Wednesday, March 16, 2011

படைப்பு

தான் இல்லாமலேயே செயல்படக்கூடிய
ஓர் உலகைப் படைப்பதற்காக
கடவுள் தன்னையே கொடுத்துவிட்டார்

ஒளி, வண்ணமயமான உலகின்
பன்முகங்களை விரித்துக் காட்டுகையில்
இருள், தன் ஒருமைத் தன்மையால்
அனைத்தையும் மூடி
நிலவையும் நட்சத்ரங்களையும்
வரச் சொல்கிறது

பகலை, பரிதியும்
இரவை, நிலவும்
பார்த்துக்கொள்ள
எந்நேரமும்
தன் பணியிலிருக்கும் பூமியில்
வேறு வேலையற்று.

அலகிலா பிரம்மாண்டத்தை
தன் மலைகளாலும் கடல்களாலும்
சொல்ல முயலும் பூமியைக்
கருணையோடு
குனிந்து நோக்குகிறது வானம்;
அத்துடன் தன் அறிவையும்
சந்தேகிக்கிறது அது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP