Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Tuesday, October 14, 2025

பிள்ளைப் பருவம் போலும்...


கவிதை வாசிப்பு: கவிநிலவன்

நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்

Read more...

Monday, October 13, 2025

பறவைகளின் கூட்டொலிகள்

கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.

எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.

இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!

Read more...

Friday, October 10, 2025

கவிதையின் மதம் உலாவும்…

கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?

Read more...

Wednesday, October 8, 2025

காணப்படுவதில் காணப்படுவது

நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?

Read more...

Monday, October 6, 2025

இந்த மலர்கள்

பசுங்கிளைகளில் இருந்ததைவிட
ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட
ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட

அவன் இதயப் புனலிலல்லவா
நெடுங்காலம் வாழ்கின்றன
இந்த மலர்கள்?

Read more...

Friday, October 3, 2025

எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது

தனியாயிருக்கும்போதும்
நிரம்பியிருக்கும்போதும்
காலியாயிருக்கும்போதும்
எப்போதுமே
கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது
தன்னுள்ளிருக்கும்
பொன்இன்மையையே அல்லவா?

Read more...

Wednesday, October 1, 2025

ஹைக்கூ

கவனி இயற்கையை!
என்றது ஹைக்கூ

பிறகு
கவனி சொற்களானாலும்
என்றது

அதன் பிறகு
எதையானாலும்
கவனி என்றது ஹைக்கூ

கடைசியில்தான் அதற்கே தெரிந்தது
கவனி என்பதுதான்
தான் சொல்ல விரும்பிய
மெய்ச் செயல் என்பதும்
பின்தொடர முடியாததும்
பற்றிக்கொள்ள வேண்டியதுமான
பேராசான் என்பது!

கைபேசி புகைப்படச்
சவுகரியம் கண்டவுடனேதான்
ஒரு காட்சி ஒன்றுதான்
தான் என்ற பொய்மையை
வெட்கத்துடன் அது துறந்துவிட்டதும்!

Read more...

Monday, September 29, 2025

ஒரு தோட்டப் பணியாளர்

தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_
ஒருவர்
முதுமையும் சோர்வும் கொண்டவராய்
வேலை செய்யாமல்
இதமாக குளிர்ந்து வீசிய காற்றில்
இளைப்பாறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எளிய மனிதர்களின் ஒரே ஆறுதல்
இந்த இயற்கை மட்டும்தானே?

அவனைப் பார்த்துவிட்டவர்
“என்ன சார், சாப்பாடு ஆச்சா?” என்றும்
”இன்று பண்டிகை உணவுதானே” என்றும்
நலம் உசாவினார்.

“ஆங். ஆச்சு!” என்றவனுக்கு
அவர் முதுமையும் ஏழ்மையும், சோர்வும்தான்
தாக்கியது.

என்னென்ன துயரங்கள், வலிகள்
மனக்குறைகள் மனிதர்களிடம்!
இவை எல்லாமாலும்
மழுங்கிவிட்ட மனதால்
மனிதர்களையும்தான்
எப்படி நேசிக்க முடியும்?
இந்த இயற்கையையும் பேரன்பையும்தான்
எப்படி முழுமையாய் அனுபவிக்க முடியும்?

அன்பா,
நாம் காணவேண்டியதையும்
கண்டடைய வேண்டியதையும் நோக்கியா
நடந்து கொண்டிருக்கிறோம்?

Read more...

Wednesday, September 24, 2025

ஆமாம், மனிதனுக்கு மரணமில்லை!

முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள்
மரிப்பதில்லை,
முழுநிறையை இந்த உலகம்
அடையாததால்!
மரணத்தை அறிந்தவர்களாததால்
அவர்களுக்கு
துயரமும் அத்தோடிணைந்த
இன்பமும் கிடையாது. வெகுமதியாக
இயற்கையின் ஒத்திசைவுதரும்
முடிவிலாப் பேரின்பமும்
பெருநிறைவும் உண்டு.

முழுநிறைவில்லா அரைகுறை மனிதர்களும்
மரிப்பதில்லை
மரணத்தை அறியாத மூடர்களாதலால்
இன்பத்துடனும் துன்பத்துடனும்
முடிவிலாப் போர்களையும் துயர்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்!

Read more...

Monday, September 22, 2025

அகம்

அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய்
காய்கறிகள் வாங்க
பழங்கள் வாங்க –
வீட்டு மரத்திலிருந்தும்
பழங்கள் காய்கள் பறிக்க தெரியும்

அடுக்களையில் உறைந்தபடி
சமைக்கத் தெரியும்.

தேநீர் போடத் தெரியும்

முடங்கிக் கிடக்கும் முதியவர்களைப்
பேணத் தெரியும்.

ஆசாரமாய்த் தொழத் தெரியும்

கோயில் செல்லத் தெரியும்

கோலம் போடத் தெரியும்

நல்ல நாட்கள், கிழமைகள்
பண்டிகைகள் என்று
கடவுளையும் நன்கு சமைக்கத் தெரியும்

நீங்கள் எப்படி?
நாம் எப்படி?
நாம் அவரைவிட
வித்தியாசமானவர்களா?
நம் அகம் எப்படி?

“அய்யோ, நேரமாச்சு
ஆத்துல என்ன தேடுவா” என
வேகமாக எழுந்துகொண்ட தீபா
அறிவாரோ
தான் விட்டு எழுந்துவிட்ட இடத்தை?

நாம் அறிவோமோ
நம் அகத்துக்கு வெளியேயே இருந்துகொண்டு
எப்போதும் நம்மைத் தொட்டுத் தழுவியே
அழைத்துக்கொண்டேயிருக்கும் அம்ருத மாருதத்தை?

Read more...

Friday, September 19, 2025

தொடர்ந்தால்…

புறப்படுமிடம் இறங்குமிடம் உறுதியாகிவிட்ட
புகைவண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று.
உண்பது அருந்துவது முதலான
எந்தச் செயல்களிலும்தான்
எத்துணை நிதானம்!
சுற்றியுள்ள உடன் பயணிகளிடமும்தான்
எத்துணை இணக்கம்! தொடர்ந்தால்
நிகழற்கரிய பரிவும், புதிய உலகும்
நிகழ்ந்துவிடும் போலல்லவா தெரிகிறது?

Read more...

Wednesday, September 17, 2025

ஏன் இப்படி? என்ன ஆயிற்று உனக்கு?

மணம் மிக்க சிவப்பு மலர்_
முகர்ந்தபடி, முகரத்தந்தபடி
பறைந்தார் நண்பர்:
“பெருங்கள்ளி என்பது இதன் பெயர்
இதன் பிறப்பிடம் பிலிப்பைன்ஸ்” என்றார்

அவனுக்கோ
பெயர் மறந்துவிடுகிறது
அதன் பிறப்பிடம் மறந்துவிடுகிறது

இந்த பூமியில் என்பதும்
ஒரு மலர் என்பதும்
போதாதா என்றிருக்கிறது?

Read more...

Monday, September 15, 2025

தாயாகவா? குழந்தையாகவா?

அம்மா மடியில் அமர்ந்து கொண்டால்
ஏன் இந்தக் கும்மாளம் வராது?
நானும் ஒரு காலத்தில் இப்படி
என் அம்மா மடியில் இருந்து கொண்டு
துள்ளாட்டம் போட்டவன்தானே?

ஆனால் மானசா
அங்கே அந்தக் கூட்டத்தில்
ஏற்பவர் எல்லோர் மடியிலும்
மார்பிலும் சாய்ந்து கொண்டு
கொண்டாட்டம் போட்டபடி…

ஏதோ சொல்வது போலில்லை?

Read more...

Friday, September 12, 2025

பெருந்தயைப் பெருவெளி…

பெருந்தயைப் பெருவெளிக்கன்றி
வேறு எங்கு போய்ச் சேரும்
சூழ்ந்துவிட்ட மழைக்குள்ளே
வேகமாய் ஊடுறுவிச்
சென்று கொண்டிருக்கும் கார்?

Read more...

Wednesday, September 10, 2025

ஓநாய்க் குலத்திடமிருந்து…

ஓநாய்க் குலத்திடமிருந்து
ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து
மனிதனை நெருங்கி
அவன் கைபிடித்து
வழிகாட்டிபோல் நடந்துவரும்
இந்தக் காரியம்
யாருடைய செயலாய் இருக்கக் கூடும்?

காலம்?

இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பது?

காலம் அவசியமா?
கண்ட ஒரு கணம் போதாதா?

Read more...

Friday, September 5, 2025

அறிந்தவனோ?

உதிராத பசிய இலைகளுக்கிடையே
உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த
பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப்
பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

அதை எங்கே விடுவதென்று அறிந்தவனோ?

அறிய முடியாமையின் உலகிலிருந்து வந்து
அறிந்தவற்றால் துயருற்று
துயர்களைய வந்தவனாய்
இந்தக் காற்றுவெளியிடையே நின்று
க-விதை தூவிக் கொண்டிருப்பவனோ?

Read more...

Wednesday, September 3, 2025

முதலில்…

எத்துணை துயரத்துடன் நம் கலையரங்குகளில்
வந்தமர்ந்து கொண்டிருக்கிறார், நம் அன்னை!

கண்ணா,
நாம் மரங்களை
வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்!
காடுகளை அழித்துவிட்டோம்!

முதலில்
நாம் நிறைய மரங்களை வளர்ப்போம்
காடுகளைப் பேணுவோம்

அப்புறம்
போன்சாய்க் கலைகளில் ஈடுபட்டு
நம் அன்னையின் முகத்தில்
புன்னகையைக் காண்போம்!

Read more...

Monday, September 1, 2025

அழுத்திச் சொல்வதற்கு…

அழுத்திச் சொல்வதற்கு
ஒன்றுமில்லாதிருந்ததுதான்
அழுத்திக் கொண்டிருந்தது,
நூலக அலமாரியில்
அடுக்கப்பட்டுள்ள
அனைத்துப் புத்தகங்களுமாயிருந்த
அவர் புலமை!
அவர் புகழ்!

Read more...

Friday, August 29, 2025

கனியின்…

கனியின்
பூ மலரும்
ஒரு கணத்தையும்
கற்றிராத மனிதர்கள்தாம் கோடியோ
இந்த உலகில்?
காலத்தின் சங்கிலித் தொடர் பாலையில்
பூக்கவே பூக்காத ஒரு மலர்
பார்வை மின்னலில் அறுந்துவிழும் சங்கிலியால்
கண்டடைந்த பொன்வெளிதானோ
கனியும் மலரும்?

Read more...

Wednesday, August 27, 2025

வசமாக மாட்டிக் கொண்டானோ?

என்ன பிழை இது?
இனி எப்போதும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை
உணர்த்திக்கொண்டே இருக்கிறது
கழுத்துப் பக்கம் பட்டன் திறந்து கிடக்க
எடுக்கப்பட்டுவிட்ட புகைப்படம்?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP