Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Wednesday, August 19, 2026

பகலுக்கு பரிதிபோல

பகலுக்கு பரிதிபோல
இரவுக்கு வேண்டியிருக்கிறது
பிணச் சிதை நெருப்பு
நெய்யில் எரியும் சுடர்
மின்விளக்கு என
ஏதாவது ஒன்றா,
சுட்டும் விழிச்சுடர் போலும்
வான்மீன்கள் கோடி அல்லவா?

அதன் கீழ்தானே இருக்கிறது
மெய்வழிச் சாலை?
இந்த இருண்ட காட்டிடையே
பார்வையினின்றே பிறக்கும் பாதையாய்!

Read more...

Monday, August 17, 2026

ஓடும் நதி

ஓடும் நதி
தன் உள்ளத்து மீன்கள் மூலமே
அறிந்து கொள்கிறது,
அனைத்து திசைகளையும்!
திசைகளற்ற பெருவெளியையும்!
தான் வாழும் இடத்தையும்!
தன்னையும்!

தான் அல்லாததை
அறிய முற்படும்போதுதானே
தன்னையும் இழந்து
காணும் கண்களேயாகிவிட்டது?

Read more...

Friday, August 14, 2026

நாங்கள் உன்னை மறந்தது எப்படி?

முத்துப் பற்கள் ஒளிர
இடையறாது ஒலிக்கும் புன்னகையாய்
கடல் அலைகள்!

கரை மணல் மடிமீது அமர்த்தி
தழுவி வருடி சீராட்டிக் கொண்டு
நீலவானையும்
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
எல்லையற்ற அமைதியையும்
காட்டுகிறாய் உன் மக்களுக்கு!

அவர்களோ
வேறெங்கெங்கெல்லாமோ அல்லவா
சுற்றித் திரிந்து கொண்டு
போரிலும் துயரிலுமாய் உழல்கிறார்கள்?

Read more...

Wednesday, August 12, 2026

விண்ணின் சிரிப்போ?

விண்ணின் சிரிப்போ
மரங்களின் சிரிப்போ
பூத்து பூத்து உதிர்ந்து உதிர்ந்து
பூத்துக் கொண்டேயிருக்கும்
ஒளிமலர்களோ?
ஒளியும் நிழலும்
ஓடிப் பிடித்து விளையாடும்
கண்ணாம்பூச்சி ஆட்டமோ
அசையும் மரக்கிளைகளின்
ஒளிநிழல் ஆட்டம்?

Read more...

Monday, August 10, 2026

வானம் விண்மீன்களால்!

வானம் விண்மீன்களால்
பூமி தண் வண்ணமலர்களால்
கடல் தன் வெண்நுரை அலைகளால்
மனிதர்கள் தங்கள் பேரன்பால்
எப்போதும்
பூத்துப் பூத்துச் சொரிகிறார்கள்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்!

Read more...

Friday, August 7, 2026

வெயிலும் குளிரும்

பிரிவு என்பதே நம்மிடம் ஏது
எட்ட நிற்கையில்தானே
தகித்தபடி வளர்கிறோம்
கிட்ட நெருங்குகையில்தானே
குளிர்ந்தபடி அணைத்துக் கொள்கிறோம்

Read more...

Wednesday, July 29, 2026

வெண்மேகங்கள்

வான்வெளியின்
பொன் இன்மையினை மேயும்
வெண்மேகங்களன்றோ
கார்மேகங்களைப் பொழிகின்றன?

Read more...

Monday, July 27, 2026

வழிமலர்கள்

வழிமறிக்கப்பட்ட ஆசைகள்தாமோ
வழியெல்லாம் பேரன்பாய்
பூத்து பூத்து நிற்கின்றன!

Read more...

Wednesday, July 22, 2026

இதய கமலம்

யார் காண்பதற்காகப் பூத்திருக்கிறது
இந்தத் தாமரை மலர்?
தன்னைப் பூப்பித்த
கதிரவன் காண்பதற்காகவா
கதிரவனைக் காண்பதற்காகவா

இந்த மானுடக் கேள்விகளுக்கெல்லாம்
அப்பாலுள்ளதோ காதல்?

Read more...

Monday, July 20, 2026

வெள்ளைத் தாமரை

இந்த நீர்த் தாவர மலர்
தன் வண்ணங்களையெல்லாம்
அழித்துவிட்டு வந்து நிற்கிறதா?

தன் வண்ணங்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்
எடுத்து எடுத்து காட்ட வந்திருக்கிறதா?

தனக்கும் காலமும் இடமும் உண்டெனினும்
முன்னறிவுகள் ஏதுமின்றே பூத்திருக்கும்
இந்த ஒளி மலரில்தானே
அன்னையே நீ வந்து
அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்?

Read more...

Friday, July 17, 2026

எப்போதுமே…

எப்போதுமே
காற்றில்
மயங்கி கிறங்கிக்
களிநடம் புரிந்து கொண்டிருக்கும்
கிளைகள்.

எப்போதாவதுதான்
காற்றையும்
காற்றின் செல்திசையையும்
சுட்டி ஏமாறுகின்றன
இல்லை
ஏமாறுவதுபோல் நடிக்கின்றன!

Read more...

Wednesday, July 15, 2026

துளிகள்

பாத்திரத்தில்
வண்டலாயிருந்த அடித் தண்ணீரை
செடிகள் மீது கொட்டினான்

இலைகளில் தண்ணீர்
துளிகளாகவே படிந்ததேன்?

ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை என
பெய்யும் மழையும் அமைதியான வேளை
இலைகளிலும் கம்பிகளிலும்
துளிகளாய் அமைந்தே நம் விழிகளை ஈர்ப்பதேன்?

Read more...

Monday, July 13, 2026

எத்தனை எத்தனை முயற்சிகள்!

பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?

Read more...

Wednesday, July 8, 2026

இந்த வானம்!

தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!

போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!

Read more...

Monday, July 6, 2026

எங்கே அவன்?

ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!

அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!

அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!

Read more...

Friday, July 3, 2026

மாறாத குளிர்மையுடன்…

கடவுளின் சொந்த ராஜ்ஜியமான
வெயில் மலர்க் குளிர்தலத்து
பெங்களூருவாசி அவன்

தூத்துக்குடி நண்பகல் தகிக்கும் வெயிலில்
மாறாத குளிர்மை எப்படி?
ஒரு நண்பனுடனல்லவா
நடந்து சென்று கொண்டிருக்கிறான்?


நல்லதோர் வீணை(2025) தொகுப்பிலிருந்து

Read more...

Friday, June 26, 2026

மனிதன்

முட்டையிடுவதற்கும்
குஞ்சு பொரிப்பதற்கும்
துயில்வதற்குமான கூட்டை
வீடு என்பார்களா?
பாதையற்ற வெளிதானே
பறவைகளின் வீடு?

அது யாரு, பறவை என்பது?
விடுதலை என்பதுதானே
பறவை என்றானது?
ஒவ்வொரு விலங்குகளும் உயிர்களும்
அதனதன் குணங்கள்தாமே?

மனிதன் என்பவன் பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியாதா என்ன?
கடவுள்தான் மனிதன் ஆனது, சரி,
பாதைகளில் தொலைந்தமைதானே
இந்த பரிதாப நிலைகள்?

Read more...

Wednesday, June 24, 2026

உதிர்மலர்கள்

அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!

Read more...

Monday, June 22, 2026

இந்த பெயர்கள்

“நீங்கள் குழந்தைகளாகாதவரை
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!”

உண்மை கண்டீர்!

எந்த ஒலி கேட்டாலும்
திரும்பிப் பார்த்த குழந்தை-
அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டிய முதல்தானா
அது தன் குழந்தைமையிலிருந்தும் விலகி
பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன?

என்றால் இந்தப் பெயர்கள்
எதைச் சுட்டுகின்றன
எங்கு செல்கின்றன
என்பதையும்,
பெயரற்ற பெருநிலையையும்
குழந்தைமையையும்
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
நாம் கண்டு கொண்டிருக்க வேண்டுமல்லவா?

Read more...

Friday, June 19, 2026

நித்யவனத்தின்...

தன்னைத் தானே
சுற்றி வருகிறது
நித்திய வனத்தின்
வெள்ளிமலைப் பாதை
எங்கும் போகாமல்
எங்கும் போகாமலுமில்லாமல் !

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP