Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Wednesday, August 13, 2025

காலத்தின் ஒரு விதையாகத்தானே…

காலத்தின் ஒரு விதையாகத்தானே
கருப்பைக்குள் ஊன்றப்பட்டது
ஒரு மனித உயிர்?

அது இயல்பாக அறிந்துள்ளது
காலத்தைத்தானே?
மரணத்தை அறிந்திருந்தால் அல்லவா
வாழ்வை அறிந்திருக்கும்?

மரணம் எங்கே?
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
வீட்டையும் வெளியையும்
பிரித்துக் கொண்டு நிற்கும்
நிலைவாசல் போலல்லவா அது நிற்கிறது?

மரணத்தை அறிந்திராதவனும்
விலகி நிற்பவனுமான
மனிதனுக்கும் மனிதவாழ்வுக்கும்தான்
உய்வு ஏது?
நம் துயரங்களின் விளைநிலம்
காலம்தான் என்பதையும்
காலத்தையும்
காலத்தைக் கழுவித் தூய்மையாக்கும்
மரணத்தையும்
நாம் அறியாதவரை
நமக்கு விடுதலை ஏது?

நம்மால் உச்சிமுகரப்படும்
உயிர்ப் பிறப்பிற்காக
மானுடப் புதுவாழ்விற்காக
எப்போதும் தூய்மையின் உச்சத்திலிருக்கும்
நம் கருப்பையும் பிறப்புறுப்புமே
கழிவு உறுப்பாகவும் செயல்படுவது
இடையறாத தூய்மையினைச்
சுட்டுவதற்காக அல்லவா?
மரணத்தைச் சுட்டுவதற்காக அல்லவா?

மிகமிகச் சிக்கலாகிக் கிடக்கும் இந்த விடுதலை
மிகமிக எளிமையானதும்தானே?
முயன்றால்
மின்னற் பொழுதுதானே தூரம்?

Read more...

Friday, August 8, 2025

நத்தை

அடைய வேண்டிய இடத்தையும்
தன்னுடைய வீட்டையும்
பேரமைதி மிளிரும்
நிதானமான நடையையும்
கண்டு கொண்ட பேருயிர் !

தான் கண்டுகொண்டதிலேயே
மாட்டிக் கொண்ட சிற்றுயிர் !

Read more...

Wednesday, August 6, 2025

ஒன்றுதான் அது

ஒன்றுதான் அது
உள்ளதுதான் அது

ஆனால் அது
செயலாக வெளிப்படும்போது மட்டும்தானே
கடவுளாக இருக்கிறது?

தன்னை மய்யம் கொண்ட
எந்தச் செயலிலும் இல்லாதது

ஒன்றிலிருந்தும்
உள்ளதிலிருந்தும்
ஊற்றெடுத்து வருகிறது.

Read more...

Monday, August 4, 2025

நாம்தான் அது

அடைய வேண்டிய இடம்
என்று ஒன்றுண்டா?

இங்கே வந்துவிடுங்கள்
இங்கே வந்துவிடுங்கள்
என்று சொல்வதற்கு என்று
ஓர் இடம் கிடையாது
ஆனால்
இதை விட்டுவிடுங்கள்
இதை விட்டுவிடுங்கள்
என்று சொல்வதற்கோ
ஒவ்வொரு நொடியும்
ஒரு முந்தைய நொடி உள்ளது.

நாம் விட்டு விடுதலையாகி
நிற்கும் போதெல்லாம்
அடைய வேண்டிய இடத்திற்குத்தான்
வந்து சேர்ந்துவிடுகிறோம்.

அது ஒரு இடம்கூட அல்ல
நாம் தான் அது
இந்த பேரண்டம் !
எந்த ஒரு சொல்லிலும்
சிக்கிக் கொள்ளாது
ஒளிரும் பேருண்மை!
அல்லது
ஒளி மற்றும் பேருண்மை!

எதுவானாலும் சரி
அது சொல்லப்படுமபோது அல்ல
விட்டு விடுதலையாகி
ஒரு பொருளாகவோ செயலாகவோ
இருக்கும்போதுதான் அது உண்மை.

இப்போது "நாம்தான் அது" என்ற சொல்லை
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறோம்?

Read more...

Friday, August 1, 2025

ஒரு பறவை?

மானுடத் துயர் கலக்காத
எத்தகைய அமைதிப் பெருவெள்ளத்தைப்
பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கிறது
வானளாவிய பெருமரத்தின்
உச்சாணிக் கிளையில்
வந்தமர்ந்து கொண்டிருந்தது?

பெயரும் உருவமுமில்லாத ஒன்றின்
சிறியதொரு பெயரும் உருவமும்?

மோனப் பெருவெளியின் ஒரு பிஞ்சுக்
குரல் சொல் உரு.

ஒரு சொல்லால் அனைத்தையும்
உபதேசித்து விட முடியுமா?

அங்கிருந்து- அசையாமல்
அது நின்று கொண்டிருந்தது-
நகர்ந்தது. அபூர்வமாய்!

வானில் சிறகடிக்கும் ஒரு பறத்தல்
உபதேசமும் உபதேசப் பெருக்கமுமான
வியர்த்தம்தானா?
தானே இல்லாதபோது தான் எப்படி
அதை உபதேசித்திருக்க முடியும்?
ஒரு சொல்தானே பறந்து கொண்டிருந்தது
அதில் எங்கே இருக்கிறது உபதேசம்?
ஒவ்வொருவரும்
தானேதான் கண்டுபிடிக்க முடியும் உண்மைக்கு
பிறருடைய இடம் எங்கிருக்கிறது ?

Read more...

Wednesday, July 30, 2025

கிச்சு கிச்சு மூட்டினால்…

கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை

இந்த பூ மரத்திடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்
காணுமிடத்தையெல்லாம்
முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்
இந்த வான்மீன்களிடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்

பேரொளிரும் ஆனந்தப்
பெருவெளியிடமிருந்துதானே
கற்றிருக்க வேண்டும்
இந்த வான்மீன்களும்?

கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!

Read more...

Monday, July 28, 2025

இது யாருடைய குழந்தை?














முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி
தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை

ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும்
அந்தப் பெண்
கனிகளும் பறவைகளும் காற்றில் சிலிர்க்கும்
ஒரு மரநிழலில்தான் இருக்க வேண்டும்
அந்த மரம்
கருணையே உருவாய்க் கவிந்த
ஒரு விசும்பின் கீழ்தானே இருக்க வேண்டும்?
அந்த விசும்பும்
விசும்பு கடந்த பெருங்கருணைப்
பெருவெளியில்தானே இருக்க வேண்டும்?

பொக்கை வாயால் எங்கும்
பூஞ்சிரிப்பைத் தூவிக்கொண்டு
வாழ்வின் பொருளை மீட்டும் குழந்தைக்கு
தவறினால்
மீட்கத் தெரியாமலா போய்விடும்?

பற்றிக்கொள்ளத் தெரியாமலா போய்விடும்
பற்றற்றதோர் பேரிறைப் பெரும்பற்றை,
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை?

Read more...

Friday, July 25, 2025

கவிஞனின் துயரம்

பயணம் முடிந்து
வீடு வந்து சேர்ந்த
இரண்டு நாட்களாய்க் காய்ச்சல்.

வாட்ஸ்அப்பில் யாரும்
அச்சச்சோ காட்டவில்லையே
எனக் கவலை தெரிவித்ததற்கு
“சார், நீங்கள்
கவிதையல்லவா அனுப்பியதாக
எண்ணினோம்” என்கிறார்கள்!

Read more...

Wednesday, July 23, 2025

காய்ச்சல்-2

மென்மையான சூட்டில்
யாரோ அவனை
வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மானுடப் பசியாற்றும்
அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே?

சாலச் சமைந்த அப்பம் போலும்
சுட்ட கிழங்கு போலும்
நனி கனிந்த பழம் போலும்
அவர், எத்துணை அழகாய்_
துக்கத்தையும்
துக்க நீக்கத்தையும் கண்டுகொண்ட
தேவதை போலத்தானே காணப்படுகிறார்;
அமைதி கொள்வதற்கன்றி
கவலை கொள்வதற்கோ
களி கொல்வதற்கோ
என்ன இருக்கிறது?

Read more...

Monday, July 21, 2025

காய்ச்சல்-1

அவன் வாணாளில்
தீவிரமான நோய்கள் வந்தபோது
இருந்திருக்கலாம்.
எண்ணங்கள் கைவிட்டுவிடும்
இளம்பருவத்தில்
அவன் அதை அனுபவித்திருக்கலாம்,
ஞாபகமே இல்லை என்றாலும்
வாடும் முகங்கள் மூலம் அதனை
கேள்விப்பட்டிருக்கத்தானே செய்கிறான்?

இன்று இந்த 78ம் வயதின் பயணத்தில்தான்
அவன் அந்த விருந்தாளியைச் சந்திக்கிறான்
ஆண்களானால் தங்கள் காதலியையும்
பெண்களானால் தங்கள் காதலனையும்
கடவுளானால் கடவுளிடமே இளைப்பாறும்
கடவுளின் துயரையும் கண்டதுபோல்
அப்படி ஒரு நெருக்கமான உறவும்
உறவின் இன்பமும் தவிர வேறேது?

Read more...

Friday, July 18, 2025

கண்ட நாள் முதலாய்…

ஒரு கணம்தானா
நாம் அதிசயித்து நின்ற நேரம்?
மின்னலை விளக்காக்கிக் கொள்ளத்
தெரியாத பேதைகளாய்
மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில்
சுருண்டு கிடப்பதுதானா நம் அவலம்?

கண்ட நாள் முதலாய்
அலையும் ஒளிச்சுடராய்
பூமியெங்கும் சுற்றி,
உலவிக் கொண்டிருக்கிறது காண்
ஒரு வண்ணத்துப்பூச்சி!

Read more...

Wednesday, July 16, 2025

இந்த வேற்று வெளியினிலே...

இந்த வேற்று வெளியினிலே
புன்னகைக்கும் எல்லோருமே
என்றும் அறிந்தவர்களாகவே
தெரிகிறார்கள்
நெருங்கிவிட்டவர்களாகவே
தெரிகிறார்கள்

இங்கே எதுவாகவும் நாம் ஆகலாம் என்றிருக்க
எதுவாக விரும்புகிறது நம் உள்ளம்?

Read more...

Tuesday, July 15, 2025

முதல் ஒன்று

ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து
பலவாகியதென்றாலும்
அந்த ஒவ்வொன்றிலும்
முதல் ஒன்று இருந்தது.

பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும்
பலப் பல இணைந்து இணைந்து
ஒரு ஒரு விதையாக ஆனவற்றுள்ளும்
அந்த முதல் ஒன்று இருந்தது.

விதை எத்துணை முக்கியமோ
விருட்சம் அத்துணை முக்கியமாக இருந்தது
அத்தோடு
விருட்சம்தான் விதை
விதைதான் விருட்சம் என்பதும்
ஒவ்வொரு இடத்திலும் அந்த முதல் ஒன்று
தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதும்
தெளிவாகவே இருந்தது.

மனிதன்தான் மனித சமூகம்
மனித சமூகம்தான் மனிதன் என்பதையும்
ஒவ்வொரு இடத்திலும்
அந்த முதல் ஒன்று தொடர்ந்து வருகிறது என்பதையும்
சொல்லவும் வேண்டுமா?

ஒரே ஒரு வேறுபாடு
நாம் சொல்லியே ஆக வேண்டும்
மனிதன்தான் உண்மை
மனித சமூகம் என்பது
நம் கற்பனை படைப்பு.

ஒரு இலட்சியம், ஒரு கண்டுபிடிப்பு
முதலில்
ஒரு தனி மனிதனிடம்தானே தோன்றுகிறது?

பல்லாயிரம் உயிர்களிடமிருந்து தோன்றியவன்தான்
ஒரு மனிதன் என்றாலும்
பல்லாயிரம் மனிதர்களிடமிருந்தல்லால்
ஒரு மனிதனிடமிருந்துதானே
ஒவ்வொரு காலமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு
ஒரு பெருவிழிப்பு தோன்றுகிறது?
என்றாலும் அதற்காக அந்த மனிதன்
புகழுக்குரியவனாவானோ?
ஆன்றமைந்த மனிதனே எனில்
மெய்ம்மை அறிந்தவனே எனில்
அவன் அதை விரும்புவானா?
எல்லாப் புகழும் அவனைத் தோற்றுவித்த
பல்லாயிரம் உயிர்களுக்கும்
அவர்கள் உறவாகி வளரும்
மனித சமூக மனங்களுக்குமல்லவா உரியது?

Read more...

Monday, July 7, 2025

இரயில் தண்டவாளம்

நாம் செல்ல வேண்டிய இடத்தைச்
சொல்லிவிடவில்லையா,
கண்ணெதிரே
இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?

Read more...

Wednesday, July 2, 2025

ஒளியை மறந்துவிடுவார்களோ?

ஒளியை மறந்துவிடுவார்களோ என்று
திகைக்க வைக்கின்றனர்
கொஞ்சநேரம்
நிழல்களோடே
விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!

Read more...

Monday, June 30, 2025

ஒரு புல்!

நடைபாதையின்
சதுர சதுரத் தளக் கற்களுக்கிடையே
ஒரு ஊசி நுனி இடைவெளி கண்டு
உட்புகுந்துவிட்டது ஒரு புல்!

அது வளர்கிறது! வளர்கிறது!
மனிதனின் பாதையில்
கண்டிப்பாய்
அவன் பார்வையை எட்டிவிடும்படியாய்!

Read more...

Friday, June 27, 2025

கண்மருந்து,,,

கண்மருந்துச் சொட்டுடன்
அய்ந்து நிமிடங்கள் விழிமூடியிருக்க
காலத்தை உங்கள் கையில்
ஒப்படைத்துவிட்டல்லவா
அவன் தன் அன்பனுடன்
மூழ்கிவிடுகிறான்?

பிரதி உபகாரக்
காதல் வெளிப்பாடாய்
காலத்தோடும் அவனுக்குக்
கடமைகளிருக்கிறதல்லவா?

Read more...

Wednesday, June 25, 2025

காதல் எனும் செயல்வடிவம்…

காதல் எனும் செயல்வடிவம் கொண்டதோ
காற்று?

உபவன மாஞ்சோலைக்குள்
ஒரு காற்று
பெருங்கூட்டமாக
குழுக்களாக
தனித்தனியாக
பிரிவிலாத ஒன்றின்
பேருயிராக
பேருரையாக.

இவையெல்லாம் சொற்கள்
மானுட உளறல்கள்
சமயங்களில்
ஆபத்தானவைகளும்கூட

சொற்களைத் தவிர
நம்மிடம் வேறொன்றுமில்லையா
செயல்கள்? பொருள்கள்?

நம் செயல்களுக்கும் பொருள்களுக்கும் மட்டுமே
உரித்தானது என்பதைக் காட்டுவதற்குத்தானா
நம்முடைய எந்தப் பிடிக்குள்ளும்
அகப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது
காற்று?

Read more...

Monday, June 23, 2025

இந்தக் காற்று வெளியிடையே…

இந்தக் காற்று வெளியிடையே அல்லவா
காதலையும் காதலின் இரகசியங்கள்
அத்தனையையும் அவன் அறிந்து கொண்டான்!

எப்போதும் சிலிர்சிலிர்க்கும்
பெருங்களியுடனும்
எப்போதாவதுதான்
அசையாத மவுனத்துடனும்
வாழ்கின்றன இந்த மரஞ்செடிகொடிகள்!

வருடிச் செல்லும் காற்று
சொல்லிச் சென்ற பேருண்மையை
எத்தனை முறைகள் அவனும் அதனைப் போலவே
சொல்லிக்கொண்டேயிருக்கிறான்!

வான்வெளியில் பேரொளிரும் ஒரு பொருளைப் பற்றி
எங்கும் விரிந்துகிடக்கும் ஒளியைப் பற்றி
இரு மண் துகள்களுக்கிடையிலும்
நின்று துலங்கும் சூரியனையும்பற்றி
எத்தனை முறைகள் அவனும்தான்
சொல்லிக் கொண்டே இருக்கிறான்?

Read more...

Monday, June 16, 2025

தனக்குத் தன்னையே…

முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP