஞ்சம்.

தன்னையும் அறியாமல்
உறவுகளையும் அறியாமல்
உண்பதிலும் உடுப்பதிலும் களிப்பதிலும்
நம்பிக்கைகளிலுமே தம்மை வளர்ப்பவர்களாய்
எங்கும் உலவிக்கொண்டிருந்தது
பொதுசனம்.
குழந்தைகளுக்காக மன்னித்து
குழந்தைகளோடு விளையாடிக் களிக்கிறது
இயற்கையின் கீதலயம்.

Read more...

Tuesday, November 7, 2023

தேவதேவனின் கவிதைகள் பற்றிய ஆவணப் படம் - யாதும் ஊரே, யாதும் கேளீர்.

சங்க காலத்தில், மக்களின் தொலை தூரத் தொடர்புகள் மிகுந்த நேரம் எடுப்பவையாக, தொலை தூரப் பயணங்கள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தனவாக இருந்து இருக்கும். இப்போது போல தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கோ, அமெரிக்காவுக்கோ உடனடியாகப் பேசவோ, பயணிக்கவோ முடிந்து இருக்காது. இந்த சவால்களையெல்லாம் மீறி, ஒர் சங்க காலக் கவிஞன் நவீனமாகச் சிந்தித்து,
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” எனக் கூறியுள்ளார்.

இந்த நவீனக் காலத்தில், இதனை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வது சிறப்பு அல்லவா.

“யாதும் ஊரே, யாதும் கேளீர்” என்பது, மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்தின் மீதும் அன்புடன் இருப்பதல்லவா.

பெரும்பாலும், ஆளுமைகளைப் பற்றி ஆவணப் படங்கள் எடுப்பதுண்டு. இங்கு, வித்தியாசமாக, 2007 ஆம் ஆண்டு ஓரு ஆவணப் படம் கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றி எடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள எல்லாவற்றின் மீதும் அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள இந்தக் கவிஞரின் கவிதைகளைப் பற்றிய ஆவணப் படத்தின் தலைப்பு “யாதும் ஊரே, யாதும் கேளீர்” என அமைந்துது மிகச் சிறப்பு.

இது ஐந்து பாகங்களாக உள்ளது. ஓவ்வொரு பாகமும் குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என்ற கருப்பொருட்களில் அழகுற காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. கவிஞர் க. மோகனரங்கன், அக்டோபர் 2021ல், தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்புடன், ஆவணப் படத்துக்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.



 

















1 October 2021
க. மோகனரங்கன்
பதினைந்து வருடங்களிருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, கோபாலகிருஷ்ணன், மகுடேஸ்வரன் முதலியோர் தமிழினி அரங்கில் குழுமியிருந்தனர். ஒளிப்பதிவாளரான நண்பர் சிபி சரவணன் எழுத்தாளர்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக கவிஞர் தேவதேவனை படமெடுக்க அணுகினார். புகைப்படத்திற்கு பதிலாக ஒரு ஆவணப்படமே எடுத்துவிடலாம் என முடிவு செய்து குறைந்த கால அவகாசத்தில் கிடைத்த சொற்ப வசதிகளோடு எடுக்கப்பட்ட இப்படம் பலவகைகளிலும் முன்னுதாரணமான ஒன்று. உரையாடல்கள் எதுவுமில்லாமல் , மாறும் நிலக்காட்சிகளின் பின்ணனியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் ஒலிக்க நகரும் படம் அலாதியானதொரு காட்சியனுபவம் தருவதாக அமைந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் கிருபா, ஒளிப்பதிவு சிபி சரவணன், பின்ணனியில் ஒலிக்கும் கவிதைகளுக்கு குரல் தந்தது மகுடேஸ்வரன். குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என ஐந்து பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தினை பின்வரும் சுட்டிகளில் சென்று காணலாம்

பகுதி 1 - குறிஞ்சி

பகுதி 2 - முல்லை

பகுதி 3 - மருதம்

பகுதி 4 - நெய்தல்

பகுதி 5 - பாலை

Read more...

Sunday, November 5, 2023

அடுக்கக மாடிக் கட்டடங்கள்

தன்னுணர்வற்ற தனிமையால்
துயர்களையும் ஆபத்துகளையும்
விளைவிக்கும் கல்லறைகளா?

ஒரு புல்லைப்போல செடியைப்போல
மரத்தைப்போல மலையைப்போல
வானத்தை அறிந்தபடி
மழையிலும் பனியிலும்
ஒளியிலும் காற்றிலும்
நெகிழ்பவைதானில்லையா?

Read more...

Saturday, November 4, 2023

துள்ளித் துள்ளி…

எந்த ஒரு இசையை எழுப்புகிறது
மத்தளத் தோல் போல்
இழுத்துக் கட்டப்பட்ட இந்தக் கம்பளம்?
அறிவான் போலவே தெரிகிறது
ஓரமாய்க் காசு வாங்கிக் கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கும்
அதன் படைப்பாளி வியாபாரி.

குழந்தைகள் மட்டுமே
இணைந்து ஆடக்
காத்திருக்கும் கொண்டாட்டம்!

மண்ணோடும் விண்ணோடும்
பாய்ந்து பாய்ந்து
தொட்டுத் தொட்டும்
விலகி விலகியும்
உருண்டும் புரண்டும்
துள்ளித் துள்ளி
மனிதர்கள் சுதந்திரமாய் ஆடும் நடனம்!

Read more...

Friday, November 3, 2023

அற்புத மலர்!

இன்று, எங்கள் வண்ணச்
சுற்று வளாகத்தில்
ஓர் ஆணும் பெண்ணும்
இணையர்களாக அல்ல
சற்று எட்டியே
பேசிக் கொண்டே சென்றனர்

அந்தப் பெண்மணியின் முகத்தில்
பூத்த பொலிவைப் பார்க்க வேண்டும்
அடடா, இவ்வுலகின் ஓர் அற்புத மலர் அது!

அந்த ஆண் என்னைப் பார்த்ததும்
நெஞ்சில் ஒரு கை பொத்தி
விழிகள் கனிய தலை தாழ்த்திச் சென்றான்
அந்த முகத்திலும் அதே பொலிவுதான்
என்றாலும்
ஆண்முகத்தின் தாடி மீசைதான்
எனக்கு நெருடுவது போலிருக்கிறது எப்போதும்

நிலவுக்கு இல்லாத
சூரியனுக்கு இல்லாத
எந்த மலருக்குமே இல்லாத
இந்த மீசையும் தாடியும்
ஆணுக்கு மட்டும் எதற்கு?
ஆண்தான் எதற்கு?
சொல்லுங்கள் என் அன்னையே!

Read more...

Wednesday, November 1, 2023

குரங்குகள்

குரங்குகள் என்ற சொல்லே
குழந்தைகள் என்றே
ஒலிக்கின்றன இல்லையா?

சந்தர்ப்பம் வாய்த்தால்
வீட்டிற்குள் நுழைந்து
விளையாடி விடுகின்றன குரங்குகள்.

பெருநகராட்சிக்காரர்கள் வந்து
அடக்கி விரட்டி விட்டார்கள்
குழந்தைகளை -
மன்னிக்கவும் - குரங்குகளை!

குழந்தைகளையும் கொஞ்சம்
கவனித்துக் கொள்ளக் கூடாதா…
தங்கள் கிளைகளொடிந்தன போல்
சோகமுற்றன காண்,
உபவனத்து மரங்கள்!

Read more...

Monday, October 30, 2023

புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கடவுள் படைத்த இவ்வுலகில்
கடவுளின் ராஜ்ஜியம் இல்லாமலா?
மெய்ம்மையான மதம் ஒன்றில்லாமலா?
புன்னகையுங்கள்! புன்னகையுங்கள்!

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைச்
சிதைப்பனவற்றையெல்லாம்
ஏற்காமலிருப்பதுதான்
அழிப்பது காப்பது கட்டுவது என்பதெல்லாம்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

உள்ளும் புறமுமாய்
இருப்பதும் இல்லாமலிருப்பதும் எது?

மாற்றி மாற்றிப் போடும் தோசையைக்
கருக விடுகிறோமோ?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தொடரும்
நம் அத்தனை துயர்களுக்கும்
போர்களுக்கும் வாதைகளுக்குமான
காரணங்களை நான் அறிந்துள்ளேன்

தாகம் தீர்க்கும் அமுதமாக
என் அருகே நான் பருக அமர்ந்திருக்கும்
இந்த ஒரு குவளையிலுள்ள தண்ணீர்
துளித் துளிகளால் மட்டுமே கூடிய ஒரு முழுமை அன்றி
ஒருக்காலும் பிறிதொன்றால் பிறந்ததல்ல
என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

நான் சொல்வது எதையும்
நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனாலும்
விளைவது ஒரே ஆபத்துதான்.

நான் “செய்யாதீர்கள்” என்று சொல்லி
நீங்கள் செய்யாமல் போனாலும்
செய்தீர்களேயானாலும்
அது ஆபத்தேதான்!

சொல்வதை உணர்கையில்தான்
இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியமும் கவிதையின் மதமும்!

தேவையெல்லாம்
பேரளவானதொரு புரிதலன்றி
வேறென்னவாக இருக்க முடியும்?

Read more...

Saturday, October 28, 2023

பாதை

கவனியுங்கள்
கிக் கிக் கிக் கீ என்று கிறுக்கிப்
பறந்து கொண்டிருக்கும் இந்த
பட்டு வண்ணத்துப் பூச்சிக்குப்
பாதை எங்கிருக்கிறது?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Friday, October 27, 2023

அசைந்தாடும் நீரில்

அசைந்தாடும் நீரில்
நெளிந்தாடுகின்றன கட்டடங்கள்
நீரைத் தொடுகையில்
நெகிழாதிருக்கும்
கல்நெஞ்சமும் உண்டோ
இந் நிலவுலகில்?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Thursday, October 26, 2023

வண்ணத்துப் பூச்சி அது

வண்ணத்துப் பூச்சி அது
வழி தவறியதால்
அலைபாய்ந்து திரிகிறது
என்றாலும்
காதற் புள்ளி வெளிகளிலெல்லாம்தான்
கண்டுபிடித்து விடுகிறதில்லையா,
தான் பிறந்து வளர்ந்து மகிழ்ந்து குலாவிய
காதற் பூந்தோட்டத்தை?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.

Read more...

Wednesday, October 25, 2023

இனி ஒரு விதி செய்வோம்!

பிச்சா பாத்திரம் ஒன்றில் மட்டும்தான்
வந்து நிரம்புகிறது
வறுமையும் போரும் துயர்களுமில்லா
உலகைப் படைக்கும்
ஒரே வழியும் ஒளியும் உண்மையும்
ஆற்றலுமான
ஒரே பெருஞ்செல்வம்!

”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
செகத்தினை அழித்திடுவோம்” எனும்
கொதிப்பு நிலைகள் கூடித் திரண்டதா அது?
திரளாமற் போகுமோ அது?
”இனி ஒரு விதி…” என்றால்
அது என்ன விதி எனக் கண்டோமா?

கண்டு விட்டோம் தானே?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


Read more...

Tuesday, October 24, 2023

Kindleல் கிடைக்கும் தேவதேவனின் தொகுப்புகள்









1) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஒன்று
இதில் 1976ல் வெளிவந்த ”குளித்துக் கரையேறாத கோபியர்கள்” மற்றும் 1981ல் வெளிவந்த ”மின்னற்பொழுதே தூரம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஒன்ற வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

2) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு இரண்டு
இதில் 1984ல் வெளிவந்த ”மாற்றப்படாத வீடு” மற்றும் 1990ல் வெளிவந்த ”பூமியை உதறி எழுந்த மேகங்கள்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு இரண்டு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

3) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு மூன்று
இதில் 1991ல் வெளிவந்த ”நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்” மற்றும் 1992ல் வெளிவந்த ”சின்னஞ்சிறிய சோகம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு மூன்று வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

4) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு நான்கு
இதில் 1994ல் வெளிவந்த ”நட்சத்திர மீன்” மற்றும் 1995ல் வெளிவந்த ”அந்தரத்தில் ஓர் இருக்கை” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு நான்கு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

5) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஐந்து
இதில் 1996ல் வெளிவந்த ”நார்சிசஸ் வனம்” மற்றும் 1998ல் வெளிவந்த ”புல்வெளியில் ஒரு கல்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஐந்து வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

6) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஆறு
இதில் 2000ல் வெளிவந்த ”விண்ணளவு பூமி” மற்றும் 2002ல் வெளிவந்த ”விரும்பியதெல்லாம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஆறு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

7) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு ஏழு
இதில் 2003ல் வெளிவந்த ”விடிந்தும் விடியாப் பொழுது” மற்றும் 2005ல் வெளிவந்த ”விதையும் கனியுமான பாரம்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு ஏழு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

8) தேவதேவன் கவிதைகள்: தொகுப்பு எட்டு
இதில் 2005ல் வெளிவந்த ”நீல நிலாவெளி” மற்றும் 2007ல் வெளிவந்த ”பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்” கவிதைத் தொகுதிகள் உள்ளன
தொகுப்பு எட்டு வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

9) கவிதை பற்றி
1993ஆம் ஆண்டு காஞ்சனை வெளியிட்ட உரையாடல் நூல் மற்றும் பல்வேறு இதழ்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு
“கவிதை பற்றி” வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்

Read more...

Monday, October 23, 2023

இங்கே பாருங்கள்!

கதிர்தொட ஓங்கிய
ஒற்றைக் காலுடன்
நாற்பது கைகளுடன்
நாற்றிசைகளையும்
அளாவிக் கொண்டிருக்கும் இந்தத்
தென்னை மரமும்
போதித்துக் கொண்டுதானே இருக்கிறது?

Read more...

Friday, October 20, 2023

தேவதேவனின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகளின் பெயர்களும் ஆண்டுகளும்











88) இனி ஒரு விதி செய்வோம் - 2023
87) சுட்டும் விழிச்சுடர்
86) மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்
85) மறைந்து கிடக்கும் மாங்கனிகள்
84) ஈரத்தரை எங்கும் வானம்
83) நிலவில் உதித்த கார்முகில்
82) துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) -2023
81) புறப்பாடு (காவியம்) -2023

80) குழந்தை பார்த்த குறைநிலா -அச்சில்
79) இப்போதும் எப்போதும் காணக் கிடைக்காததென்ன -அச்சில்
78) காண்பதும் காணாததும் -2024
77) நடைமண்டலம் -2024
76) மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன் -2024
75) வேணுவனம் - 2024
74) விண்மாடம் - 2024
73) ஒளிகுன்றாது உதிர்ந்த மலர்கள் -அச்சில்
72) மலரும் நன்மைகள் -அச்சில்
71) இந்தக் காற்று வெளியிடையே -அச்சில்
70) பார்வை நடத்தும் பாதை -அச்சில்
69) வானப் பெருவெளி -அச்சில்
68) வெயில்மலர்க் குளிர்தலம் -அச்சில்
67) பிறிதொரு பசி -அச்சில்
66) அருட்பெருஞ்சோதி -அச்சில்
65) கண்கள் மட்டுமே தொடும் வானம் -அச்சில்
64) தனிப்பெருங்கருணை -அச்சில்
63) ஒளியில் உயிர்த்த விழிகள் -அச்சில்
62) பாடல் விழையும் மோன இசை -அச்சில்
61) உலகடங்கு (காவியம்) -அச்சில்

60) ஆகும் என்றெழுந்த ஆல் -அச்சில்
59) ஒளிரும் ஓவிய நிலா -அச்சில்
58) நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் -2022
57) மழைக்காற்றில் ஆடும் மலர்கள் -2022
56) சூரியகாந்தி வயல் -2022
55) வெண்கொக்கும் ஆம்பல் மலர்களும் -2022
54) பரிதி துடைக்கும் பனித்திரை -2022
53) கடவுளின் ராஜ்ஜியம் -2022
52) அந்திஇருள் (இருள் எப்போதுமே அந்தி தான்) -2022
51) எதுவாகவும் இல்லாதது -2022
50) நீர்க்குடத்தின் அலமறல்கள் -2022
49) இலைகள் கூடி இசைக்கும் காற்று -2022
48) ஈரம் மட்டுமே எங்கும் உள்ளது -2022
47) பார்த்து நட -2022
46) விண்ணளவாய் விரியும் வட்டம் -2022
45) காணுங்கால் -2022
44) காற்றினிலே வரும் கீதம் -2022
43) காயமும் தழும்பும் -அச்சில்
42) மேகங்கள் நடமாடும் வானம் -2022
41) அமுதவெளி -2022

40) மகாநதியில் மிதக்கும் தோணி -2022
39) யாம் பெற்ற இன்பம் -2022
38) தன்னியல்பின் தாரகை -2022
37) உதிராத மத்தாப்புகள் கோடி -2021
36) எல்லாம் ஒரு கணம் முன்புதான் -2020
35) மலர் தேடும் மலர் -2020
34) பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை -2020
33) மகாநதி -2019
32) அமுதநதி -2019
31) ஏஞ்சல் -2019
30) பக்கத்தில்தான் இருக்கிறது வீடு -2019
29) புரியாது கழித்த பொய் நாட்களெல்லாம் -2018
28) ஆம்பல் குளம் -2018
27) சித்தார்த்த ராத்திரி -2018
26) அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது -2016
25) நுனிக்கொம்பர் நாரைகள் -2016
24) கண்விழித்தபோது -2016
23) ஹே.மா! (அதிஉச்சம்) -2014
22) பேர்யாழ் -2014
21) பள்ளத்திலுள்ள வீடு -2013

20) மெய்வழிச்சாலை -2012
19) இரவெல்லாம் விழித்திருந்த நிலா -2012
18) மார்கழி -2008
17) விண்வரையும் தூரிகைகள் -2007
16) பறவைகள் காலூன்றிநிற்கும் பாறைகள் -2007
15) நீல நிலாவெளி -2007
14) விதையும் கனியுமான பாரம் -2005
13) விடிந்தும் விடியாப் பொழுது -2003
12) விரும்பியதெல்லாம் -2002
11) விண்ணளவு பூமி -2000
10) புல்வெளியில் ஒரு கல் -1998
9) நார்சிசஸ் வனம் -1996
8) அந்தரத்திலே ஓர் இருக்கை -1995
7) நட்சத்திர மீன் -1994
6) சின்னஞ்சிறிய சோகம் -1992
5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் -1991
4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் -1990
3) மாற்றப்படாத வீடு -1984
2) மின்னற்பொழுதே தூரம் -1981
1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் -1976

Read more...

உதிர் இலை

காற்றின் பூ மஞ்சத்தில் புரளும்
வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடித்துக் கொண்டு இறங்குகிறது
மரத்திலிருந்து ஒர் உதிர் இலை.
கற்றரையோ புற்றரையோ
மண்தரையோ
உயிர்ப்புடனும்
மாறா இனிமையுடனும்தான்
வந்தமர்கிறது அது
மரணத்தையும் வாழ்வையும் நன்கறிந்த
துயரங்களற்ற ஜீவன்!

Read more...

Wednesday, October 18, 2023

கவிதையின் மதம் சொல்கிறது காண்!

மனிதர்கள் எளிமையானவர்களாக
மாறியாக வேண்டும்
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய
இதுவே ஓரே வழி என்கிறது
கவிதையின் மதம்!

எந்த ஏழை பணக்காரர்களாலும்
இயலாது அது
செல்வந்தனாகவே துடித்துக்கொண்டு
செல்வந்தன்களிடமே
ஏக்கத்துடன் பல்லிளித்துக்கொண்டு
வாழும் எந்த ஏழையாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

குற்றவுணர்ச்சியும் தாழ்மையுமின்றி
சவுகரியமாக வாழ்ந்துகொண்டு
அறமென்றும் கொடையென்றும்
இப் பாழுலகையே கட்டிக் காத்துக்கொண்டிருக்கும்
எந்த அதிகாரத் தந்திரங்களாலும் இயலாது
கடவுளின் ராஜ்ஜியம்!

அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு, புகழ் இவைகள்
மானுட அருவருப்புகள் என்பதை
ஆழ்ந்துணர இயலாமற் போன தெப்படி?

தாழ்மை உணர்வொன்றே
மனிதம் எனும் மாண்புணராது
அடிமைகளாயும் ஆண்டான்களாயும்
ஆனவர்கள்…

கடவுளாகவும் கடவுளைக் காண்பவர்களாகவும் அன்றி
அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும்
ஆனவர்கள்…

எத்தகைய மூட மனிதர்கள் நாம்?
தன்னை அறியும் அறிவில்லாத மனிதன்
தான் தனது எனும் கொடுவிஷத்தினாலே
(பாழ்படுத்தும் இயற்கைதான் கொஞ்சமோ?)
தொடரும் பேராசைப் பேரழிவுகளாலும்
பெருங்குழப்பத் துயர்களாலுமே
அன்பும் அறமும் அழகுமற்ற
இப் பாழுலகு படைக்கப்பட்டிருக்கிறது
நம்மால்தான் என்பதை உணராதவர்கள்…

அறிவியல் தொழில்நுட்பங்களால்
தம் புலன்களையும்
இத் துயருலகச் செல்வங்களையும் மட்டுமே
பெருக்கிக் கொண்டு
தம் வறுமை நோய் நாடிச்
செயல்பட அறியாதவர்கள்…

காலமற்ற பெருவெளியில்
கவிதையின் மதம் உலாவும்.
அருட் பெருஞ்சோதியின்
தனிப் பெருங் கருணையினால் மட்டுமே
மாதிரிச் செயல்முறைப் பாடம் போல்
கொடுத்துக் கொடுத்துக் காட்டப்படும்
எதையுமே கண்டுகொள்ளத் தெரியாதவர்களால்…

மலருமோ கடவுளின் ராஜ்ஜியம்?





கவிதை  உருவாகியது: 18 அக்டோபர் 2023

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP