Saturday, March 19, 2011

துயர மூச்சு

வெயில் தன் குடை மடக்கி
ஒளியாய் அமர்ந்திருக்கிறது
வீதிகள் அலுவலகங்களெங்கும்
தங்களைத் தாங்களே துன்புறுத்தும்
ஒலிகள் சுமந்து களைத்த மனிதர்களின்
துயர மூச்சு காற்றில் அலைகிறது
ஆலயமணியின் கார்வையில்
மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்
புலம்பித் திரிகிறது
எங்கும் அழுகிய பதார்த்த மொன்றின் நெடி
மக்கிக் கொண்டிருக்கும்
கழிவுக் குவியல்களின் வாடை
கர்ப்பக் கிருகத்துள்
வாடித் தலை கவிழ்ந்த மலர்களின் மணம்
காவல் வீரர்களாய் எழுந்து
வீதிகளில் பாய்கிறது
இருளின் பாதாள நகரொன்றின்
நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்
குற்றவாளிகள்
ஒவ்வொரு விடியல் செடிகளிலும்
கவலையற்ற மலர்கள் பூக்கின்றன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP