Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Monday, January 12, 2026

இந்த மனிதர்கள்

தளிர்நடைச் சிசுக்களாய்
சொர்க்கத்திலிருந்து வந்த
தேவதைகளை நடத்தியபடி
"மாமாவுக்கு வணக்கம் சொல்லு" என்றபடி
உலவும் மனிதர்களாய்
இன்று ஓர் அற்புத உலகக் காட்சி!

இந்த மனிதர்கள் எல்லோருமே
சொர்க்கத்தை
கவிதையின் மதம் உலவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை
படைத்துவிடும் முகமாய்
தங்கள் குழந்தைமையைத்தான் இப்படி
வெளியே உலவ விட்டுள்ளார்களா?
அல்லது
தங்கள் வேண்டாமையினால்தான்
இப்படி வெளியே விட்டுவிட்டு
அதையும் அறியாமலே உலவுகிறார்களா?

யாண்டும்
களங்கமில்லாத
கருப்பை உடையவர்களில்லையா
இந்த மனிதர்கள்?

தங்கள் மூடத்தனங்களால்
சொர்க்கத்தை மூடிவிட்டு
புகைமூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பவர்கள்தாமோ?

Read more...

Friday, January 2, 2026

சவால்

எத்தனை பயன்பாட்டுக்குப் பிறகும்
அழுக்காகாமல்
மிக எளிதில் மீண்டு கொள்ளும்படியாய்
எப்போதும் ஒளிர் பளபளப்புடனே
படைக்கப்பட்டிருக்கும்
இந்த உணவுத் தட்டுகள் போலே
படைத்துக் கொள்ள முடியாதா என்ன.
நம் மனதை நாம்?

Read more...

Wednesday, December 31, 2025

அசையும் எந்தப் பொருளைக்…

அசையும் எந்தப் பொருளைக்…
காண்கையிலும்
அவன் மனம்
களி கொண்டாடுவதைச்
சந்தேகிக்கிறாயா?

காற்று உன் உடலைத் தழுவுகையில்
என்ன நடக்கிறது
எண்ணிப் பார்!

Read more...

Monday, December 29, 2025

அந்த முகம்!

அந்த பணிப்பெண் மூதாட்டி
அய்யா நீங்கள் தெலுங்கா?
என்று விளித்துக் கேட்டார்.
இல்லை, தமிழ் என்றேன்.

இவ்வளவு பேச இயலும் மொழி
போதாத துயரம் பொங்கியுள்ள முகம்

நாம் கற்றே ஆகவேண்டிய மொழி இதுவெனச்
சொல்லும் முகம்!

Read more...

Thursday, December 25, 2025

சூரியன் படைத்த உலகு

காகிதத்தில் எழுத அமரும்போதே
அதன் நிழலும் உடன்வந்தே
அமர்ந்து கொள்கிறது.

நிழலையும் சேர்த்தே
அவன் எழுதிக்கொண்டிருப்பதை
அவன் அறியும்போது
அலறி ஓடுகிறது நிழல்

பென்சிலா,
ஒளி அல்லவா
இப்போது எழுதிக் கொண்டிருக்கிறது,
சூரியன் படைக்கும் உலகாய்!

Read more...

Monday, December 22, 2025

பூங்கொடி IAS

ஞாயிறு விடுமுறையில்
பூங்கொடி IAS

தனது பங்களாவின்
உபவனச் சோலையில்

நேர்கொண்டு நிமிர்ந்த முகமும்
ஆன்றமைந்திருக்க,
நிலம்தொட நெருங்கிய
நீள்நெடுங்கருங்கூந்தலை
நேர்த்தியுடன் விரித்தபடி செல்லும்
நடைஉலா கண்டு‌
பறவைகளின் தெய்வமோ என
வாய்பிளந்து நின்றன காண்,
ஆங்குள்ள மயில்கள் எல்லாம்!

Read more...

Friday, December 19, 2025

பிற வாகனங்களும் மக்களும் ...

குளிரூட்டப்பட்டு
அடைக்கப்பட்டு
ஊர்ந்து செல்லும்
வண்டிக்கு வெளியே
பிற வாகனங்களும் மக்களும்

சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ
பார்த்தாலே
கதறிவிடும் குரலினை அடக்கியவர்களாய்
கைவிடப்பட்ட
துயர்க்கனலுடனே செல்லுவதேன்?

Read more...

Wednesday, December 17, 2025

ஓடும் வண்டி...

அன்பு அழகு அறம் கொண்டு
வனையப்பட்ட சாலையா இது?
எத்துணை இனிமையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்கள் வண்டி?

Read more...

Tuesday, December 16, 2025

எங்கே? எங்கே?


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

இக் கவிதை துயர்மலி உலகின் பெருவலி(2023) தொகுப்பில் உள்ளது.

Read more...

Monday, December 15, 2025

மெய்வழிச்சாலை

பெருங்களியிலிருந்தோ
பெருந்துயரிலிருந்தோ
பிறப்பதற்கு முன்னால்
மோனக் கருவறையிலிருந்தது
கவிதை

பிறந்த உடன் அதுபடும் துக்கம்
நமக்கானது
இன்பமோ உயிரின் இயல்பானது

இயல்பும் துக்கமும் கொண்டு
அது சுட்டும் பாதைதான்
அது படைத்துவிட்ட மெய்வழிச்சாலை.

Read more...

Friday, December 12, 2025

உள்ளதும் உருவாக்கப்படுவதும்

காலமற்ற வெளியெங்கும்
நம்மால் உருவாக்கப்படாமலே
உள்ளதுதானே கடவுளின் ராஜ்ஜியம்?

அற்புத இயந்திரங்களால்
நம்மால் உருவாக்கப்படுவதும்
கடவுளின் ராஜ்ஜியமாகவே
ஏன் இருக்கக்கூடாது?

அப்படித்தானே இருக்கவேண்டும்?

Read more...

Wednesday, December 10, 2025

யசோதரை சுட்ட தோசை

நான் இருக்கிறேன்
ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று
மொத்த சொற்களையும்
இரண்டே சொற்களாக்கிவிட்டோம்.

நான் எனும் இந்த உடல்
உழைக்கிறது
தன்னைக் காத்துக்கொள்வதற்கு!
இருப்பதற்கு!

இந்த உலகத் துயரையும்
காரணத்தையும்
நான் என்பதே அது என்பதையும்
அது கண்டுகொண்டது.

மூட்டிக் கனலவைத்த கரிய கல்லில்
தோசை வார்க்கத் தொடங்கினார் யசோதரை
வெந்து அழிந்தது ஒரு பக்க நுண்தளம்
திருப்பிப் போட்டவேளை மறுபக்கத்திலும்...

நடுவிலுள்ள பதமான தோசையையும்தான்
உண்ணுவதற்கு உகந்த எத்துணை
அற்புதமான உணவாக்கியிருந்தார் அவர்!

Read more...

Tuesday, December 9, 2025

விஷம்


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

இக் கவிதை மின்னற்பொழுதே தூரம்(1981) தொகுப்பில் உள்ளது.
வம்சி வெளியீடான இரண்டு பெருந்தொகுப்புகளில் முதல் பொருந்தொகுப்பில் உள்ளது.

Read more...

Monday, December 8, 2025

இந்த இடத்திற்கு...

இந்த இடத்திற்கு அவன்
விரும்பி வரவில்லை
விரும்பாமலும் இல்லை

அவன் பார்க்கும்போது
நடக்கும் செயலையும்
நடக்கப்போகும் செயலையும்
பார்க்க அல்லவா வந்திருக்கிறான்?

இங்கே யாவருக்குமாய் எழும்
பரிவும் அதன் பான்மையும்
யாரோடும் எதனோடும்
சம்பந்தப்படாததால் அல்லவா
மகத்தானதாயும் பேரன்பாயும் உள்ளது?

Read more...

Saturday, December 6, 2025

துயரகீதம்


பாடகி: தீபா

இக் கவிதை நார்சிசஸ் வனம்(1996) தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் என்ற நீண்ட கவிதையிலுள்ள ஒரு பகுதி.

Read more...

Thursday, December 4, 2025

ஆடை


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Wednesday, December 3, 2025

இசை தொடங்கிவிட்டான்

இதோ கவிதையின் தெய்வம்
தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்!

இசை தொடங்கிவிட்டான்!

அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி
தொடங்கிவிட்டது காண்
ஓர் ஒத்திசைப் பிரம்மாண்டம்! பேரொளி!

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்

Read more...

Monday, December 1, 2025

கண்களை விழித்து...

தன் கண்கள் எத்துணை அழகு என்பதை
தன்னுணர்ந்த அழகியா அவர்?

கண்களை விரித்து
கடைக்கண்ணால் பார்த்தது எதை?
பார்க்கச் சொல்லியது எதனை?
காண முடியாத கருவி ஒன்றை
கண்டுகொண்ட அருட்செயலா?

கடவுளே, அது உம்மையும்
உம்முள் நிறைந்த தன்னையுமே
என அறியாத பேதமையா அவருடையது?
மன்னியுங்கள் ஆண்டவரே!

அழகு எவ்விதமானாலும்
அது நீரே அல்லவா?
குழந்தைகளின் எந்த விளையாட்டுகளானாலும்
அதற்கு மிக அண்மையில்தானே நீர் இருக்கிறீர்?
அந்த விழிகளின் அழகையும்தான்
நாம் பார்க்கிறோமில்லையா?

Read more...

Wednesday, November 26, 2025

நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?

நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள
நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும்
போதாதா என்ன?

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்
பிறக்கப் பிறக்க ஒவ்வோரு குழந்தைக்கும்தான் -
ஒரு எண் இட்டு அவர்களை ஒரு தாய் போல்
பேணிக்கொள்ள முடியாதா,
அவர்கள் சாகும்வரை?

இந்த எண்ணைப் பாருங்கள்
எந்த எண்களையும் பாருங்கள்
ஒரு எண்ணோடு ஒரு எண் நெருங்கி
செயல்வளர்ச்சி நோக்கில் போகும் நோக்கமன்றி
இணக்கமற்ற உணர்ச்சிகள் ஏதாவது கொண்டிருக்கிறதா
பாருங்கள்!
333333 – இந்த எண்கள்தாம் ஒற்றுமையாய்
இருக்கின்றனவா?
3685907214 – இந்த எண்கள்?
எந்த எண்களானாலுமே
எப்படி இணங்கி வாழ்கின்றன, பாருங்கள்

Read more...

Monday, November 24, 2025

நாம் வந்துவிட்டோமா அந்த உலகிற்கு?

ஒரு வயதிற்குள்ளேயே
பேயறைபட்ட முகங்களாகிவிட்ட
குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனவும்
அச்சம் கொண்ட பெண் விழிகளை
மான் விழிகள் எனவும் –
கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும்
நம் அழகியல்பற்றி
நாம் யோசித்திருக்கிறோமா?

இரண்டுபட்டுக் கிடக்கும்
எல்லாவற்றாலும்
பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும்
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவே
தராசுமுள் நுனிக்கூடா மய்யத்தின் –
பூஜ்யத்தின் –
பேருலகினின்றும் பிறக்கும் செயல்கள்
தானில்லாமல் தானாகவே
அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றனவா
இவ்வுலகில்,
இயற்கையான ஒத்துழைப்பு எனும்
சின்னஞ்சிறு முயற்சிகளை மட்டுமே பற்றிக்கொண்டு?

எல்லாத் தடைகளையும்
வீணாற்றல்களாகும் குப்பைகளையும்
கண்டு தாண்டி
நாம் வந்துவிட்டோமா, இந்த உலகிற்கு?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP