ஊழல் மலிந்துவிட்ட...
ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?
Poet Devadevan
ஊழல் மலிந்துவிட்ட
மனித உறவுகளை விட்டு
தூர வந்து நிற்பதாலோ
இத்துணை களி நிறை
இந்தக் காற்று வெளியினிலே
கண்விழித்துக் கொண்ட தாவரங்களுக்கு?
இப் பேரண்ட
பெருவெளியைப் பார்த்தல்லவா
புன்னகைக்கிறது,
புல்லிலிருந்து ஒரு பூ!
“இப்போதெல்லாம் மனிதர்கள்
நம்மைப் பார்ப்பதேயில்லை
எப்போதும் கைபேசியிலும்
அல்லது ஏதாவது ஒரு எண்ணங்களிலும்தான்
மூழ்கியவர்களாய் இருக்கிறார்கள்
எல்லாப் பிரச்சனைகளும்
காரணங்களும்
விடுதலையின் அமைதியும்
தாங்களே என்பதறியார்”
இந்த அகால வேளையிலும்
நடை உலா வந்தவர்களைப் பார்த்து
கனிவுடனும் பெருந்துயருடனும்
பேசிக்கொண்டனர்.
சொக்கவைக்கும்
ஜில்லென்ற குளிர்காற்றும்
ஊர்ந்து சென்று கொண்டிருந்த
உச்சிநிலாவும்
விண்மீன்களை மறைத்துவிட்ட
மழைமேகங்களும் நீலவானமும்
இரவிருளில் ஆன்றமைந்துவிட்ட
மரச்செறிவுகளும்
விரிவளாகத்தின் வீதிவிளக்குகளும்.
மரநிழலில்
ஒரு பெஞ்சு
சித்தார்த்தரேயாய்!
அமர வந்த மனிதருக்கு முன்னமே
நன்கு அமரத் தெரிந்ததாகவேதானே
இருக்க வேண்டும்
அந்த பெஞ்சு?
காதல் திருமணம் செய்து கொண்டோர்களால்
பூத்திருக்க வேண்டாமோ
பொன்னுலகு இப்பூமியில்?
காதல் திருமணம் என்ற பெயரில்
ஆண் பெண் இச்சைத்
தேர்வு மட்டும்தான் நடந்துள்ளதா?
மலராத மொட்டாகவும்
கனியாத காயாகவும்
காத்திருக்கிறதோ காதல் திருமணமும்?
வேரோடும்
வீசும் காற்றோடும்
வெயிலோடும்
ஒளியோடும் மட்டுமே
அவர்கள் நின்றிருந்தால்தானே
மலரவும் கனியவும் முடியும்?
பாதுகாப்புணர்வு போலும்
இருளில் ஓடும் வாகனங்களின்
பின் சிவப்பு விளக்குபோலும்
நடுநெற்றி உச்சியில்
சிவப்பு அணிந்துகொண்டு
அழகழகான இளம்பெண்கள் ...!
அழகு, மேலும் அழகுபெற்றதே தவிர
பாதுகாப்பு எங்கே தோன்றியது ?
பயம் எங்கே தோன்றியது?
நம்பிக்கை நம்பிக்கை இழப்பு என்ன
மானுட சஞ்சலங்கள் எங்கே தோன்றின?
அற்புதமானதோர் முடிவும் துவக்கமுமாய்
தோன்றியதோர் நிறையுணர்வுதான்
எத்துணை அற்புதம்!
ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே?
ஆண் என்றும் பெண் என்றும் உள்ள இந்த இருபால்மையினால்தானே மனிதன் இயற்கையோடும், சக மனிதனோடும் கொள்ளும் உறவை இழந்து போரும் துயருமான உவகைப் படைத்துவிட்டான்?
குடும்பம் என்றும் சமூகம் என்றும் கடவுள் என்றும் பெரியவன் என்றும் அடிமை என்றும் மேலாண்மை என்றெல்லாம் வளர்ந்து ... இருமையும் அதற்கு எதிரான ஒருமையும்கொண்ட உலகைப் படைத்துவிட்டான்?
இயற்கையின்முன் இயற்கையை மறைத்துக்கொண்டு நின்றபடி இணையாகவும் தனியாகவும் மனிதர்கள் சுயப்படம் எடுத்துக் கொள்வதை நீங்களும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
அன்னை இயற்கையே, இதற்கு பதில் சொல்லுங்கள்!
உங்கள் இயற்கையில்மட்டும் நீங்கள் பாதுகாக்கத் தொடங்கியுள்ள ஓரவஞ்சனை ஏன்?
பொறாமைப் படுவானேன்
கூந்தல் இருக்கிறவா
கொண்டை போட்டுக்கிடுறா
நமக்கு
ஒரு மயிர் இருந்ததால் போதுமே
ஒரு பேருலகைப் படைத்துவிடுவதற்கு?
என்ன கெடுபேறு! யார் செய்தது இது?
எதைக் காண வந்தார்களோ
அந்தக் கடலை மூடிவிட்டது,
அவர்கள் சந்திப்பு!
என்றாலும் தனிப்பெருங்கருணையால்
அவர்கள் எந்த இடத்தில் சென்றமர்ந்தாலும்
அடங்காத காதலுடன், தனது வானத்துடன்
அவர்கள் அருகேதானே வந்தமர்ந்து கொண்டிருந்தது
கடல்!
சாப்பிடும்போது அவர்
தன் இதழ்களில் சூடியிருந்த
வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன?
கைப்பை திறந்து எடுத்து
அதனை மீண்டும் சூடிக்கொண்டார்
மனிதர்களைப் போலின்றி
தன் வாழ்வினை நன்கறிந்த
உண்ணும் உணவோடு போலவே
பார்க்கும் விழிகளோடும்
கேட்கும் செவிகளோடும்
தழுவும் காற்றோடும்
உயிர்க்கும் மூச்சோடும்
உட்சென்று செரித்து மறைந்துவிடும்
வண்ணத்தை!
பேரு புகழு இரசிகர்கள் என
நிறைந்திருந்த மனித சமூகம்
நடுவே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்
“நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா?”
என்றான் அவன்.
அறிவுரை கூற வந்துவிட்டாயா, முட்டாள்!
நாம் மனிதர்களாய் இருப்பதே போதுமானது என
ஏன் சொல்ல முடியவில்லை உனக்கு?
எனச் சொல்லாமலேயே
ஒரு முறை முறைத்தார் அவர் அவனை!
ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவியரங்கம் அது. பார்வையாளர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது, ஒரு குழந்தை.
ஒவ்வொருவரும் தங்கள் கவிதையை வாசித்து முடிக்கும்போதும் மிகச்சரியாகவே அதே நேரத்தில் அதேநேரத்தில் அந்தக் குழந்தை கரைந்தது. அப்படியொரு கரைச்சல்! குழந்தைகளுக்கே உரிய கரைச்சல்!
முதன்முதலாக அதைக் கண்டபோது, நல்லவேளை கவிதை முடிந்த போது கத்தியது என்று சமாதானமாகிக் கொண்டார்கள். தந்தைக்கு, குழந்தையை வெளியே கொண்டுசென்று நிற்கவேண்டுமே என்ற சங்கடம். அப்புறம்தான் அந்த குழந்தை ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்தான் கரைந்தது கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள். நிகழ்ச்சி இயக்குனர் அதிர்ந்துவிட்டார்.
விழா முடிந்து வெளியேறுகையில் ஒவ்வொருவரும் அவர்களை ஈர்த்த கவிதைகளையும், ஒரு சந்திப்பின் நிறைவிலுமே செல்ல வேண்டியவர்கள் மிகுதியும் அந்த குழந்தை கரைச்சல் பற்றிய மனமூட்டத்தோடேயே சென்றார்கள்.
அடுத்த ஆண்டு, அதே காலை, அதே விழா, நிகழ்ச்சி அமைப்பாளரும் இயக்குனருமானவர் ஒரு அழைப்பிதழை அழுத்தமான ஒரு வேண்டுகோளுடனே குழந்தை மானசாவுக்கும் தந்தை நவீனுக்கும் மறக்காமல் அனுப்பிவைத்தார்.
கவியரங்கில் அந்த துடிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்படுவதை இயக்குநர் தன் மேலாண்மையால் நிறுவிய அந்த நாளிலிருந்து அது உறுதியாகிவிட்டது. குழந்தை அழாவிட்டால் குழந்தையைக் கிள்ளிவிட்டார்கள், பெற்றோர்கள். குழந்தையே வராவிட்டாலும், இருக்கிறவர்களிடையே வளர்ந்த குழந்தை, இளைஞர்கள் என்று மெது மெதுவாக ஆர்வமும் அக்கறையும் உள்ள யாராவது ஒருவர் குழந்தையைப் போலவே கால்கை உதைத்து கரைந்தனர்.
குழந்தை மானசா சிறுவயதிலேயே கவிதை மற்றும் இலக்கிய அரங்கில் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தவர். அந்நாட்டின் மரியாதைக்குரிய கவிஞரும் வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு இலக்கியப் புள்ளியும் ஆனவர். அவர் இல்லாத ஒரு காவியமேடை அந்த நாட்டில் கிடையாது.
இப்போது மானசா தொண்ணூறு வயது மூதாட்டியாக அந்த மேடையில் இருக்கிறார். விழா அரங்கில் கவிதைதோறும் கரைவதற்குரிய குட்டிக்குழந்தை இல்லை. வளர்ந்தவர்களும் இல்லை. அந்தச் சடங்கிற்குரிய குழந்தையாவதற்கு வெட்கப்பட்டவர்களாய் நீ செய், நீ செய் என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மானசா அந்தப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு கரையத் தொடங்கினார். யாராவது நிகழ்த்த வேண்டுமல்லவா?
உள்ளதாம் பொருளை
ஓதி உணர்த்த முடிந்ததா?
ஓதும் வேதங்களால்
உள்ளொளி துலங்கியதா?
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
துயர்மலி உலகின் பெருவலி கொண்ட
துய்யர்களிடமும் இருப்பாள்தானே?
கருணை வசனங்கள் போதுமோ
கருணை அதில் உண்டோ, செல்வி?
கள்ளமற்ற முனிவர்களா,
கள்ள முனிவர்களா என்பதையும்
கண்ணுடையார் ஒருவரால்தானே
கண்டுகொள்ள முடியும், தேவி?
கைப்புண்ணைக் காணக்
கண்ணாடி வேண்டுமோ, அம்மா?
உள்ளதாம் பொருள் அதனையே
வளர்ப்பதற்கு வேறு வழியே இல்லையா?
அதைக் காட்டாமல்
துதிகளுக்கோ காத்திருப்பவள் நீ?
எம் அன்னையே
காண்பவர்களோடு காணாதார்க்கும்கூட
அருளும் நீ
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
அழித்துக் கொண்டேயிருக்கும் மனிதனுக்கும்
அளித்துக்கொண்டேதானே இருக்கிறாய்
கடவுளின் ராஜ்ஜியத்தை?
மெய்ச் செயல்வடிவமாக மட்டுமே
ஒளிரும் கருணையே!
துதிகளுக்கு வளையாத
அரும்பொருளேயான ஆளுமையே...!
குட்டி வானத்தைத்தான்
அவன் ஒரு போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு
தலையைமட்டும்
வானத்திற்கு வெளியே நீட்டியவனாய்
துயின்றுகொண்டிருந்தான்.
வேற்றுக் கிரகத்திலிருந்துதான் ஒரு மனிதன்
தழைக்கும் காம்போடு
ஒரு மலரைக் கொண்டுவந்தான்.
ஒரே மலர்தான்
முதல் மலராய்
வேர்விடத் தொடங்கியது இந்த பூமியில்.
அப்புறம் இந்த பூமியில்
எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது.
ஆனால் ஒவ்வொரு மலருமே
தன்னை முதல் மலராகவும்
மனிதர்கள் தேடும்
பேர், புகழ், பெருஞ்செல்வம் எல்லாம்
தானேதான் என்றும்
நொடிதோறும்
மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
தனது பிறப்பையும் மரணத்தையும்
சொல்லவே முடியாது என்றும்
கண்டவரே கிடையாது என்றும்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது காண்!
இந்தக் காற்று வெளியிடையே - கண்ணம்மா
நீதான் சொல்ல வேண்டும்.
வெளி அல்ல, வெளியிலுள்ள
அசைவிற்குப் பெயர்தானே காற்று?
பற்றி நிற்பதன்றி
வருடிச் செல்வதற்குப் பெயர்தானே, காற்று?
தான் என்பதும் ஆசை என்பதும்தானே
பற்றுகிறது?
பற்றாது வருடிச் செல்வதுதானே
அன்பு என்பது?
எங்குமிருப்பதனால்
அது ஓடிப் போவதேயில்லையே!
சென்று கொண்டேயிருப்பதுபோல்
அது வந்துகொண்டேயிருக்கிறதே;
பின் எதற்கு - என் கண்ணம்மா
ஆசையும் அச்சமும் சேகரிப்புகளும்?
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்துவிட விரும்புகிறேன்
ஆனால் உங்கள் ஒவ்வொருவரினதும்
முழு ஒத்துழைப்பும் இல்லையெனில்
இது நடக்காது.
துளிகளால்தாம்
பெருவெள்ளம் என்பதை
நாம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
இங்கே வந்துவிட்டால்
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிடும்.
எரியும் நம் தாகவிடாய்
எல்லாம் அடங்கிவிட்டால்
நாம் இங்கே வந்துவிடலாம்
என்றும் சொல்லலாம்.
இங்கு அங்கு எனும் இடங்களில்லை
காலமும் இல்லை
ஒரு நொடிதான் காலம்
என்றும் சொல்லலாம்.
எல்லாம் அடங்கிவிடும் இங்கே
பேர் புகழ் பெருஞ்செல்வம்
எதுவுமே தேவைப்படாது
ஒரே ஒரு துயரம்தான்
நம்முடைய தாகமாய் நம்மிடம்
தங்கிவிடக்கூடும்
எல்லோரும் இந்த இடத்திற்கு
வந்துவிட வேண்டும் என்பதே அது!
இந்த இடத்திற்குத்தான்
உங்கள் எல்லோரையும்
அழைத்து வந்து விட விரும்புகிறேன்.
அங்கே நான் இருக்கமாட்டேன்
நாம் மட்டுமே இருப்போம்.
இல்லை, நாமும் இருக்கமாட்டோம்
நம் உறவு மட்டுமே இருக்கும்!
குளிர் கூடிவிட்டது
எனது பெருங்களிப்பும்தான்
கூடிவிட்டது!
இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற
இந்தக் குளிர்
உனது பேரன்புதான் அல்லவா?
உனது செல்ல ஆட்டுக்குட்டிகளான
எங்களுக்கு
தலைக்கவசமும் உடல்கவசமுமாய்
குளிராடைங்கள் அணிவித்து
நடக்கமட்டுமே செய்தால் போதுமென்றும்
வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும்
இரண்டு கைவிரல்களையும் சட்டையின்
கீழ்ப்பைகளுக்குள் புதைத்துக்கொண்டு
எத்துணை சுகமாய் நடக்கச்சொல்கிறாய்
உன் காதல் வெளியில்!
தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!
இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?
யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?
தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP