கயிற்றில் நடப்பவன்
இரண்டு கம்பங்களின்
ஒரு நுனியிலிருந்து ஒரு நுனிக்கு
இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில்
ஒரு மனிதன்
வான்வெளியில் ஒரு பாதையைக்
கண்டுகொண்டவனாய்
அந்தரத்திலிருந்தும்
தவறி விழுந்துவிடாதபடி
தன் உடல் பேணும் அபிநய
நடை கண்டு விட்டவனாய்...!
அண்ணாந்து பார்க்கும்
ஞானிகளுக்கு ஞானம்
கவிஞர்களுக்கு ஞானமும் கவிதையும்
அந்த மனிதனுக்கு பிழைப்பு
வறுமையிலாததோர் உலகைப் படைக்க
வக்கில்லாத மனிதத் திரளுக்கு
வித்தையும் பொழுதுபோக்கும்!
-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.