Monday, May 30, 2011

நிலக் காட்சி

மிகப் பெரியதோர் இலட்சிய நன்மையே
பிரம்மாண்டமான மெய்மையும்
காதற் பெரும் இருப்பும்
இப் பேரியற்கையின் எழிலுமாமோ?

உரையாடல்களில் புகுந்து
கண்களில் நீர் துளிர்க்க
உடல்கள் தத்தளிக்கச் சிரிக்க வைப்பதும்
முடிவிலாத
இலட்சிய பூர்த்தியொன்றின்
கொண்டாட்டம்தானோ?

இரவோடு இரவாய்
ஊர் வந்து தூங்கி விழித்தபோது
பட்டென்று இழையறுந்த அசம்பாவிதம்போல்
எட்டி விலகி நின்றது
ஏமாற்றமான ஒரு விடியல்.

எனினும் அப்போதும் அவனைச் சுற்றிக்
குன்றாத அழகு நிலக் காட்சி.
சற்றே விலகித் தகிக்கப் பார்க்கும் வெளி.
எனினும் திடீர் திடீரென்று வரும்
கற்றை மென்காற்றலைத் தீண்டலில்
மீக்குளிரும் கம்பளியும் போலும்
காதற் பெரும் இருப்பின்
ஆவி தொட்டளாவிய நெருக்கமும் தழுவலும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP