தனக்குத் தன்னையே…
முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!
Poet Devadevan
முழு ஆற்றலுடன்
தனக்குத் தன்னையே
பின் உந்தமாக வைத்துக்கொண்டு
ஒரு சிறு
தூண்டலுக்காகக் காத்திருக்கிறது
மெழுகுவர்த்தி!
அடிக்கடி
அந்தரத்தில் நின்றே
(என்னஅஅ அழுத்தமாய்ச்)
சிறகடிக்கிறது தும்பி!
ஏன்?
என் வாசகர்களுக்கு
நான் சொல்ல வேண்டியதே இல்லை
என்கிறது அது!
எப்போதும்
அமைதியும் ஆழ்ந்த யோசனையுமாய்
இருப்பது போல் தோன்றிய
அவனை நோக்கி
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!
என்றார் துணைவியார்
எத்துணை பெரிய தேவவாக்கு! அக்கறை!
ஆங், அது எனது மரணமல்லவா என
அலறிக்கொண்டு முழித்தது மூளை!
ஆங், அப்போதுதானே நான் வருவேன் எனக்
களி கொண்டு குதித்தது வாழ்க்கை!
‘இரண்டுபேரும் (ஒற்றுமையாய்)
சற்று அமைதியாயிருக்க மாட்டீர்களா’
என்று அதட்டியது பெரிசு!
அவன் நடை உலாவும் உபவனத்தில்
அன்று பூமியின் பச்சைக்குடம்
பாலமுதாய் நிறைந்து
பொங்கி வழிந்தோடுவது போல
சிலந்தி அல்லிச் செடிகளின்
வெண்மலர் வரிசை…
பெருவெளியெங்கும்
ததும்பி அலையடிக்கிறது
பேரமைதி கொந்தளிக்கும்
அதன் ஆட்டமும் பாட்டமும்
யாருடையவோ இதயத்தை
எதிரொலிப்பதுபோல!
அறிமுகமற்ற மனிதர்களானாலும்
ஒரே வழியில் எதிர்ப்பட்டவர்களாய்
புன்னகைத்துக் கொள்ளும்
மனிதர்களில் ஒருவர்
அன்று புதிதாய் வாய்மலர்ந்து
காலநிலையையும்
காற்றையும் வெளியையும் புகழ்கிறார்.
சொல்லமுடியாத ஒன்றை
மொத்த உலகிடமும்
பகிர்ந்து முடித்துவிட்டவர்கள் போலும்
இத்தகையதோர் பெருநிலைதான்
பொங்கிவழிந்து
நிறை பெருகிக் கொண்டிருக்கிறதைக்
கண்டு கொண்டவர்கள் போலும்…
அவன் உன்னை நெருங்கியபோது
அவன் மூச்சு உட்கொண்ட உன் நறுமணம்
இந்த மொத்த உலகையும் நேசித்த
மலர்களிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதாலோ
பிற பொழுதெல்லாம் அவன் உடலும் உயிரும்
இம் மொத்த உலகையும்
நேசிப்பதாய் மாறிவிட்டுள்ளது?
இக் கவிதையினை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பனே,
வேகத் தொற்று ஒன்றால்
நாம் இந்த உலகை மாற்றிக் கொண்டிருப்பதைப்
பாராய்!
எவ்வளவு உயரமானாலும்
மேலேயும் கீழேயும்
ஏறி இறங்கும் மின் ஏணிகள்
மனிதர்களை நசுக்கிவிடாததும்
வழிவிடுவதுமான
நுண் உணர்வுக் கருவிகள்
உறுதியான பாதுகாப்பு முறைகள்
ஒழுங்கினையே உயிர்மூச்சாய்க் கொண்ட
இன்னும் எத்தனை எத்தனை பணி இயந்திரங்கள்!
கண்டுகொள்ள முடியாதது எதுவுமில்லை எனும்
கண்காணிப்புக் காமிராக்கள்
கடவுளின் விழிகளென செயற்கைக் கோள்கள்
இத்தனைக்குப் பிறகும்
வறுமையில்லாத
அறமின்மையில்லாத
துயரில்லாத
அழகான
உலகைப் படைக்க முடியாது
தடுத்துக் கொண்டிருப்பது எது?
அந்த இடத்தில்
பேரமைதியோ பெருங்களியோ
ஒளிர்வதே இல்லை.
(ஆ, இதைக் கண்டுகொண்டாலே போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாமே கண்டு இயற்றி விடலாமே?)
யாராவது எதையாவது கேட்டு
தான் மக்கு என்பதையும் முட்டாள் என்பதையும்
கண்டுபிடித்துவிடுவார்களே என்றுதானே
அந்த இடம் தன்னை
தீராத நோயாளியாய் மாற்றிக் கொண்டிருக்கிறது?
நம்மை மக்காக முட்டாளாக நோயாளியாக
மழுங்கடித்திருப்பது எது?
ஆ, இதைக் கண்டுகொண்டால் போதுமே
பேரமைதியும் பெருங்களிப்பும் பொங்கும் அமுதவெளியை
நாம் கண்டு இயற்றி விடலாமே!
நாமற்ற நாமால்!
மனம் பறிகொடுத்த
வியப்புக் களியுடன்தான்
அவன் அந்தப்
புதிய பென்சிலைப் பார்த்தான்
ஒரு நுனியில் எழுதும் கரி
மறு நுனியில்
தவறு நேர்கையில் அதை அழிக்கத்
தயாராய் இருக்கும் அழிப்பான் துண்டு
எழுதக் குவிகையில்
கவனத்தின் உச்சியிலிருக்கிறது அழிப்பான்
கண்ட பிழையை அழிக்கக் குவிகையில்
அதன் உச்சியிலிருக்கிறது
அணையாத தயார்க் கனலுடன் எழுதுகரி
செயல்கள் எல்லாம் செயல்களல்ல
பொழுதுபோக்கும் கலைகளிலிருந்தல்ல,
காலத்தை நிறுத்திக் காட்டும்
கவிதைகளிலிருந்தே
செயல்கள் பிறக்கின்றன.
செயல்கள் என்றால் என்ன?
கவிதை என்றால் என்ன?
அன்பு என்றால் என்ன?
அழகு என்றால் என்ன?
உண்மை என்றால் என்ன?
யாராலும் சொல்லித்தர முடியாதது
ஒருவன் தானே அறிந்துகொள்ள வேண்டியது
தானே அறிந்துகொள்ளாதவரை
தன்னில் பொய் சூடிக்கொள்வது
ஒரு பழம்
பதினெட்டு துண்டுகளாய்
ஒரு தட்டில்!
பதினெட்டு துண்டுகளும்
ஒரு முழுப் பழமாவதற்கு துடிதுடித்ததில்
ஒவ்வொரு துண்டும்
ஒரு முழுப்பழமாகிவிட்டது!
அவர்களிடம்தான் இப்போது
எத்துணை கனிவு!
எத்துணை இனிப்பு!
எத்துணை அழகு!
எத்துணை நிறைவு!
ஆண்கள் வெளிப்படையாகவே
அதை வைத்திருக்கிறார்கள்
பெண்கள் அந்த மீசையையும் தாடியையும்
தங்கள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறார்கள்
அந்தப் பூங்காவின் மரநிழல் பெஞ்சில்
ஓர் இணையர்.
அவர்கள் நடுவே
கண்ணுக்குத் தெரியாத உருவினனாய்
ஓர் அறிஞன் வந்தமர்ந்துகொண்டு
குறுக்கே குறுக்கே பேசத் தொடங்கினான்
முதலில் நீ இங்கிருந்து போடா வெளியே
என்று அடித்து விரட்டத் தொடங்கினார்
கோபம் கொண்ட அந்தப் பெண்மணி!
ரோஜா மலர்களுக்கு
உரமேற்றுகின்றன
கருப்பு முத்துக்களான
ஆட்டுப் புழுக்கைகள்_
அன்பே,
இந்தக் கவிதைகள் உனக்கு
உரமேற்றாதா?
வெறுப்பும் கசப்புமிக்க மனிதர்களால்
பீநாறி என்றும்
அன்பும் அழகுணர்வுமிக்க மனிதர்களால்
நித்திய கல்யாணி என்றும்
நயன்தாரா என்றும்
பக்திகொண்ட மனிதர்களால்
பூஜைப் பொருளாகவும்
அறிவியல் ஆய்வாளர்களால்
மருத்துவப் பொருளாகவும்
பார்க்கப்படுகிறது
மனிதர்களின் உணர்வுகளை அறிந்ததும்
எதற்குமே சடைக்காததும் மயங்காததுமான
பேராளுமைத் திடம்கொண்ட ஒரு மலர்.
கண்ணாடியுள்ளிருந்துகொண்டு
ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
எண்ணிறந்த பிம்பங்கள்.
உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றிலும்
நான் நான் என்றே
துடிக்கும் பிம்பங்கள்.
கண்ணாடி மறைந்துவிடும்படி
தனை அறிந்த மனிதவெளியில்தான்
பிறக்கிறது
தானற்றதொரு பெருவெளி
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்!
காலமும் இடமும்
பத்தரை மணி தூரம் என்கிறது
இரண்டரை மணி தூரம் என்கிறது
அய்ந்து மணி தூரம் என்கிறது
நான்கு மணி தூரம் என்கிறது
கைபேசியோ
மின்னற் பொழுதே(தூரம்) என்கிறது
அதனால்தானோ
கைபேசியுடன் பேசிக் கொண்டு செல்லும்
சில மனிதர்களிடம் இத்துணை மலர்ச்சி!
அருட்பெருஞ்சோதித் தனிப் பெருங்கருணையின்
செயல் முறைப் பாடமாய்
மானுட உள்ளமும் இணைந்து விட்டது!
பார்வையில் விரியும்
பெருங்களமெங்கும்
மலர்ந்துவிட்டன காண்
தானியங்கிச் சாலைகள்!
மலை உச்சியிலே
ஒரு கிராமம் நிலவ முடியும்போது
வான் உச்சியிலே
ஒரு மாடம் நிலவ முடியும்போது
மலை உயர ஒரு கட்டடத்திலேயே
ஆயிரம் இல்லங்கள்
அமைதியாக வாழமுடியும்போது
நம் உதிரத்திலேயே ஒரு பறவை
கூடு கட்ட முடியும்போது
ஏன் முடியாது அன்பா
இப் பூவுலகிலேயே கடவுளின் ராஜ்ஜியம்?
மலை உச்சியிலே
வேறு வேறு மதங்கள் கொண்ட
வேறு வேறு கோயில்களின்
வேறு வேறு துதிப்பாடல்கள்!
இந்தப் பாடல்கள் எல்லாமே
மலை கண்டுகொண்ட
மவுனத்திலிருந்து வந்ததென்றால்
இந்தப் போரும் குழப்பங்களும் இவ்வுலகில்
இருக்குமா மக்களே?
பாடுவது எது?
ஓடும் நதியா
கூழாங் கற்களா
வளியா வானமா
யாருமில்லாத வெளியில்
யார்தான் பாடுகிறார்கள்?
யார்தான் கேட்கிறார்கள்?
ஒத்திசைவுதான் பாடுகிறது!
ஒத்திசைவுதான் கேட்கிறது!
நானற்ற இழைகளால் நெய்யப்பட்ட
குண்டு துளைக்காத ஆடைகளை
நீ அணிந்து கொண்டால் போதுமா?
பகையையும் பாதுகாப்பையும்
பயத்தையும் வெறுப்பையும்
போர்களையும் துயர்களையும்
அவற்றின் ஊற்றுக் கண்ணையும்
அதைக் கண்டு கொள்வதால் மூடி
அங்கேயே திறந்து கொள்ளும்
பேரன்பின் ஊற்றையும்
அது தரும் குண்டு துளைக்காத ஆடையையும்
உரைக்க வேண்டாமா
உன் வாழ்வும் சொற்களும்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP