Thursday, March 3, 2011

மார்கழியில் தேவதேவன் - ஜெயமோகன்

நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம்.  அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை. அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை. துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள். ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.

நவீனக்கவிதைகள் என்றாலே அடர்ந்த துக்கத்தின் சித்திரங்கள் என்ற நிலை இன்றுள்ளது. உண்மையான துக்கம் கொஞ்சம், கவிதைக்காக கொதிக்கச்செய்து பொங்கவைத்துக்கொண்ட துக்கம் மிக அதிகம் என்பதே நம் கவிதைகளின் கலவைவிகிதம். நவீனக் கவிதை நவீ£னத்துவக் கவிதையாக நின்றுவிட்டதே இதற்குக் காரணம். தமிழ்க்கவிதையின் பேசுபொருளாக இன்றும் இருத்தலியலே இருக்கிரது. தத்துவப்படுத்தலும் படிமச்சமையலும் கவிதையின் இலக்கணமாக உள்ளது.

தேவதேவன் வாழும் உலகம் வேறு. மானுடவாழ்க்கையை பிரபஞ்சமென்னும் பெரும் நிகழ்விலிருந்து பிரிக்க முடியாத முழுமைகொண்டது அவரது நோக்கு. ஆகவே அவர் காண்பது ஒரு மாபெரும் சக்திக் கொந்தளிப்பை, அதை அறியும் ஆனந்தப் பித்துநிலையை. சராசரி தமிழ் வாசகனின் நுண்ணுணர்வு தொட்டுவிடமுடியாத ஒரு வெளியில் நிற்கும் கவிதைகள் அவை.

ரிஷி அல்லாதவன் கவிஞன் அல்லஎன்று சம்ஸ்கிருத கவிவாக்கியம் ஒன்று உண்டு. மெய்ஞானம் சற்றேனும் கைகூடாத ஒன்று ஒருபோதும் பேரிலக்கியமாக ஆவதில்லை. இன்றைய தமிழில் பேரிலக்கியத்தின் பெறுமதி கோண்ட கவிதைகளை எழுதும் பெரும்கவிஞர் அவர்

தேவதேவனின் புதிய கவிதைத்தொகுதி தமிழினி வெளியீடாக வந்துள்ளது. மார்கழி‘  இரு வரைக் கவிதைகள் அவற்றில் உள்ளன. ஒன்று கவிதையின் அந்த ஆதிப்பரவச நிலையை காட்சிப்பிம்பங்கள் வழியாக அடையும் கவிதைகள். ஜென் அனுபவம் கொண்டவை எனலாம். ஆனால் அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுமுறை நம்மாழ்வாரிலிருந்து எழும் பக்திக்கவிதை இயக்கத்தின் சாயல் கொண்டது.

புல்லின் பெருமிதம்

மாசறு நிலையோ
அன்பின் பெருவிரிவில்
வேர்கொண்டுள்ள மாண்போ
சூரியனைத் தன் தலையில்
தாங்கியமையால்
சுடரும் பேரறிவோ
இனி அடையப்போவது
ஏதொன்றும் இல்லாத
உயர்செல்வ நிறைவொ
அருளானந்தபெருநிலை ஆக்கமோ
புன்மையாம் வேகத்
தடையாகி நின்ற பெருவியப்போ
இவ்வைகறைப்பொழுதில்
புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும்
இப்புல்லின் பெருமிதம்?

இன்னொருவகைக் கவிதை நவீனத்துவக் கவிதை உருவாக்கிய படிம உருவாக்கத்தினூடாக அதைக் கடந்துசெல்வது. எளிமையான ஒரு கற்பனைச் சித்திரத்தை அளித்து அதன் நுண்தளம் வழியாக அதே பரவச நிலையை வெளிப்படுத்தும் கவிதைகள்.

உடற்பயிற்சி ஆசிரியர்

கடவுள் ஒருநாள்
உடற்பயிற்சி ஆசிரியரைப்போல
எல்லாமனிதர்களையும்
ஒரு நெடிய வரிசையாய் நிற்க வைத்தார்

அப்புறம்
ஒரு நீண்ட கம்பியை
வட்டமாக வளைப்பதுபோல
முதல் மனிதனையும்
கடைசிமனிதனையும்
அடுத்தடுத்து வரும்படி
அவ்வரிசையை
ஒரு வட்ட வளையமாக்கினார்

தோதான வெற்றுக்கைகள் கொண்டு
கைகள் கோர்த்துக்கொள்ளச்செய்தார்

அக்கணம்
ஒரு மின்சாரம் இயக்கியதுபோல
பற்றிக்கொண்டது அந்த மகிழ்ச்சி
அத்தனை முகங்களையும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP