Friday, April 26, 2024
Wednesday, April 24, 2024
இசை
பாதத்திலொரு முள்தைத்து
பாதையெல்லாம் முள்ளாய்க் குத்துகிறது
வழியை அடைக்கிறது வலி
வலியினுள்ளா
வழியினுள்ளா
வாத்தியம் ஒன்று இசைக்கிறது!
Monday, April 22, 2024
தர்மம்
தர்மம் வேறு
மதம் வேறு
(தர்மம் - நம்மால் உருவாக்கப்படாததும்
மதம்- நம்மால் உருவாக்கப்பட்டதும் ஆம்)
இல்லையா?
தர்மத்தின் முன்னொட்டாக
மதத்தின் பேரைச் சேர்க்கிறது
சாத்தான்!
பாவம்
அவனும்
தன்னைத்தானே
அறிந்து கொள்ளாத
அறிவிலிதானே?
Friday, April 19, 2024
Wednesday, April 17, 2024
அவன் குரல்
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் கட்சிக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் மதத்திற்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
உங்களைப் போன்றவர்கள்
எங்கள் அமைப்புக்கு வந்தால்
இந்த உலகத்தையே மாற்றி விடலாம்
என அழைத்தார்கள் அவனை
ஒரு பக்கம் அத்துணை பெரியதாய்
ஒரு சத்சங்கத்தையே அவன் நண்பர்கள்
வளர்த்த போதிலும்
சாதி எனும் சாத்தானைக் கண்டு கொள்ளாமல்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலோடே
கடவுளின் ராஜ்ஜியத்தை எழுப்ப முடியாதது கண்டான்
தீமையின் விஷவேரைக் கண்டுகொண்டா-
னவன் குரலைக் கேட்டு இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் மறுப்பவன்
எந்த ஒரு வழியும்
இல்லை என்று மட்டும் சொல்லி விடாமல்
ஒரு வழி இருக்கிறது என்றவன் சொல்வதை
நாம் கவனிக்கலாமல்லவா?
ஒரே வழி அதனை
நாம் கவனிக்காதமைதானோ
போரும் துயரும் அறமின்மையுமே
தொடர்ந்து வரும்
இந்த உலகைப் படைத்திருக்கிறது?
ஒரு கணம் போதுமே என்கிறானே
தீதிலாதோர் தேவருலகைப் படைத்து விட?
கணந்தோறும் எரிந்து கொண்டே
ஒளிர்ந்து கொண்டுமிருக்கும்
அழியாச்சுடர் அல்லவா அது?
Monday, April 15, 2024
குன்றாத அமுதம்
வந்தமர்ந்து தேனுண்டாலும்
குன்றாது விளைந்து கொண்டிருந்தது
மலர்த்தேன்
வந்தமர்ந்த மலரிடமிருந்து
அதுவும்தான் தேன் பருகிக் கொண்டிருப்பதால்!
Read more...
Friday, April 12, 2024
Wednesday, April 10, 2024
மாபெரும் பாடல்
மேரா நாம் இஸ்க்
தேரா நாம் இஸ்க்
என் பெயர் அன்பு
எங்கள் பெயர் அன்பு எனப்
பாடலின் இசைப் பெருக்கம்
இப்பேரண்டமெங்கும் விரிந்துவிடுமாறு
ஒலித்தது பாடல் அவன் பாடியது
ஆனால் அந்தப் பாவி பாடாத வேளையில்
சாதிவிஷக்காரன் என்பதுதானே
நாம் கண்ட கொடுமை..?
பாடுவது யார்க்கும் அரியவாம்தான் என்றால்
இதுகாறும் நம்மால் படைக்கப்படாத
ஒரு மாபெரும் பாடலைத்தானே
பாடப் பார்க்க வேண்டும் நாமிவ்வுலகில்?
Monday, April 8, 2024
பாடுகள்
கூட்டத்தில்
ஓர் இடம் பிடிப்பதற்காக
அப்புறம்
கூட்டத்தில்
தானே ஒசத்தியானவன் எனும்
ஒர் பேர் பெறுவதற்காக
அப்புறம்
தான் பேர் பெற இயலாமற் போனாலும்
தன் குழு, தன் இனம், தன் சாதிக்காரனுக்காக …
மெது விஷத்தால்
தன்னையும் உலகையும்
போராலும் துயராலும்
கொன்று கொண்டிருக்கிறான் மனிதன்
பேர் புகழ் பணம் தரத் தொடங்கிவிடும்
எந்தச் செயலானால் என்ன
எந்தக் கலையானால் என்ன
கவிதையேயானாலும் என்ன
ஒசத்தியான மனிதனுக்கு
பயிற்சியினால் ஆகாதது என்ன?
பயிற்சியைத் தாண்டி ஒன்று உண்டா?
அன்பாவது, அறமாவது –
அழகு பற்றியெல்லாம் எவனுக்குத் தெரியும்?
உருவமில்லாத இந்த மெய்ப்பொருள்களை
யார் அறிவார்?
யாரால் ஏய்த்துவிட முடியாது?
கச்சிதமாக தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி
சுடாமலா போகும்?
வர விடுவோமா பிற குலத்தோரை
எத்தனைக் கால பாரம்பரியம் நம்முடையது?
நாம் தீட்டும் பொய்களாலும் இழி சித்திரங்களாலும்
கண்களும் காதுகளும் இயலாதவன் போன்ற நம் நடிப்பாலும்
நாம் செய்யும் கொலைகளை விடப்
பிறிதொரு ஆக்கச் செயல் உண்டோ?
பயப்படாதீர்கள், அன்பர்களே
கவிதையின் ஆரம்ப வரிகளுக்குச் செல்லுங்கள்
குற்றத்தின் வேர் கண்டுவிட்டால் போதும்
மின்னற்பொழுதே தூரம்
இதோ கண் முன்னே தான் இருக்கிறது
கடவுளின் ராஜ்ஜியம்!
-இனி ஒரு விதி செய்வோம்(2023) தொகுப்பிலிருந்து
இந்நூல் சீர்மை பதிப்பகத்தில் கிடைக்கும்
Read more...
Wednesday, April 3, 2024
இந்த மலைகள்!
கேள்விகளோடு வந்து நிற்கும்போது
உரையாடுகின்றன இந்த மலைகள்!
கேள்விகள் இல்லாதபோதுதான்
எத்துணை அமைதியாக!
இரைச்சல்களோடு வந்து நிற்கும்போதும்
எத்துணை துல்லியமாக எதிரொலித்தபடி!
Monday, April 1, 2024
குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை
கூடி வாழ்ந்தபடி
கூட்டமாய்ப் பறந்து திரியும்
குருவிகளை பறவைகளைப்
பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் நம் பார்வையில்
ஒன்றுபோல் காணப்படுவதில்
ஒரு பொருளுண்டு
ஒரு கதையுண்டு.
வெகுகாலத்திற்கு முன்பு
அவர்களிடையே அரசர்கள் இருந்தார்கள்
செல்வர்கள் இருந்தார்கள் ஏழைகள் இருந்தார்கள்
தீரர்கள் இருந்தார்கள் சாமான்யர்கள் இருந்தார்கள்
பெரியவர்கள் இருந்தார்கள் சிறியவர்கள் இருந்தார்கள்
வேறுபாடுகள் இருந்தன ஒற்றுமைகள் இருந்தன
சான்றோர்கள் இருந்தனர் துன்பமும் இருந்தது.
துயரை முடிவுக்குக் கொண்டுவர அறிந்த
சான்றோர் ஒருவர் தோன்றினார்.
முழுமையான, புனிதமான ஒரு மனிதர்.
அந்நாள் தொட்டு
ஒவ்வொரு புனிதராய்த்
தோன்றிக் கொண்டே இருந்தார்கள்.
ஓர் ஒற்றை ஆலமரம் மட்டுமேயாய்
இருந்த இடம் திடீரென்று
ஒர் பெருங்காடாக மாறிவிட்டது.
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியெங்குமொரு பச்சைக் கம்பளமே
விரிந்து விட்டது.
வானத்தை நோக்கி
வேர் விரித்தாற் போன்று
அத்தனை இலைகளையும்
உதிர்த்து நின்ற ஒர் மரத்தில்
குபீரெனப் பொங்கி எழுந்தன
புதுத் துளிர்கள்.
ஒற்றை விதை ஒன்றில் தோன்றிய
ஒற்றைப் பூமரம்தான்
ஒற்றைப் பூங்கொத்தாக
கொள்ளை கொள்ளையாய்
விதைகள் வீசப்போகும்
கொள்ளை கொள்ளையான பூக்களுடன்.
பூமியெங்குமோர் புன்னகையைக் கொளுத்திற்று
பயிர்கள் எங்கும் அமர்ந்து
பசியாறி எழுந்து பறந்த
படைக் குருவிகள் போல்
நீங்கியதோர் வெக்கையும்
குளுகுளுவென்று எழுந்ததோர் பசுமையும்.
இனி இந்த பூமியில்
எந்த ஒரு கசடும் படியவே முடியாதென
ஒரு பெருவெள்ளம்
கொட்டிப் புரண்டு பாயத் தொடங்கியது
அருவிகளும் ஆறுகளுமாய்.
பளீரிடும் வெண்பட்டுக் கம்பளமாய்
விரிந்த வெயிலில்
சின்னஞ்சிறு புழுக்களும்
இன்பமாய் நெளிந்து ஆடின.
மயில் தோகை போல்
வானில் படர்ந்த மேகங்களிலிருந்து
பொழிவதற்கு முன்
ஒரு மனிதனின் மூளையைப்
பொட்டெனத் தீண்டிவிட்ட
சொட்டுத் துளியினில்தான்
எத்தகைய பேரின்பம்!
அன்றுதான்
வேறுபாடுகளையோ துயர்களையோ அறியாத
இந்த புதுக் குருவிகளும்
தோன்றி விட்டன என்கிறார்கள்.
- ஏஞ்சல் (2019) கவிதைத் தொகுப்பிலிருந்து. Read more...
Wednesday, March 27, 2024
மரங்கள், பூக்கள், தேவதைகள்
ஒளிரும் வானத்தைச்
சிறிய பெரிய
விண் சுடர்களாய்க் காட்டுகின்றன
வனப் பூங்காவின் மரங்கள்!
விண்ணில் ஒளிர்ந்தாலும்
மண்ணை வாழ்த்தவே
தரையில் வந்து
விரிந்து கிடக்கும் பூக்கள்.
தன் வேர்களையும்
இப் பேரண்டத்தின் வேர்களையும்
நன்கறிந்து கொண்ட
பெருந் தேவதைகள்!
Monday, March 25, 2024
அவரின் புன்னகை
இயங்கும் பெருக்குமாறோடு
விளையாடின சருகுகள்
கொஞ்ச நேரம்
அவரும் அவைகளுடன்!
Wednesday, March 20, 2024
யாருமேயில்லாத பழக்கடை
யாருமே இல்லாத அந்த பழக்கடை
ஆசீர்வாதிக்கப்பட்டது போல இருந்தது!
வானத்தையும் மரத்தையும் பறவைகளையும்
பக்கத்துக் கடைக்காரர்களையும்
காவலாக வைத்துவிட்டு
தேனீர்க் கடைக்குச் சென்றிருந்த பழக்கடைக்காரன்
வேகமாய் திரும்ப வந்தபோது
அருந்திய தேநீரின் சுவையாலோ
கண்டு கொண்ட மனிதர்களைக்
கண்டுகொண்ட விழிப்பினாலோ
கடமை மிக்கதொரு
கடவுளைப் போலவே தோன்றினான்!
Monday, March 18, 2024
நிறை
தாகம்!
’தண்ணீர்’ என விரல் அடையாளமிட்டுக் கேட்கிறீர்கள்.
வருகிறது
தேவாமிர்தம் என அருந்தி முடிக்கிறீர்கள்
பெற்றுக் கொண்ட குவளையுடன்
இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா
என்று கேட்கிறார்
போதும் என்கிறீர்கள்
அப்படி ஒரு நிறைவுடன்தானே?
பணம் பொருள் சேர்ப்பதில் மட்டும்
ஏன் இந்த நிறைவு இல்லை?
Wednesday, March 13, 2024
அசையும் பல்
என்ன காலம் இது?
என்ன வேலை இது?
அசையும் பல்லை
சுட்டு விரல் ஒன்றால்
தொட்டு அழுத்தி
ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்!
அதுவும் ஆட்டத்தில்
ஆட்டத்தை இரசித்துக்கொண்டே
ஆடிக்கொண்டிருந்தது
உயிரினின்றும்
கழன்று போகப் போகும்
கவலையே இல்லை
மரணம் பற்றியோ
எதிர்காலம் பற்றியோ
இழப்பு பற்றியோ
எந்த நினைவுகளுமே இல்லாத
பேறுபெற்ற வாழ்வின்
பெருநடனத்திலல்லவா
திளைத்துக் கொண்டிருந்தது அது!
Tuesday, March 12, 2024
நடைவழியில்
நடை வழியில் கிடந்தது ஒரு சுள்ளி
இந்த அமைதியான காலை வேளையில்
அது தன் உள்ளே வைத்திருந்த குரல் கேட்கவே
அதை நெருங்கி
அவன் தன் பாதங்களால் தொட்டு அழுத்தினான்
அதுவும் மகிழ்ந்து வெளிப்படுத்திய
இனிமையான அந்தக் குரல்
உரைத்தது காண்:
“வெளியினதும் உன்னுடையதுமான
உறவு அன்றி ஏதுமில்லை, அன்பா!”
Wednesday, March 6, 2024
மலர்கள்
நடைபாதையில்
செம்பொற்கம்பளம்போல் விரிந்து கிடந்த
டுயூலிப் மலர்களைக்
கூட்டிவைத்திருந்தார் தோட்டக்காரர்
எந்த ஒரு மலரும்
தன் தனித்தன்மையை விடாமலேயே
கூடிக் களித்துக் கொண்டு
அப்போதும் ஓர் ஒற்றைப் பூச்செண்டு
மலர் போல!
Monday, March 4, 2024
மலர்
ஒரு நாளுக்குள் உதிர்ந்து
ஒரு வாரத்திற்குள் சுருண்டு
உலர்ந்து விடும் இந்த மலர்
தனக்குள் வைத்திருக்கும் காலத்தை யார் அறிவார்?
இந்த மொத்த உலகின் ஒரு பகுதியாகவே
தன்னை உணர்ந்த மலர்
இந்த மொத்த உலகிற்கும் தனது மணம்
பரவிக் கொண்டிருப்பதைத்தான் அறியாதா?
துயரங்களேயற்ற அமைதியான
முழுவாழ்வையும் வாழ்ந்து விடத்தானே செய்கிறது?
இந்தப் பேரன்மையும் பெருவாழ்வையும்
பேரழகையும் தெரிந்து கொண்டுதானா
காதலன் காதலிக்கு மலரை நீட்டுகிறான்?
காதலி தன் தலையில் சூடிக் கொள்கிறாள்?
Friday, March 1, 2024
பேறு பெற்றோர்
தன் காலடியில் ஒரு சிறு சக்கரம்
இருப்பதைக் கண்டு கொண்டவர்கள்
பேறு பெற்றோர்
அதுவே தர்மசக்கரம் என்பதை உணர்ந்தோர்
பெரும் பேறு பெற்றோர்
அதனை இயக்கும் பிடி கிடைத்தோர்
மீப் பெரும் பேறு பெற்றோர்
அதுவே மொத்த உலகத்தையும்
விபத்தே இல்லாமல் படைத்து இயக்கும்
மய்யமற்றதோர் மய்யப்
பெருஞ்சக்கரம் என்பதை உணர்ந்தோர்
மீ மீப் பெரும் பேறு பெற்றோர்.