Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Friday, May 29, 2026

அந்த மரம்தானா இது?‌

நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?

ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?

ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட!‌ என‌
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?

Read more...

Friday, May 15, 2026

அற்புதம் !

தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.

கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _

யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!

Read more...

Wednesday, May 13, 2026

அவனது தேநீர் நேரம்

தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !‌

இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை‌ தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;

புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!‌

Read more...

Monday, May 11, 2026

இலக்கியா

உடல் உறுப்பு ஒன்றின்
தசைநார்ப்பிசகு வலிபோக்க வந்த
நிபுணரான அந்தப் பெண்ணுக்கு
மாறா இளமை ஒன்று மிளிரும் மாய அழகு!
மானுட அழகின் பொதுமொழி பேசும் கண்கள்!

சிகிச்சை பயிற்சிக்கு இடையே இடையே
நடந்த உரையாடலில்
பெருநகர்களுக்கே உரிய
உலகின் வேறு வேறு தலங்கள்
வேறு வேறு மொழிகள்
வேறு வேறு இனங்களையெல்லாம் கடந்த
புத்தம் புதியதொரு செய்தியாக
தான் ஒரு குழந்தைப்பேறு மருத்துவரும்கூட
என்றார் அவர்

அவர் பெயர் 'இலக்கியா' எனும்
பொருள்தரும் சமஸ்கிருதச் சொல்.
அவரது பொழுதுபோக்காய்:
கால்பந்து மற்றும் கதக் நடனம்.
அம்மா பரதநாட்டியர்,
அப்பாவும் கவிதைநேசர்
இலக்கியா எனும் பெயருடன்
மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும்
கற்றுக்கொடுத்தவர்.

உலகைக் கொடூரமாய்ப் பாழ்படுத்திக்கிடக்கும்
சாதி மத இன பிரிவுகளையெல்லாம் தடுத்து
உலகை இணைத்துவிடுவதற்கான
அடையாளமாய்
கலையும் இலக்கியமும் மருத்துவமுமாய்
அந்த பெண்மணி_
மானுட அழகின் பொதுமொழி பேசும்
கண்களுடன்!

Read more...

Friday, May 8, 2026

ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே...

துவாரமுள்ள ஒரு‌ மூக்குமடலில்
சொருகுவதற்கான ஊசியுடன்,
கட்புலனாகா
பொன்னில் பொதிந்த
புள்ளி வைரக்கல்லாய்,
ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே
வழியில் அவன் கண்களைப் பறித்துவிட்ட
ஒரு மூக்குத்தி!
ஒவ்வொரு மண்துகள்களையும்
ஒளிரவைக்கப் பார்க்கும் பேரொளி!

எப்போதும் அவன் உயிரை
வாட்டி வதைத்துக் கொண்டிருந்த
பெருவெள்ளத் துளியும்
விலைமதிக்க முடியாததும்
ஆசைகளாலன்றி
பேராற்றற் பெருங்கடலில் விளைந்த
முத்துச் சன்னம்!

Read more...

Wednesday, May 6, 2026

சாலையும் மரங்களும் செருப்பும்

வெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை
பெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்
வரிசை மரங்கினூடே அச்சாலை
மெதுவாய் நகர்ந்துகொண்டிந்தது
நானோ,
மெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து
திகைத்து நின்றுவிட்டேன்.
மனிதர்களுக்கு இடைஞ்சலிக்காது
சாலையோரங்களில் மரங்களின் ஊர்வலம்
கானகத்தில் மரங்களின் மாநாடு
மரங்களின் ஒரே கோஷம்:
”மழை வேண்டும்!”
மழை வேண்டி வேண்டி
வானத்தைப் பிராண்டின கிளைகள்
நீர் வேண்டி வேண்டி
பூமியைப் பிராண்டின வேர்கள்
வெள்ளமாய்ப் பெய்த மழையில்
மரங்களும் சாலையும் நானும்
நனைந்தோம்
முளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்
நனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு


மாற்றப்படாத வீடு(1984) தொகுப்பிலிருந்து

Read more...

Monday, May 4, 2026

சாலையும் சாலையோர மரங்களும்

சாலைகள்
எங்கும் தங்குவதில்லை!
சாலையோர மரங்கள்
பயணம் செய்வதேயில்லை!

சாலையும்
சாலையோர மரங்களும் போன்ற
புரிதல்மிக்க நண்பர்கள்
உலகில் யாருமில்லை

Read more...

Friday, May 1, 2026

கண்டுகொள்ள வேண்டியது

கண் கொள்ளாக் காட்சியாய்
தட்டுநீரில் நடந்து செல்லும்
கொக்கும் கொக்கின் பிம்பமும்!

தடாகத்தில் நீந்தும்
வாத்தும் அதன் பிம்பமும்!

நமது உருவிற்கும் பிம்பத்திற்கும்
இடையேயன்றோ இருக்கிறது
நாம் கண்டுகொள்ள வேண்டிய காட்சி?

Read more...

Monday, April 27, 2026

அறுவடை

நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்க முடியாது


- நார்சிசஸ் வனம்(1996)

Read more...

Wednesday, April 22, 2026

நினைவிருக்கிறதா?

நினைவிருக்கிறதா
காதல்தான் மலர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?

காதலையும் கருணையையும் இழந்த
காமமும் வெறுப்பும் துயரமும்தான்
மனிதர்களானது என்பதை
நாம் முதன் முதலாக கண்ட பொழுது?

Read more...

Monday, April 20, 2026

தக்காளிச் சுவை

இயற்கை வேளாண்மையில்
கொழித்த தக்காளிப் பழம் அல்லவா
சிக்கென்ற இனிப்பும் உறைப்பும் வண்ணமும்
அழுத்தமாய்க் கூடிய அற்புதச் சுவையுடன்
இருந்தது…

உடன் வந்து கொண்டிருந்த
அழகியும் அன்பியுமானவரிடம்
“இதழ்ச் சுவை போல” என்று
வாய்க்கு வந்த சொல்லைச் சொல்ல
அச்சமாக இருந்தது…

அதனாலேயும்தானே அது
கூடுதலான சுவையுடன் இருந்தது?

Read more...

Friday, April 17, 2026

அனாதையாயிருந்தது!

ஒளிரும் மின் விளக்குகளுடன்
வானத்தின் கீழிருந்த மைதானம் போலிருந்தது
அந்த ஆடைக் கடையின் சிறப்புக்கூறு, கவர்ச்சி!

வணிகமே நோக்கமாயிருந்ததால்
அதைப் படைத்தவனாலும் சரி
அதனால் ஈர்க்கப்பட்டு வந்து உலாவும்
மனிதர்களாலும் சரி
கண்டு கொள்ளப்படாத
அனாதையாகவே இருந்தது
அங்கே அந்த படைப்பின் விக்கிரகம் அளித்த
பேருணர்வு!

Read more...

Wednesday, April 15, 2026

ஊனக் கைத்தடி கொண்டு…

”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
சாதியாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!

Read more...

Monday, April 13, 2026

ட்ரெட்மில் சோதனை

இருந்த இடத்தில் இருந்தபடியே
ட்ரெட்மில்லில் ஓடவிட்டு
அவன் இதயத்தைப் பரிசீலிக்கிறார்
டாக்டர்.

நடைக்கும் அப்பாலுள்ள
சொற்சமாச்சாரங்கள் எதுவுமே
காரியத்திற்கு உதவவில்லை மற்றும்
ஆபத்துகளின் ஊற்றாயிருப்பதும் என்பதுதானே
நாம் கண்டதும் காணாததுமான உண்மை?

Read more...

Friday, April 10, 2026

பேரொலிமலர்

பதினொன்றாம் மாடியில்தான்
அவன் ஓய்வும் துயிலும்.
கீழே புல்வெளியும் மரங்களும் செழித்த
உபவனத்தில்தான் அவன் நடை.

திடீர் திடீரென
குழந்தைகளின் விளையாட்டுச் சதுக்கத்திலிருந்து
வானமும் பூமியும்
கூடிவிட்டாற்போல்
கோடானு கோடி சமிக்ஞைகளுடன்
விரிந்து பூத்து உதிரும் ஒரு
பேரொலிமலர்!

Read more...

Wednesday, April 8, 2026

K

விண்ணிலிருந்தும்
மனிதனின் மய்யத்தைத் தொட்டு
மய்யத்திலிருந்தும்
சிக்கிக் கொண்டதிலிருந்து
பாய்ந்து
பூமியைத் தொட்டு நிற்கும்
கதிர்!

Read more...

Monday, April 6, 2026

I

முதல் சொல்லாகவும்
எழுத்தாகவும்
எண்ணாகவும்
விண்ணிலிருந்து
மண்ணில் வந்து
ஊன்றி நிற்கும்
நான்!

Read more...

Friday, April 3, 2026

காற்று தழுவிச் செல்லாத…

காற்று தழுவிச் செல்லாத
உடம்பின் ஒரு பகுதியில்
நீங்காத புழுக்கம்!

காரணமான ஆடைதான்
தனை உணர்ந்து ஒற்றி
ஆறுதலளிக்கிறது அதை!

Read more...

Wednesday, April 1, 2026

எத்துணை பெரிய விடுதலை!

வியர்த்துக் கசியும் உடலை
ஆற்றட்டும் என
சட்டையைக் கழற்றி
நாற்காலியின் முதுகில் போட்டான்!

அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை
ஆணானதால் போட்டான்
மனிதன் ஒருபாலுயிரியாயிருந்தால்
இந்த பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்?

Read more...

Friday, March 27, 2026

அந்த பெருமழை!

பூமியின் தாகவிடாயினால்தானே
மழை பொழிகிறது பூமியின் மீது!

அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே
காலமற்ற பொழுதுகளில்
கருணையின் அவ்வப்போது
பெய்யும் பெருமழையும்
பொழிகிறது அறத்தின் மீது?

போதாத அதிருப்திக் கனலால்தானே
ஒரு மரத்தைக்கூடக் காணமுடியாத
பாலைவனமாகிக் கிடக்கிறது உலகம்?

காலம் காலமாய்
எரிந்து கொண்டிருக்கும் பாலைவனம்
எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பெருமழை
- நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் -
ஒட்டுமொத்தமான
தாகவிடாய் பெருகினால் மட்டுமே
பொழியும் காண்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP